15 ஜூன், 2011

பெண்ணெழுத்து: உடலரசியலும் உலக அரசியலும்

பெண்ணெழுத்து: உடலரசியலும் உலக அரசியலும்!



நீங்கள் விரும்புகிறீர்களோ இல்லையோ
உமது உயிர்க் கூறு
அரசியல் கடந்த காலம் கொண்டது
உமது சருமம்
அரசியல் படிந்தது
உமது விழிகள்
அரசியல் நோக்கு கொண்டது
- விஸ்வாலா சிம்போர்ஸ்க்கா

சாமானிய மனிதனுக்கு அரசியல் பார்வை இல்லாமலிருக்கலாம் ஆனால் அவனது வாழ்க்கை அரசியலுக்கு உட்பட்டது. அரசியலில் இருந்து தப்ப முடியாதபடி உயிர்மூலங்கள் பிணைக்கப் பட்டிருக்கின்றன. சுவாசிக்கும் காற்று, பருகும் நீர், வாழும் மண், காடுகள், சமவெளிகள், இயற்கை, தலைக்கு மேலாக பங்கிடப்படாமல் விரிந்து கிடக்கிற வானம் என எதுவுமே அரசியலில் இருந்து தப்ப முடியாது. அவ்வகையில் மொழியும் அரசியலைப் பேசுகிறது; அரசியலோடு தொடர்ந்து உறவாடுகிறது; அரசியலை நடத்துகிறது. குறிப்பிட்ட மொழியின் இலக்கியங்கள் அந்நிலத்தின் கருப்பொருள் சார்ந்தவைகளுக்கு ஆதரவாகவோ எதிராகவோ தன் சாட்சியங்களைப் பேசிச் செல்கின்றன. பெண்ணெழுத்தின் வீரியமும் மௌனமும் வெற்றிடமும் பெண்ணின் வாழ்க்கையை, அவளது வரலாறை, அவள்மீது சுமத்தப்பட்ட அரசியலை, அவள் எதிர்த்த அரசியலை, அவளைப் புரட்டிப்போட்ட அரசியலை வெளிப்படுத்தும் சாட்சிகளாக அமைகின்றன.

எழுதப்பட்ட எழுத்துகள் எவற்றை முன் வைக்கின்றனவோ அதற்கு எதிரிடையாக எழுதப்படாத எழுத்துகளின் நிசப்தமும் அரசியலை மொழிக்குள் செலுத்தி வைக்கின்றன. மொழியின் இருமை எதிர்வு குணமானது ஒரு விஷயத்தை ஆதரித்துக் குரல் கொடுக்கும் பொழுதே அதற்கு எதிரான அனைத்தையும் கண்டிக்கும் வன்மையை செலுத்தத் தொடங்கி விடுகிறது. பௌதிகக்காரணிகள் பெண்ணினத்தின் மீதாக வலுவான தாக்கத்தை செலுத்துகின்றன.

உயிர் இயக்கத்தில் தன்னைத் தக்கவைத்துக் கொள்ளப் போராடுகிற ஒவ்வொரு உயிரியும் உயிர்த் தொகுப்புகளும் அறிந்தோ அறியாமலோ அரசியலை சுமந்து கொண்டே பயணிக்கிறது. தமிழில் பக்தியிலக்கிய காலத்திற்கு பின்னும் தற்கால இலக்கியத்திற்கு முன்னுமான இடைப்பட்ட காலத்தின் மௌனம் பெண்ணெழுத்தின் மீதான கேள்விகளை தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த மௌனத்தின் உடைப்பை எதிரொளியைத் தற்காலக் கவிதைகளில் காணமுடிகிறது. பிற இலக்கிய வகைமையைக் காட்டிலும் மொழியோடு நெருக்கத்தைக் கொண்டு அகத்தோடு ஊடாடுகிற கவிதைக்களம் பெண் அரசியலின் முன்னெடுப்பை உணர்த்துகிறது.

பெண் வாழ்வியல் எதிர்கொள்ளும் பல் வேறு சிக்கல்களை மீறி ஒடுக்கு முறைகளை மீறி அரசியல், சமூக, பொருளாதார பண்பாட்டுத் தளங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னகர்வை கவனத்தில் கொள்ள வேண்டியிருப் பதைப் போன்றே அத்தளங்களோடு பயணிக்கிற மொழியின் மூலமான சாத்தியங்களைப் பார்க்க வேண்டிய அவசியமும் உள்ளது.

தமிழ்க் கவிதைகளில் பெண்கவிதை மொழி தொட்டுச் செல்லுகிற இடங்கள் மற்றும் விட்டுச் செல்கிற இடங்கள் குறித்த பிரக்ஞை என்பது பெண்வாழ்வின் மீதான அரசியல் தாக்கத்தைப் புரிந்துணர வைக்கிற இடமாகவும் இருக்கிறது.

ஆணாதிக்கம் ஆணி வேரென்றால் பெண் மீதான பொருளாதார, பண்பாட்டு, மத ஒடுக்கு முறைகள் சல்லிவேர்களாக இருக்கின்றன. பண்பாடு, அரசியல், பொருளாதார முன்னேற்றங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்பட வேண்டியவை. இவை ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல. எனினும் இத்தளங்களில் பெண்களுக்கான முன்னேற்றம் குறித்து பேசத்தொடங்கும் பொழுதே தந்தைவழிப் பண்பாட்டின் அடக்கு முறைகளை ஏற்கவும் நேர்கிறது. கல்வியறிவால் பொருளாதார முன்னேற்றத்தை அடைந்து வரும் பொழுதும் பால்ரீதியான பாகுபாடு மறைந்து விடவில்லை. பெண்களுக்கெதிரான வன்முறைகளும் குறைந்து விடுவதில்லை. உலக சந்தையில்பெண்களின் உழைப்பை சுரண்டுதல், பெண் உழைப்பு மலிவானதாக பயன் படுத்தப்படுதல் என்பது தொடர்கிறது. பெண்ணுக்கான உரிமைகள் மதிக்கப்படாத நிலையைக் காணமுடிகிறது.

இரண்டாம் பால்களாகக் கருதப்படும் விதத்தால் இங்கு நிலவும் அரசியல் காரணிகளால் வன்முறை செலுத்தப்படுபவளாக உதாசீனப்படுத்தப்படுபவளாக காலந்தோறும் நடத்தப்பட்டு வருகிறாள். இத்தகு புறக்கணிப்பை இலக்கியத்தில் பெண் படைப்பாளிகள் உருவாகாதது, பெண் படைப்பாளிகள் வாழ்ந்திருந்தாலும் அப்படைப்புகள் ஆவணப்படுத்தப்படாதது, பேசப்படாதது என்கிற கோணத்தில் பார்க்க வேண்டியவையாக இருக்கின்றன. குறிப்பிட்ட மண்சார்ந்த படைப்புகளில் கருப்பொருளாகப் பேசப்படுகிற பெண், பிறகருப்பொருளோடு கொண்டிருக்கும் தொடர்பு குறித்தும் சுமக்கும். அக்கருப்பொருளின்மீது சுமத்தப்படும் சுமைகள் குறித்தும் ஆய்வு மேற் கொள்ளப்பட வேண்டியது அவசியம். கருப்பொருளாக பேசப்படுகிற பெண் படைப்பு சக்தியாக உயிர் இயக்கத்தில் இருந்தும் மொழியில் ஆளுமையை செலுத்தி விடாதவாறு நிகழ்ந்திருக்கிற புறக்கணிப்பினை கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

சமகாலப் பெண்கவிஞர்கள் அரசியலில் பங்கேற்க வேண்டியது குறித்தும், நிலமற்ற நிராதரவான உயிர்வாழ்க்கையின் சவால்கள் குறித்தும், போர் வாழ்க்கை எதிர்கொள்ளச் செய்யும் வன்முறைகள் குறித்தும், உழைப்புச்சுரண்டல் குறித்தும் பேசிவருகின்றன. இவற்றோடு அன்றாட வாழ்க்கையில் எதிர் கொள்ளும் பல்வேறு சிக்கல்களையும் வெளிப் படையாகப் பேசுகின்றன. அவை குடும்பம், பணியிடம், பொருளாதாரம் என விரிந்து செல்கின்றன.

ரேஷன் கார்டு
சோதனைக்குப் போனேன்
மக்கள் தொகைக்
கணக்கெடுப்பு எடுத்தேன்
பணியிடைப் பயிற்சி
நேற்றுதான் முடித்தேன்
இன்றைக்கு நான் லீவு
குடும்ப நிகழ்ச்சி
நாளைக்காவது போக வேண்டும்
பாடம் எடுக்க
 - தி. பரமேசுவரி

பெண்கள் அதிக எண்ணிக்கையில் பணியாற்றும் கல்வித்துறையின் பள்ளி ஆசிரியப் பணியில் கற்றல், கற்பித்தல், நிகழ்வுகளோடு தொடர்பற்ற பணிகளையும் செய்ய வற்புறுத்தப்படுகிறது. அரசு இயந்திரங்கள் செய்யவேண்டிய பணிகளை ஆசிரியர்கள் மீது செலுத்தி அவர்களின் கற்பித்தல் பணி முடக்கப்படுகிறது. இவற்றால் பணியையும் கவனிக்க முடியாமல், பணி நேரம் முடிந்து வீட்டிற்குச் செல்ல முடியாமல் உபரி வேலைகளுக்குள் சிக்கிக் கொண்டு உள்ளத்தாலும், உடலாலும் பாதிக்கப்படுகின்றனர் என்பதைப் பதிவு செய்கிறார். அமைப்புசாராப் பணியாளராயிருக்கும் பெண்களின் நிலையோ விவரிக்க முடியா உழைப்புச் சுரண்டலோடு பெண்களை சக்கையாகப் பிழிகிறது.

தூங்கிக் கொண்டிருக்கும்
உன் முகத்தில்
தோன்றி மறையும்
புன்னகைக்கான கனவு
அதட்டாத அம்மாவைப் பற்றியும்
பதட்டத்திற்கு மேலே பறந்து செல்லும்
பறவைகள் பற்றியும்
இருக்கலாம்
  - இளம்பிறை (முதல்மனுஷி)

குழந்தையின் கள்ளமற்றச் சிரிப்புடனான உறக்கத்தைக் கவிதையாக்கும் கவிஞர் பெண்ணாகத் தன்னை உணரும் தருணத்தை கீழ்கண்டவாறு எழுதுகிறார்.

உனக்கு வேலை மட்டுமே வேலை
எனக்கு வேலையும் ஒரு வேலை
- இளம்பிறை (பிறகொருநாள்)

பெண்ணின் உடற்கூறு நீர்மையாய் மாற்றமடையும். அதற்கு இலகுவாய் பெண்ணின் உளவியலும் பொருந்திவிடுகிறது. எனினும் அரவணைப்பையும் ஆறுதலையும் எதிர்பார்க்கிறது. பெண்ணுக்கான கடமைகளுள் ஒன்றாகத் தாய்மை பார்க்கப்படுகிறது. அதனால் கூடுதல் கவனிப்பினை பெண்மீது செலுத்தத் தவறி விடுகின்றனர். அப்பெண்ணை அரவணைக்கும் கைகள் இல்லாமல் ஏக்கத்தைச் சுமக்கிறாள். மகப்பேறு காலத்தில் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை வெண்ணிலாவின் கவிதை பேசுகிறது.

நாளை
உன்னோடு வண்டியில்
முன்நின்று சிரித்துவர
உன் இனிஷியல் போட்டுக்கொள்ள
உனக்கு பிள்ளை பெற்றுத் தருவேன்
நான்கைந்து மணி நேரம்
ரத்த வெள்ளத்தில் மிதந்து

கருசுமந்து
குழந்தைத் தவம் இருக்கும் பெண்களை
சுமக்க
எந்த ஆணுக்கு உள்ளது கருப்பை
 - வெண்ணிலா (நீரிலலையும் முகம்)


    அப்பாவிடம்
    சொல்ல வேண்டும்
    பெண்
    மாநிறமில்லை
    நல்ல கருப்பு
    என்று சொல்லும்படி
- ஏ. இராஜலட்சுமி (எனக்கான காற்று)

பெண்பார்த்தல் எனும் சடங்கு ஆண்டுகள் மாறினாலும் மாறாதது என்கிற பட்டியலில் முக்கிய இடத்தில் இருக்கிறது. பெண்ணுக்கான கல்வியறிவு, வேலைவாய்ப்பு, பொருளாதார தற்காப்பு என்பன இருந்தும் போகப் பொருளாக சொத்தாகப் பார்க்கும் பார்வையால் மிகச் சாதாரண உடலியல் காரணிகளை முன்வைத்துப் பெண்களைப் புறக்கணிக்கும்போக்கு குறைய வில்லை.

பேரரசின் சாம்ராஜ்ய சக்ரவர்த்திகள்
மதம் பிடித்தேகி அருவருப்பாய்ப் பிளிற
பலியான ஆத்மாக்கள் பலவும்
தங்களை தேடி அலைகிறது
இன்னும் நிறுத்தப்படாப் போருக்காக
 - எஸ். தேன்மொழி (துறவி நண்டு)

உன்னிடம் வரைபடங்கள் உண்டு
சேவகர்களை திரட்டி திசைகாட்டி முட்களையும்
நீயே இரை தேடும் பாதை மட்டும் அறிந்தவள்
எதையும் பதிவு செய்கிறாய்
எனக்கோ சேகரத்தில் சித்தக் குறைவு
உன் மேன்மைக்கான தந்திர விளையாட்டுகளுக்கு
போர் என பெயரிடுவாய்
இறையாண்மை என்ற அழித்தொழித்தலின்
ஆற்றலைத் தகர்ப்பன்
 - லீனா மணிமேகலை

இறையாண்மை என்ற பெயரால் நடைபெறும் அழித்தொழித்தல் மட்டுமன்றி இரை தேடுவதை பாதையாகக் கொண்ட பெண் இனத்தால் வழிகாட்டுதலையும் பதிவு செய்தலையும் சரிவர செய்ய முடியாத அவலம் தொடர்வதைக் காட்டுகிறார் லீனா மணிமேகலை. லீனாவின் தூம கிரஹணம் போன்ற கவிதைகள் பெண்ணை இரகசியமற்று வெளிப்படுத்துகின்றன.

ரேவதியின் கவிதைகளும் கவிதைத் தொகுதியின் (முலைகள்) தலைப்பும் இதழின் தலைப்பும் (பணிக்குடம்) பெண்ணுக்கான அரசியலாக வந்திருக்கின்றன. பெண்களைக் கட்டுப்படுத்தும் பண்பாட்டிற்கு எதிராக வினையாற்ற வேண்டியிருப்பதன் தொடர்ச்சியாக மொழியின் மூலமாக உடலரசியல் கருத்துகளை முன்வைத்து பெண் இதைத்தான் எழுதவேண்டும் என்று கருதப்பட்ட கருத்தாக்கத்தைத் தகர்த்து எதையும் எழுதலாம் எனும் முன்னெடுப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

பெண்கவிஞர்களின் கவிதைகள் உடலரசியலொடு தேங்கி விட்டதாகக் கருத்துரைகளைக் கேட்க முடிகிறது. இதனைத் தேக்கம் என்று சொல்வதைவிட உடலரசியலைக் கடந்து வெளிவரும் உலகளாவிய, உலகமயமாக்கல் மீதான விமரிசனங்களையும் கவிதைகளில் வைக்கத் தயங்கவில்லை என்பதை முனைவர் ரா. பிரேமா அவர்கள் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் வாசித்த கட்டுரையில் நிறுவியிருப்பதும் கவனிக்கத்தக்கது. மேலும் பெண்ணின் வாழ்க்கை சார்புத் தன்மையோடு காலகாலமாக இருந்துவருகிறது.

பெண் சார்புத்தன்மையுள்ள வாழ்வினின்று மீட்டுக்கொள்ள அவளுக்கான நிலம், பொருளாதார சுதந்திரம் இரண்டும் அடிப்படைத் தேவை யாகிறது. சார்பில் உறைந்திருக்கும் பெண்கள் பண்பாடு, அரசியல் தளங்களில் தனக்கான முக்கியத்துவத்தை ஏட்டளவில் இல்லாது நடைமுறைப்படுத்த வேண்டியத் தேவையிருக்கிறது.

ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் பெண்கவிஞர்களின் சுயஅனுபம் பொது அனுபவமாக உணரப்படுகிறது. நான் நீ எனத் தொடங்கிய சொல்லாடல்கள் தனிமனுஷியைக் குறித்து மாறி பொதுவில் மாறியது போல பெண் சார்ந்த அனுபவங்களைப் பிறிதொரு பெண்வாசகி படிக்கும் பொழுதுதான் உணர்ந்தது இங்கு கவிதையாகியிருக்கிறதே என்று எண்ணுகிறாள். இது கவிதைக்கான வெற்றி. வாழ்வின் அசல் தன்மையை அனுபவித்து எழுதி வருவதைப் பிரகடனப்படுத்துகின்றன. கலை நயங்களுக்குள்ளும் இன்பங்களுக்குள்ளும் ஒளிந்துகொள்ளும் வடிவமாக கவிதை தேங்கிவிடாமல் ஆற்றல் பொதியாக மாற்றம் பெறத் தொடங்கியது.

குறிப்பாக பெண் கவிஞர்களின் கவிதைகளில் தாய், குழந்தை, குடும்பம், பணியிடம், உளச்சிக்கல்கள் என்பனவற்றைக் கடந்து, உடலரசியல், இனஅரசியல், மொழிப்பற்று, மனிதநேயம், தலித்தியம் என்கிற தளங்களில் ஆழந்த புரிதலோடு எழுதி வருகின்றனர். பெண்களுக்கான சட்டம் இயற்றப்பட்டு பெண் சுதந்திரம் சட்ட நூல்களுக்குள் சிறை தண்டனைக் கைதிபோல சிக்கிக் கிடப்பதனின்று விடுபட வேண்டும்.

அரசியல் சமூக, பண்பாட்டுத் தளத்தில் மாற்றம் ஏற்பட்டால் தான் இயற்றப்பட்ட சட்டங் களுக்கும் சட்டப் புத்தகத்தும் பயன் ஏற்படும் பெண்ணுரிமை, பெண்கவிஞர்கள் என்றால் ஆணுக்கு எதிர் நிலையில் வைத்துப் பார்க்கிற மேலை நாடுகளில் நிலவும் பெண்ணிய வகைமையான தீவிரப் பெண்ணிய செயற்பாட்டாளரைப் போலக் கருதுகிற ஒற்றை நோக்கு திருத்தம் பெற வேண்டும். ஆணாதிக்கத்தை எதிர்ப்பதற்கும் ஆண்பாலினத்தை எதிர்ப்பதற்குமான வேறுபாட்டினை உணர வேண்டும்.

பெண் படைப்பாளர்கள் பலர் தங்கள் புகைப் படம் வருவதையோ, தொகுப்பு வெளியிடுவதையோ கூட அச்சத்தோடு மேற்கொள்ளுதலும் நடைமுறையில் இருக்கிறது. ஏனெனில் கவிதையை படைப்பாகக் கருதாமல் பெண் படைப்பாளியின் நாட்குறிப்பென நோக்குதல், இயல்பு வாழ்க்கையை பாதித்து விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. இத்தயக்கத்தை உடைத்தால் மேலும் பலநூறு பெண்கவிஞர்களின் இருப்பு வெளிப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மூன்றாம் பாலினத்தவர் பெண்ணாக உணரும் உருமாறும் நிலையில் அவர்களை மூன்றாம் பாலினப் படைப்பாளிகள் என்ற வரையறைக்குள் கொண்டுவருவதா பெண்படைப்பாளிகளின் பட்டியலுக்குள் கொண்டுவருவதாவென்று முடிகொடுக்க வேண்டியிருக்கிறது.

தெரிந்தும் உணர்ந்தும்
கடந்து போகிறாய் என் அந்தரங்கத்தை மிதித்தப்படி....
யார் எவர் என்று தெரியாமல்
தொடர்ந்து மிதிபட்டே வருகிறோம்
நானும் இருண்ட என் எதிர்காலமும்
   - லிவிங் ஸ்மைல் வித்யா (மூன்றாம் பாலினத்தவர்)

சமூகப் பிரச்சனைகளுக்கு ஏற்ப உடனடியாக சட்டம் இயற்றப்படுவது போலவே பெண் படைப்பாளிகள் மொழியின் மூலம் புதுத் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர். சட்டம் சமூகத்தில் நடைமுறைக்கு உடனடியாக வந்து விடுவதில்லை. அது போலவே பெண்படைப்பாளிகளின் குரல் அடக்குமுறைக்கு எதிராக மானுடத்தைக் காக்க குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறது. சமூகம் மிகப் பின்தங்கி தொடரமுடியாமல் தேங்கிக் கிடக்கிறது. பாதை போடப்பட்டிருக்கிறது வாகனம் இல்லை என்பதான இப்போக்கு மாற அரசியல், சமூகம், பண்பாடு, மதம் சார்ந்த அனைத்துத் தளங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவற்றிலும் பெண்இனத்திற்கு தேவையான மாற்றங்களும் முன்னேற்றங்களும் உருவாக வேண்டியிருக்கிறது.

பெண் எழுத்தாளர்கள் உலகளாவிய நிலையில் பார்க்கும் பொழுது உரக்கப் பேச முடியாதவர்களாக... பேசுவது பரவலாக போய்ச் சேரமுடியாத அளவு ஒலியடைப்பு செய்யப்பட்ட தாக இருக்கிறது. குரலற்றவர்களாகத் தொடராமல் பெண் படைப்பாளிகள் தங்களுக்குள் கூட்டிணைவோடு செயல்பட வேண்டிய அவசியமும் இருக்கிறது. உதிரிகளாகப் போய் சக்தியை பலனற்று விரயமாக்காமல் ஒருங்கிணைய வேண்டிய தேவையைப் புரிந்துணர வேண்டும்.

உலகம் முழுவதுமான பண்பாட்டுச் சிதைவு களுக்கிடையில் பெண்ணுக்கான உரிமையை ஓங்கியொலிக்க செய்ய வேண்டியுள்ளது. சூழலியத்தோடு பிணைக்கப்பட்டிருக்கிற பெண்களைப் பாதுகாக்க வேண்டியிருக்கிறது. மனித உரிமைகளோடு பெண்ணுரிமையை இணைத்தே நோக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்த வேண்டும்.

-ச.விசயலட்சுமி 
(நன்றி : செம்மலர்)  

ஹோர்ஜ் லூயி போர்ஹே

ஹோர்ஜ் லூயி போர்ஹே (1889–1986)வை புனைவுச் சிறுகதை எழுத்தாளர் என்றே பெரும்பான்மையோர் அறிவர். அவர் ஒரு கவிஞராக எழுத்து வாழ்க்கையைத் தொடங்கியவர் என்பதை நாம் நினைவில் கொள்வது அவசியம். 1914ஆம் ஆண்டிலிருந்து 1920ஆம் ஆண்டு வரை போர்ஹே ஐரோப்பியாவில் படித்தார். முதல் உலகப்போரின் போது அவரது தந்தையின் கண் அறுவைச் சிகிச்சைக்காக ஐரோப்பாவுக்கு சென்ற அவர் குடும்பம், போர் முடியும்வரை அங்கே தங்க வேண்டிய கட்டாயம் உண்டாயிற்று. ஸ்பெயினில், குறிப்பாக மேட்ரிட் நகரில், அவர்கள் சிலகாலம் இருக்க வேண்டி வந்தது. போர்ஹே எழுதிய முதல் கதை ஒன்றினை மேட்ரிட் பத்திரிகை ஒன்று நிராகரித்தது. ஆனால் அவர் எழுதிய முதல் கவிதை பிரசுரம் கண்டது. பல வேறுபட்ட ஐரோப்பிய இலக்கியக் குழுக்களுடன் போர்ஹே தொடர்பு கொண்டிருந்தாலும் தன்னுடைய உத்வேகத்தை (கவிதையில்) அவர் கண்டுபிடித்துக் கொண்டது ஸ்பானிய யூதக்கவிஞரான ரஃபேல் கான்ஸினோஸ் அஸென்ஸ் என்வரைச் சந்தித்த பிறகுதான்.

பெண்ணெழுத்து : ஈரவாசனையில் துடிக்கும் உயிராக தமிழ்நதி கவிதைகள்!

!
சொல் செயல் எண்ணத்தை வயப்படுத்தினேன்
ஆழமாக முழுமையாக
அறியாமை வேரறுத்தேன்
தண்ணென்றானேன்; அமைதி அறிந்தேன்
   -உத்ரா
   (பௌத்த பிக்குணி)
பௌத்த பிக்குணியான உத்ராவின் கூற்றுப்படி சொல், செயல், எண்ணம் என அனைத்தையும் வயப்படுத்துதல், அறியாமையை வேரறுத்தல் அமைதியும் குளிர்ச்சியும் பெறுதல் சாத்தியம் தானா? அது சாத்தியமாகும் இடம் எதுவாக இருந்திருக்கிறது? என்ற கேள்விகளோடு பார்க்கையில் குறிப்பாக பெண் தன்னை உணராதவளாக உணர்த்த முடியாதவளாக தோற்றுப்போகும் தருணங்களை பாட்டிமார் கதை கூறும்போது அறியலாம். இப்படியிருக்க பெண் அரசியல் புரிதலோடு சமூகப் பார்வையோடு இருப்பதே அருகியதாக இருக்கிறது.

பெண்கள் காலையில் தினசரிகளைப் படித்துவிட முடிகிறதா? ஊரடங்கும் சாமத்தில் சமூகத்தைப் பார்க்க முயன்று களைத்த உடல் தூக்கத்திற்குத் தோற்றுப்போவதும் அடுத்தநாள் விடியலில் குடும்பம் குடும்பம் என உழல்வதுமான வாழ்க்கை பெண்களுக்குரியது. பெண்கள் சமூகத்தைப்பற்றி சிந்திக்க, அதுகுறித்து விமர்சிக்கப் பழகாதவர்களாக உற்பத்தி செய்துவருகிறோம். இந்நிலையில் சமூகம் மற்றும் அரசியல் சார்ந்த பார்வையோடு எழுதவும் விமர்சிக்கவும் இயன்ற பெண்கள் ஈழத்திலிருந்து வெடிக்கத்துவங்கினர். பெண்கள் ஓருங்குகூடி பெண்கள் குறித்த உரையாடலை நிகழ்த்திய வண்ணமிருந்தனர். வீச்சும் வீரியமும் மிக்க கவிதைகளை எழுதி சமகாலத்தைப் பதிவுசெய்யும் போக்கை ஏற்படுத்தினர். களத்திலிருந்தும் கவிதைகள் பிறந்தன.

இப்பாரம்பரியத்தில் போர்ச்சூழலில் அகமன உணர்வுகள் எத்தன்மையோடு இருக்கும்? காதல் பூக்கும் கணம் உருவாகியிருக்குமா? உயிர்பயம் வாட்டி எடுக்க தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் அவரவர்களுக்கு அவரவர் உயிரே சுமக்க முடியாத பாரமாக மாறிவிட்டிருக்கிறது. போர்க்காலத்தில் காதல், திருமணம், பிள்ளைப்பேறு, குழந்தை வளர்ப்பு, உணவு, பொருளாதாரம் என எதிர்கொள்ள வேண்டியவை எத்தனை எத்தனை? ஒவ்வொரு வேளை உணவுக்கான திட்டமிடல், ஊடகங்களிலும் புறவெளியிலும் ஒப்பனையற்றும் ஒப்பனையோடும் பொங்கிவழியும் காதல், ஒரு திருமணத்தை நடத்திக் காட்டுவதற்கான திட்டமிடல், பிள்ளைப்பேற்றுக்கான பரிசோதனை என அடுத்தடுத்து வாழ்க்கையைப்பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறோம். இவையேதும் யோசிக்கவே முடியாத பதுங்குகுழி வாழ்வில் பேறுகாலத்தில் குண்டுக்குத் தப்பியொலியும் அவலம், பச்சிளம் குழந்தைகளுக்கான மருத்துவவசதி, மின்விசிறியும் காற்றும் கிடைக்காத நாடோடி நிலை, வாங்கமுடியாத அளவில் பால்பவுடர் விலை வாழ்க்கையைத் துரத்திய போருடன் பொருளாதாரமும் துரத்திய அவலம் என அடுத்த நிமிடம் உயிரோடு இருப்போமா எனத்தெரியாத நிச்சயமற்ற அவலநிலை. கொத்து குண்டுகளும் கொத்துக் கொத்தாக உதிர்ந்த பிணங்களும் தாய்நாடு பிணக்காடான நிலை என விரட்டி விரட்டித் துரத்தி மீட்டெடுக்க முடியா அவலத்திலிருந்து விடுபட முயன்று தோற்கின்ற மனநிலையில் ஈழப்பெண்கவிஞர்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இலக்கியம் வரலாறாக கல்வெட்டாக அச்சுப்பிரதியில் மாறும் நிலையை உருவாகியிருக்கிறது. அவரவர் அடையாளங்களைத் தக்கவைத்துக்கொள்ள வலிகளையும் ரணங்களையும் உள்ளவாறே பதிவுசெய்யத் தொடங்கியுள்ளனர்.

சூரியன் தனித்தலையும் பகல் எனும் முதல் தொகுப்பின்மூலம் அடையாளம் காணப்பட்டவர் தமிழ்நதி. இவரது இயற்பெயர் கலைவாணி 1996 இலிருந்து கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், விமர்சனங்கள், குறுநாவல் என எழுதிவரும் இவரின் அண்மையில்வந்த இரண்டாவது கவிதைத் தொகுப்பு, ‘இரவுகளில் பொழியும் துயரப்பனி’, ஆழி-பனிக்குடம் கூட்டுப் பதிப்பாக வெளிவந்திருக்கிறது.

கனடாவில் வாழ்ந்து வந்த தமிழ்நதி சென்னைக்கும் கனடாவிற்குமாக பயணித்துக் கொண்டிருக்கிறார். தாய்மண் மீதான ஈர்ப்பும், மண்ணில் வாழ இயலா அலைக்கழிப்பும் போரின் மீதான விமர்சனங்களும் காதலும் காதல்மீதான பொய்மைகளும் காமமும், தனிமையும் இவரது கருப்பொருள்களாகின்றன. ஈழப் பெண்கவிஞர்களின் பலம் அவர்கள் பயன்படுத்தும் மொழி. தமிழ்நதியும் முதல் தொகுப்பிலேயே மொழியால் வாசகர்களை ஈர்த்தவர். தான் வாழும் சமகாலத்தை விமர்சனத்தோடு எழுதி வருபவர். துரத்திக் கொண்டேயிருக்கும் வாழ்க்கையிலிருந்து நங்கூரமிட்டு இளைப்பாறும் இடமாக தமிழ்நதிக்கு கவிதை வாய்த்திருக்கிறது.
 நான்கு யன்னல்களிலும்
 மாற்றி மாற்றி
 விழிபதைத்த அவ்விரவுகளில்
 இனிய உயிர்
 விடமாகத் திரிந்தே போயிற்று
என உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடி ஓடி ஒளிவதே வாழ்க்கையென்றான நிலையில் பனித்துளிபட்டேனும் புல்துளிர்த்து விடுமெனும் நம்பிக்கை வறண்ட நிலையில் உயிர் விடமாகவே திரிந்துபோகிறது. பதைபதைக்க ஒவ்வொரு நொடியையும் நிர்ணயிக்க முடியாது திணரும் போர்க்காலங்களின் அவல வாழ்க்கையைப் பதிவு செய்யும் கவிஞரின் தேவரீர் சபைக்கொரு விண்ணப்பம் என்ற முதல் கவிதை போர்ச்சூழலைக் கண்முன் நிறுத்துகிறது. அங்கு தொடுக்கப்படும் வன்முறைகளை சட்டையைப் பிடித்து உலுக்குகிறது. ஜனநாயகத்தை, அரசின் அறிவிப்புகளை, பெண்கள்படும் வாதையை, கைவிட்டவர்களைக் கேள்விகேட்டவண்ணம் இருக்கிறது. சுறுசுறுப்பாக இயங்கும் வதைக்கூடங்களின் சித்திரவதையின் வன்மத்தைக் காட்டுகிறது.

 புகட்டுவதற்கென
 மலமும் மூத்திரமும்
 குடுவைகளில் சேகரிக்க
 நகக்கண்களுக்கென ஊசிகள்
 குதிக்கால்களுக்கென குண்டாந்த
டி
…………
வதைபடும்போதில் எழும் கதறலை
நீங்கள் இசையமைத்து
பண்டிகைகளில் பாடவிரும்பலாம்
என ஈழமக்கள் மனிதத் தன்மையற்ற முறையில் சித்திரவதைக்கு, வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதை மனிதஉரிமையைப் பொசுக்கிப் போட்டுவிட்டு துயரங்களை இரசித்து இரத்தம் குடிக்கும் ஆதிக்கவிடத்தின் செயல்களை விவரிக்கிறார். போர்முடிவுற்றதென அறிவிக்கப்பட்ட இத்தருணத்தில் தமிழர்களின் பூர்வீகநிலமெங்கும் மாற்று ஆட்களைக் குடியமர்த்த தயார்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

ஜனநாயகம்…… ஜனநாயகம் என்றெழுதி
துண்டாடப்படவிருக்கும் நாக்குகளால்
அச்சொல்லின்மீது காறியுமிழட்டும்
என ஜனநாயகத்தின் கொடுக்குகள் அந்நில மக்களையே துவம்சம் செய்து சின்னாபின்னமாக்கிக் கருவறுக்கும் வேலையைச் செய்துவருவதைப் பொறுக்காது குமைகிறார்.

வேரறுதலின் வலிகுறித்த
வார்த்தைகள் தேய்ந்தன
பிறகு தீர்ந்தன

ஈரமற்ற காலம்
ஆண்டுகளை விழுங்கி
ஏப்பமிட்டபடி கடுகி விரைகிறது
திருவெம்பாவாய் எங்குற்றாய்?
இரத்தம் கோலமிடும்
தெருக்களில் இன்னும் மாற்றமில்லை
அஞ்ஞாத வாசத்தில் உயிரைச் சலவை செய்யும் துயரத்திற்கு மத்தியில் புலராத பொழுதின் துயரப்பனியை வார்த்தைகளால் ஊட்டுகிறார்.

என்றேனும் ஓர்நாள் சுதந்திரத்தின் காற்றை சுவாசித்து விடுவோம் என்ற நம்பிக்கையில் பேயடி விழுந்து, வற்றிய கண்களோடும் கண்ணீரோடும், உறைந்த இரத்தத்தோடும் எதிர்காலம் எலும்புக் கூடாய்நிற்பதையும் அச்சுறுத்தலின் எச்சமாய் இருக்கும் நிகழ்காலம் எந்த ஒரு கனவின் விதையையாவது மிச்சம் வைத்திருக்கிறதா? இருண்ட வனாந்திரங்களில் இலக்கற்றப் பயணமாக, உலகம் முழுதும் இறைந்து கிடக்கின்ற அவலமும் புலம்பெயர்தலி;ன் தனிமையும் உந்தித் தள்ளும் உளவியல் நெருக்கடிக்குள் புதைந்திருக்கின்றனர் ஈழத் தமிழர்கள்.
பாடைகளில் பயணம் தொடங்கட்டும் என்றா
நாற்காலிகள் காத்திருக்கின்றன?
தொப்புள் கொடியே ஈற்றில்
தூக்குக் கயிறாகிவிடுமோ
நம்பிக்கையைத் தொலைத்துவிட்டு நிராயுதபாணிகளாக நிற்குமிவர்கள் உலக அரசுகள் கற்றுத்தந்த வேசத்தை கொத்திக்கிழிக்கின்ற ஆவேசத்தை எங்கும் காட்டமுடியாமல் வார்த்தைகளால் இயலாமையை, நயவஞ்சகத்தை, போலிமையை எழுதுவதன்றி வேறெதுவும் செய்யமுடியாமல் இருண்டபக்கங்களை எழுத்தில் வடித்து ஆறுதல் தேடும் மனநிலையைப் பிரதிபலிக்கின்றன சில கவிதைகள்.

நேற்று
நமது குழந்தைகளுக்கு உணவுகிடைத்ததா?
நேற்றைக்கும் சமைக்க எடுத்த அரிசியில்
குருதி ஒட்டியிருந்ததா?
பொங்கிச் சரிந்த ஏதோவொரு நாளின் ஞாபகத்தோடு
வேறொரு மரத்தடிக்கோ வயல்வெளிக்கோ
இடம் பெயர்ந்து போனாயா?
விழாக்காலத் துயரம் எனும் இக்கவிதையில் போர்க்காலங்களில் மக்களின் ஒவ்வொரு நாள் வாழ்க்கையும் ஒரு வேளை உணவும் தூக்கமும் இன்றி உதிரம் பெருக்கோடும் மாதவிடாய்க் காலங்களைச் சுமந்த பெண்ணின் இருப்பு கனவிலும் நினைக்க ஒண்ணா நிஜங்களோடு மனங்களுக்கிடையே அலைகின்றன.

போர்வெடித்த பகுதிகள் இப்படியான வாழ்க்கையைத்தான் மக்களுக்கு மிச்சம் வைக்கிறது. இலக்கு நிறைவேறும் தருணத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இலக்கு இடையிலேயே நொடித்துப் போகையில் வரலாற்றின் பக்கங்களில் பதிவாகாமல் போவதும். வரலாற்றினை மறைக்கவும் திரிக்கவும் கற்ற அரசுகளும் அதற்குத் துணைபோகும் ஊடகங்களும் மக்களை அவர்களது இயல்பில் வாழவிடாமல் செய்கின்றன. அதற்கு எதிர்வினையாற்ற வரலாறு நெடுகிலும் போராட்டங்கள் நடந்திருப்பதையும் கவனிக்கிறோம்.

போர்ச்சூழலில் வாழும் மனிதர்களின் ஆளுமைச்சிதைவும், வளரும் குழந்தைகளைக் கொன்று தின்னும் அச்சமும் அவர்களை அந்த நரவேதனையிலிருந்து மீட்கவியலா அடர்ந்த இருண்மைக்குள் ஆழ்த்திவிடத்தக்கவை. குழந்தைகள் தேவதைகளாய்ப் ப+க்கவேண்டிய ப+மியில் வறண்டநிலத்தில் கரிந்துபோன தாவரங்களாய் மாறிப்போகுமிந்த கொடுமையைக் காண்கையில் எதிர்காலத்திற்கு எதை மிச்சம் வைத்திருக்கிறோம் என்ற கேள்வி விடையற்றதாய் எஞ்சியிருக்கிறது.

பரவாயில்லை எனும் தலைப்பிடப்பட்ட கவிதையில் பசியில் மருண்ட மனிதனின் உயிர்த்துளி சொட்டும் ஓசைக்காக காத்திருக்கும் வல்லூறுகள், பெண் பேராளிகளின் பிணங்களை வன்புணர்ந்த இராணுவத்தான்கள், பன்னிரண்டு வயதுப் பாலகனை பேரினவாதப் பேய்கள் தின்ற செய்தி இத்தனைக்கிடையிலும் நீயும் பிரிவு சொல்கிறாய் பரவாயில்லை எனமுடிகிறது.

ஒரு துயர்மிகு காலத்தில் கயமைக்கு மௌன சாட்சியாய் இருப்பதன் அசூயை நாளுக்குநாள் வளர்கிறது. கொலைக்களத்தில் குறிகளால் குதறப்பட்ட சிறுமிகள், புதைக்க ஆளில்லாமல் வீழ்ந்து கிடக்கிறார்கள். நேற்று இணையத்தில் தலைமட்டும் கூழான ஆண்குழந்தையின் உடலைப் பார்த்தேன் என விவரிப்பவர் மனச்சிதைவின் பாதாளத்தில் சரிகிறது நீலமலர்என்கிறார். கண்ணீரின் ஈரமும் குருதியின் சிவப்பும் படியாமல் ஒரு சொல்தானும் எழுதிவிடமுடியாத குரல்கள் ஒடுங்கும் காலத்தை குருதியோடு கரைக்கிறார்.

தடுப்பு முகாம்கள் கவிதையில் இராணுவ வாகனங்கள் உயிருள்ள பிணங்களை வீதியோரத்தில் கொட்டுதல், முகாம் வாசிகளை மகிழ்ச்சியானவர்களாகக் காட்டி புகைப்படம் எடுக்க முயலும் உத்திகள், உறவுகளைப்பற்றியும் மகனைப் பற்றியும் தகவலற்று அடைக்கப்பட்டிருக்கிற தருணங்கள் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் தேவதைகளிடம் முதலில் நீட்டப்படும் துப்பாக்கிகள் பிறகு உளியாய் தொடை பிளந்திறங்கும் குறிகள் குறித்துப் பேசி அகதிகளை முன்னிறுத்திப் பிச்சையெடுக்கும் அரசுநிருபத்தை கவனமாய் மிகக் கவனமாய் பரிசீலித்துக் கொண்டிருக்கிறது சர்வதேசம் என குழந்தையொன்றை கையிலேந்தி பிச்சையெடுக்கும் பிச்சைக்காரியைப்போல சர்வதேச அரசியலின்முன் கையேந்திக் கிடக்கும் அரசியல் காட்சியைக் கண்முன் நிறுத்துகிறது.

மிகு தொலைவில் இருக்குமென் வீடு
ஒரு மரணப்பொறி
அன்றேல்
தீராத காதலொடு
அழைத்திருக்கும் மாயக்கு
ழல்
என விவரிக்கும் கவிஞரின் காதல் கசிந்துருகிய வீடு மரணப் பொறியாக மாறிவிடுகிறது. சொந்த மண்ணும் சொந்த வீடும் அச்சுறுத்த நாடோடியாகிப் போய் பழைய நினைவுகளை மட்டுமே எச்சமாய் சுமந்து திரிகின்றது. பழைய நினைவுகளிலிருந்து மீளமுடியாமல் புதிய சூழலுக்கும் அடங்க முடியாமல் நிலை கொள்ளா மனதோடு வாழ்க்கை நகர்கிறது.

கேள்விகளாலான அவள்
ஊரடங்குச் சட்டமியற்றப்பட்ட
பாழ்நகரை ஒத்திருந்தாள்
போர் குறித்தும் அகதியான வாழ்க்கை குறித்தும் தீராத கேள்விகளை நிரப்பிக் கொண்டு விடையற்று பாழ்நகரை ஒத்திருக்கிறாள். அவையள் ஏன் என்னை அகதிப் பொண்ணு எண்டு கூப்பிட்டவை? என சுயம் தொலைத்த அகதிவாழ்க்கையை அது ஏற்படுத்தும் அகமன உளைச்சலைப் பதிகிறார்.  சாம்பல் நிறமான வயல்வெளிகளில்
குறிகளால் குதறப்பட்ட சிறுமிகள்
புதைக்க ஆளில்லாமல்
வீழ்ந்து கிடக்கிறார்கள்
மீண்டும் பெண்ணின் இருப்பு நிர்
கதியான நிலையைக் காட்டுகிறார்.
ஆண்களைக் காட்டிலும் பெண்களும் குழந்தைகளுமே போர் நடைபெறும் பகுதியில் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். காலங் காலமாக போர்முனைகளில் பெண்களும் சிறுமிகளும் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பெண்ணை சொத்தென பாவிக்கும் உலகில் அவளது உடல் குரூரங்களைச் செலுத்தும் இடமாக மாறிப்போகிறது.

ஊரைவிட்டு ஓடிவந்தால் அகதிவாழ்வு அச்சுறுத்துகிறது. அங்கேயே தொடர்ந்து வாழ்தல் நிலையில்லை என்றானபின் போர்வெளிக்கு வெளியேயிருந்து அம்மண்ணின் அரசியலைப் பேசுபவர்களின் செயலைப் பொறுக்கஒண்ணாதவராய் வேலை சப்பித்துப்பிய விடுமுறை நாட்களில் சலித்த இசங்களையும் அழகிய நாட்களையும் பேசித் தீர்ந்த பொழுதில் மதுவின் புளித்த வாசனையில் மிதக்கவாரம்பிக்கிறது தாய் தேசம் என்பவர்

“கோழிக்காலிலும் தொட்டுக்கொள்ள உகந்தது
எதிர் அரசியல்”
என தன்தாய்மண்ணின் அரசியல் நிகழ்வுகள் இப்படியாக கையாளப்படுகிறதே என ஆதங்கப்படுகிறார். போர்ச்சூழலில் அகதியாக வேறொரு நாட்டில் வாழ நேர்ந்தவர்களுக்கு இருக்கும் குற்றஉணர்வுக்கும் அவர்களது கையாலாகாத நிலைக்கும் ஆறுதலான வார்த்தைகள் இல்லாத சூழல் மேலும் மேலும் தன்னைக் குற்றவாளியாக மாற்றிக் கொள்வதிலிருந்து மிட்டெடுக்க முடியாததாயும் இருக்கிறது.
ஊர்திரும்பும் கனவை
இடிபாடுகளுள்ளிருந்து
இனி மீட்டெடுக்கவே முடியாது
ஒருவழியாய் நண்பர்களே!
உங்கள் கவனத்தை
சவப்பெட்டிகளிலிருந்து
வாக்குப்பெட்டிகளுக்குக் கடத்திவிட்டார்க
ள் !
 உயிர்கள் வாக்குப்பெட்டிக்களுக்காக களிமண் பொம்மைகளைப்போல உருட்டிவிளையாடுவதாக இருக்கிறது. வாக்குச் சாவடியொன்றே நிந்தனையாகவும் நிபந்தனையாகவும் மாறிப்போய்விட்டிருக்கிற நிலையில் அனைத்து நிகழ்வுகளும் இதை முன்னிறுத்த முயலும் யுக்திகளாகவே வடிவமைகிற நிலையை ஆற்றாமையோடு பதிகிறார்.

காலந்தோறுமான இசங்களுக்கும் வாழ்க்கைக்கும் இடையேயான முரணைக் காகித நகரம் கவிதையில் நையாண்டி செய்கிறார். தனித்தவிலும் மத்தளமும் கவிதை, காதல், காமம், பிரிவு என காதல் சார்ந்த உணர்வுகளைக் கூறுகிறது.
உடலொரு பாடினியாய்
இனியும்
இசைத்துத் திரியாதே
நான் என்ற பித்துப் பெ
ண்ணே
என உடலின் மலர்ச்சியை பித்தேறிய நிலையை பரவசத்தோடு வார்த்தைகளுக்குள் கொண்டுவருகிறார். இவரை விரட்டிக் கொண்டிருக்கும் தீராத தனிமையின் துயரை பிரிவை ஏக்கத்தை கவிதைகள் பேசுகின்றன. வாழ்க்கையின் மீதான சலிப்பு, சம்பவத்தின் மீதான கோபம், ஆற்றாமை, கையறுநிலை என எல்லாவற்றையும் கவிதையின் மீது கவிதை எழுதுவதன் மீது ஏற்றிச் சாடுகிறார்.

முன்னொன்று பேசி புறமொன்றும் பேசும் மிகச் சாதாரண மனநிலை ஏற்படுத்தும் உளவியல் சொல்லி மாளாதது. கலப்படமும் ஊழலும் பருண்மையாய் நுழைந்த சமூகத்தில் மனதளவிலும் சுயநலமும் சந்தர்ப்பவாதமும் நட்பையே கொச்சைப்படுத்தும் எல்லைக்குக் கொண்டு சேர்க்கிறது. நட்பு விளையாட்டுப் பொருளாகவும் நகைத்தலுக்குரியதாகவும் கையாளப்படுகிறது. தோழி எனவிளித்துப் பேசிக்கொண்டிருக்கும் பெண்களையே மாற்றிப் பேசும் மனநிலையை ‘பிரம்மாக்கள்’ கவிதையில் கட்டுகிறார்.
மதுவீச்சமடிக்கும் விடுதியறை யொன்றில்
தோழியை வேசியாக்கி
நண்பர்களின் குவளைகளை நிரப்புகிறீர்கள்
நானும் அவளும்
அருந்திய தேநீர் உ
ப்புக்கரித்தது
பெண்படைப்பாளி இயங்குவதற்குரிய ஆரோக்கியமான சூழல் இங்கு இருக்கிறதா? என்ற கேள்வியை எழுப்பிச் செய்கின்றன மேற்கண்ட வரிகள்

ஒவ்வொரு சூழலுக்கு ஏற்ப ஒவ்வொரு கவிதைக் கருவைத் தேர்ந்தெடுக்க முடிகிற நிலையின் புலிவேஷம் கட்டிய நரியொன்று அகத்தே ஏறி அமர்ந்திருப்பதை எழுத முடியவில்லை என்கிறார். நாளொன்றுக்கு ஏறியமரும் பலநரிகளை விரட்டுவதும் ஒவ்வொருவரையும் விரட்டிக் கொண்டுவரும் புலிகளிடமிருந்து தப்பிப்பதுயான வாழ்க்கையில் படைப்பாளி ஓரேதன்மைத்தான சிந்தனையைக் கோரவியலாது

தாய்மண்ணும், அதுசார்ந்த அரசியல் பின்னணியால் நேர்ந்த வாழ்வாதாரம் மறுக்கப்பட்டு நிர்கதியான நிலையும், போரும், கந்தகக் காற்றும், யாதொரு தீர்வுமற்ற வாழ்க்கையின் மீதான சலிப்பும், தனிமை ஏற்படுத்தும் வெறுமையும், பிரிவின் ஆற்றாமையும் காதலும் கவிதை எழுதுவதுமட்டுமே முடிகிறதே என கவிதை மீது காட்டும் கோபமும் மகளிர்தினம் கொண்டாடுகிற நிலையில் நடைமுறை வாழ்க்கையில் பெண்களின் மேம்பாடு சாத்தியப்படாத இடங்களைக் கேள்வி கேட்பதுமாக இருக்கும் தமிழ்நதியின் கவிதைகளின் துயரப்பனி உருகி பாயும் இடமெங்கும் துயரத்தின் சுவடுகளை செதுக்கிவிட்டுச் செல்கிறது. -ச.விசயலட்சுமி

(தமிழ்ப்பெண் மொழி வழி ஓர் அகழ்வாய்வு)

ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள்
(தமிழ்ப்பெண் மொழி வழி ஓர் அகழ்வாய்வு)
பெண்ணெழுத்து தமிழ்ச்சூழலுக்கு ஏற்கெனவே நிரம்ப அறிமுகமாகியிருந்தாலும் அதன் புரிந்து கொள்ளல் தளத்தில் உள்ள முரண்களைக் கட்டவிழ்ப்பது அவசியம் எனப்படுகிறது. பெண்மை என்பது ஒற்றைத்தன்மை உடையதன்று, அது பன்முகத் தன்மை உடையது என்பதான, பின்நவீனத்தின் கருத்தாக்கத்தை எதன் மீதும் சுமத்திப் பார்க்கும் காலக்கட்டத்தில் தான் பெண்ணெழுத்து தமிழகத்தில் ஓங்கியது. குழந்தைகள் விளையாடும் உடைந்த பொம்மையைக் கூட பின்நவீனத்துவப்பண்பு கொண்ட கலைப்பொருள் எனக் கொண்டாடும் நகைப்பைக் கொடுக்கும் இடத்தில், பெண்ணெழுத்தை அறிமுகம் செய்யும் இடத்தையும் கால அவகாசத்தையும் நான் உங்களிடையே எடுத்துக் கொள்ள இருக்கிறேன்.
இவ்விடத்தில் ‘பெண்’ என்ற தனது பால் அடையாளத்தை நிலைநிறுத்த எழுத்தைப் பயன்படுத்திய பெண்களுடன் ஏற்கெனவே அவ்வடையாளங்களுடன் எழுதிய, எழுதிக்கொண்டிருந்த பெண்கள் வந்து இணையும் இடத்தில் அவ்வொற்றை அடையாளம் என்பது காத்திரமடையாமல் நீர்த்துப் போகும்படியான ஒரு செயலூக்கம் பெற்றிருந்ததைத் தமிழ்ச்சூழல் வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருந்தது அல்லது சொரணையற்று இருந்தது. இந்நிலையில் நம் பெண்கள், தம் பிரதிகளை மீண்டும் மீண்டும் எழுதிக் கலைக்கவேண்டியிருந்தது. மணல் மீதான தடங்களைப்போல கலைந்து கொண்டே இருந்தன, அப்பிரதிகள். மண் அடுக்குகளின் ஆழத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும், புதைக்கப்பட்டிருக்கும் தம் உடலைக் கண்டடையும் முடிவற்ற முயற்சியின் வெளிப்பாடாகவும் இருந்தன அப்பிரதிகள். இவ்விடத்தில், பெண் ‘எழுத்தை’, இரண்டாம் கட்டத்தில் எழுத வந்தப் பெண்கள் அவ்விதம் தான் தமக்குப் பயன்படுத்திக் கொண்டனர், ஒடுக்கப்பட்ட பின்னணியிலிருந்து முதல் முறையாக எழுத வந்த பெண்கள், இவர்கள். சமூகவெளியில் முதன் முறையாகத் தம் உடலை நிலைநிறுத்திக் கொள்ளும், கட்டமைத்துக் கொள்ளும் அவர்தம் பணி, அவர்கள் எழுத்தின் வழியாகவே, அதிகார நிறுவனங்களுக்கு வெளிப்படையாகத் தெரியவந்தது. அதிர்ச்சியை அளித்தது. இது நிகழ்ந்த காலக்கட்டத்தில் அதிகார நிறுவனங்கள், பெண்ணுடல்களுடன் நேரடியாகவே மோதத் தொடங்கின.
ஆனால், அதற்கு முன்பிருந்தே எழுத்தைத் தங்களின் ஊக்கமாகவும் அதிகார நிறுவனங்களை எதிர்ப்பதற்கான ஆயுதமாகவும் பயன்படுத்திய இரண்டாம் தலைமுறைப் பெண்கள், ’பெண்’ என்ற ஒற்றை அடையாளத்தையே எப்பொழுதும் வலியுறுத்தி வந்தனர் என்பதை இங்கு நினைவில் வைத்துக் கொள்வோம். ஒற்றை அடையாளப் பெண்கள் இதர, அதிகார நசிவுக்குள்ளான பெண்களுடன் ஒருபுறம் தங்களை இணைத்தவாறே மறுபுறம் ஆதிக்கக்குறிகளையும் தங்கள் உடலில் வளர்த்துக் கொண்டும் இருந்தனர். இந்நிலையில் பெண்களில் ஆதிக்கக் குறி வளர்த்த பெண்கள், ஆதிக்கக் குறி வளர்க்காத பெண்கள் என்ற இருவகையினர் உருவாகினர். ஏற்கெனவே, அதிகாரம், முறையற்ற பாலின்பச் சுவை, உடல் மீதான தொடர் வன்முறைக்கான வேட்கை போன்ற ஆண்மைய வாதத்தினால் பெண்களின் பேசுபொருட்கள் ஒருக்காலும் விளிம்பிலிருந்து மையத்தை எட்ட முடியாத சுழற்சி நிலையிலும், இயக்க நிலையிலுமே இருந்தன. அவ்வகையில், சமூகத்தின் மேல் தட்டு அங்கீகாரங்களுக்கும் சலுகைகளுக்கும் உரியவர்களான பெண்கள் தாங்கள் மீட்டுக்கொண்டு வந்த மணலுடலில் குறி வளரக் கண்டனர். அது பாலுறுப்பு என்பதால், அது எப்பொழுதும் மறைவிடத்தில் உள்ளது என்பதால் அது பெரிய பொருட்டாக்கிப் பேசப்படவேண்டியதில்லை என்று கருதியதுடன், தம் பெண்ணியப்பிரச்சனைகளுக்கெல்லாம் முற்றுவைத்துவிட்டு, தம்முடலை ஒரு பேசுபொருளாக ஆக்கும், அதை திடப்படுத்தும் தலையாய வேலையையும் விட்டுவிட்டு மீண்டும் தங்கள் தங்கள் உடலை ஆணின் வேட்கைக்கு இரையாகச் செய்யும் மரபார்ந்த வேலைக்குத் திரும்பிவிட்டனர்.
பெண்ணெழுதும் பிரதியோ அப்பிரதியைப்படைக்கும் பெண்ணோ முக்கியமன்று. இப்பிரதி உருவாக்கம் பெறும் வழிமுறை தான் முக்கியம். பிரதியை வியத்தலும், அதைத் தூற்றுதலும் அல்லது பிரதியை விடுத்து அதை உருவாக்கிய பெண்ணின் உடலையும் வாழ்க்கையையும் ஒரு பிரதியாக்கித் தூற்றுதல் அல்லது புறக்கணித்தல் போன்ற நிகழ்வுகளையெல்லாம் தமிழ்ச்சமூகம் வேண்டி விரும்பி தன் ஆதிக்கக் குறி வளர்த்த தருணங்களாகக் கொள்ளலாம்.
ஆனால், பெண்ணின் சமூக அடையாளம், அவள் ஆக்கிய பிரதியின் கருப்பொருட்களின் பொருள்விளக்கம் இவையிரண்டுமே, அப்பெண் உருவாகிவந்த பண்பாட்டுத் தளத்தின் வழியே தான் நுகரப்படுகிறது. இதை வேண்டாமென்று பெண்களும், இது அவசியமில்லை என்று வாசகர்களும் ஒருபொழுதும் புறக்கணித்து விடமுடியாது. ‘மொழி’ யைப் பெண் பெறுவது ஓர் அதிகாரமாகவே கருதப்பட்ட சமூகத்தில் பிரதியை உருவாக்கிய பெண்ணுக்கு எழுத்துமொழியுடனான அல்லது வழக்கு மொழியுடனான புழக்கம் எத்தனை தலைமுறையினது என்பதும், முந்தைய தலைமுறையிலேயே அவளுக்கு மொழி வாய்த்திருந்தது எனில் அத்தலைமுறையிலேயே அவளுக்கு மொழி அதிகாரத்தைத் துய்க்கும் வாய்ப்புக் கிடைத்த போது அப்பெண் அம்மொழியை வைத்து தனக்கும் தன்னையொத்த உடலுடைய பெண்களுக்கும் என்ன செய்து கொண்டாள் என்பது மிகவும் கவனத்தில் கொள்ளப் படவேண்டிய கேள்வி. இந்தக் கேள்வியை இன்னும் எளிதாக அணுகுவது அப்பெண்ணுக்கு அவசியப்படும் விடுதலையின் வேட்கையை அளவிட உதவியாக இருக்கும். அதற்குக் காலத்தைத் தலைகீழாக நாம் அணுகவேண்டியிருக்கும். முதல் தலைமுறையாக மொழியைக் கைக்கொள்ளும் பெண் எனில் அப்பெண்ணின் கருப்பொருட்களே முதன்மையானதாகக் கருத்தில் கொள்ளப்படவேண்டும். ஏனெனில், இன்னும் வாசிக்கப்படாததும், முன் வைக்கப்படாததும், புறக்கணிக்கப்பட்டதுமான மூலகங்கள் அங்கே தான் நிறைந்து கிடக்கின்றன.
மேற்கண்ட புரிதலுடன், தமிழ்ச்சூழலில் பெண்ணெழுத்து நிகழ்வை அணுகலாம். மிகை வெளி, இவ்வுலகை ஒரு ‘முழுமை’ எனப்பார்ப்பதற்கான தனிப்பட்ட முறைமை, நன்கு செழித்தும் கொழுத்தும் வளர்ந்திருந்த முதலாளித்துவப் பண்பாட்டு நிலையைப் பகுத்தாய்வதற்கான தத்துவார்த்தக் கருத்துகளின் ஒரு தொகுதி, எப்பொழுதும் கலகத்தை நிகழ்த்துவதற்கான வாய்ப்பும் வேட்கையை நிறைவேற்றிக் கொள்வதற்குமான வசதியும் வழங்கப்பட்ட பசியாறிய உடல்கள், பணிவு மறுக்கும் தன்மை, புரிதலின் செயல்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தருவது, ஒருங்கிணைப்பைக் காப்பாற்றுவதில் அதிக ஆர்வமற்றது, ஏற்கெனவே திடமான குருதிப்பாய்ச்சலுக்கு உள்ளான ஆதிக்கக் குறிகளை வளர்த்திருந்த இனத்துடன் சென்று சேரும் ஆர்வத்தைச் செயல்படுத்திக்கொள்வது, எனத் தீவிரமாக தன்னிலையிழந்து தமிழ்ச்சமூகம் செயல்பட்டுக் கொண்டிருந்தக் காலகட்டத்தில் பெண்ணெழுத்து அறிமுகமாகிறது. அதுவரையிலும் பெண்ணுடலைத் தன் புனைவுகளுக்குள் ஒரு கச்சாப்பொருளாக மட்டுமே ஆண் படைப்பாளிகள் படைத்து வந்தனர். ஆக. பெண்கள் தம் மொழியால் அத்தகையப் புனைவுகளையெல்லாம் தம் எழுத்துக் கரத்தால் அழிக்கின்றனர். அப்புனைவுகளில் இடம்பெற்றவை எல்லாம் எம் உடல்களோ, ஏன், எம் உடல்களின் சாயல்களோ கூட இல்லை என்பது அவர்களின் கருத்தாக இருந்தது. ஆண்களின் புனைவுகளில் உலவிய பெண்ணுடல்கள், ஆண்களின் வசதிக்காகவும், ஆண் குறிகளின் அதிகாரத்தை இயக்குவதற்காகவும் அவர்கள் புலன்களுக்கு இன்பமூட்டும் நுகர்வுத்தன்மைகளுடன் உருவாக்கப்பட்ட அங்க அடையாளங்களுடையதுமான ஒரு தட்டையான உடல் தான். இந்நிலையில் பெண்ணெழுத்து என்பது தன்னுடலின் வலிமையையும் தன்னையொத்த பெண்கள் உருக்கொண்ட உடலையும் எழுதுபொருளாக்கும் முதல் வகையான பணியைச்செய்கிறது. இங்கு எழுத வரும் பெண்களும், அவர்கள் எழுத்து உருவாக்கம் பெறும் நடைமுறையும், ஏன் அவர்கள் உருவாக்கும் பிரதியுமே கூட தனித்த அளவில் முக்கியத்துவம் பெறுவதுடன் உச்சப்பட்ச செயற்பாடும் அடைகின்றன.
மேற்கண்ட நிலையில் உருவாகிய பிரதிகள் எவ்வாறெல்லாம் வாசிக்கப்பட்டன எனும் புரிதலுக்குச் செல்லலாம். அப்பிரதியை வாசித்தவர்கள், அவரவர் மனதில் அப்பிரதியை உருவாக்கியப்பெண் பற்றிய என்னென்ன சமூகப் பண்பாட்டு பிம்பங்கள் துலங்கினவோ, அந்தச் சமூகப் பண்பாட்டு பிம்பங்களுக்கு என்னென்ன ஏற்றத் தாழ்வுகளைக் கற்பித்திருந்தனரோ அதையே கண்ணாடியாக அணிந்து கொண்டு வாசித்தனர். அவர்கள், தங்களின் அகஉலகத்திற்கு ஊட்டி வளர்த்திருந்த கருத்தாக்கத்தையோ, சமூகக் கூறுகளையோ, பண்பாட்டு ஏற்றத் தாழ்வுகளையோ எங்குமே கேள்வி எழுப்பாமல் சந்தேகிக்காமல், தங்கள் முன்வைக்கப்பட்ட பிரதிகளின் மீது அச்சுமைகளை ஏற்றினர். அவற்றைச் சந்தேகித்தனர், அஞ்சினர். அவதூறு செய்தனர். தங்கள் புனைவுகளில் உலவிய பெண் பிம்பங்களும் அவற்றின் வழியாக அவர்கள் தங்களுக்குச் சேமித்து வைத்திருந்த அதிகாரங்களும் பறிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தை மறைக்கப் பரிபூரண அமைதி காத்தனர். இவர்களில் பெரும்பாலான ஆண்கள், யோனியையும் முலைகளையுமே வீடாகவும் வெளியாகவும் மாற்றியிருந்த பெண்களின் காதுகளில், ’யோனிகளும் முலைகளுமே கூட மாயை!’ என அழுந்த அழுந்தக் கூறி அவற்றின் வழியாக அச்சத்தைச் சித்திரித்த பக்திப்பாடல்கள் தொடர்ந்து ஒலித்த இந்துக் குடியிருப்புகளிலிருந்து வந்த படைப்பாளிகளாயிருந்தனர். ஆகவே, தங்களின் கவனத்தை, சமூகப் பிரக்ஞையை, அவர்களுக்கு அது வரை செயலூக்கம் வழங்கி வந்த இந்திய இறையாண்மை, இந்திய சமயம், இந்தியப் பண்பாடு என்ற இந்திய முகத்துடன் தங்களை ஒட்டுமொத்தமாய் இணைத்துக் கொண்டனர். அப்படி அவர்கள் தங்களை இந்திய இறையாண்மையின் இந்து இதயத்திற்கு ஒப்புக்கொடுத்துவிட்டார்களானால், பெண்கள் முகத்தில் வெளிப்படும் பலதரப்பட்ட உணர்ச்சிகளை நேரடியாக எதிர்கொள்ளவே வேண்டியிருக்காது. ஏனெனில் அவ்வுணர்ச்சிகள் அவர்களுக்குள் கடுமையான குற்றவுணர்வை ஊட்டக்கூடும். அவர்தம் பண்பாட்டு அதிகாரத்துடனான உறவைத் துண்டித்து நிரந்தரமானதொரு தனிமையைக் கொடுக்கக்கூடும். மொழி வழியாகத் தம் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டினால் உண்டாகும் பதட்டத்தை எல்லோரும் அறியும்படியாகும். ஆண் குறி வழங்கிவரும் மறைமுகமான பெருமையையும் அதிகாரத்தையும் சுவைக்கமுடியாது போய்விடும். இன்னும் சொல்லப்போனால் எந்த மொழியை வைத்துத் தன் அதிகாரத்தை வளர்த்துக் கொண்டார்களோ அந்த மொழியே முற்றிலும் அந்நியமாகப் போய்விடும். ஏனெனில் இது வரை அவர்கள் கற்பித்து வந்த அர்த்தத்தில் இருந்த சொற்களையெல்லாம் பெண்கள் வேறுவேறு அர்த்தங்களில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அவர்கள் தம் பயன்பாட்டிற்கு ஏற்ற கலைச்சொற்களையும் உருவாக்கிக் கொண்டனர். ஆகவே, புனைவாளர்கள் தங்கள் முகம் திருப்பிக் கொண்டார்கள்!
ஆனால், தமிழ்ச்சூழலில் ஒரு தவறான அர்த்தப் புரிதல் நிகழ்ந்து விட்டது. பெண் விடுதலைக்கான இந்த எழுத்து வகை, பாலியல் வேட்கையின் வெளிப்பாடாகவும் அதற்கான வெளிப்படையான கோரலாகவும் பெண்களாலேயே புரிந்து கொள்ளப்பட்டிருப்பது தான் அது. அத்தகைய பாலியல் வேட்கையை பெண்கள் தாமாய் முன்வைக்கும் உரிமையைப் பெற்றுவிட்டாலே, ஆண் குறிகள் தம்மீது செலுத்தி வந்த அதிகாரத்தை எதிர்த்து விடலாம் என்ற அர்த்தமாயும் எடுத்துக்கொண்டனர். அப்படியொரு பாலியல் வேட்கையையும் விடுதலையையும் ஏற்கெனவே சாதியச் சந்தையின் மேல் தட்டில் இருக்கும் ஆதிக்கச் சாதிப் பெண்கள் நுகரவில்லையா என்ன? அது முழுமையான விடுதலையை பெண்ணினத்திற்குச் சாத்தியப்படுத்திவிட்டதா என்ன? ஆக, மொண்ணையாக அதை பாலியல் வேட்கை என்றும் பாலியல் விடுதலை என்றும் பேசுதல் ஆணாயிருப்பினும் பெண்ணாயிருப்பினும் அவரவர் சாதி சார்ந்த அதிகார போதையில் நிகழும் அரைகுறைப் புரிதலே. பாலிமை உறுதிப்பாட்டை அடைவதற்கான முயற்சியில் ஒடுக்கப்பட்ட சாதிய, பொருளாதார அடுக்குகளின் கீழ்த்தட்டில் இருப்பவர்களுக்கும் இவை தடைகளாக எழுகின்றன. ஆக, இக்கட்டத்தில் பாலியல் உரையாடல்களின் அர்த்தங்களையும் பாலிமையின் பண்புகளையும் பாலியல் சொற்களின் குறியீடுகளையும் விரைந்து மாற்ற வேண்டியிருக்கிறது. மொழியின் கூர்மையை இன்னும் தீட்டிக் கொள்ளவேண்டிய அவசியமும் இருக்கிறது. பாலியல் வேட்கை பற்றிய வெற்று உரையாடல்கள் எல்லாம் புணர்ச்சியின் உச்சக்கட்டத்தைப் போலவே தீவிரச் சோர்வைத்தாம் தரக்கூடும், அதை அடைவதற்கான வழிமுறைகளும் அலகுகளும் தேவைகளும் இல்லாத போது.
பாலியல் வேட்கை என்பதை முன்வைக்கும் பெண்நிலை வாதம் முற்றிலுமானதோர் ஒற்றை அடையாளத்தைப் பெண்ணுக்குக் கேட்பது. ஆண்களை மட்டுமே எதிரிகளாகப் பாவித்து, இதர சமூகப் பெண் வர்க்கத்தினரை புறந்தள்ளுவது. இவர்கள் தாம் ”பெண்” சம்பந்தப்பட்ட எதுவுமே பெண்ணியப் பிரச்சனையென்று பொத்தாம்பொதுவான விஷயங்களையும் பேசுபொருளாக்குவதுடன், பெண்ணிலை வாதத்தை கூர்மையடையாமல் மழுங்கடையச்செய்கின்றனர். பொருளாதார, சாதிய நிலைகளில் ஒடுக்கப்பட்ட நிலையில் இருக்கும் பெண்களின் முதன்மையான பிரச்சனை பாலியல் வேட்கை இல்லை, பாலியல் உரிமை. அத்தகைய பாலியல் உரிமைகளில் அவர்கள் கோரும் வேட்கை என்பது மிகச்சொற்பமான, அற்பமானதோர் உரிமை. அன்றாடம் கணநேரமும் உழைக்கும் பெண்ணின் பாலியல் நுகர்வுக்கான இயல்பூக்கம் எப்பொழுதுமே ஆரோக்கியமானதாகவும் அவ்வேட்கையை நிறைவு செய்துகொள்ளும் அனுபவமும் வாய்த்ததாகவும் இருக்கும் என்பதில் ஐயமென்ன இருக்கிறது?. ஆனால், உடலுக்கு உணவையும் ஆரோக்கியத்தையும் வழங்குவதற்கான அடிப்படை வசதிகள் அற்ற சமுதாயத்திலிருந்து எப்படி உடலுக்கு பாலியல் இன்பத்தை வழங்க முடியும்? பசி வந்திடப் பறந்து போம்!
தீவிரநிலைப் பெண்ணியம், மார்க்சியம் போன்ற கருத்தாக்கங்களை பெண்களின் உடல் சார்ந்த அரசியலைப் பேசுவதிலும் குறிப்பாக, கீழைத் தேயப்பெண்களின் காலங்காலமான செயற்பாடுகளை அர்த்தப்படுத்துவதிலும் இருக்கும் போதாமைகளை நினைவில் கொண்டும், அக்கருத்தாங்களை முற்றிலும் உதிரியான அளவில் புரிந்து கொண்டும் தாம் இதை முன்னுரைக்கிறேன். இந்நிலையில் நாம் அடையவேண்டிய பெண் விடுதலை என்பது, பெண்ணின் பொருளாதார விடுதலையைக் கருத்தில் கொண்டது, அதன் கடந்த கால சாத்தியங்களை நினைவில் கொண்டது, இன்றைய பெண்ணுக்கான அறஞ்சார்ந்த வாழ்வையும் அதில் பெண்ணுக்கான பாலுரிமையையும் உள்ளடக்கியது.
அம்பேத்கரின் நூற்றாண்டுக்குப் பின் தான் பிற சமூகத்தினரிடம் ’பெண் விடுதலை’ நிகழ்த்தப்போகும் அதிர்வுகள் குறித்த இம்மாதிரியான பதற்றங்களும், குழப்பங்களும், தடுமாற்றங்களும் அதிகமாகியிருப்பதை உணர்கிறேன். பட்டியல் இனம் தவிர்த்த பிற சாதியினர் தங்கள் அதிகாரத்தையும் நிலைநிறுத்துதலையும் புணரமைக்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டதைப் போல தீவிரமாக இயங்கத் தொடங்குகின்றனர். இதில் இயல்பாகவே பெண்களின் ஒட்டுமொத்த பிரதிகளும் அவர்கள் எந்தப் பின்னணியிலிருந்து வந்தனரோ அந்தப் பின்னணி சார்ந்து இரு வகையினராகப் பிரித்து நுகரப்படுகின்றன.
இதில் நாம் உண்மையிலேயே படித்துணரவேண்டியதும் நாம் எடுக்கவேண்டிய நிலைப்பாடும், தொன் பொருண்மைத்துவமும் தொல் அறவியலும் சார்ந்தது. இந்தியாவைப் பொறுத்தவரை ஏற்கெனவே நினைவுகளில் மீண்டும் மீண்டும் பதியப்பட்டிருந்த மரபார்ந்த பெண்பிம்பங்களின் நினைவுகளிலிருந்து நம் பெண்களை மீட்டெடுக்கவேண்டியிருக்கிறது. ஆதிக்கப் பெண் பிம்பங்களான பாஞ்சாலியின் தூமையில் உழலும் பூமியாகவும் சீதையின் சாபத்தினால் பீடிக்கப்பட்ட மண்ணில், அவள் உண்டாக்கிய தீயின் வெக்கையில் உழல்பவர்களாகவும் நம் மண்ணையும் நம் மக்களையும் சித்தரிக்கும் பிம்பங்களிலிருந்தும் பெண்கள் தங்கள் உடல்களை மீட்டெடுக்க வேண்டியிருக்கிறது. இதன் பின்னணியில் மரபார்ந்த இன ஒடுக்குமுறையையும், அதற்காகக் கட்டமைக்கப்பட்ட சாதிய அடக்குமுறையையும் நாம் புரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது. இதுவே, இம்மண்ணின் தொல் தெய்வம் என்றால், வைதிக அடையாளங்களைத் துறந்த தெய்வமென்றால் அதன் தூமையலாத செங்குருதியில் உழலும் உடல்கள் நீங்கள் என்று எவரையும், ஏன் எந்த ஓர் ஆதிக்க சாதிப்பெண்ணையும் நாம் அடையாளப்படுத்தி அவர்களுக்கு, அறிவு புகட்டமுடியுமா என்ன? எந்த அதிகார நிறுவனத்தின் குறுக்கீடும் இல்லாமல் இயல்பான பாலியல் உந்துதலை, ஊக்கத்தைச் செயல்பாடாக்கும் உரிமை தான் பெண்களை மிகவும் வலுவாக்கும். இன்று பெண் கவிதையின் அடிநாதமாய் வியக்கப்படும் ஆண்டாளின் பாடல்களே கூட தனக்கு மறுக்கப்பட்ட ஆணுடல் மீதான வேட்கையை இறைவன் மீது ஏற்றிப் பாடியதே. இந்த ஆண்டாளுக்கு எல்லா அடிப்படையான உரிமைகளையும் அனுபவிக்கும் வாய்ப்பு இருக்க, பாலியல் வேட்கையை வெளிப்படுத்தும் வாயிலான யோனி மட்டுமே அடைக்கப்பட்டிருந்ததே அவள் உணர்வெழுச்சிக்குக் காரணமாயிருந்தது.
ஆகவே, ஆண்டாளின் உடலும் எம் பெண்டிரின் உடல் அல்ல. யோனியை எவருக்கும் குத்தகைக்கு விடாத உடல் தீரத்தை நாம் எதிர்கொள்ளவேண்யிருக்கிறது. காலங்காலமாக ஆண்களும் அதிகாரமும் அடைக்கலமான நம் யோனிகளை அதன் அதிகார உடல்களிடலிருந்து பறித்தெடுக்க வேண்டியிருக்கிறது. அந்த யோனிகளைக் காரணம் காட்டித்தான் நம்மீது பண்பாட்டின் சுமைகள் ஏற்றப்பட்டிருக்கின்றன. ஆக, நம் பெண்டிரின் யோனிகளே, அறமும் சமூக நீதியும் உட்பொருளான தொல்நெறியுடன் நம்மை இணைத்துக்கொள்வதான நுழைவாயில்கள். மேலும் அந்தயோனிகள் வழியாகத் தொடர்ந்த புனல்கள் தாம் நமது உடல்களுக்கு, உடல் வளமைக்கு தீராத பாலூக்கத்தைத் திறந்து கொடுக்கின்றன.
மேலும் வாசகர்கள் தெளிவாக ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். கலவியையும் பாலியல் வேட்கையையும் பேசுமிடத்தில் மட்டுமே நம் உடலை மீட்டுக் கொண்டுவிட்டதாகி விட முடியாது. நம் உடலை வலையாகப் பின்னிக்கொள்ளும் பிற ஆண், பெண் சார்ந்த பாலியல் அடக்குமுறைகளிலிருந்தும் வன்முறைகளிலிருந்தும் கூட நம் உடலை கைப்பற்ற வேண்டியிருக்கிறது. அதன் உள்ளீடாக இருக்கும் பாலியல் அரசியல்களையும் விவாதப் பொருளாக வேண்டியிருக்கிறது. தன் உடல் என்பதே கூட மற்ற உடல்களுடன் ஊற்றாக இருக்கும் யோனிகளுடன் தொடர்ந்ததொரு தீராத உறவைக் கொண்டிருக்கிறது. ஆகவே, மற்ற வேறுபட்ட தளங்களிலும் இருக்கும் பெண்ணுடலையும் மீட்டு வராமல் ஒரு பெண்ணுக்குத் தன் உடல் உரிமையும் விடுதலையும் என்பது சாத்தியமே இல்லை.
மேற்விவரித்த, விவாத முன்னிலையில், ‘ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்த பிரதிகள்’ என்ற தொடரை எழுதப் போகிறேன். இது 1990 – களில் நிகழ்ந்த பின்நவீனத்துவ வாதத்தின் தேய்வையும், அப்பொழுது பெருவாரியாக அழுத்தமாக தமிழ்த்தளத்தில் நிகழ்ந்த ஒடுக்கப்பட்ட பின்னணியிலிருந்து எழுத வந்த பெண்ணெழுத்தையும் பொருட்படுத்தி விவாதம் செய்யும். மேற்கத்திய கருத்துக்கோட்பாடுகளைப் புறந்தள்ளும் அல்லது அதன் பொருத்தப்பாடு கருதி விவாதிக்கும். மேற்குத் திசைக்கு முற்றிலும் எதிரான திசையில், ஐந்தாயிரம் வருட தொன்மையான தமிழ் அறச்சீர்மையான வெளியில் பயணித்தவாறே அகழ்வாராய்ச்சி செய்யவும் துணியும். வாருங்கள் நண்பர்களே! தேங்கிக் கவனிப்பாரற்றுக் கிடக்கும் அதன் நீர்வெளியில் நிரம்பத் தழைத்த பாசிகளை விலக்கிய வண்ணமே உள்நுழைந்து அகழ்வாராயாலாம், வாருங்கள்!
 நன்றி -குட்டிரேவதி 

குட்டிரேவதி

1
 



 
 
 

குட்டி ரேவதி
குட்டி ரேவதி (ரேவதி சுயம்புலிங்கம்) சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட ஒரு பெண் கவிஞர். மிகவும் அற்புதமான கவித்துவமும் சிந்தனைத் தெளிவும் நிறைந்தவர். எழுத்து, பெண்ணியம் போன்றவற்றில் முனைப்புடன் இயங்கிவருகிறார்.
இவர் பனிக்குடம் என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இதில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. இப்போது எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராக இயங்கிவருகிறார்.
தலித் பெண்ணியம் என்பதை சித்தாந்த வடிவில் கட்டமைப்பதும் களப்பணிக்குச் செயல்படுத்துவதும் தாம் இந்தியாவில் பெண்களின் உரிமைகளை முழுமையான வடிவில் பெற்றுத் தரும் என்று நம்புபவர். சாதிய மறுப்பும் ஒழிப்பும் தாம் பெண்ணுடலை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் என்ற உணர்வுடன் தலித் பெண்ணியத்தைத் தனக்கேயான மொழியில் சித்தாந்தப்படுத்தி வருபவர்.
இதற்கு தமிழகத்தில் உருவெடுத்த பெண் கவிஞர்களின் ’உடல் அரசியல்’ மொழியும் எழுச்சியும் முக்கியமான பங்களிப்பு என்கிறார். சிற்றிதழ் இயக்கம் மற்றும் நவீனத் தமிழ் இலக்கியம் வழி உருவெடுத்தவர்.

இந்நூற்றாண்டின் முக்கியமான பெண்ணியச்செயல்பாடு என்பது தனித்த பெண்ணியச் சிந்தனைகளைக் கட்புல படிமங்களாக பரிணமிக்கச்செய்தலே என்ற தன் தீவிர நம்பிக்கையின் படி முழுமூச்சாக ஆவணப்படத்துறையிலும் திரைப்படத்துறையிலும் இயங்கிவருபவர்.
கவிதை நூல்கள்
பூனையைப் போல அலையும் வெளிச்சம் (2000)
முலைகள் (2002)
தனிமையின் ஆயிரம் இறக்கைகள் (2003)
உடலின் கதவு (2006)
கட்டுரை நூல்
காலத்தைச் செரிக்கும் வித்தை (2009)

காலச்சக்கரம்: உலகத்தின் விழிகள் முதல் ஒளியின் நினைவுகள் வரை


wot02-the-great-hunt
எழுதியவர்.....ஜோஸ்ஷான்
காலச் சக்கரம் சுழல்கிறது, யுகங்கள் வந்து செல்கின்றன, நினைவுகள் வரலாறாகின்றன.. வரலாறு தொன்மமாக மாறுகிறது, தொன்மம் பழங்கதைகளாகிறது. பழங்கதைகள் மறைந்து புதிய யுகம் துவங்குகிறது. மூன்றாம் யுகம் என சிலரால் அழைக்கப்பட்ட ஒரு யுகத்தில், வரவிருக்கும் ஒரு யுகத்தில், ஏற்கனவே கடந்து சென்ற ஒரு யுகத்தில் பாண்டிச்சேரியின் பொந்து ஒன்றின் மீதாக ஒரு காற்று எழுந்தது. அந்த காற்று ஆரம்பம் அல்ல. காலச்சக்கரத்தின் சுழற்சிகளிற்கு ஆரம்பம் என்பதோ முடிவென்பதோ கிடையாது. ஆனால் அது ஒரு ஆரம்பமே…..
பாண்டிச்சேரியில் ஒரு பொந்து இருக்கிறது. அதில் என் நண்பர் ஒருவர் வசித்து வருகிறார். பொந்து என்றவுடன் முயல், கிளி, ஹாபிட்டுகள், ஆந்தைகள் வாழும் பொந்தாக அந்தப் பொந்தை கற்பனை செய்து கொள்ளாதீர்கள். என் நண்பர் வாழ்ந்து வரும் பொந்தில் பயங்கரமான வசதிகள் உண்டு. ஹோம் சினிமா, காபரே, காசினோ, காக்டெயில் பார், குளியல் அறை… காவல் துறையில் முறையீடு செய்யாத பணிப்பெண்கள், ஒரு அரிய நூலகம் என அப்பொந்தில் சொகுசிற்கு குறைவில்லை. அங்குள்ள பஞ்சணையின் மென்மை அறியா உலகப் பைங்கிளிகளும் உண்டோ என்பது மூன்றாம் யுகத்தின் முதுமொழி.
wotcoverநல்லதொரு இளம் மழைநாளில் மழையைப் பார்க்காமலேயே அதை தன் அகக் கண்களால் கண்டவாறு நூல்களை படிப்பது அவரிற்கு பிடித்தமானது. அவ்வேளையில் அவர் புகைக்கும் சுங்கானிலிருந்து வெளியாகும் புகையானது கற்பனையின் மேகக்கூட்டமாக பொந்தின் மேல் உலாச்செல்வதுண்டு. மழைமேகங்களும், புகைமேகங்களும் இணைந்து இழைய உருவாகும் அந்த மங்கிய ஒளியில் அவர் இதழ்கோடிகளில் பூக்கும் சிறு புன்னகை கவர்ச்சியின் இலக்கணமாக கொள்ளப்படலாம். ஆனால் அதை அவர் மென்மையாக மறுத்துவிடுவார். அவரிடம் இருக்கும் சுங்கான் நீண்டது. அழகிய வேலைப்பாடுகள் நிறைந்தது. ஆதிமொழியில் அதில் வரிகள் உண்டு.
மழை தெரியும் ஜன்னலின் அருகில் சரா கண்டத்து விந்தை மிருகமொன்றின் தந்தத்தால் உருவாக்கப்பட்ட சாய்வு நாற்காலியில் அமர்ந்து அவர் கற்பனை உலகினுள் வாழ்ந்திருப்பார். அருகில் உள்ள சிறிய மேசையில் நிலாக்கல்லில் உருவாக்கப்பட்டு வண்ணக் கற்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்ட ஒரு கிண்ணத்தில் வாசனைச் சரக்குகள் கலக்கப்பட்ட இதமான சூடு கொண்ட திராட்சை மது அவர் இதழ்களின் ஸ்பரிசத்தை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும். இவ்வாறான அவரின் இனிய வாழ்க்கையில் ஒரு இடையூறு சிதறிய ஒரு எரிமலைக்குழம்புத் துளியாக அவர் மேல் வந்து இறங்கியது.
அரிய நூல்களை, ஓய்வுநாள் சந்தைகளில் தேடிப் பார்த்து வாங்குவதில் அவர் ப்ரியம் கொண்டவர். நூல்களின் பின்னட்டைகளின் இருக்கும் பெண் நாவலாசிரியைகளின் நிழற்படங்கள் அழகாக இருக்கும் பட்சத்தில் அந்நூல்கள் அருமையானவை என்பதை தீர்க்கதரிசனமாக கூறும் திறமை அனுபவத்தால் அவரிடம் கைகூடியிருந்தது. இவ்வாறாக அவர் சேகரித்த அரிய நூல்கள் பொந்து நூலகத்தின் இடப்பரப்பை முழுமையாக பிடித்துக்கொண்டு, பொந்தின் பொதுவெளியில் தன் ஆக்கிரமிப்பை நிகழ்த்த ஆரம்பித்த வேளையில்தான் பொந்தில் நீ அல்லது புத்தகங்கள் எனும் ஒரு எல்லையை அவர் அன்பு அன்னை கொண்டு வந்தார். பின்னட்டை நாவலாசிரியைகளை பிரிய வேண்டிய வேதனை அவரை புதிய விதையொன்றின் நுண்ணிய வேர்களாக துளைபோட ஆரம்பித்த கணமது. பின்னட்டையில் நிழற்படங்கள் இல்லாத அரிய நூல்களை அவர் தானம், விற்பனை, தகனம் செய்ய ஆரம்பித்தார். சந்தைகளிலும், ஆதி நூலகங்களிலும் தேடித் தேடி அவர் சேகரித்து வைத்திருந்த நூல்களை பிரிவதென்பது காதலியைப் பிரிவதை விட வலியை தருவதாகவே அவர் உணர்ந்தார். இந்த சந்தர்ப்பத்தில்தான் அவரது சேகரிப்பில் இருந்த The Wheel of Time எனும் பெருந்தொடர் நாவலின் மீது அவர் கவனம் வீழ்ந்தது.
459px-Re-learning_the_sword_03gallery_19580_109_156923Perrin_wolvesசுவைக்காமல் கனியை எறியாதே, ருசிக்காமல் கன்னியை துரத்தாதே, படிக்காமல் நூலை வீசாதே என முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். கனி என்றால் ஒரு அல்லது இரு கடி, கன்னி என்றால் ஒரு அல்லது இரு….., நூல் என்றால் ஒரு பத்து அல்லது நூறு பக்கம் என்பதை அவர் எல்லையாக கொண்டிருந்தார். காலச்சக்கரத்தை அவர் படிக்க ஆரம்பித்தார். முதல் ஐம்பது பக்கங்களை தாண்டியபின்பாக அவர் மீளாப்பிரமை ஒன்றில் நுழைந்திருந்தார். அதன் சுழற்சியில் இருந்து அவர் இன்னமும் வெளிவரவில்லை. சிட்டு ஆய்வாளாராக மரங்களின் மென்பச்சை பாசி படர்ந்த கிளைகளில் தன் உடலைக் கிடத்தி விழியை அகல விரித்துக் காலத்துடன் காய்ந்து கொண்டிருந்த தன் நண்பரும் இந்த புதிய உலகில் வாழ வேண்டி அவரிடம் காலச்சக்கர சுழலில் சிக்குமாறு அழைப்பு விடுத்தார்.
பங்குனியில் கிளைகளில் சிட்டுக்கள் அமர்வது அரிதான ஒன்றாக மாற ஆரம்பித்திருந்தது. நான் ஒளிந்திருக்கும் கிளைகளை சிட்டுக்கள் ஏனோ தவிர்க்கின்றன எனும் ஒரு உணர்வு இலைகளின் நாடிகளில் ஊர்ந்து செல்லும் எறும்பின் பாதத்தின் குறுகுறுப்பாய் என்னுள் ஊர்ந்தது. இதனால் என் வாசிப்பில் ஒரு வெறுமை உருவாகி இருந்தது. தொடர்சியாக நீளும் ஒரு வரியில் விழும் வெட்டுப்போல. என்ன வாசிக்கலாம் என்பதை என்னால் தீர்மானிக்க முடியாத ஒரு நிலை. அப்போது நண்பர் கூறினார், காலச்சக்கரத்தை படியுங்களேன் என்று. இன்றுவரை அதன் சுழற்சியில் இருந்து என்னால் மீண்டு வர இயலவில்லை…..
ஒளிக்கும், இருளிற்குமான போராட்டம் என்பது மிகைபுனைவுகளின் ஒரு முக்கிய கூறாக இருந்து வருகிறது. ஒளி என்பதை நன்மை என்பதாகவும் இருள் என்பதை தீமையாகவும் ஒருவர் உருவம் செய்து கொள்ளக்கூடும். அதுவே சரியாகவும் இருக்கக்கூடும். இப்போராட்டம் பல்வேறு வடிவங்களில் வெவ்வேறு கதைகளாக வடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஒளியின் ஆசிபெற்று போராடுபவர்கள், இருளின் ஆக்கிரமிப்பில் போராடுபவர்கள், இவை இரண்டிற்குமிடையில் சிக்கி கொண்டவர்கள், இருள், ஒளி, நன்மை, தீமை என்பதன் கருத்தாக்கத்தால் பாதிக்கப்படாதவர்கள் என பாத்திரங்கள் பல வகைகளாக உருவாக்கப்படுகிறார்கள். எம் ரசனைக்கேற்ப பாத்திரங்களை எம்மால் ரசிக்கவோ அல்லது அப்பாத்திரத்தை சிறப்பான ஒன்றாகவோ நாம் கருதிக்கொள்ள முடிகிறது. இங்கு ஒளியும் இருளும் ஒருவரின் ரசனைக்கும் தேர்விற்கும் தடையாக வருவதில்லை. ஒளியைப் போலவே இருளிலும் உயிர் இருக்கிறது. அதுவும் ஒரு வாழ்க்கைதான். ஆனால் பெரும்பாலான போராட்டங்கள் ஒளியின் பார்வையிலேயே விவரிக்கப்படுகின்றன. ஒரு வாசகனின் ரசனை அவனை ஒளியின் பிரகாசமான வீதிகளிலோ அல்லது இருளின் ரகசிய நிலவறைகளினுள்ளோ அவன் காத்திருந்த சுவையைக் காட்டிடக்கூடும்.
180px-Min622px-ElayneAviendhaநகரங்களின் சுவடு படாத ஒரு மலையோர கிராமத்தில் வாழ்ந்து வரும் சாதாரணமான மூன்று இளைஞர்கள், இரு இள நங்கைகள் ஆகியோரின் வாழ்க்கையானது விதி இழைக்கும் கோலத்தால் எவ்வாறு மாற்றம் கொள்ள ஆரம்பிக்கிறது என்பதும் அந்த விதிக்கோலத்தில் இழைக்கப்படும் நெய்தல்களால், அது உருவாக்கும் வடிவங்களால் அவர்களை சுற்றியுள்ள உலகம் எவ்வாறு உருமாற்றம் கொள்கிறது என்பதும் The wheel of Time எனும் மிகைபுனைவு நாவல் வரிசையின் மையமான அம்சமாக உள்ளது என்பது என் புரிதல். ராண்ட் அல்தோர், மாத்ரிம் கோதன், பெரின் அய்பேரா எனும் இளைஞர்கள், எக்வின் அல்வெர், நிய்னெவ் அல்மெய்ரா எனும் நங்கைகள், இவர்களை பிரதான பாத்திரங்களாகக் கொண்டே எமொன்ட்ஸ் ஃபீல்ட் எனும் கிராமத்தில் கதையை தன் மாய வரிகளில் ஆரம்பிக்கிறார் கதாசிரியர் Robert Jordan.
பனிக்காலம் முடிவடையாமல் நீண்டு சென்று முன்வசந்தத்தை உறைய வைத்துக் கொண்டிருக்கும் காலம். தங்கள் பண்ணையில் தயாரிக்கப்பட்ட ஆப்பிள் மதுவை எமொண்ட்ஸ் ஃபீல்டில் கொண்டாடப்படவிருக்கும் முன்வசந்த வருகை விழாவிற்காக ராண்டும் அவன் தந்தையும் குதிரைகளில் எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள். ஆளரவமற்ற மலைப்பாதையில் வீசும் குளிர்காற்றானது அவர்கள் இருவரும் அணிந்திருக்கும் மேலங்கிகளினுள் தம் உறைந்த கரங்களை செலுத்தி அவற்றைக் களைந்துவிட முயன்று கொண்டிருக்கிறது. ராண்டின் உள்ளுணர்வில் தான் கண்கானிக்கப்படும் உணர்வானது அந்தக் குளிரையும் தாண்டிய நுண்ணிய வருடலாக உணரப்படுகிறது. தான் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கும் ராண்ட், நள்ளிரவை அங்கியாக அணிந்து கரும்புரவி ஒன்றன் மீது அமர்ந்திருக்கும் ஒரு உருவத்தைக் காண்கிறான். தன் தந்தைக்கும் அவ்வுருவத்தை அவன் காட்ட முயற்சிக்கும்போது அந்த உருவம் காணாமல் போய்விடுகிறது. அந்த உருவமானது அவன் கண்களிற்கு மட்டுமே புலனாகக்கூடிய ஒன்றாகவே வாசகனிற்கு அறிமுகமாகிறது. ஆனால் காலச்சக்கரத்தின் ஆரம்பம் இதுவல்ல ஏனெனில் அதற்கு ஆரம்பமோ முடிவுகளோ கிடையாது…..
645px-NynaeveEgwene645px-Siuan2இருளிற்கும் ஒளிக்குமான போராட்டம் ஒன்றில் மனம் பிறழ்ந்த நிலையில் லுஸ் தெரென் தான் வாழும் உலகை சிதைத்துப் போடும் நிகழ்வுடனேயே காலச்சக்கரத்தின் அந்த ஆரம்பம் தொடங்குகிறது. அந்த ஆரம்பத்தை படிக்கும்போது இது என்ன குழப்ப வலையாக இருக்கிறதே எனும் எண்ணங்கள் உருவாகிக் கொண்டே இருக்கும். ஆனால் அதை சில பக்கங்களில் ஆசிரியர் முடித்துவிட, விதியின் கோலத்தினுள் வாசகன் அப்பாவியாக காலடி எடுத்து வைக்கிறான்.
தர்க்கமோ, வாதமோ இப்பெருந்தொடரை அனுபவிக்க உதவப்போவதில்லை. ஏனெனில் சறுக்கல்கள் கொண்ட தொடர்தான் இது. மாறாக ஆசிரியர் தன் வரிகளில் வடிக்கும் உலகத்தை அதில் வாழும் மனிதர்களை, விந்தையான ஜீவன்களை எம்மால் கற்பனையில் உயிர்கொடுக்க முடிந்தால் இத்தொடரின் சுவை சிறப்பான ஒன்றாக இருக்கும்.
வேகக்கதைப் பிரியர்களிற்கானதல்ல இக்கதை. இக்கதையின் வேகம் வாசகனின் கற்பனையின் வேகவீச்சாலேயே தீர்மானிக்கப் படக்கூடிய ஒன்றாக அமைந்து விடுகிறது. அந்த உலகின் அழகும் கவர்ச்சியும் அதில் பொதிந்திருக்கும் இருளும் சாகசங்களும் அவனால் உருவாக்கப்படுவதே. ராபார்ட் ஜோர்டானின் வரிகள் அவன் கற்பனையில் அந்த உலகை சிருஷ்டிப்பதை இலகுவாக்கின்றன. அவன் தன் மனத்திரையில் தீட்டும் கற்பனைக் காட்சிகளின் எழிலை ஜோர்டானின் வரிகள் மெருகூட்டி தருகின்றன. வசியம் நிரம்பிய புதை மணலில் சிக்குபவனை போல ஒரு மாய உலகிற்குள் வாசகன் அனுவனுவாகச் சிக்குகிறான். அம்மாயவுலகத்தின் அறிமுகத்தில் சற்றே மூச்சுத் திணறும் அவன் பின் முழுமையாக அதை உள்வாங்க ஆரம்பிக்கிறான். அம்மாயவுலகத்தில் அவனும் ஒரு பிரஜையாகிப் போகிறான்.
ஜோர்டான் சிருஷ்டித்திருக்கும் அம்மாயவுலகம் மூன்று திசைகளில் கடலை எல்லையாகக் கொண்ட ஒரு பெரும் நிலப்பரப்பாக விரிகிறது. அவ்வுலகில் கடவுள் என்ற சொல்லை ஜோர்டான் உபயோகப்படுத்துவதில்லை. தெய்வங்களோ, தெய்வ வழிபாடுகளோ, ஆலயங்களோ அப்பெரு நிலத்தின் அடையாளங்களாக காணக்கிடைப்பதில்லை. ஆனால் சாத்தான் அவ்வுலகில் இருக்கிறான். உலகை படைத்தவர் எவரோ அவரே காலச் சக்கரத்தையும் இயக்குபவர் என ஒருவரை குறிப்பிடுகிறார் ஜோர்டான். அவரை சிருஷ்டிகர்த்தா என அவ்வுலகம் குறிப்பிடுகிறது.
சிருஷ்டிகர்த்தாவினால் அவன் சீடர்களுடன் சிறைவைக்கப்படுகிறான் இருளன். அவன் சிறையின் கதவுகள் பல பாதுகாப்பு முத்திரைகளால் முத்திரையிடப்பட்டு மூடப்பட்டிருக்கின்றன. அவன் கரங்கள் உலகை தீண்டாது யுகங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஆனால் யுகங்களின் கடப்புடன் இருளனின் சிறையின் முத்திரைகள் தம் வலிமையை இழக்க ஆரம்பிக்கின்றன. இருளனின் கரங்கள் வலிமை இழந்த முத்திரைகளை தாண்டி உலகினை தொட்டுப் பார்க்க தொடங்குகின்றன. காலச்சக்கரத்தை உடைத்து யுகத்தினை நிறுத்தி இருள் யுகத்தினை தனதாக்கும் தருணம் நெருங்கிவிட்டதை உணர ஆரம்பிக்கும் இருளன், தன் சீடர்களையும், அழிவை விரும்பும் இருளுயிரிகளையும், கொடூர பிறப்புக்களையும் தன் கனவின் ஆரம்ப கோலங்களை வரைபவர்களாக உலகில் உலாவரக் கட்டளையிடுகிறான். தன் திட்டத்திற்கு தடையாக இருக்கக்கூடிய மூன்று இளைஞர்களை தன் பக்கம் இழுத்துக் கொள்வதே அவன் நோக்கம். இருளன் எவ்வாறு அந்த மூன்று இளைஞர்களையும் தன் பக்கம் இழுக்க விரும்புகிறானோ அதேபோல் அந்த இளைஞர்களை ஒளியின் பாதையில் இட்டுச் செல்ல போராட தயாராகிறார்கள் ஒளியின் போராளிகள். ஒளியின் ஆசி பெற்ற போராளிகளிற்கும், இருளனின் ஏவலர்களிற்குமிடையிலான இப்போராட்டம் ஆரம்பிக்கும் இடம்தான் எமொண்ட்ஸ் ஃபீல்ட் கிராமம்.
Moiraine_Damodred672px-Lan_salibaகாலசக்கரத்தின் ஒவ்வொரு பாகமும் அதன் முக்கிய நாயகர்களான ராண்ட், மாத், பெரின், எக்வின், நிய்னெவ் ஆகியோரின் வியக்கதகு ஆளுமை மாற்றங்களையும், அவை உருவாக்கும் விளைவுளையும் சுவையுடன் எடுத்து வருகிறது. இந்தக் கதையின் முக்கிய பாத்திரமாக ராண்டையே ஜார்டான் முன்னிறுத்துகிறார். முன்னொரு யுகத்தில் தன் சொந்தங்களை அழித்து, உலகைச் சிதைத்தவனான லுஸ் தெரெனின் புதிய பிறப்பாக ராண்ட் கதையில் சித்தரிக்கப்படுகிறான். நாவல் தொடரின் மூன்றாம் பாகத்தில் அவன் குறித்த தீர்க்கதரிசனங்கள் சிலவற்றை நிகழ்திக்காட்டும் ராண்ட், த ட்ராகண் ரீபார்ன் ஆகவே பின்பு அழைக்கப்படுகிறான். அந்த பெயரைப் பெறவும் அதனை தக்க வைத்துக் கொள்ளவும் ராண்ட் நிகழ்த்தும் சாகசங்கள் சிறிதல்ல.
காலச்சக்கரத்தின் மிக முக்கிய அம்சங்களில் ஒன்று முழுமுதற்சக்தி. சிருஷ்டியின் இயங்கு சக்தியாக இது கொள்ளப்படுகிறது. இந்த முழுமுதற் சக்தியானது எப்போதுமே இருவகையாக பிரிந்திருக்கிறது. ஆண்களால் கையாளப்படும் ஒரு பங்கு, பெண்களால் கையாளப்படும் ஒரு பங்கு என்பதாக அது பிரிக்கப்படுகிறது. ஆண்களினால் கையாளப்படும் சக்தியின் பங்கானது சைடின் எனவும், பெண்களால் கையாளப்படும் சக்தியின் பங்கானது சைடார் எனவும் பெயர்கொள்ளப்படும். பாதாளத்தில் புதையும் முன்பு இருளன் ஆண்கள் கையாளும் சக்தியில் தீமையை கலந்து விடுகிறான்.
ஆண்கள், பெண்கள் சிலரில் மட்டுமே இச்சக்தியை பயன்படுத்தி அதன் ஆற்றலை உபயோகப்படுத்தும் இயல்பு காணக்கிடைக்கும். ஆண்களால் கையாளப்படும் சக்தியின் பகுதியில் இருளனின் கறை படிந்திருப்பதால் அதன் தொடர்சியான உபயோகமானது ஒருவனை மனப்பிறழ்வு கொள்ளச் செய்து, விபரீதமான செயல்களிற்கு அது வழி வகுக்கும். லுஸ் தெரெனினால் நடாத்தப்பட்ட உலக சிதைப்புக்கு இதுவே காரணமாக கொள்ளப்படுகிறது. ராண்ட் அவனின் புதிய பிறப்பாக இருக்கும் பட்சத்தில் அவனை இருள் வழி இழுத்து தன் பக்கத்தை உறுதிப்படுத்த இருளன் முயல்கிறான் அதேபோலவே ராண்டிற்கு மனப்பிறழ்வு ஏற்படாத வகையில் அவன் முழுமுதற்சக்தியை உபயோகிக்க அவனை வழிநடத்தி இருளனை எதிர்த்துப் போராட வருபவர்கள் தான் ஏஸ் செடாய்க்கள். அதற்காக எவ்வித வழிமுறைகளையும் உபயோகிக்க தயங்காதவர்கள் அவர்கள். ஏஸ் செடாய்க்கள் முழுமுதற் சக்தியின் பெண்பங்கு சக்தியை உபயோகப்படுத்தி நீர் நிலம் நெருப்பு காற்று ஜீவஆவி என்பவற்றை தமக்கு சாதகமாக வளைத்து பயன்படுத்தும் திறமை படைத்தவர்கள். இவர்களின் பகடையாட்டத்தில் சிக்கிய ராண்ட் என்னவாகிறான், அவன் பால்யகால சிநேகிதங்கள் என்னவாகிறார்கள் என்பதை ஒரு வாசகன் மனக்கண்களில் உணரும் அளவிற்கு ஜார்டானின் வரிகள் அமைகின்றன.
296px-MyrddraalSeamas583px-Trolloc_salibaஒரு மலையோர கிராமத்தில் ஆரம்பிக்கும் இக்கதையானது அக்கிராமத்தை விட்டு வெளியேறிய பின்பாக அதன் எல்லைகளை விரித்துக் கொண்டே செல்கிறது. புதிய நிலங்கள், ராஜ்யங்கள், மனிதர்கள், தொன்மங்கள் அவர்களின் வேறுபட்ட பண்பாடுகள் என பரந்த வாசிப்பை இக்கதையின் வாசகர்களிற்கு ஜார்டான் அளித்துக் கொண்டேயிருக்கிறார். நீர் என்பது அரிதான ஒன்றாக இருக்கும் அய்ல் தேச மக்கள், எந்த இடத்திலும் நிரந்தரமாக தங்காத டிங்கர்கள் எனப்படும் ஜிப்சிகள், விருட்சங்களை பாடல் பாடியே குணப்படுத்தும் கட்டிடக் கலை வல்லுனர்களான ராட்சத ஓகியர்கள், கடல் மீதே தம் வாழ்வின் பெரும்பகுதியை நிகழ்த்தும் ஆழிசனங்கள், இருளனின் அடிபொடிகளை எல்லையை மீற விடாது போராடும் பிலைத் எல்லை கோட்டை நாடுகளை சேர்ந்த வீர இனங்கள், தமக்குரிய மண்ணை உரிமைகோரியபடியே கடல்கடந்து வரும் சீன்சான் ராஜ்யத்தினர் என பலதேச மக்களின் பண்பாடு மிகவும் விரிவாக கதையில் விபரிக்கப்படும்.
ஒரு நாட்டு மக்களின் பண்பாடுகள் குறித்து, அவர்கள் வாழ்வியல் குறித்து விபரமான தகவல்களை தருவதன் மூலம் அம்மக்களை மிக ஆழமாக வாசகன் மனதில் பதித்து விடுகிறார் ஜார்டான். ஒருதேசத்தின் நிலவியல் மீதான அவரின் வரிகள் அம்மண்ணின் சுவாசத்தை படிப்பவர்கள் மேல் படர வைக்கும் தன்மையைக் கொண்டிருக்கின்றன. திருமணமான பெண்கள் பொட்டு வைத்துக் கொள்ளும் பண்பாடு மல்கிய்ர் எனும் பிரதேசத்தில் இருந்ததாக கதையில் ஒரு பகுதி இருக்கிறது. கருணா நாச்சிமான் எனும் ஏய்ஸ் செடாய் ஒரு பாத்திரமாக இடம் பெறுவார். பிலைத் எல்லை நாடொன்றின் மன்னனின் சகோதரி இவர். இவ்வாறாக பலவின மக்கள் மீதான கலாச்சார பண்பாட்டு வாழ்வியல் முறை ஒப்பீடுகளை நிகழ் உலகத்துடன் வாசகர்கள் நிகழ்த்தி மகிழலாம்.
அய்ல் தேசத்தில் ஒரு ஆண் பல பெண்களை மணந்து கொள்வது சாதாரணமான ஒன்று, நிர்வாணம் என்பது அய்ல்களிற்கு சங்கடம் தராதது. அய்ல் இனத்தவர் நிர்வாணத்தையும் உடையாகவே கருதுகிறார்கள். சீய்யெனார் தேசத்தில் குளியல் தொட்டியில் ஆண்களும் பெண்களும் சேர்ந்தே நீராடலாம், நிர்வாணமாக. இவ்வகையான உயரிய பண்பாடுகள் படைத்த பல தேசங்கள் எம்முலகில் இல்லாமல் போய்விட்டதே என நல்ல மனம் கொண்ட வாசகர்களை விம்மச்செய்துவிடுகிறார் கதாசிரியர் ஜோர்டான்.
409px-Fain_salibaஅய்ல் தேசத்தை சேர்ந்தவர்களின் கவுரவம் மற்றும் கடமை குறித்த பண்பாடுகள் தலையை கிறுகிறுக்க வைப்பவை. கதைத்தொடரில் பெண்களின் பங்கு மிக முக்கியமானது. பெண்கள் அதிகாரம் கொண்டவர்களாக, சக்தி படைத்தவர்களாக, வீரத்துடன் எதிர்த்துப் போராடுபவர்களாக, புத்தியும் தந்திரமும் கொண்டவர்களாகாவே பெரிதும் சித்தரிகப்படுகிறார்கள். பெண்களை பெருமைப்படுத்தும் ஒரு கதைத்தொடராக இது இருக்கிறது என்றால் அது மிகையான ஒன்றல்ல. ஏய்ஸ் செடாய்களின் சதிகளும், திட்டங்களும் வியக்க வைப்பவை. ஏறக்குறைய சிஐஏ போல் இயங்கும் தன்மையை ஏஸ் செடாய்களின் தலைமையகமான வெள்ளைக்கோபுரம் கொண்டிருக்கிறது. மன்னர்களிற்கு, ராணிகளிற்கு ஆலோசனை, ஒப்பந்தங்களை இயற்றல், வேவு, ஆள்கடத்தல், கொலை என நல்லவர்களா தீயவர்களா என முடிவெடுக்க இயலாத பண்புகளை கொண்டவர்களாக அவர்கள் பாத்திரப்படுத்தப்பட்டிருப்பார்கள். இவ்வகையில் எதிர்பாராத பல திருப்பங்களை கதைக்கு தருபவர்களாக ஏய்ஸ் செடாய்க்கள் இருக்கிறார்கள். எமொண்ட் ஃபீல்டில் இருந்து வெளியேறும் இரு இளநங்கைகளும் பலமான சக்தி கொண்ட ஏய்ஸ் செடாய்களாக பின் உருப்பெறுவார்கள். அவர்கள் நிகழ்த்தும் சாகசங்கள் சில சமயங்களில் கதை நாயகர்களின் சாகசங்களை விட சிறப்பாக இருக்கும்.
கதையின் முக்கிய நாயகனாக ராண்ட் காட்டப்பட்டாலும், அவன் விதியிழையுடன் பின்னிப் பிணைந்த தோழர்களான பெரின் மற்றும் மாத் அவனைவிட சில பாகங்களில் வாசகர்களை கவர்ந்து விடுவார்கள். பெரின், ஓநாய்களுடன் உரையாடும் சக்தி கொண்டவன். அவன் உரையாடல்கள் எண்ணப் பரிமாற்றம் மூலமே நிகழும். மனிதத் தன்மை அதிகம் கொண்ட ஒருவனாகவே பெரின் சித்தரிக்கப்படுகிறான். அவனில் உள்ளிருக்கும் மிருகத்தை அவன் கட்டுப்படுத்த முயன்று கொண்டே இருப்பான். அவன் காதலி பின் மனைவியாக வரும் பைய்லுடனான அவன் ஊடல்கள் ரசிக்கப்படக்கூடியவை. அவன் முரட்டு ஆகிருதிக்கு எதிரானதாக அவன் உள்ளம் அமைந்திருக்கும்.
786px-Jeremy_Saliba_aiel_take_2Ogier_elder_rpgதொடரில் என் அபிமான பாத்திரமாக மாறிப்போனவர் மாத். சூதாட்டம், மது , மங்கை , மோதல் என பின்னி எடுக்கும் பாத்திரம் இது. மாத்தின் பாத்திரம் இப்படி ரசிக்கப்படும் ஒன்றாக மாறும் என்பது எதிர்பார்க்கவியலாத ஒன்று. கூடவே மாத் வரும் பகுதிகளில் நகைச்சுவையும் சிறப்பாக இருக்கும். இக்கதை வரிசையில் மாத்தை விட சிறப்பான நாயகனாக யாரும் எனக்கு தோன்றவில்லை. பகடையால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாயகன், தன் வாழ்க்கையையே சூதாட்டமாக எண்ணி விளையாடுவதை ஜோர்டான் தன் மாய வரிகளால் எழுதி செல்கிறார். அதிர்ஷ்டமும், துரதிர்ஷ்டமும் பகடைக் காயைப் போல மாத்தை உருட்டி விளையாடிக் கொண்டே இருக்கும், இவ்விளையாட்டில் இருந்து மாத் வெற்றி வீரனாக வெளிவரும் காட்சிகள் அதிரடியானவை, விசிலடிக்க வைப்பவை. அல்ட்டாராவின் ராணியான டைலின் மாத்துடன் கொள்ளும் காதல் அபாரமான ஒன்றாக இருக்கும். மாத் பாத்திரத்திற்கு இப்படியான ஒரு வரவேற்பு கிடைக்கும் என ஜார்டானே எதிர்பார்த்திருக்க மாட்டார்.
Darkhound532px-Draghkarநாயகர்கள் இப்படி எனில் அவர்களை தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு வில்லன்கள் இருக்க வேண்டுமே. வெள்ளையங்கியிணர், ட்ரொலொக்குகள் [மனித விலங்கு கலப்பினம்], இவர்களை வழி நாடாத்தும் மிர்ட்ரெய்ல்கள் எனும் விழிகளற்ற பிறப்புக்கள், ரத்தக்காட்டேரிகளை ஒத்த டிராக்ஹார்கள், கொல்லவே இயலாத கொலம் எனும் பிறவி, சாம்பல் மனிதர் எனும் உயிரற்ற கொலைஞர்கள், பாதாள நாய்கள் என பலர் நாயகர்களை கலங்க அடிப்பார்கள். இதில் ஆரம்ப நாவல்களில் கலக்கி எடுத்த ட்ரொலொக்குகள் பின்னையவற்றில் ஒதுக்கி வைக்கப்படுவார்கள் என்பது ஒரு குறை. ட்ரொலொக்குகள் முதல் பாகத்தில் அறிமுகமாகும் காட்சிதான் கதையையே ஒரு திருப்பத்திற்கும் வேகத்திற்கும் இட்டுச் செல்லும். அவர்களின் ரசிகனான எனக்கு இது திருப்தியை அளிக்காவிடிலும் பலவகையான சக்திகளை கொண்ட இருளனின் சீடர்கள், மொரிடின், சைதார் கெரான், படான் ஃபெய்ன் எனும் பாத்திரங்களினால் ஜார்டான் வாசகர்களை வியக்க வைக்க தவறுவதேயில்லை. அதேபோல் கதையில் இடம்பெறும் சிறிய பாத்திரங்களைக்கூட எதிர்பாராத விதத்தில் மறக்கமுடியாத பாத்திரங்களாக்கி விடுவதும், அவர்களை பிரதானமான பாத்திரங்களாக மாற்றிவிடுவதிலும் ஜார்டானிற்கு நிகர் ஜார்டான்தான். 1880 பாத்திரங்கள் இத்தொடரில் உண்டு என்கிறது ஒரு தகவல். ஆனால் அந்த உலகில் வாழ்பவர்களுக்கு அந்த எண்ணிக்கை ஒரு பொருட்டேயில்லை. எதிர்பாராத சந்தர்பங்களில் படு அதிரடியான திருப்பங்களை மிகவும் எளிதாக தந்து விடும் வல்லமையும் ஜார்டானிற்கு உண்டு. அது அவர் கதைகூறலின் தனித்தன்மை. அதேபோல் பல சமயங்களில் அவரின் வரிகள் அடடா போடப் படக்கூடிய அர்த்தங்களை தரக்கூடியவையாக இருக்கும்.
auteurs-robert-jordanஜார்டானின் கதையுலகில் அரூப உலகம் அல்லது கனவு உலகம் என அழைப்படக்கூடிய தெல்லொரென்ரெய்ட் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கனவுகளில் பயணித்தல், கனவுகளில் சந்தித்தல், தேடுதல் வேட்டை நடாத்தல், வேவு பார்த்தல் என அது ஒரு மயங்கவைக்கும் பகுதியாக அமையும். ஸ்தூல உடலுடன் கனவுலகில் நுழையும் வித்தைகூட இருக்கிறது. தர்க்கங்களில் இறங்காது படித்து செல்ல வேண்டிய பகுதியிது. மிகைபுனைவில் தர்கம் என்ன தர்க்கம்!! மாற்றுலகில் நுழையக்கூடிய வாயிற்கதவுகள், ஒரிடத்திலிருந்து பிறிதொரு இடத்திற்கு தனியாக அல்லது ஒரு சேனையுடன் பயணிக்ககூடிய பயணவாயில்கள், வாளில்லாத வாள், காலநிலையை மாற்றியமைக்ககூடிய பாத்திரம் இப்படியாக எத்தனையோ எத்தனையோ. எழுதித் தீராது. அது என்னால் இயலாத காரியம்.
மொத்தத்தில் இன்று நான் மூன்றாம் யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்றுகூட சொல்லலாம். ஜார்டானின் வர்ணனைகள் என்னை அந்த உலகில் ஒரு பிரஜையாக்கி விட்டன. அவரின் வர்ணனைகள் நீண்டவை. இது அவரின் பலம் அதேபோல் சில சமயங்களில் பலவீனம். ஆனால் அவரின் எழுத்தை சுவைத்தவர்கள் அச்சுவையை வேறெங்கும் காண்பது என்பது சிரமமான ஒன்று. மொழியை அழகாக்கி, ருசியூட்டி அதில் வாசகனை கரைத்துவிடும் மந்திரவாதம் ஜோர்டானின் எழுத்துக்களில் இருக்கிறது. அவரின் இழப்பு மாயபுனைவுகளின் பேரிழப்பு. இக்கதைதொடரில் இதுவரை வெளியாகிய பகுதிகளை படித்து முடித்துவிட்டுத்தான் வேறு படைப்புக்களை படிப்பது என்பது என் தீர்மானம். அத்தீர்மானத்திலிருந்து நான் நழுவிச் செல்லாதவாறு கதை என்னைக் கட்டிப்போட்டிருக்கிறது. இக்கதை தொடரின் பதினொரு பகுதிகளை எழுதி முடித்தபோது ஜார்டான் இயற்கை எய்தி விட்டார். முழுமுதற்சக்தியில் அவர் ஆன்மா சாந்தியடையட்டும். அன்னார் விட்டுச் சென்ற குறிப்புக்களுடன் இத்தொடரை தற்போது எழுதி வருபவர் பிராண்டான் சாண்டர்சன் எனும் மிகைபுனைவு எழுத்தாளர் ஆவார். மொத்தம் 14 பாகங்கள் கொண்ட இத்தொடரின் சுழற்சி அதன் பின்பாக நின்று விடுமா என என்னைக் கேட்டால் இப்பதிவின் முதல் பராவை பதிலாக நான் உங்களிற்கு வழங்குவேன். ஜார்டானின் வரிகளை தழுவியவை அவை. காலச்சக்கரம் வாசிப்பில் ஒரு புதிய அனுபவத்தின் சுவையை எனக்கு அளித்து வருகிறது. இது என் அனுபவம். வாசகர்களின் சுவைகளும் அனுபவங்களும் வேறுபடக்கூடியவையே. The Wheel weaves as the Wheel wills

பொது வெளி-குட்டி ரேவதி


பொது வெளி எது என்பதை ஆண்களை மையமிட்ட சமூகம் தான் தீர்மானிக்கிறது என்பது பழைய தகவல் தான். ஆனால் பெண்களுக்கு அது என்றுமே புதிய செயல்பாட்டைக் கோருவது. அதை முறியடிக்க வேண்டி அவ்வெளியுடன் முதன் முதலாக மோத வேண்டியிருக்கும் பெண்களும், அதை படைப்பாக்க வெளிக்குள் கொண்டு வர வேண்டிய பெண்களும் தாம் போராடவேண்டியிருக்கிறது. இதை ஆண்களின் அறிவுத் திமிர் அல்ல, எல்லாம் அறிந்ததான திமிர்! பெண்ணைக் கேளிக்கைப் பொருளாக்கி வாழ்வதென்பது இன்று நேற்றைய பணி அன்று. ஆக, பொது வெளியை நாம் நமதாக்கலாம்.

பெண்ணுக்குக் கல்வி என்பதே முதல் பொதுவெளியை ஏற்படுத்தித் தந்தது. அது புற அளவிலான வெளியாக இருந்தது போல வாசிப்பு என்பது கற்பனையான அக வெளியாக விரிந்தது. பெண்கள் தம் வாசிப்பிற்கான நூல்களை கண்டடைவது புற வயமான பயணத்தைக் கோருவது. வாசிப்பின் வழியாக தம் எண்ணத்திற்கு ஒத்த சிந்தனைகளைக் கண்டுபிடித்து மொழியாக்குவது அக வயமான பயணமாகும். இவ்வாறு அகவெளியையும் புறவெளியையும் மீறி பொது வெளிக்குள் நுழைவதற்கு சிறிதளவேனும் அதிகாரமும் முயற்சியும் தேவைப்படுவதாகும்.

மரத்தடி, தேநீர்க்கடை, சாலைப் புறங்கள், மைதானங்கள், வரவேற்பறைகள், திரை அரங்கங்கள், கருத்தரங்க வெளிகள் எனப் பொது வெளிகளில் தம்மை இருத்திக் கொள்வதற்கான வசதிகள் இருந்த போதும் வாய்ப்புகளை பெண்கள் பெறுவது சாத்தியமில்லை தான். அந்த அளவிற்கு அறிவாக்கத் துறை பெண்ணின் மீது அளவிலா வெறுப்பைத் திணித்துக் கொண்டிருக்கிறது. அது வெறுமனே போட்டி உணர்வினால் எழுந்தது மட்டுமே என்று தோன்றவில்லை. பெண்களை இயல்பாகவே கேலி செய்யும் மனோபாவமும் உடனுக்குடன் அதைச் செயல்படுத்தும் சுதந்திரமும் ஆண்களுக்கு இனாமாகக் கிடைத்தது. என்பதாலும் பொதுவெளியில் அந்தவெளிக்குள் தன்னை இருத்திக் கொள்ள விரும்பும் பெண் அந்த கேலியின் தாக்குதலுக்கு நேரடியாகத் தன்னை ஒப்படைப்பதாக எண்ணி ஆணின் எல்லாம் அறிந்த மனோபாவம் தன் கேலியை மொழியாக்குகிறது. ஆகவே தான் பெண்கள் தம் மொழியை இருப்பிற்கான அவசியமாக்க வேண்டியிருக்கிறது. பெண்களுக்கு மொழி என்பது விடுதலைக்கான ஆயுதம் மட்டுமன்று. அது அறிவாக்கப் பணிக்கான ஆயுதமும். தம் இருப்பின் அடையாளம். தம் திறனைச் செயல்பாடாக்கும் அரசியல். ஆக, இத்தகைய பெண்கள் ஆண்களை வெறுப்பவர்கள் பொத்தாம் பொதுவாக கூறுவதெல்லாம் பொதுவெளியில் பெண்களை கேலியின் நுகர்வாளர்களாக்கி இன்புற்ற ஆண்களின் முழக்கங்கள்.

பெண்கள் பொதுவெளிக்குள் வருவதை ஆர்வத்தோடும் குறுகுறுப்போடும் நோக்கும் கண்களுடையவர்கள், எரிச்சல்களால் இன்புறுகிறார்கள் என்பதே என் உளவியல் புரிதல். நடுத்தர வர்க்கம் இதில் இன்னும் அதிகமாய் ஆரோக்கியமற்ற சிந்தனையுடன் இயங்குகின்றது. அதாவது, தம் வீட்டுப் பெண்களை இப்படித்தான் வைத்திருக்கிறோம் என்ற இறுமாப்பும் அதே இறுமாப்பின் நியதிகளில் மற்ற பெண்களையும் ஒப்பிட்டு நோக்கும் இயல்புடையவர்களாயும் இந்தக் கணவான்கள் இயங்குவார்கள். தம் வீட்டுப் பெண்களை பிற ஆண்கள் கேலி செய்ய நேர்கையில் இயன்றால் ஓர் அடி தம் வீட்டுப் பெண்களையும் அடித்துத் துன்புறுத்துபவர்கள். பொதுவெளி, பாலியல் விஷயங்களை மறைத்து வைப்பதற்கானது என்பதை இவர்கள் தாம் முதலில் பிரசங்கிப்பவர்கள். இன்று அரவாணிகள் பற்றிய விவாதமும் முன்னெடுப்பும் இத்தகைய மனச்சிதைவுற்ற சமூகத்திலிருந்து பிதுங்கி வெளிவந்து துருத்தி நிற்பதற்குக் காரணமானவர்கள். இயல்பான வெளியுடன் தம்மைப் பொருத்திக் கொள்ள எந்த வித நியதியுமற்ற, விடுதலையற்ற ஒரு சமூகத்தின் மீது துப்பப்படும் எச்சிலாகக் கூட இவர்கள் இருக்கலாம். இதற்குப் பதிலாக சமையல் குறிப்புகள் எழுதலாம், நவீன உடைகள் குறித்த அக்கறையில் ஈடுபடலாம், கோலங்கள் எழுதலாம் என்ற சிந்தனைகளை ஒப்புக்காய் ஏற்கும் மனநிலையைப் பெண்களுக்குக் கொடையளிக்கும் மறைமுகமான அறிவார்ந்த பணியை இவர்கள் மேற்கொண்டிருக்கின்றனர் என்பது தான் இதன் அர்த்தம்.

பேருந்துகளில் எல்லோரும் தன்னையே நோக்கிக்கொண்டிருக்கத் தனியே மீண்டும் மீண்டும் பயணம் செய்வது, பெண் ஆரோக்கியம் பற்றிய எந்த அக்கறையுமற்ற ஒரு நாட்டில் பொதுக் கழிவறைகளைத் தேடி அலைவது இவை போன்ற செயல்பாடுகளுடன் ஒரு பெண் இணையத்தள வெளியில் இயங்குவதையும் ஒப்பிடலாம். இன்று வரை ஒரு பெண்ணின் படைப்பாக்கம் ஆரோக்கியத்தைத் தரும் அருமருந்தாக இல்லாமல் ஒவ்வோர் ஆணும் தானும் உள்நுழைந்து, மனம் பிறழ்ந்த விருப்பத்துடன் நோக்கும் உளவியல் நோயுற்று, பின் பொதுவெளியில், ‘அய்யகோ!’ என்று முறையிட்டு அழுவதாகத் தான் இருந்து வருகிறது. காகிதத்திற்கு இருந்த வெறுமனே மலத்தைத் துடைக்கும் உபயோகத்தைப் பெண்கள் மாற்றி வைத்தது கூட காரணமாக இருக்கலாம்.
இவர்களை எல்லாம் யார் அழைக்கிறார்கள் எமது படைப்புகளைப் படிக்க வேண்டி?

மாலதி மைத்ரி – ஒளவை மொழி வெளிச்சம் குட்டி ரேவதி



ஆணுடல் விதையை உருவாக்குதல் போலே தான் பெண்ணுடலும் கருவை உருவாக்குகிறது. இரண்டில் ஒன்றில்லாமல் பெண்ணின் சிறப்புத்தகுதி வெளிச்சம் பெறுவதில்லை. என்றாலும், பெண்ணுடலின் சிறப்புத் தகுதி கருவுறுதலும் அதைப் பேணிக்காத்து இனத்தைப் பெருக்குதலும்.
பெண்ணின் இனப்பெருக்க ஆற்றல், சிறப்பு வெளிப்பாடாய் இருப்பதால் அதைக் கொண்டாடுவதற்குப் பதிலாக, பொறாமையுற்று பெண்ணின் இனப்பெருக்கு உறுப்பையும் ஆற்றலையும் நசிக்கும் வேகங்கள் காலம் தோறும் எழுச்சிபெற்று வந்திருக்கின்றன. அப்பொழுது தான், பெண்ணின் உடல் நோக்கங்கள் திரித்துக் கூறப்பட்டன. அதாவது, பெண்ணின் உடல் ஆணுக்கே சொந்தமென்றும், அது குழந்தைகளை உற்பத்திச் செய்வதற்குமேயானது என்றும் தொனி மாற்றி, பொருள்விளக்கம் தரப்பட்டது.
மற்றெந்தப் போரும் ஏற்படுத்திய தாக்கத்தை விட, பாலியல் போர் பெண்ணுடல் மீது ஏற்படுத்திய தாக்கங்களும் ஊனங்களும் அதிகமானவை. நிரந்தரமானவை. இத்தகைய போர் அவளுடலின் தலை முடி முதல் உள்ளங்கால் வரை செயல்படுத்தப்படுகிறது. அவள் தலைமுடியின் அழகு பாலின்ப வேட்கையைத் தூண்டும் ஆற்றல் கூடியது என்பதாலேயே தேவாலயங்களிலும், இதர வெளிகளிலும் பெண்கள் தங்கள் தலைமுடியை மறைத்துக்கொள்ளல் அல்லது மழித்துக்கொள்ளல் எனும் பண்பாட்டு நிர்ப்பந்தங்கள் திணிக்கப்பட்டன. ’பொம்பள சிரிச்சா போச்சு; புகையிலை விரிச்சா போச்சு’ எனும் பழமொழி போல. இம்மாதிரியான திணிப்புகள் வழியாகவெல்லாம், அவளின் உளவியல் வெளி வரை புகுந்து, அவள் மனதில் இலங்கும் அடிப்படையான பெண் சமத்துவ நிலையைக் கூடத் திருகிவிட முடியும் என்ற தந்திரமே.
இத்தகைய போர்த்தந்திரங்களில், முதன்மையானவை, பெண்ணின் கருப்பைமீதும் கருவாய் மீதும் செலுத்தப்பட்ட சமூக அடக்குமுறை உத்திகள். ஏனெனில், ஆணின் உறுப்பு வலுப்பெற்றதும் அவன் பெண்ணின் கருப்பையை உபயோகிப்பதில் ஈடுபடுகிறான். அவன் வேட்கை தீர்ந்ததும் அவன் சோர்ந்து வெளியேறுகிறான். ஒவ்வொரு முறையும் வீழ்த்தும், வெற்றிபெறும் ஆயுதமாகப் பெண்ணின் கருப்பையே இருக்கிறது. அதுமட்டுமன்றி, பெண்ணின் கருப்பை மாதாந்திர இரத்தப்போக்குகளால் உழப்பட்ட புது நிலமாயும், அதே சமயம் ஆணின் உயிர் ஆற்றலை வேட்கையுடன் பெற்றுச் செழித்த விளைநிலமாயும் மாறுகிறது. ஆற்றலைப் பெருக்கிக் கொண்ட பெண்ணின் இருப்பும், அவள் தன்னைச் சோர்வுறச் செய்பவள் என்றும் மிரட்சியுறும், ஒரே மனித இனத்தின் பகுதியான ஆண் சமூகம் அவள் மீது கொண்ட மிரட்சியை அழிப்பதற்கு ஏற்ற தந்திரங்களை உருவாக்கியது. அவற்றை, பெண் கருப்பை மற்றும் கருவாய் மீது நிரந்தர ஆட்சி செய்யும் போர் உபாயங்களாக்கி நிரந்தர அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியது.

இது அடிப்படையாக, எங்கிருந்து தொடங்கியது என்றால், பெண்ணின் இயல்பான உடல் மாறுபாடுகளே கூட தீட்டிற்கு உட்பட்டவை என்றும் இம்மாதிரியான புத்துயிர்ப்பின் வெளிப்பாடுகளுக்கு உள்ளான பெண்ணின் உடலே அபாயங்களை கொண்டு வரக்கூடிய புதிர்ப் பிண்டம் என்றும் நம்பும்படியான சடங்குகளும் வழக்கங்களும் பெண் நம்பிக்கைகளுக்குள் புகுத்தப்பட்டன. இம்மாதிரியானவை பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட வழக்கங்களாயிருந்தன என்று சொல்லவேண்டிய அவசியமில்லை. அதிலும், பெண்ணின் உடலில் தோன்றி ஒழுகும் இரத்தம் சம்பந்தமான கதையாடல்களாகவே பெரும்பாலும் அவை இருந்தன. பெரும்பாலான தேசங்களில், கன்னிப்பெண்ணுடன் கொள்ளும் முதல் உடலுறவு என்பது மிகவும் அவலமான செயலாகவே இருந்தது. இந்தியாவில் உயர்சாதி ஆண்கள் ஓர் இரும்புக்கழியினால் கூட பெண்களின் முதலுறவைத் தொடங்கிவைப்பார்கள் என்பதற்கான ஆதாரத்தை எட்வார்டஸ் என்பவர் தனது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார். சோமாலியாவில் உடலுறவுக்காகப் பெண்ணுறுப்பு கத்தியால் திறக்கப்படுவதுடன் பெண்ணின் இரத்தம் தோய்ந்த கத்தியைக் கணவன் எல்லோருக்கும் பகிரங்கப்படுத்துவதும் வழக்கம். இவை மீறி, பெண்ணின் கருச்செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படவும் கட்டுப்படுத்தவுமான விதிமுறைகளும் பிறப்பிக்கப்பட்டன. இவற்றைத் தொடர்ந்து முறைப்படுத்துவதே ஆணின் ஆண்மை என்று வியக்கப்பட்டது.
இந்நிலையில், கன்னடக் கவி அக்கம்மா தேவியின் கவிதை வரி ஒன்று என் நினைவிற்கு வருகிறது. கி.பி. 12-ஆம் நூற்றாண்டின் கவிப்பெண் இவர். ‘இன்பத்தையும் துன்பத்தையும் பேராவலுடன் குடிக்கும், ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்றல்ல, எட்டாயிரத்து நானூறாயிரம் யோனிகள் வழியாக நான் வந்திருக்கிறேன்’. எட்டாயிரத்து நானூறாயிரம் யோனிகள் வழியாகவும், மேற்கண்ட துன்பங்களைத் தின்றவாறே இன்பங்களைப் பருகிவந்திருக்கிறேன் என்பது தான் அவரது வாதம். பெண்கள் தம் யோனிகளுடன், அவற்றின் இனப்பெருக்க வல்லமையுடன் மாறாத் தொடர்பு கொண்டு இயங்கத் தொடங்கினர். பெண்கள் உருவாக்கும் குழந்தைகளுடனும் சமூகத்தின் உடைமை விதிகள் ஆண் சாய்வுடையதாக இருந்த போதிலும், தாய்மை எனும் கருத்தாக்கத்தை உருவாக்கிக் கொண்டனர்.
தாய்மை என்பது, படைப்பூக்கங்கள் மற்றும் தன்னுடலின் பாலூக்கங்கள் குறித்த சிந்தனையைக் கட்டுப்படுத்தும் ஒடுக்கு முறை என மேலைத்தேயச் சிந்தனை தாய்மை எனும் கருத்தாக்கத்தை மறுத்தாலும், ‘தாய்த்தெய்வம்’, ‘தாய்மொழி’ போன்ற தொல்மரபார்ந்த கருத்தாக்கங்களை, யோனிகளின் தொடர்ச்சியைத் தக்கவைக்கும் போராட்டத்தில் கிழக்குலகப் பெண்கள் வென்று வருவதாகவே உணர்கிறேன். மாலதி மைத்ரியின் கவிதைகள், தாயுடலுக்கும் மகளுடலுக்கும் இடையிலான கருத்தாக்க உறவையும், தொடர்ச்சியையும், நீட்சியையும், நிலைத்தன்மையையும் தன் மொழியில் தொடர்ந்து வழங்கிக் கொண்டே இருக்கிறது.
இன்றும் பெண்ணியக்க அலையைத் திசைத் திருப்பும் வேலை, இத்தகைய கருத்தாக்கத்தைச் செழுமையுறச் செய்வதன் வழியாகவே அடைய முடியும் என்பதான சிந்தனைகள் என்னையும் பீடிக்கத் தொடங்கியிருக்கின்றன. உலகமயமாக்கம், நகரமயமாக்கம், தன்னையே தான் வியாபாரமயமாக்கும் வாழ்க்கைக்குள் தன்னை உந்தித்தள்ளிச் செல்லும் மனித வேகத்தில் தாய் எனும் கருத்தமைவு, உடலார்ந்த பொதுத்தன்மையைக் கொண்டிருந்தாலும், அதை உடலுக்கு வெளியிலும் இயங்கக்கூடிய ஒரு சிந்தனையாக, உயிரெழுச்சியாகவே நான் பார்க்கவிரும்புகிறேன். ஏற்கெனவே, ‘தாய்மை’ என்பதை, இந்த ஆணுக்கு இவள் பெற்றெடுத்த பிள்ளை இவன் என்பதாக அடையாளம் பெறும் உடைமைச் சிந்தனையின் அடிப்படையிலேயே, ஒற்றை யோனியை ஒடுக்கும் இடத்திற்கு இச்சிந்தனையை நாமும் ஏற்றுக் கொள்ளக்கூடாது. தாய்மை என்பது இரத்தம் பாயும் எல்லா உயிர்களிலும் பரவும் உணர்வெழுச்சி!

மேற்கண்ட புரிதலுடன், மாலதி மைத்ரியின் கவிதைகளில் இயங்கும் உடல் பற்றிய மொழியையும், பால்நிலை அரசியலையும் அணுகுவது நம் எல்லோருக்கும் வெளிச்சம் தரக்கூடியதாக இருக்கும் என்று நம்புகிறேன். இத்தகைய புத்துயிர்ப்பான உடல், முழுவதும் நமது மொழிக்கும் நவீன இலக்கியத்திற்கும் பிரத்யேகமானது என்பதால், உதிரியான நமது உடல்களையும் கூட பாலியல் போரிலிருந்து மீட்டுக் கொள்ள உதவக்கூடும் என்றும் நம்புகிறேன்.
மாலதி மைத்ரியின் கவிதைகள், அத்தகைய உடலின் பல தருணங்களை நமக்குச் சுட்டிக் காட்டினாலும், இக்கட்டுரைத் தொடருக்குப் பொருத்தமான சில கவிதைகளை மட்டுமே இங்கு அளிக்கமுடிகிறது. மானுடத்தின் பதைப்பைக் குருவியின் மீது ஏற்றிச் சொல்லும் குருவி கவிதை, ஒரு தாவரப்பட்சி மாமிசப்பட்சியாக மாறும் இடத்தையும் சுட்டுகிறது. இதன் இடைவழியில் துளிர்க்கும் கண்ணீர் பாலியல் போருக்கான முதல் ஆயுதம். தாய்மை எனும் கருத்தாக்கத்தின் முழுப்பரிமாண புரிதலின் விளைச்சல் இக்கவிதை.
குருவி
முதல் குண்டு விழுந்தபோது அந்தத் தாய்க்குருவி
அவயத்தில் இருந்தது
தனது முட்டைகளில் செயற்கையாக
வீறல்கள் விழுவது கண்டு கலவரப்பட்டது
கட்டடங்கள் சரிந்துவிழும் பேரிரைச்சல்களினூடாக
ஓடுகளைத் திறந்து கொண்டு தமது
குழந்தைகள் வெளிவருவதைக் கண்டு
மேலும் பதற்றம் கூடிய அது
பறந்து சென்று இரை பொறுக்கிவரப் பயந்தது
குழந்தைகளின் ஈர உடம்புகளில்
சிமெண்ட் புழுதிகள் படியத் தொடங்கின
தனது கூடு நிலைத்திருப்பது பற்றிய
நிச்சயமற்றிருந்த தாய்
புழு பூச்சி தானிய மணிகள் தேடி வெளிச்செல்ல
நகரமெங்கும் இடிபாடுகளுக்கிடையில்
ரத்தம் கசிந்து கொண்டிருந்தது
கவச வாகனங்களும் இரும்புத் தொப்பிகளும்
இயந்திரப் பறவைகளும் நகரத்தை
சுற்றி வளைத்திருப்பதைக் கண்ட தாய்ப்பறவை
வெறுங்கையோடு கூட்டுக்குத் திரும்பியது
பசிகொண்ட குழந்தைகள் அம்மாவைக் கொத்தின
அம்மாவுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது
நீர் கோத்த அதன் கண்களுக்கு எட்டும் தூரத்தில்
ஆயுதத்தைப் பற்றியபடி அறுந்து விழுந்த
ஒரு மாமிச உறுப்பு சில நாட்களாக
அழுகிக் கொண்டிருப்பதை
மீண்டும் பார்த்தது – பசியின் நடுக்கத்தோடு
ஒளவையிலிருந்து ஒளவைவரை
ஒளவையின் மகள் நான்
பல காலங்களையும் வெளிகளையும்
பலவித உடல்களினூடாகக் கடந்து
சென்று கொண்டிருக்கும் ஒளவையின்
மகள் நான்
ஒளவையின் யோனி விரிந்து
இரண்டாயிரமாண்டு கால வெளியையும்
மொழி வெளியையும் உள்வாங்கி
என்னைப் பிதுக்கித் தள்ள
என் நகத்தாலேயே தொப்பூழ்க்கொடியைக்
கிள்ளித் துண்டித்துவிட்டு
குருதியீரம் காயாமல் நடந்து போகிறேன்
நான் மழலை
என்னைத் தூக்கி அமுதூட்ட
என்னெதிரே நின்று தவிக்கிறது
பால் சுரப்பு அடங்காத முலையிரண்டு
நிலவுக்குள்ளிருந்த என் முதல் ஒளவை
இன்றைக்கும் எனக்கு
கதை சொல்லிக் கொண்டிருக்கிறாள்
திசையெல்லாம்
ஒளவை மொழி வெளிச்சம்


ஒளவையெனும் நினைவு ஓங்கிய, பெண்ணியச் சிந்தனையின் காலக்கட்டமாய் நவீனப் பெண்ணிய இலக்கியம் இருந்திருக்கிறது. ஒளவை எனும் பெண், உடலற்ற ஆனால் புத்தியின் மண்டை வீங்கிய பெண்ணாக நூல்களின் பக்கங்களிலும், செவிகளின் அருகிலும், நாக்குகளின் மொழிதலிலும் உழன்று கொண்டே இருக்கிறார். என்றாலும், இன்றும் அவர் உடலற்ற பெண்ணாகவே பார்க்கப்பட்டு தமிழ் அறிவுஜீவி, பேராசிரிய, படைப்பு வர்க்கம் ஒளவையின் வெளிக்குள் நுழைய முடியாத தடித்த இரும்புக்கழிகளாகவே இருந்திருக்கின்றனர். இங்கு மாலதி மைத்ரி, ஒளவையின் உடலை தன் தனித்ததொரு, தாய் – மகள் உடல் பிணைப்புக் கருத்தாக்கத்தால் தெள்ளியதாக உருவாக்கியிருக்கிறார். விளக்கம் ஏதும் கோராமலேயே இக்கவிதை அதன் துல்லியமான அலகுகளை முன் வைத்திருக்கிறது.
விஸ்வரூபம்
ஏதோ ஒரு பருவமாற்றத்தில்
எனது அங்கங்கள் ஒவ்வொன்றும்
மிருகமாகவும் பறவையாகவும் மாறி
என்னை விட்டு விலகிச் செல்லத் தொடங்கின
அவையே திரும்பி வந்து சேர்வதும்
பல சமயங்களில் தொலைந்த ஆட்டுக்குட்டியை
தேடிச்சென்று அழைத்து வருவதென நிகழ்வதும்
பிறகு யாத்திரை போலப் புறப்பட்டுச்
சென்றுவிடுவதும் வழக்கமாகி
எல்லாக்கால வெளியிலும் அலையத் துவங்கின
நீண்ட காலமாகிவிட்டது
பல திக்குகளின் நீர் நிலங்களை
நோக்கிச் சென்றிருக்கும்
எது எத்திசையில் உலவுகிறது
என யூகித்தறிய முடியவில்லை
திரும்பி வந்துவிடும்போது
வெவ்வேறு நிலத்தின் வாசனையோடும்
குரல்களோடும் என் உடலெங்கும் மேய்ந்து
என் அடையாளத்தைக் கலைத்து அடுக்குகின்றன
யோனி ஒரு பட்டாம்பூச்சியாக
மலைகளில் அலைவதைக் கண்டதாக
காட்டில் விறகு பொறுக்கச் சென்ற
பெண்கள் வந்து கூறக்கேட்டேன்


‘விஸ்வரூபம்’ கவிதையை, ‘ஒளவையின் மகள்’ கவிதையின் தொடர்ச்சியாகவே வாசிக்கலாம். இது இவரது பிரபலமான கவிதை. யோனியின் விட்டு விடுதலையான கட்டற்ற நிலையைக் காட்சியாக்கி இருக்கிறார். உடலை ஒரு வெளியாகவும், காலமாகவும் மாற்றும் முயற்சியில் அவர் கண்டடைந்த காட்சியின் சித்திரம் இக்கவிதை. உடலின் உறுப்புகளைக் குலைத்து மாற்று அடுக்கும் உரிமையும் கற்பனையும் பெண்களுக்கு காலந்தோறும் வாய்த்துக் கொண்டே தான் இருக்கின்றன என்பதற்கு, அக்கம்மா தேவியின் கவிதை வரிகளைப் போலவே இக்கவிதையும் ஒரு சாட்சி. அக்கற்பனையின் காட்சியை நிலைப்படுத்தும் போராட்டத்தில் பெண்கள் வெற்றி பெற்றுள்ளனரா என்பது இன்னொரு தொடருக்குக் கருப்பொருளாக இருக்கலாம். கவிதை மொழி வழியாகப் பெற்ற வெற்றிகள், ஆதிக்கச் சக்தியை அபகரித்து அனுபவிக்கும் ஆணாதிக்கத் தந்திரங்களைப் பயிலும் ஆண்களிலிருந்தும் பெண்களிலிருந்தும் ஒடுக்கப்பட்ட இனப்பெண்களை விடுவிப்பவை.

இக்கட்டுரையின் இரண்டாவது பகுதி இது. மாலதி மைத்ரியின் கவிதைகளில் இயங்கும் மீனவச் சமூகத்தின் வழக்காற்று மொழியும் அவர்களின் வாழ்வெளியான கடலும் பற்றிய முழக்கங்கள். இவ்விடத்தில், மீனவசமூகத்தின் அரசியல் ஒடுக்குமுறை சமகால அரசியல் நிகழ்வுகள் வழியாக, எல்லோரும் அறிந்ததே என்பதால், அதைக் கடந்து அச்சமூகத்தின் கருத்தாக்க வெளிக்குள் நாம் நுழையலாம் என்று நினைக்கிறேன். ஆதிக்கச் சமூகப் பெண்ணியம் என்பதும் அதன் கோரிக்கைகளும் பார்ப்பனீயப் பெண்ணியத்தை முன்மொழிவதே. வெறுமனே பார்ப்பன சமூகத்தை மட்டுமே குறிப்பதன்று. கடந்த காலம் தந்த கல்வி, வாழ்க்கை முறை, பட்டறிவு, நுகர்வுப் பண்பாடு வழியாகப் பிற சமூகப் பெண்களும் பார்ப்பனீய அறிவுச்சுமையைப் பெற்றுத் தான் ஒழுகி வருகின்றனர். இவர்களின் ஆதிக்க வினை என்பது தொடர்ந்து பார்ப்பனர்களின் ஆதிக்கப்பணிகளைக் குறைகூறிக் கொண்டே இருக்கும் அதே சமயம், தான் பிறசமூகப் பெண்கள் மீது பிரயோகிக்கும் ஆதிக்கச் செயல்பாடுகளை மறைத்துக் கொள்ளும் தந்திரம். இத்தகையவர்களின் இடிபாடுகளுக்கிடையில் சிக்கிக் கொண்ட, மரபார்ந்த இம்மண்ணின் சமூகப்பிரச்சனைகளை வெளிப்படுத்தும் அதிகாரத்தையும் அவர்களே தக்கவைத்துக் கொண்ட ஊடகச்சிதைவிற்கான காலக்கட்டத்தில், மாலதி மைத்ரியின் கவிதைகள் மீனவ வழக்காற்று வெளியைத் தொடர்ந்து மொழிப்படுத்திக் கொண்டே இருக்கின்றன.
மீன்காரி
காட்டுக் குதிரையென பறப்பாள்
தினமும் முப்பது மைல்களாவது
தலைச் சுமையுடன்
மழை வெயிலில்
சிதறாப்பனை போல
மீன் விற்று திரும்புகையில்
கூடையில் சிரித்துக் கொண்டிருக்கும்
(ரொம்ப சிரிச்சா புளிப்பேறிவிடும்)
ஒரு மொந்தை கள்
ஆனாலும்
சுலகில் மறைந்திருக்கும்
ஒரு கொடுவாக்கத்தி
கடலை அழைத்து வருதல்
கடல் தன் தடயங்களால்
வீட்டை வளைய வந்துகொண்டிருக்கிறது
துவைக்கப்படாத குழந்தையின் ஆடை
கடலின் வாசனையோடு
கொடியில் தொங்கிக் கொண்டிருக்கிறது
மூலையில் ஒதுங்கிவிட்ட குத்துமணல்
எதையாவது தேடும்பொழுது
கலகலக்கும் சங்குச் சிப்பிகள்
சட்டைப்பையில் கைவிடும்பொழுதெல்லாம்
விரல்களில் ஒற்றி வரும் மணலென
ஓவியரின் கழுவப்படாத நிறக்கிண்ணங்களைப் போல்
கடல் ஒவ்வொருவரிடமும் தங்கிவிடுகிறது
அலைகளின் வீடு நங்கூரமிட்ட
தோணியென அசைந்து கொண்டிருக்கிறது


கல்யாணமும் கட்டுமரமும்
அவளின் திருமண வயதை
வேலியில் நிற்கும் கல்யாணமுருங்கை சொல்லும்
அந்த மரமும் அவளும்
வேறு வேறு திசையிலிருந்து
வெட்டி நடப்பட்டவர்கள்
இந்த நிலத்தில் ஒரே நாளில்
அவளைப் போலவே அதுவும்
பட்டும் துளிர்த்தும் – இப்போது
பெரிய தாய்மரமாக தனது வாரிசுகள்
தோட்டம் முழுதும் செழிக்க நிற்கிறது – நின்றது
வசந்தம் முழுதும் ஒரு திருவிழாப் போல
பூத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கும் அழகில்
சுற்றிச் சுற்றி வருவாள்
அடிக்கும் காற்றுக் கெல்லாம்
காய்கள் குலுங்க சிரித்துக் கொண்டிருந்த அது
அடிமண்டை பிளந்து காற்றாடக் கிடக்கின்றது
இன்று
எங்கோ ஒரு திசையில்
கடலில் மிதக்கிறது
யாருடைய வாழ்க்கையையோ சுமந்து கொண்டு
(முகூர்த்தக் காலாக மணமகள் வீட்டில் நடப்படும் கல்யாண முருங்கை கிளை வளர்ந்து மரமான பிறகு அது கட்டுமரமாகப் பயன்படுத்தப்படுவது மீனவ சமூகத்தின் நாட்டார் வழக்காகும்)

’கல்யாணமும் கட்டுமரமும்’, ஒரே சமயத்தில் பெண்ணின் வாழ்வும் பொருளும் செயற்பொருளும் பொருளற்ற வாழ்வுமாக மாறும் நிலை பற்றிய கவிதை. ‘வார்த்தைகளின் பேரரசி’ என்ற கவிதையில்,
சினைக்கெளுத்திகளை விழுங்கும்
வெள்ளைக் கொக்குகள் பாவம்
புன்னை மர நிழலில்
பொரித்த உளுவை மீன்களுடன்
கள்ளுண்ட நாம்
கொக்குகளை விரட்டித் திரிவோம்
வெள்ளிக் கெண்டைகள் பாயும் மதகடையில்
வெள்ளிவீதி
உனது மடியில்
நானும் படர்ந்திருப்பேன்
முகமற்று ஒலிக்கும்
தூரத்து யாழிசையைக் கேட்டபடி
சினைக் கெளுத்திகளை விழுங்கும்
வெள்ளைக் கொக்குகள் பாவம்
என்ற பகுதியால் கடலும் கடல் சார்ந்த மொழியும் மாலதி மைத்ரியிடம் தீவிரம் பெற்றிருக்கின்றன. ‘சங்கராபரணி’, ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற தன் முதல் இரண்டு தொகுப்புகளில் கடல் என்பதை முக்கியமான கருப்பொருளாயும் உடலுக்கான வெளியாகவும் கட்டமைத்து, தன் மொழியை நீர்மைப்படுத்திக் கொண்டிருந்த மாலதி மைத்ரி, தனது மூன்றாவது தொகுப்பான ‘நீலி’யில் உலகப்பொதுப் பிரச்சனைகளை உரக்கப் பேசத் தொடங்கியிருக்கிறார். என்றாலும், உலகப்பிரச்சனைகள் தொடர்ந்து அடையாளம் பெறுவதற்கான அமைப்புகள் உருவாவதற்கான வாய்ப்புகள் உலகெங்கும் எப்பொழுதுமே இருக்கும்பட்சத்தில் மீனவச் சமூகக்கருப்பொருட்கள் மீதான விருப்பீர்ப்பை இன்னும் அவர் தனக்குள் தக்கவைத்திருக்கலாமோ என்ற ஏக்கம் மேலிடுகிறது. அச்சமூக வாழ்வின் நுணுக்கங்களையும் இயல்பான உரிமைகளையும் மொழிப்படுத்தும் அவசியம் உக்கிரம் பெற்றிருக்கும் ஆண்டைத்தானே நாம் வந்து சேர்ந்திருக்கிறோம்! பிராந்திய, அந்தரங்க அரசியலை உலகப்பொது அரசியலின் அக்கறைக்குக் கவனப்படுத்துவது தான் இன்றைய படைப்பிலக்கியவாதிகளின் சவால்!
அதே போல், தமிழ் நவீனக் கவிதையை சிறுகதையின் குறுக்கப்பட்ட வடிவம் என்று கருதியோர் அதன் பரப்பில் கைவைத்த போதெல்லாம், அது தன் வளர்ச்சி வேகத்தைக் குறைத்துக் கொண்டது. அதே போல, கவிதை மொழியை உரைநடையாக்கி, நடை வண்டியில் பழக்கியபோதும் தன் முதுகெலும்பை ரப்பர் சுருளைப் போல தொய்வுப்படுத்திக் கொண்டது. கவிதை மொழி, கருப்பொருளின் முக்கியத்துவத்தை, கவிஞன் சிந்திப்பதற்கு ஒத்த சொற்களிலேயே படைத்து எல்லோருக்கும் கடத்துவது என்பது என் நம்பிக்கை. மேற்குறிப்பிட்ட, இரண்டு சிக்கலையும் அணுகுவதற்கான கவித்துவ விசாரணையை எழுப்பாத, விமர்சன உரையாடலை நிகழ்த்தாத வெளியில் ஒரு வாசகன், அது கவிதையா அல்லவா என்பதைக் கண்டடையும் பயிற்சியை அடைவதற்கான வாசிப்பைத் தானே தான் நிகழ்த்தவேண்டியிருக்கிறது. மாலதி மைத்ரி, தன் தொடர் கவிதை இயக்கத்தால் பெண்ணியச் சிந்தனை வெளியை விரித்துக் கொண்டே இருக்கும் அவர், கருத்தாக்கத்தின் வெப்பத்தைப்பதிவு செய்யும் அவசரத்தில், மொழி தன் நடையை மாற்றிக் கொண்டதையும் மொத்தத் தொகுப்பையும் வாசிக்கையில் உணரமுடிகிறது.
மாலதி மைத்ரியின் உச்சபட்ச பெண்ணிய, பாலிய மொழி வெளிப்பாட்டின் நேர்மையான பதிவை அவரது பெரும்பான்மையான் கவிதைகளில் காண முடிந்தாலும், அதன் எல்லைகளைக் கடந்து பறக்க அவர் விரிக்கும் சிறகுகள், தன்னுடலை ஒடுக்குதலை சம்பிரதாயமாகக் கொண்டிருக்கும் எல்லோருக்குமே தன்னுடல் விரிக்க உதவக்கூடியவை.
ஒரு கோப்பை தேனீர்
கண்ணாடியில் வெட்டுப்பட்ட இறக்கைகளுடன்
சுற்றிக் கொண்டிருக்கிறது மின்விசிறி
என் ஆன்மாவைப் போன்ற
கறுத்த கசந்த தேனீரைக் குடித்துக்
கொண்டிருக்கிறேன்
உனது சிமிழுக்குள் அடைப்பட்ட
கிளியல்ல உயிர் – அது
விசையற்ற கோளம் போல்
அலைந்து கொண்டிருக்கிறது
உன்னால் ஏழுகடல் மட்டுமே தாண்டமுடியும்
கோப்பைக்குள் நீ- அதன்
விளிம்புக்கு வெளியே
எல்லையற்ற என்னுடல்.


அருட்பெருஞ்சோதி

நெருப்பைத் தொடும் ஆவல்
எல்லா உயிரினத்திற்குமுண்டு
நெருப்பைத் தொட்டு வளர்த்தவள் நீ
நெருப்பு.
அணைந்த பூமியில் உருவாக்கப்பட்ட
முதல் நெருப்பு
இன்று வரையிலும் உன் உடலின்
வெம்மையோடே நீடிக்கிறது.
ஒவ்வொரு துளி நெருப்பிலும் நீ
தீ பெண்ணிலிருந்து பிறந்ததென்பாள்
என் தாய்
எனக்குள் தீயைத் தொட்டறியச் சோதித்தேன்
யோனி தகித்தது
’அருட்பெருஞ்சோதி’ கவிதை, இக்கட்டுரைத் தொடரின் நோக்கத்திற்கும், ஒளவை மொழி வெளிச்சத்தைக் கவிதை மொழியால் பரப்புவதைத் தன் தொழிலாகக் கொண்ட ஒரு கவிஞருக்கும் ஏன், என் சுய விருப்பத்திற்குமே கூட நியாயம் பாராட்டும் கவிதை!

----------------------------------------------------------------------------------------------
சிறு குறிப்பு: மாலதி மைத்ரி, சங்கராபரணி (2001), நீரின்றி அமையாது உலகு (2003), நீலி (2005) ஆகிய கவிதைத் தொகுப்புகளைப் படைத்துள்ளார். கவிதை தவிர, கட்டுரை எழுதுவதிலும் தீவிர ஈடுபாடு கொண்டவர். ‘அணங்கு’ என்ற இலக்கிய இதழையும் நடத்தி வரும் இவர் புதுவை மாநிலத்தைச் சேர்ந்தவர்.