கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12 அக்டோபர், 2012

அலையின் பாடல் - கலீல் ஜிப்ரான்

வலிமையான கரையே என் காதலன்; நான் அவனது காதலி.

காதலால் கட்டுண்டவர்கள் நாங்கள். நிலவுதான் என்னை அவனிடமிருந்து இழுக்கிறது.

அவசரமாய் அவனை நோக்கி நான் செல்கிறேன்; சட்டென பிரிகிறேன்; பலமுறை சின்னச் சின்ன விடைபெறல்கள்.

நீலவானத்திற்கு அப்பாலிருந்து வெள்ளி நுரைகளை நான் சட்டென திருடி வந்து, அவனது பொன்மணல் மேல் பரப்பி வைக்கிறேன்.

ஒளிமயமாய் நாங்கள் கூடிக் கலக்கிறோம்.

நான் அவனது தாகத்தைத் தணிக்கிறேன். அவனது இதயத்திற்குள் செல்கிறேன்.

அவன் என் குரலை மென்மையாக்குகிறான்; என் சினத்தை அடக்குகிறான்.

விடியற்காலையில் நான் அவன் காதில் காதலின் விதிகளை ஓதுகிறேன். அவன் ஆசையோடு என்னைத் தழுவிக் கொள்கிறான்.

ஏற்றவற்ற அலைகளின்போது நான் நம்பிக்கையின் பாடல் பாடுகிறேன். அவன் முகத்தின்மேல் இனிய முத்தங்கள் பதிக்கிறேன்.

எனக்கு பயம். எனக்கு வேகம்.

ஆனால் அவன் அமைதி; பொறுமை;சிந்தனை.

அவனது நிம்மதியின்மையை அவனது பரந்த மார்பு அமைதிப்படுத்துகின்றது.

அலையடிக்க நாங்கள் தொட்டுக் கொள்கிறோம். அலை பின்வாங்க நான் அவனது காலடியில் விழுந்து வணங்குகிறேன்.

கடற்கன்னிகளைச் சுற்றி பல முறை நான் நடனமாடியிருக்கிறேன். அவர்கள் என் அடியாழத்திலிருந்து எழுந்து அலை நுனியில் நின்று விண்மீன் பார்ப்பார்கள்.

காதலர்கள் பலமுறை என்னிடம் வந்து முறையிடுவது வழக்கம். நான் அவர்கள் பெருமூச்சு விட உதவுவேன்.

பலமுறை நான் பாறைகளை சீண்டிவிட்டு பார்த்திருக்கிறேன். அவற்றை கிச்சுகிச்சு மூட்டியும் பார்த்திருக்கிறேன். அவை ஒரு முறை கூட சிரிக்கவே இல்லை.

என்னில் மூழ்கிப் போகிற உயிர்களை மென்மையாய் ஏந்தி கரை சேர்த்திருக்கிறேன்.

கரைக்காதலன் என் வலிமை எடுத்தது போல அவர்களுக்கு வலிமை தந்திருக்கிறான்.

பலமுறை நான் அடியாழத்திலிருந்து வைரமணிகளைத் திருடி வந்து என் காதலனுக்குப் பரிசளித்திருக்கிறேன். அவன் மெளனமாய் அவற்றை ஏற்றான். என்னை அவன் வரவேற்பான் என்று இன்னமும் தந்து கொண்டிருக்கிறேன்.

கனத்த இரவில் எல்லாம் உறங்க நான் அமர்ந்து ஒரு்முறை பாடுகிறேன். ஒரு முறை பெருமூச்சு விடுகிறேன். நான் என்றும் விழித்திருக்கிறேன்.

அந்தோ! உறக்கமின்மை என்னை பலவீனப்படுத்திவிட்டது. என்றாலும் நான் காதலியாயிற்றே? காதலின் உண்மை கனத்தது அல்லவா?

நான் களைத்துப் போனாலும் எனக்கு மரணமில்லை!

கலீல் ஜிப்ரானின் பைத்தியக்காரன்


நான் எப்படி பைத்தியமானேன் என்று கேட்கிறீர்களா?

பல கடவுள்கள் பிறப்பதற்கு, நீண்ட நாட்களுக்கு முன், ஆழ்ந்த உறக்கத்திலிருந்து ஒருநாள் எழுந்தபோது, என்னுடைய முகமூடிகள் திருட்டுப் போயிருந்ததைக் கண்டேன். என்னுடைய ஏழு பிறப்புகளில் என்னை அலங்கரித்த ஏழு முகமூடிகள் அவை.

‘திருடர்கள், சபிக்கப்பட்ட திருடர்கள்’ என்று கத்திக்கொண்டே தெருவில் இறங்கி ஓடினேன்.

ஆண்களும், பெண்களும் என்னைக் கண்டு சிரித்தனர். சிலர் என்னைக் கண்டு பயந்து வீட்டுக்குள் ஓடினர்.

நான் கடைவீதியை அடைந்தபோது, கூரையில் நின்று கொண்டிருந்த இளைஞன் ஒருவன், ‘இதோ ஒரு பைத்தியக்காரன்’ என்று என்னைப் பார்த்துக் கத்தினான். அவன் முகத்தைப் பார்க்க நிமிர்ந்தபோது, முகமூடியற்ற என் முகத்தை சூரியன், முதல் முறையாக முத்தமிட்டது. என் ஆன்மா ஆழமான காதலில் விழுந்தது. அதுமுதல் எனக்கு முகமூடிகள் தேவைப்படவில்லை. ஆழ்ந்த அமைதியிலிருந்தபடி, ‘திருடர்கள், ஆசிர்வதிக்கப்பட்ட திருடர்கள்’ என்று அழுதேன்.

இப்படித்தான் நான் பைத்தியமானேன்.

என்னுடைய பைத்தியக்காரத்தனத்தில், சுதந்திரத்தையும், பாதுகாப்பையும் கண்டுகொண்டேன்; தனிமையின் சுதந்திரம் மற்றும் புரிந்துகொள்ளப் படுவதிலிருந்து பாதுகாப்பு; நம்மைப் புரிந்து கொள்வதன்மூலம், நம்மில் எதையோ அடிமையாக்குபவர்களிடம் இருந்து.

என்னுடைய பாதுகாப்பு குறித்து நான் கர்வப்படாமல் இருக்கட்டும். சிறையிலிருக்கும் திருடன்கூட, இன்னொரு திருடனிடமிருந்து பாதுகாப்பாகவே இருக்கிறான்.
*
சூரிய உதயத்தின்போது ஒரு நரி தன் நிழலைப் பார்த்தபின் சொல்லிக் கொண்டது, ‘இன்று உணவாக ஒரு ஒட்டகத்தை சாப்பிடுவேன்’.

பிறகு, பகல் முழுவதும் ஒட்டகத்தைத் தேடி அலைந்தது.

மதியத்தில் தன் நிழலைப் பார்த்தபின் சொல்லிக்கொண்டது, ‘ஒரு எலியே போதும்’.
*

நேற்று இரவு ஒரு புதிய சந்தோஷத்தைக் கண்டுபிடித்தேன். அதை முயன்றுகொண்டிருந்தபோது, ஒரு தேவனும், அசுரனும் வேகமாக வந்தார்கள். என் வீட்டுக் கதவருகே சந்தித்துக் கொண்ட அவர்கள், என்னுடைய சந்தோஷத்தைக் கண்டு, சண்டையிடத் தொடங்கினார்கள்; ‘அது மிகவும் புனிதமானது’, ‘இல்லை அது பாவச் செயல்’ என்று.

*

கலீல் ஜிப்ரான் கவிதைகள்.

○ நீ இறக்கும் வரையில் உன் மதிப்பை எங்களால் புரிந்துகொள்ள முடியாது என்று 


ஒரு கவிஞனிடம் கூறினேன்… அதற்கு அவன்,

“ஆம்…. மரணம் உண்மையை உரைக்கக் கூடியது. அப்போது, நான் சொன்னதைவிட செய்தது அதிகம் என்றும், செய்ததைவிட செய்யவிரும்பியது அதிகம் என்றும் தெரியவரும் என்றான்.


○ நினைவு கூர்தலும் ஒருவகை சந்திப்புதான்.


○ மனிதனுக்கு பெருமை அவன் எதை அடைகிறான் என்பதில் இல்லை… 
அவன் எதை அடைய விரும்புகிறான் என்பதில்தான் உள்ளது..!


○ நான் பேசுவதில் பாதி அர்த்தமற்றவை….
நான் அப்படிப் பேசுவதற்குக் காரணம்….
“மீதிப் பாதியாவது உங்களைச் சென்று அடையவேண்டும்..! என்ற ஆதங்கத்தில் தான்.

○ நேற்றைகளின் கடன்களை அடைக்க நாளைகளிடம் நாம் கடன் வாங்குகிறோம்!

கடவுள் - கலீல் ஜிப்ரான்

ஆதியில், முதல் வார்த்தையின் சுவடு என் உதடுகளை அடைந்தபோது, நான் புனிதமான மலையில் ஏறி கடவுளைப் பார்த்து சொன்னேன் ‘கடவுளே, நான் உங்களின் அடிமை. தங்களின் விருப்பமே என்னுடைய விதி, நான் உங்களிடம் இன்னும் அதிகப் பணிவுடன் இருப்பேன்’.

அவர் எதுவும் பேசாமல், ஒரு புயலைப் போல வேகமாக அங்கிருந்து மறைந்தார்.

ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் அந்த மலைக்குச் சென்று கடவுளிடம் பேசினேன். ‘என்னை உருவாக்கியவரே, நான் உங்கள் படைப்பு. ஒரு களிமண்ணிலிருந்து என்னைப் படைத்தீர்கள், நான் என்னுடைய எல்லாவற்றின் மூலமும் உங்களுக்குக் கடன்பட்டிருக்கிறேன்’’.

அவர் எதுவும் பேசாமல், ஓராயிரம் சிறகுகள் கொண்டு பறப்பதைப் போல, அங்கிருந்து சென்றார்.

இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் புனித மலையில் ஏறி அவரிடம் சொன்னேன். ‘கடவுளே, நான் உங்கள் குழந்தை. அன்பினாலும், கருணையினாலும் நீங்கள் எனக்கு உயிர் கொடுத்தீர்கள். அன்பினாலும், பிரார்த்தனையினாலும் உங்கள் ராஜாங்கத்தை அடைவேன்’.

அவர் எதுவும் பேசவில்லை, தூரத்து மலையைப் பனி சூழ்வதைப்போல மெல்ல என்னைவிட்டு நகர்ந்தார்.

ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் அந்த மலைக்குச் சென்று கடவுளிடம் சொன்னேன். ‘கடவுளே, என்னுடைய இலட்சியமே, நிறைவே! நானே உங்கள் இறந்தகாலம், நீங்களே என் எதிர்காலம். பூமிக்குள்ளிருக்கும் உங்கள் வேர் நான், வானத்திலிருக்கும் என்னுடைய மலர் நீங்கள். சூரியனுக்கு முன் நாம் இருவரும் சேர்ந்து வளர்வோம்’.

கடவுள் என்னை நோக்கிக் குனிந்து இனிமையான வார்த்தைகளை என் காதில் சொன்னார். சொல்லும்போதே நதியை அணைத்துத் தன்னுள்ளே ஓட விடும் கடலைப்போல, என்னை அணைத்துக் கொண்டார்.

நான், மலையிலிருந்து இறங்கி சமவெளிகளையும் பள்ளத்தாக்குகளையும்  அடைந்தபோது, கடவுளையும் அங்கு கண்டேன்.

- கலீல் ஜிப்ரானின் பைத்தியக்காரன் என்ற நூலிலிருந்து

04 டிசம்பர், 2011

அசைவமும் நமது சைவப் பெருமைகளும்-தேவதேவன் கவிதைகள்

இயற்கையில் மிக இயல்பாக அமைந்துவிட்டிருக்கிற
வன்முறைகளைப் போலவே
சில மனிதர்கள் அசைவமாக இருப்பது
உயிரினங்களில் கொஞ்சம்
கொல்லப்படுவதற்குக் காரணமாகிவிடுகிறது

நான் பார்ப்பான் பிள்ளை தேவர் நாடார்
இந்து முஸ்லிம் கிறித்தவன் பவுத்தன்
அமெரிக்கன் ரஷ்யன் தமிழன் சிங்களவன் என்றிருப்பது
முடிவுறாத மனிதப் படுகொலைப் போர்களுக்கு...

படைப்பு-தேவதேவன் கவிதைகள்

தான் இல்லாமலேயே செயல்படக்கூடிய
ஓர் உலகைப் படைப்பதற்காக
கடவுள் தன்னையே கொடுத்துவிட்டார்

ஒளி, வண்ணமயமான உலகின்
பன்முகங்களை விரித்துக் காட்டுகையில்
இருள், தன் ஒருமைத் தன்மையால்
அனைத்தையும் மூடி
நிலவையும் நட்சத்ரங்களையும்
வரச் சொல்கிறது

பகலை, பரிதியும்
இரவை, நிலவும்
பார்த்துக்கொள்ள
எந்நேரமும்
தன் பணியிலிருக்கும் பூமியில்
வேறு வேலையற்று.

அலகிலா பிரம்மாண்டத்தை
தன் மலைகளாலும் கடல்களாலும்
சொல்ல முயலும் பூமியைக்
கருணையோடு
குனிந்து நோக்குகிறது வானம்;
அத்துடன் தன் அறிவையும்
சந்தேகிக்கிறது அது

அம்மா உனக்கு ஓய்வில்லையா?-தேவதேவன் கவிதைகள்

ஒரு கணம் சும்மா உட்கார்ந்திருக்கமாட்டாமல்
உன்னை விரட்டுவது எது?
உன் கண்ணில் கசியும்
நூற்றாண்டுத் துயர்களை நான் அறிவேன்
அசோகவனத்துச் சீதையோ, ரவிவர்மாவின்
சிந்தாகுலமிக்க சகுந்தலையோ அல்ல நீ

இந்த அகால வேளையிலும் கூட
பெருக்குமாற்றை எடுத்துக்கொண்டு
பெருக்கிய முற்றத்தையே மீண்டும் மீண்டும்
பெருக்கிய வண்ணமிருக்கிறாய்

காவியக் கற்பனைகளாலும்
தீட்டிவிடத் தீராததோ உன் ரகசியம்?

ஆண் பெண்-தேவதேவன் கவிதைகள்

ஒரே படுக்கையில்
உடன் படுக்கை கொண்டு
நாம் ஒருவரை ஒருவர்
இழுத்து அணைத்துக் கொள்வதன்
பொருள் என்ன ?

ஆண் பெண் என பிரிந்த
இரட்டைத்தன்மையை மறந்து
இணைய வேட்கும் ஆவேசம்

குழந்தைபசி விழித்து அழ
முலையுடன்
பெண் என நாமம் ஏற்று
என்னை பிரிந்து செல்லும்
ஒருமுனை புரிகிறது
மற்றொரு முனையில்
தனித்து விடப்பட்ட
என் பிரிவின் நோக்கமென்ன ?

சிசு பேணும் முலையவளே
மீண்டும் மீண்டும் வந்து
என்னை ஆலிங்கனிக்கும்
உன்னை விலக்கி
என்னை
தனித்துத் தியானிக்கவைக்கும்
உயிரிீன் நோக்கம்
தனித்து தியானித்திருந்தது

பாவம்-தேவதேவன் கவிதைகள்

கல்யாண மண்டபம் வெளியே காற்றாட
சிகரெட்டும் தாம்பூலமுமாய்
நின்று கொண்டிருந்தோம். அருகே
தாழிட்ட ஒரு வாசற் படிக்கட்டில்
புழுதி படிந்து காய்ந்த
எலும்புத் தோல் கோலத்தில்
நொடிந்து துயிலும் ஒரு சிறுவன்.

வீடும் மற்றுமுணவும் விரட்ட விரட்ட
பட்டினியுடன் வீதியலைகிறவன் போலுமிருந்தான்
சாப்பிட்டுப் பல நாட்களிருக்கும்போல் சொல்லிற்று
ஒட்டிய வயிறும் அவன் உடலும்.

உண்மையை அறியும் ஊகங்களுக்குள்
செல்லவிடாது எங்களைத் தடுத்தது
காலங்காலமாய் எங்களுக்குள்
வற்றாது ஓடிக் கொண்டிருக்கும்
பார்ப்பனிய விஷம்.

சிலருக்கு எவ்வளவு சாப்பிட்டாலும்
வயிறு அப்படித்தான் இருக்குமாம்.
ஒட்டிய வயிறு உப்பிய வயிறு குறித்த
‘ஆழமான சிந்தனை’களை நாங்கள்
பகிர்ந்து கொண்டோம்.
கடைசித் தீர்ப்பாய்
பாவம் என்ற ஒரு சொல்லை
அவன்மீது உதிர்ந்து நீங்கினோம்.

குடும்பம்-தேவதேவன் கவிதைகள்

சமூகம் வழங்கும் செளகரியங்களும் குரூரமுமாய்
எனது தந்தை இருந்தார்
மனிதன் வழங்கும் அன்பும் கருணையுமாய்
எனது தாயும் இருந்தார்கள்

எனது தந்தைக்கோர் பெரும் பேர் உண்டு
நியாயவான் நாட்டுக்குழைப்பவன் நல்லவன் என்றெல்லாம்
எனது தாய்க்கும் பேர் உண்டு
பாவம் பைத்தியக்காரி ஒன்றுமறியாதவள்

இத்தோடு இந்தப் புவி முழுக்க வினியோகிக்க
போதுமான பெருந்தன்மை எனும் சரக்கு
எங்கள் வீட்டில் இருந்ததென்னவோ
மறுக்க முடியாத உண்மை

என் தாயிடம் நான் கண்டிருந்தேன்
என் தந்தையின் மூர்க்கங்களை எல்லாம்
எப்போதும் மன்ன்னித்து நிற்பதுபோன்ற ஒரு பெருந்தன்மையை
எனது தந்தையிடம் கண்டிருந்தேன்
எனது தாயின் அறிவீனங்களை எல்லாம்
எப்போதும் சகித்துக் கொண்டு முறுவலிப்பதுபோன்ற
ஒரு பெருந்தன்மையை

ஒருநாள் -இல்லை திடார் திடாரென்று-
தந்தை உதைத்தார் தாயின்மீது எகிறி
தாய் சபித்தாள் தந்தை மீது கதறி
நான் முழித்தேன் பார்வையாளனாய்

யார் நிகழ்த்துகிறார் இந்த நாடகத்தை என
நான் கேட்டேன் எனக்குள் நெளிபவனிடம்

தற்செயலாய் ஒருநாள் சந்தித்தேன்
அந்த நாடக இயக்குநரை
என்னைத்தான் தேடிக் கொண்டிருந்தாராம் அவர்
தன் நாடகத்துக்கு இரு பாடல்களை இயற்றித் தரணுமாம்
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவுதற்கோர் டூயட் பாட்டும்
அன்னவர் கீரியும் பாம்புமாயிருக்கையில்
ஒலிப்பதற்கோர் பின்னணிப்பாட்டும்

' ' கவனம் இப்பாடல்களின் பொருளை
உம் நடிகர்கள் புரிந்துகொண்டால்
உம் நாடகம் அம்பேல் '
என்ற எச்சரிக்கையுடன் வழங்கினேன்
எனது இரு பாடல்களை அவரிடம்.

23 செப்டம்பர், 2011

பறச்சி


Image
"செத்துப்போன மாட்டைத்
தோலுரிக்கும்போது
காகம் விரட்டுவேன்
வெகு நேரம் நின்று வாங்கிய
ஊர்ச் சோற்றைத் தின்றுவிட்டு
சுடுசோறெனப் பெருமை பேசுவேன்
தப்பட்டை மாட்டிய அப்பா
தெருவில் எதிர்ப்படும்போது
முகம் மறைத்துக் கடந்துவிடுவேன்
அப்பாவின் தொழிலும்
ஆண்டு வருமானமும்
சொல்ல முடியாமல்
வாத்தியாரிடம் அடி வாங்குவேன்
தோழிகளற்ற
பின் வரிசையிலமர்ந்து
தெரியாமல் அழுவேன்
இப்போது
யாரேனும் கேட்க நேர்ந்தால்
பளிச்சென்று சொல்லிவிடுகிறேன்
பறச்சி என்று"

பறக்கடவுள்

சொல்லுகிறீர்கள்
முதுகு விரியக் காய்ந்தால்
அதன் பெயர் பறவெயில்
உலரும் புழுத்த தானியத்தை
அலகு கொத்தி விரையும்
அது பறக்காகம்
கையிலிருப்பதை
மணிக்கட்டோடு
பறித்துச் சென்றால்
அது பறநோய்
நிலத்தை உழுது
வியர்வை விதைத்தால்
அது பறப்பாடு
சகலத்திற்கும் இப்படியே
பெயர் என்றால்
இரத்த வெறியில் திளைக்கும்
எது அந்தப் பறக் கடவுள்

உடலெழுத்து

வெறுங்கால்களால் கடக்கமுடியாத
வெப்ப நாளின் முன்னிரவில்
மதுவருந்த அழைக்கப்பட்டிருந்தேன்
மூவருக்கான அவ்வீட்டில்
நானும் அவளுமே தனித்திருந்தோம்
கண்ணாடியில் செதுக்கப்பட்ட குப்பிகளில்
நொதித்த திரவம் நிரம்பியிருந்தது
குழல் நீண்ட மதுக்கோப்பைகள்
பற்றப்பட வாகாய்க் காத்திருந்தன
பணித்துண்டங்கள் மிதக்கும் நீரை
மிடறுகளாக விழுங்க ஆரம்பித்தோம்
போதையின் ஒளி
பரவத்தொடங்கிய போது
வேற்றறையின் படுக்கையிலிருந்தேன்
குவிந்த என் மார்பின் மென்மைபற்றி
வெகுநேரம் வினாவெழுப்பிக் கொண்டிருந்த
அவளுடைய தேகமும்
மிகக் குழைவாக இருந்தது
பிறகவள் மூச்சின் வெளிச்சத்தில்
உடலெழுத்துகள் ஒவ்வொன்றையும்
விடியும் வரை பழகிக் கொண்டிருந்தாள்
நீண்ட யுகங்களுக்குப் பிறகு
அன்று தான்
என்னுடல் என்னிடமிருந்தது
இரவு மிருகம்
பருவப்பெண்ணின் பசலையைப் போல
கவிழத் தொடங்கியிருந்தது இருள்
கதவடைத்து விட்டு
மெழுகுவர்த்திகளின் மஞ்சள் ஒளியில்
தனியாக அமர்ந்திருந்தேன்
அப்போது தான் தினமும் விரும்பாத
அதன் வருகை நிகழ்ந்தது
நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே
என்னை உருவி எடுத்துவிட்டு
இன்னொரு என்னை வெளிக்கொணர்ந்தது
நான் திகைக்க நினைக்கையில்
அந்தரங்கம் அச்சிடப்பட்ட புத்தகத்தையே
படித்து முடித்திருந்தேன்
என் கண்களின் ஒளிக்கற்றைகள்
முன்னறையில் உறங்குபவனின்
ஆடை நெகிழ்வுகளில் பதிந்திருந்தன
கோப்பை நிறைய வழியும் மதுவோடு
என்னுடல் மூழ்கி மிதந்தது
கூசும் வார்த்தைப் பிரயோகங்களை
சன்னமாய்ச் சொல்லியவாறு
சுயப்புணர்ச்சியில் ஆழ்ந்திருந்த வேளை
பறவைகளின் சிறகோசை கேட்டதும்
என்னை என்னிடத்தில் போட்டுவிட்டு
ஓடிவிட்டது இரவு மிருகம்.

கடலளவு-

இருள் குடித்த புறநகர் ஒன்றின்
கடைசி இரயில் நிறுத்தத்தில்
காத்துக் கொண்டிருக்கிறேன்
அதிவிரைவு வண்டிகள்
என்னைக்
கடந்த வண்ணமிருக்கின்றன
அவற்றிலிருந்து கிழிந்த வெளிச்சமும்
கெட்டித்துப் போன இருட்டும்
புலியின் வரிகளாய்
என் மீது படிந்து நகர்கின்றன
முந்தைய நிறுத்தத்திலிருந்து
கடத்தி வரப்பட்ட காற்று
என் மேலாடையை
அலைக்கழித்த படி செல்கிறது
நான் நிற்பதன் பிரக்ஞையற்று
எதிரும் புதிருமாய்
இயங்குகின்றன பல வண்டிகள்
போதையில் சிக்கிய கண்ணாடி வண்டென
அகப்படாமல்
பறந்து செல்கிறது பச்சையொளி
இரயிலை நிறுத்தும் வழியறியாது
கல்லிருக்கையில் அமர்ந்து கண்மூடுகிறேன்
காலடியில் உறைந்து கிடக்கிறது
கடலளவு இரத்தம்

மூன்று பெண்களின் கவிதைகள்.

எனக்கு உன்னிடம் சொல்ல இருப்பது
நீ
எனது நேசத்தைக் குறித்து பயப்பட வேண்டாம்
அது உன்னிடமிருந்து
எதையும் எதிர்பார்ப்பதில்லை.
நீ எனது நட்பை சந்தேகப்பட வேண்டாம்
அது உன்னை
சொந்தமாக்கிக்கொள்ள விரும்புவதில்லை.
ஒருசமயம்
ஓர் இருண்ட இரவில்
என்னுள்ளே ஏராளமான தேவதைகள் புகுந்து
அன்பைக் கொட்டினார்கள்.
நான் உறங்கும்போது
நிகழ்ந்தது இந்த சினேகதானம்.
விழித்தபோது
இதயத்தின் கரைமீறிப்பொங்கும்
நேசப்பெருவெள்ளம்.
துக்கப்படுபவர்களும்
தனிமையானவர்களும் வந்து
தட்டிப்பறித்தனர் அதை.
எனினும்
மிஞ்சிய நேசத்தைக்
கோப்பைகளில் ஊற்றிவைத்தேன்.
விரிந்த ஆகாயத்தின் கீழாக
பொட்டல் மைதானங்களினூடே
யாருமற்ற பாதையோரங்கள் வழியே
நான் அலைந்துகொண்டிருந்தேன்.
கையில் ததும்பிவழியும் பானக்குவளை.
உனக்கு
எனது நேசத்தைப்பற்றி
குற்றவுணர்வு வேண்டாம்.
இன்னொருவருடையதைத் திரும்பி வாங்கி
உனக்குக் கொடுக்கவில்லை.
வீணாகிப் போகும் நேசத்தை பற்றியும்
ததும்பி வழியும் பானக்குவளை பற்றியும்
உன்னிடம் நான் சொன்னதில்லையா?
உன்னிடம் சில விஷயங்களைத்
தெளிவுபடுத்த வேண்டும் நான்
என்றாவது நீ
என்னை நெருங்கி வருவதானால்
ஓர் அரசன்
தாசியை பார்க்கவரும் உணர்வு வேண்டாம்
எனக்கு உன்னிடமிருந்து
பரிசிலாக… பூமியோ
கைச்சாத்துப்பெற்ற சிற்றரசுகளோ தேவையில்லை
பக்தனுக்கு தரிசனமருளும்
கடவுளின் உணர்வும் வேண்டாம்.
எனக்கு உன்னிடம் கேட்டுவாங்க
வரங்கள் எதுவுமில்லை.
உனது ஒளியால் நிரப்பிக்கொள்ள
இதயவறுமையும் எனக்கில்லை.
ஒரு சக்கரவர்த்தி
இன்னொரு சக்கரவர்த்தியைச் சந்திப்பது போல
ஒரு நண்பன்
மற்றொரு நண்பனைச் சந்திப்பது போல
சம உணர்வுடன் வா.
ஒரு புல்லாங்குழல்
ராகத்தைத் தேடுவது போலவோ
ஒரு கேள்வி
பதிலைத் தேடுவது போலவோ
இயல்பாக இருக்கட்டும் அது.
- ரோஸ்மேரி (மலையாளம்)
…….
வாமனன்
நேசிக்கும் ஆணிடம்
நான் சொன்னேன்
உன்னை நான் நேசிக்கிறேன்
ஆனால்
ஓரடி பூமிமேல் வைத்து
அவன் கேட்டான்
என்ன இதன் அர்த்தம்?
நீ வேசியைப்போல பேசுவது என்ன்?
குடையும் மறைப்புமில்லாமல்.
நேசிக்கும் ஆணிடம்
நான் சொன்னேன்
உன்னை நான் நேசிக்கிறேன்
ஆனால்
இரண்டாவது அடி ஆகாயத்தில் வைத்து
அவன் கேட்டான்
என்ன இதன் அர்த்தம்?
நீ வேட்டைக்கிறங்கிய
யட்சியைப்போல பேசுவது ஏன்?
மறைப்பும் குடையுமில்லாமல்.
நேசிக்கும் ஆணிடம்
நான் சொன்னேன்
எனக்கு உன்மேல் நேசம்
ஆனால்
மூன்றாமடியை என் உச்சியில் அழுத்தி
அவன் கேட்டுக் கொண்டிருக்கிறான்
என்ன இதன் அர்த்தம்?
முடிவடையாத அந்த விசாரணைக்கும்
காலடியிலிருந்து நழுவிய பூமிக்கும்
தலைமுறைகளிடமிருந்து மறைந்த ஆகாயத்துக்கும் மேலாக
நான் சொன்னேன்
எனக்கு உன்னிடம் நேசம்
குடையும் மறைப்புமில்லாமல்..
பயமும் பாசாங்குமில்லாமல்.
-சாவித்திரி ராஜீவன் (மலையாளம்)
……..
(அஸின், பாவனா போன்ற மலையாளச்சேச்சிகளைப் பார்த்து மட்டும் ஜொள்ளுவிடாமல், மலையாள ஆக்க இலக்கியங்களையும் கொஞ்சம் அறிந்துகொள்க என்று மலையாளக் கவிதைகள் சிலவற்றை அனுப்பி வைத்த தோழியின் அன்புக்கு நன்றி.)
…..
உடலெழுத்து
வெறுங்கால்களால் கடக்க முடியாத
வெப்ப நாளின் முன்னிரவில்
மதுவருந்த அழைக்கப்பட்டிருந்தேன்
மூவருக்கான அவ்வீட்டில்
நானும் அவளுமே தனித்திருந்தோம்
கண்ணாடியில் செதுக்கப்பட்ட குப்பிகளில்
நொதித்த திரவம் நிரம்பியிருந்தது
குழல் நீண்ட மதுக் கோப்பைகள்
பற்றப்பட வாகாய் காத்திருந்தன
பனித்துண்டங்கள் மிதக்கும் நீரை
மிடறுகளாக விழுங்க ஆரம்பித்தோம்
போதையின் ஒளி
பரவத் தொடங்கிய போது
வேற்றறையின் படுக்கையிலிருந்தேன்
குவிந்த என் மார்பின் மென்மைபற்றி
வெகுநேரம் வினாவெழுப்பிக் கொண்டிருந்த
அவளுடைய தேகமும்
மிகக் குழைவாக இருந்தது
பிறகவள் மூச்சின் வெளிச்சத்தில்
உடலெழுத்துக்கள் ஒவ்வொன்றையும்
விடியும் வரை பழகிக் கொண்டிருந்தாள்
நீண்ட யுகங்களுக்குப் பிறகு
அன்று தான்
என்னுடல் என்னிடமிருந்தது.
(சுகிர்தராணி)
நன்றி: புதியகாற்று

கண்ணை அவிழ்க்கும் கவிதை

சமீபத்தில் எம்.ஏ.நுஃமான் அவர்கள் தமிழாக்கம் செய்து தொகுத்திருந்த ‘பலஸ்தீனக் கவிதைகள்’ என்ற கவிதைக் தொகுப்பை வாசித்தேன். அப்போது என் மனதில் சிக்கிக்கொண்ட கவிதை இது:
http://kuttyrevathy.blogspot.com
கிட்டத்தட்ட நான்கு வயதுச் சிறுமி ஒருத்தியின் நாட்குறிப்பில் இருந்து

நாளை கட்டை அவிழ்ப்பார்கள்
எனக்கு யோசனையாக இருக்கிறது
எஞ்சியிருக்கும் என் ஒற்றைக் கண்ணால்
ஆப்பிள் பழத்தின் ஒரு பாதியை மட்டும்
தோடம் பழத்தின் ஒரு பாதியை மட்டும்
என் தாயின் பாதி முகத்தை மட்டும் தான்
என்னால் பார்க்க முடியுமா?

துப்பாக்கிக் குண்டை நான் பார்க்கவில்லை
என் தலைக்குள் வெடித்த
அதன் வலியை மட்டுமே உணர்ந்தேன்
பெரிய துப்பாக்கியுடன்
நடுங்கும் கைகளுடன்
கண்களில் ஒரு வெறித்த பார்வையுடன்
அந்த ராணுவ வீரன்
என் மனதில் அழியாதிருக்கிறான்
அதைத் தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை

என் மூடிய கண்களால் இவ்வளவு தெளிவாக
அவனைப் பார்க்க முடியுமென்றால்
எங்கள் தலைகளுக்குள்ளே
நாம் இழக்கும் கண்களை ஈடுசெய்ய
ஒன்னும் ஒரு சோடிக் கண்கள் உள்ளன போலும்

அடுத்த மாதம் என் பிறந்த நாளுக்கு
முற்றிலும் புதியதோர் கண்ணாடிக்கண்
எனக்குக் கிடைக்கும்
சில வேளை பொருட்கள் நடுவில் தடித்தும்
வட்டமாயும் தெரியக்கூடும்
நான் விளையாடும் கண்ணாடிக் குண்டுகள் ஊடே
உற்றுப் பார்த்திருக்கிறேன்
அவை உலகத்தை வினோதமாய்க் காட்டும்

நான் கேள்விப்பட்டேன்
ஒன்பது மாதக் குழந்தை ஒன்றும்
ஒற்றைக் கண்ணை இழந்த்தாக

என்னைச் சுட்ட ராணுவ வீரன் தான்
தன்னை உற்றுப் பார்க்கும்
சின்னஞ்சிறுமிகளைத் தேடும்
ஒரு ராணுவ வீரன் தான்-
அவளையும் சுட்டானோ என்று
எனக்கு யோசனையாக இருக்கிறது

நானோ வளர்ந்தவள்
கிட்டத்தட்ட நாலு வயது
போதிய அளவு நான்
வாழ்க்கையைப் பார்த்துள்ளேன்
ஆனால் அவளோ சின்னக் குழந்தை
எதுவும் அறியாச் சின்னக் குழந்தை



-இது ஹனான் மிக்காயில் அஷ்ஹாவி என்ற பலஸ்தீனப் பெண்கவிஞரின் கவிதை.
இக்கவிதையின் பின் குறிப்பு இதோ:
றஷா ஹெவ்சிய்யே 1988 மார்ச் மாதத்தில் ஒரு கண்ணை இழந்தாள். இஸ்ரேல் வீரன் ஒருவன் றப்பர் குண்டுகளால் சுட்ட போது அவள் கண்ணை இழக்க நேர்ந்தது. அச்சமயம் றமல்லாவுக்கு அண்மையில் உள்ள அல்-பிறெஹ் என்ற ஊரில் தன் பாட்டியின் வீட்டு மாடியில் றஷா நின்று கொண்டிருந்தாள். அச்சமயம் அதே போன்று வேறு இரண்டு குழந்தைகளும் (இருவரும் 9 மாத வயது உடையவர்கள்) ஒவ்வொரு கண்ணை இழந்தனர். இன்ரிபதா இயக்கத்தின் ஏழாவது மாதத் தொடக்கத்தில் சுமார் 40 பேர் இதே போல் பாதிக்கப்பட்டனர்.


ஒரு வித்தியாசமான பார்வைக் கோணத்தில் அஷ்ஹாவி இக்கவிதையைச் செதுக்கியுள்ளார். இராணுவ பயங்கரவாதத்தின் அவலத்தை ஒரு நிகழ்வின் வழியாகச் சொல்லும் போது அது வெறுமனே நிகழ்வைப் பற்றிய வர்ணனையாக இல்லாமல் அதன் காட்சி வெளிக்குள் நுழைவது அதன் அவலத்தை இன்னும் நுட்பமாக வெளிப்படுத்துவதாக இருக்கிறது.
குறிப்பாக,
‘ஆப்பிள் பழத்தின் ஒரு பாதியை மட்டும்’

‘என் மூடிய கண்களால் இவ்வளவு தெளிவாக
அவனைப் பார்க்க முடியுமென்றால்
எங்கள் தலைகளுக்குள்ளே
நாம் இழக்கும் கண்களை ஈடு செய்ய
இன்னும் ஒரு சோடிக் கண்கள் உள்ளன போலும்’

‘சில வேளை பொருட்கள் நடுவில் தடித்தும்
வட்டமாயும் தெரியக்கூடும்
நான் விளையாடும் கண்ணாடிக் குண்டுகள் ஊடே
உற்றுப் பார்த்திருக்கிறேன்’

போன்ற வரிகளின் ஊடாக கண்ணின், பார்வையின் விஞ்ஞானப் பரிமாணம் சித்திரம் பெற்றுத் தொடர்கிறது. நகை முரணாயும் யதார்த்தமாயும் காயத்தை விடுவிக்கும் இவரது சொற்கள் காயமுற்று ஒற்றைக்கண் பறிபோன நான்கு வயது குழந்தை கண்ட, காணும், காண்பதாய் கற்பனை செய்து கொள்ளும் உலகமாகிறது. வெளிப்படையான அல்லது மேலோட்டமான எதிர்ப்புணர்விலோ காட்சிச் சித்திரத்திலோ கவிதை உயிர்கொள்வதில்லை. மாறாக, உணர்வின் அடியாழங்களுக்குள் நீந்தும் திடகாத்திரமான பயணத்தை மேற்கொள்ளும் கவிஞரால் தான் கவிதைக்கு உயிர் தர முடிகிறது.

பல சமயங்களில் கவிஞர்கள் உணர்வுகளின் மோலோட்டமான ஒழுக்குகளோடு மட்டுமே பயணித்துவிட்டு கவிதையை எழுதும் போது அது வெறுமனே ஓர் அதிகாரத்தை எதிர்க்கும் பிரச்சாரமாக மட்டுமே முடிந்து விடுகிறது. இடையறாத உணர்வுகளின் பெருக்கத்தில் நீச்சலடித்து அகவெளி காணுவோரின் கவிதைகளில் இம்மாதிரியான மாயாஜாலங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கும். இக்கவிஞர்கள் ஆகவே கவிதைகளைப் படைப்பதில் சோர்ந்து போவதேயில்லை.

நிகழ்வுக்கும் அனுபவத்திற்கும் இடையில் ஒரு மாயாஜாலத்தை நிகழ்த்தினாலும் நிகழ்வையும் அனுபவத்தையும் விட இக்கவிதையில் கவிஞர் பயன்படுத்தும் ஒப்புமைகள் மிகுதியான அதிர்ச்சியை அளிக்கின்றன. அதே சமயம் அவ்வதிர்ச்சி என்றென்றும் அழியாயதாய் பொதியப்பட்டு காலந்தோறும் இடந்தோறும் படிக்குந்தோறும் துல்லியமாகவும் ஆர்ப்பாட்டமின்றியும் வழங்குவதாயும் வடிக்கப்பட்டுள்ளது.


இப்பொழுது மீண்டும் இந்தக் கவிதையைப் படித்துப் பாருங்கள்.




நன்றி: ‘அடையாளம்’ வெளியீடு

17 ஜூலை, 2011

இவ்வாறாக- விக்ரமாதித்யன்

இவ்வாறாக

அன்றைக்குப் போலவே
இன்றைக்கும்
ஆதரவாயிருக்கும் அம்மாவை
ஐயோ பாவம்
தாய்ப்பாசமென்று விட்டுவிடலாம் nambi29
ஆயிரத்தோரு சண்டைகளுக்கு
அப்புறமும்
அப்பா காட்டும் அக்கறையை
அன்புக்கு நேர்வதெல்லாம்
துன்பம்தானென்று விட்டுவிடலாம்
மார்பில்
முகம்புதைத்து
மனைவி கேட்கும் கேள்விகளுக்கு
மறுமொழியாக
மெளனத்தை விட்டுவிடலாம்
காலைக்கட்டி மயக்கும்
குழந்தைகளை
கடவுளின் அற்புதங்களை நம்பி
சும்மா
விட்டுவிடலாம்
முதுகுக்குப் பின்
புறம்பேசித் திரிகிற
நண்பர்களின் குணத்தை
மன்னித்து
மறந்துவிட்டு விடலாம்
வேண்டியவர்களின் யோசனைகள்
வேண்டாதவர்களின் கேவலப்படுத்தல்கள்
இரண்டுமே
விதியின் முன்புக்கு
வீணென்று
விட்டுவிடலாம்
எனில்
எல்லாவற்றுக்கும் மேலாக
இயல்பிலேயே உறுத்திக்கொண்டிருக்கும்
என் மனசாட்சிக்கு
என்ன பதில் சொல்ல
***

குற்றாலக்கவிதை

போனவருஷம் சாரலுக்கு
குற்றாலம் போய்
கைப்பேனா மறந்து
கால்செருப்பு தொலைந்து
வரும் வழியில் கண்டெடுத்த
கல்வெள்ளிக் கொலுசொன்று
கற்பனையில் வரைந்த
பொற்பாதச் சித்திரத்தை
கலைக்க முடியவில்லையே இன்னும்
***
ஆதி - கவிதைத் தொகுப்பு
**

முக்கோணத்தின் மூன்று முனைகள்

பேசிக்கொள்ள
ஆசைப்படுகின்றன
கண்களில்
கசிகிறது உப்புநீர்
மனசில் கனக்கிறது
மாயச்சுமை
வார்த்தைகள்
நாவின் நுனியிலேயே தங்கிவிடுகின்றன
உதடுகள்
ஒழுங்கற்று நெரிபடுகின்றன
ஒன்றையொன்று
நின்று நினைத்துப்பார்க்க
என்றேனும் ஒருநாள்
எல்லாமும் சொல்லிவிட
முடிவெடுத்திருக்கின்றன முக்கோணத்தின்
மூன்று முனைகள்
***
கிரகயுத்தம் கவிதைத்தொகுப்பிலிருந்து
flow1

நான்கு கவிதைகள்-விக்ரமாதித்யன் நம்பி

1
சிறு தெய்வங்களை
சுலபத்தில் வசியப்படுத்தி விடலாம்
பெருந் தெய்வம்தான்
பிடிகொடுத்துத் தொலைக்காது
nambi2453
2
முந்தாவிட்டால் ஒன்றும்
மோசமில்லை
பிந்திவிட்டாலோ
பெரும்பாதகம் வந்துவிடும்

3
செடிகள்
வளர்கின்றன
குழந்தைகள்
வளர்கிறார்கள்
எனில்
மரங்களுக்கு
வருவதில்லை மனநோய்

4
பறவைகள்
பறக்கும் ஆகாயத்தில்
புழுக்கள்
வளரும் பூமியில்
மானுடம் மட்டும்
மயங்கும் இடம் தெரியாமல்.
flow1

பொருள்வயின் பிரிவு –விக்ரமாதித்யன் நம்பி

பொருள்வயின் பிரிவு
அன்றைக்கு
அதிகாலை இருள் பிரிந்திருக்கவில்லை.
நிசப்தம் காடாக விரிந்துகிடந்ததுnambi2562
சாரல் மழைபெய்து
சுகமான குளிர் வியாபித்திருந்தது
அயர்ந்து
தூங்கிக்கொண்டிருந்தான் பெரியவன்
அரவம் கேட்டு விழித்த சின்னவன்
சிரித்து விளையாடிக்கொண்டிருந்தது
சித்திரமாக இருக்கிறது கண்ணுக்குள்
இவள்
வெந்நீர் வைத்துக் கொடுத்தாள்
வெளுத்த துணிகளை எடுத்துவைத்தாள்
வாசல்வரை வந்து
வழியனுப்பி வைத்தாள் தாய்போல
முதல் பேருந்து
ஓட்டுநர் இருக்கைக்கு பின்புற ஜன்னலோரம்
பிழைப்புக்காக
பிரிந்து வந்துகொண்டிருந்தேன்
மனசு கிடந்து அடித்துக்கொள்ள.
****
கூண்டுப் புலிகள்
நன்றாகவே பழகிவிட்டன
நாற்றக்கூண்டு வாசத்துக்கு
பெரிதாக ஒன்றும் புகார் இல்லை
நேரத்து இரை
காலமறிந்து சேர்த்து விடப்படும் ஜோடி
குட்டி போட சுதந்திரம் உண்டு
தூக்க சுகத்துக்குத் தடையில்லை
கோபம் வந்தால்
கூண்டுக் கம்பிகளில் அறைந்து கொள்ளலாம்
சுற்றிச்சுற்றி வருவதும்
குற்றமே இல்லை
உறுமுவதற்கு உரிமையிருக்கிறது
முகம் சுழிக்காமல்
வித்தை காண்பித்தால் போதும்
சவிக்குச் சொடுக்குக்குப் பயந்து
நடந்து கொண்டால் சமர்த்து
ஆதியில் ஒரு நாள்
அடர்ந்த பசியக்காட்டில்
திரிந்து கொண்டிருந்தனவாம்
இந்தக் கூண்டுப்புலிகள்
****
நேற்றிரவு
நரகம்
இன்று இரவு
சொர்க்கம்
நாளை நல்லபடியோ
கெட்டபடியோ
வருநாளெல்லாம்
திருநாளென்ற கனவில்
ஒருநாளுக்காக
ஒவ்வொரு உயிரும்
வெறுநாள்களை
வாங்கிவைத்தபடி.
****
பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை
தீப்பெட்டி படம் சேகரிக்கிறான் மகன்
நான் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன்
****
முழுதாய் வாழ்ந்து முடிக்க
முன்னூறு வார்த்தைகள் போதும்
இவனோ வார்த்தைகளின் ஊர்வலத்தில்
வழிதவறிய குழந்தை
****
அண்ணி மேல் கொண்ட ஆசை
கொழுந்தனைக் குழப்ப
அந்நிய இடமாகும் வீடு
விரும்புவது
நதிக்கரை நாகரிகம்
விதிக்கப்பட்டது
நெரிசல் மிக்க நகரம்
கைபட
தளர்வது முலை
கவலைப்பட
தளர்வது மனம்
*****
flow1

தக்ஷ்ணாமூர்த்தியான..-விக்ரமாதித்யன் நம்பி

தக்ஷ்ணாமூர்த்தியான...nambi26

மாமிசம் தின்னாமல்
சுருட்டுப் பிடிக்காமல்
பட்டை யடிக்காமல்
படையல் கேட்காமல்
உக்ரம் கொண்டு
சன்னதம் வந்தாடும்
துடியான கருப்பசாமி
இடையில் நெடுங்காலம்
கொடைவராதது பொறாமல்
பதினெட்டாம்படி விட்டிறங்கி
ஊர்ஊராகச் சுற்றியலைந்து
மனிதரும் வாழ்க்கையும்
உலகமும் கண்டு தேறி
அமைதி கவிய
திரும்பி வந்தமரும்
கடந்தகாலக் கைத்தநினைவுகள் வருத்தவும்
எதிர்கால நிச்சயமின்மை உறுத்தவும்

வீடு

வீடு பத்திரமான இடம்
“புலிப்பால் கொண்டு வரப்
போனான் ஐயப்பன்“
புத்தி வளர
பேச்சு குறைய
அந்தம் கண்டது மௌனம்
காய்ந்து வெடித்ததும்
அனாதையாக
காற்றில் அலைக்கழியும்
இலவம் பஞ்சு
ஊருக்கு வெளியே
தாமரைக் குளம்
தனியே
பூத்துக் கிடக்கும்
வெறிச்சோடி
*******
flow1