சிறுகதைகள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுகதைகள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

17 ஜூலை, 2011

உனக்கு விருப்பமென்றால் என்னை அழை - ரேமண்ட் கார்வர் தமிழில்: சுகுமாரன்.

Raymond Carver,
இந்த மொழிபெயர்ப்பு முதல் முறையாக உலக இலக்கியம் தளத்தில் வலையேறுகிறது. கவிஞர் சுகுமாரனுக்கு நன்றி.
அந்த வசந்தகாலத்தில் நாங்கள் இருவருமே வேறுவேறு நபர்களிடம் ஈடுபாடு கொண்டிருந்தோம்.ஆனால் கோடைக்காலத்தில், ஜூன்மாதம் வந்து பள்ளிக்கூடமும் மூடிய பிறகு எங்கள் வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு பாலோ ஆல்டோவிலிருந்து,  காலிஃபோர்னியாவின் வடக்குக் கடற்கரை கிராமப்பகுதிக்குச் செல்வதாக முடிவு செய்திருந்தோம். எங்கள் மகன் ரிச்சர்ட் வாஷிங்டன் பாஸ்கோவிலிருக்கும் நான்ஸியின் பாட்டி வீட்டுக்குப் போனான். இலையுதிர்காலத்தில் கல்லூரியில் சேரப் பணம் சேர்ப்பதற்காக கோடைக்காலம் முழுவதும் அவன் அங்கே வசிக்க வேண்டும். பாட்டிக்கு வீட்டுச் சூழ்நிலை தெரியும். அதனால் அவன் அங்கே போய்ச்சேர்வதற்கு வெகு முன்பே விசாரித்து ஒருவேலையைக் கண்டுபிடித்து வைத்திருந்தாள். அவளுடைய குடியானவ நண்பர் ஒருவரிடம் பேசி ரிச்சர்டுக்காக களமடிப்பதும் வேலியடைப்பதுமான வேலைக்கு உறுதியும் பெற்றிருந்தாள். கடினமான வேலைதான். ஆனால் ரிச்சர்ட் அதற்குத் தயாராகவே இருந்தான். உயர்நிலைப் பள்ளியின் கடைசி தினத்துக்கு மறுநாள் காலை பஸ்ஸில் புறப்பட்டான்.நான்தான் அவனை பேருந்து நிலையத்துக்கு அழைத்துப் போனேன். காரை நிறுத்திவிட்டு உள்ளேபோய் பஸ் வருகிறவரை அவனுடன் உட்கார்ந்திருந்தேன். அவனுடைய அம்மா ஏற்கனவே கட்டித் தழுவி அழுது முத்தமிட்டு அவனை வழியனுப்பிவைத்திருந்தாள்.போய்ச் சேர்ந்ததும் பாட்டியிடம் கொடுப்பதற்காக ஒரு நீண்ட கடிதத்தையும் அவனிடம் தந்திருந்தாள்.அவள் இப்போது வீட்டில் எங்கள் பயணத்துக்கான கடைசி நேரப் பேக்கிங்குகளை முடித்துக்கொண்டும் எங்கள் வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொள்ளவிருக்கும் தம்பதிகளுக்காகக் காத்துக்கொண்டுமிருக்கிறாள். பயணச் சீட்டை வாங்கி ரிச்சர்டிடம் கொடுத்தேன். பேருந்து நிலையத்தில் போட்டிருந்த பெஞ்சுகள் ஒன்றில் உட்கார்ந்து காத்துக்கொண்டிருந்தோம். நிலையத்துக்கு வரும் வழியில் நாங்கள் குறைவாகவே பேசியிருந்தோம்.
‘'நீங்களும் அம்மாவும் விவாகரத்துச்செய்துகொள்ளப் போகிறீர்களா?''என்று கேட்டான்.

சனிக்கிழமை காலை. அங்கே கார்களும் அதிகமில்லை.
”எங்களால் ஒத்துப்போக முடியுமென்றால் அதற்கு அவசியமிருக்காது. எங்களுக்கும் அதில் விருப்பம் கிடையாது. அதனால்தான் கோடைக்காலம் முழுக்க யாரையும் பார்க்காமலிருப்பதற்காக இங்கேயிருந்து புறப்படுகிறோம். நமது வீட்டை கோடைக்கால வாடகைக்கு விட்டிருக்கிறோம். அர்க்கடாவில் வேறு வீட்டை வாடகைக்கு எடுத்திருக்கிறோம். நீயும் வெளியே போகிறாய் இல்லையா? அதுவும் ஒரு காரணந்தான். நீ பாக்கெட் நிறைய பணத்துடன் வீட்டுக்குத் திரும்பி வருவாய் என்பதற்காக அல்ல. விவாகரத்துப் பெறுவதில் எங்களுக்கும் விருப்பமில்லை. கோடைக்காலம் முழுவதும் தனியாக இருந்து பிரச்சனைகளை சரி செய்யப் பார்க்கிறோம்''
‘'நீங்கள் இன்னும் அம்மாவை நேசிக்கிறீர்களா? அவள் உங்களை நேசிப்பதாக என்னிடம் சொன்னாள்”
‘'நிச்சயமாக நேசிக்கிறேன்.இதற்குள் உனக்கும் அதுதெரிந்திருக்குமே. எல்லாரையும்போல எங்களுக்கும் சில சிக்கல்களும் பெரும் பொறுப்புகளும் வந்து விட்டன. தனியாக இருந்து பிரச்சனைகளை சரி செய்துகொள்ள எங்களுக்கு இப்போது அவகாசம் தேவையாக இருக்கிறது.ஆனால் நீ எங்களைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. நீ அங்கேபோய் கோடைக்காலத்தை நல்லபடியாகக் கழி,பாடுபட்டுக் காசைச் சேர்த்துக்கொள். இதை ஒரு விடுமுறையாக எடுத்துக்கொள். மீன்பிடிக்கக் கற்றுக்கொள்.அங்கே மீன்பிடிப்பு நிறைய நடக்கும்''
‘'நீர்ச் சருக்கும் கூட.நான் நீர்ச் சருக்கும் கற்றுக்கொள்ளப் போகிறேன்''
‘'நான் நீர்ச் சருக்கு விளையாடியதில்லை. எனக்காகவும் சேர்த்து விளையாடு.என்ன செய்வாய்தானே?''
பேருந்துநிலையத்தில் உட்கார்ந்திருந்தோம்.அவன் தன்னுடைய இயர்புக்கைப் பார்த்துக்கொண்டிருந்தான். நான் என் மடியில் கிடந்த செய்தித்தாளைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.அவனுடைய பேருந்துக்கான அழைப்பு வந்தது.எழுந்து நின்றோம். அவனைக் கட்டிக்கொண்டேன் ‘'கவலைப்படாதே, கவலைப்படாதே.எங்கே உன்னுடைய டிக்கெட்?''
அவன் தன்னுடைய கோட்டுப்பாக்கெட்டைத் தட்டிக் காண்பித்துவிட்டு பெட்டியைத் தூக்கிக்கொண்டான். பஸ் புறப்படும் இடம்வரை அவனுடன் நடந்தேன்.அவனை மறுபடியும் அணைத்து கன்னத்தில் முத்தமிட்டு வழியனுப்பினேன்.
‘'குட்பை டாட்'' என்றவன் கண்ணீரை நான் பார்க்காமலிருக்க திரும்பிக்கொண்டான்.
வீட்டுக்குத் திரும்ப காரோட்டி வந்தேன்.எங்களுடைய பெட்டிகளும் சூட்கேஸுகளும் கூடத்தில் காத்திருந்தன.எங்கள் வீட்டை கோடைக்கால வாடகைக்கு எடுத்திருந்த இளந்தம்பதிகளுடன் நான்ஸி சமையல் அறையில் காப்பி அருந்திக்கொண்டிருந்தாள். கணிதப் பட்டப் படிப்பு மாணவர்களான ஜெர்ரியையும் லிஸ்ஸையும் சில நாட்களுக்கு முன்பே சந்தித்திருந்தேன்.இப்போது மறுபடியும் கைகுலுக்கிவிட்டு நான்ஸி ஊற்றிக்கொடுத்த
காப்பியைக் குடித்துக்கொண்டிருந்தேன்.நாங்கள் மேஜையைச் சுற்றி உட்கார்ந்து காப்பி அருந்திக்கொண்டிருக்க நான்ஸி அவர்கள் செய்யவேண்டிய காரியங்களின் பட்டியலைப் பூர்த்தி செய்துகொண்டிருந்தாள்.அவர்கள் கவனிக்கவேண்டியவை எவை,மாதத்தில் சில சமயங்கள் செய்யவேண்டியவை எவை, மாத ஆரம்பத்திலும் முடிவிலும் செய்யவேண்டியவை எவை என்பதையும் தபால் வந்தால் அனுப்பவேண்டிய முகவரி எது என்பதையும் பற்றிய பட்டியல்கள்.நான்ஸியின் முகம் இறுகியிருந்தது.காலைநேரம் தாண்டியிருந்ததால் வெயில் திரையைக் கடந்து வந்து மேஜைமீது விழுந்திருந்தது.
கடைசியாக காரியங்கள் எல்லாம் ஓர் ஒழுங்குக்கு வந்ததுபோலத் தென்பட்டதும் அவர்கள் மூன்றுபேரையும் சமையல் அறையிலேயே விட்டுவிட்டு காரில் சாமன்களை ஏற்றத் தொடங்கினேன்.நாங்கள் குடியேறவிருந்த வீடு முழுமையாகப் ஃபர்னிஷ் செய்யப்பட்டது. சாப்பாட்டுத் தட்டு முதல் சமையல் பாத்திரங்கள்வரை இருக்கின்றன.எனவே இந்த வீட்டிலிருந்து அத்தியாவசியமானவற்றைத் தவிர அதிக சாமான்களைக் கொண்டுபோகத் தேவையில்லை.
காலிஃஃர்னியாவின் வடக்குக் கடற்கரையில் பாலோ ஆல்டாவுக்கு முந்நூற்றி ஐம்பதுமைல்கள் வடக்கேயிருக்கும் யூரேகாவுக்கு மூன்றுவாரங்களுக்கு முன்பேபோய் எல்லா வசதிகளுமுள்ள வீட்டை வாடகைக்குப் பிடித்திருந்தேன்.நான் இப்போது தொடர்பு வைத்திருக்கும் சூஸனுடன் போயிருந்தேன். நகரத்தின் எல்லையிலிருந்த மோட்டலில் மூன்று இரவுகள் தங்கியிருந்தோம். நாளிதழ்களில் துளாவியும் ரியல் எஸ்டேட் ஏஜண்டுகளைச்
சந்தித்தும் இந்த வீட்டைக் கண்டுபிடித்திருந்தேன். மூன்றுமாத வாடகைக்கான காசோலையை நான் எழுதும்போது அவள் என்னையே கவனித்துக் கொண்டிருந்தாள். மோட்டலுக்குத் திரும்பிய பிறகு, கையை நெற்றிமேல் வைத்தபடி படுக்கையில் படுத்துக்கிடந்த சூஸன் சொன்னாள்: ''எனக்கு உங்கள் மனைவி நான்ஸிமேல் பொறாமையாக இருக்கிறது. ‘இன்னொருத்தி'யைப் பற்றி ஆட்கள் பேசுவதைக் கேட்டிருக்கிறோம். சட்டபூர்வமான மனைவிக்குத் தான் உரிமைகளும் நிஜமான அதிகாரங்களும் இருக்கின்றன என்று கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த விஷயங்களைப் பற்றி நான் இதற்கு முன்பு புரிந்து கொண்டிருக்கவில்லை. அக்கறை காட்டியதும் இல்லை. இப்போது நானே அதைப் பார்க்கிறேன்.அவள்மேல் பொறாமையாக இருக்கிறது எனக்கு.இந்த வீட்டில் இந்தக் கோடைக்காலத்தில் அவள் உங்களோடு வாழப்போகிற வாழ்க்கைபற்றி பொறாமையாக இருக்கிறது. அது நானாக இருக்கக்கூடாதா என்று ஆசைப்படத் தோன்றுகிறது. நாமாக இருக்கக்கூடாதா என்று ஆசைப்படத் தோன்றுகிறது.ஹூம்.நாமாக இருந்தால்... எனக்கு ஏக்கமாக இருக்கிறது'' நான் அவள் கூந்தலைக் கோதிவிட்டேன்.
நான்ஸி உயரமானவள். நீண்ட மெலிந்த கால்களும் பழுப்பு நிறக் கூந்தலும் கண்களும் கொண்டவள்.பெருந்தன்மையான உற்சாகமும் கொண்டவள். ஆனால் பிற்பாடு பெருந்தன்மையும் உற்சாகமும் எங்களிடையே குறைந்து வந்திருந்தன. அவள் பார்த்துவைத்திருந்த நபர் என்னுடைய சக ஊழியர்களில் ஒருவன்தான்.மிடுக்கானவன்.கோட் சூட் டை அணிபவன். தலை நரைத்தவன். அதிகமாகக் குடிப்பவன். வகுப்பறையிலேயே சிலசமயம் அவனுடைய கைகள் உதறிக்கொள்ளும் என்று என்னுடைய மாணவர்களில் சிலர் சொல்லியிருக்கிறார்கள்.நான்ஸி என்னுடைய உறவைக் கண்டு பிடித்து அதிக நாட்களாவதற்குள் விடுமுறைக் காலத்தில் ஒரு விருந்தின்போது அவனுக்கும் அவளுக்கும் தொடர்பு ஏற்பட்டது. அவை எல்லாம் இப்போது சலிப்பாகவும் விரசமாகவும் தோன்றுகிறது. சலிப்பும் விரசமும் தான். அந்த வசந்த காலத்தில் அது என்னவோ அப்படியாகத்தான் இருந்தது. எங்களுடைய சக்தி எல்லாவற்றையும் முழுமையாக உறிஞ்சியிருந்தது. வேறு விஷயங்களின் மீதான கவனத்தையும் பின்னுக்குத் தள்ளிவிட்டிருந்தது. ஏப்ரல் மாத இறுதியில் எங்கள் வீட்டை வாடகைக்குக் விட்டுவிட்டு கோடைக்காலத்தைக் கழிப்பதற்காக நாங்கள் இருவர் மட்டுமாக எங்காவது தூரமாகப் போயிருந்து காரியங்களை பழையது போல ஒன்றுபடுத்த முடியுமா? - ஒன்றுபடுத்த முடியுமானால் - என்று பார்ப்பதாக முடிவு செய்திருந்தோம்.மற்றவர்களை அழைக்கவோ கடிதம் எழுதவோ வேறு வகையில் தொடர்புகொள்வதோ இல்லையென்று நாங்கள் பரஸ்பரம் ஒப்புக்கொண்டிருந்தோம்.எனவே ரிச்சர்டுக்கான ஏற்பாடுகளைச் செய்தோம். வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொள்ளும் தம்பதியரைக் கண்டுபிடித்திருந்தோம். நான் வரைபடத்தை வைத்துக்கொண்டு சான்பிரான்சிஸ்கோவிலிருந்து வடக்கே யூரேகாவுக்குக் காரில் சென்று சகல வசதிகளும் கொண்ட வீட்டை கெளரவமான வயோதிகத் தம்பதிகளுக்கு மட்டும் கோடை வாடகைக்கு விடத் தயாராக இருந்த ஏஜெண்டைச் சந்தித்து வீட்டைப் பெற்றேன். அதற்காக அந்த ரியல் எஸ்டேட் ஏஜெண்டிடம் இரண்டாவது தேனிலவு - கடவுள் என்னை மன்னிப்பாராக - என்ற வாக்கியத்தைப் பயன்படுத்தினேன் என்றும் நினைக்கிறேன்.
அப்போது சூஸன் காருக்கு வெளியில் சிகரெட்டைப் புகைத்தபடி சுற்றுலாக் கையேடுகளை வாசித்துக் கொண்டிருந்தாள்.
சூட்கேஸுகளையும் பைகளையும் அட்டைப்பெட்டிகளையும் காரின் பின்பக்கத்திலும் பின்னிருக்கையிலும் அடுக்கிவைத்துவிட்டு நான்ஸி அவர்களிடமிருந்து இறுதியாக விடைபெற்று வராந்தாவிலிருந்து வரக்காத்திருந்தேன் அவர்கள் இருவரிடமும் கைகுலுக்கிவிட்டு காரை நோக்கி திரும்பினாள் நான்ஸி. நான் அவர்களுக்குக் கையசைக்க பதிலுக்கு அவர்களும் கையசைத்தார்கள். நான்ஸி காரில் ஏறி கதவைச் சாத்தினாள். ''போகலாம்'' என்றாள்.காரைக் கிளப்பினேன்.நெடுஞ்சாலையை நோக்கி முன்னேறினோம்.சாலையில் ஏறுவதற்கு முன்பாக வெளிச்சத்தில் எங்களை முந்திக்கொண்டு ஒரு கார் மப்ளர் உடைந்து தீப்பொறிகள் பறக்க ஓடுபாதையிலிருந்து விலகி வருவதைப் பார்த்தோம்.”அதை பாருங்கள், தீப்பிடித்து எரியப் போகிறது”என்று கத்தினாள் நான்ஸி.அந்தக் கார் சமாளித்துக்குகொண்டு சாலையில் ஏறும்வரை காத்திருந்து பார்த்தோம்.
செபஸ்டோபோலுக்கு அருகில் நெடுஞ்சாலையிலிருந்து விலகியிருந்த சிறிய உணவகத்தில் நிறுத்தினோம். 'ஈட் அண்ட் கேஸ்' (Eat & GAS) என்றது பெயர்ப்பலகை. அதைப் பார்த்து சிரித்துவிட்டோம். உணவகத்தின் முன்னால் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்து பின்பக்கமாக ஜன்னலுக்கு அருகிலிருந்த மேஜையில் உட்கார்ந்தோம். காப்பிக்கும் சாண்ட்விச்சுகளுக்கும் ஆர்டர் சொன்னோம். நான்ஸி மேஜைப்பலகையின் வரிகளில் அவளுடைய சுட்டுவிரலை ஓடவிட்டுக்கொண்டிருந்தாள்.நான் ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டு வெளியே பார்த்தேன். ஜன்னலுக்கு அருகில் புதரில் வேகமான அசைவைக் கவனித்துக் கொண்டிருந்தபோதே ஒரு பாட்டுக் குருவியைப் பார்த்துக் கொண்டிருந்ததையும் உணர்ந்தேன்.சிறகுகள் படபடத்துத் துடிக்க புதருக்குள்ளேயிருக்கும் பூவில் அது அலகை நுழைத்துக்கொண்டிருந்தது.
''நான்ஸி, அங்கே பார், ஒரு ஹம்மிங்க் பேர்டு''
ஆனால் நான்ஸி பார்க்கவிருந்த நொடியில் பறவை பறந்துபோனது. நான்ஸி சுற்றிலும் பார்த்துவிட்டு ''எங்கே? எனக்கு எதுவும் தென்படவில்லையே...'' என்றாள்.
''ஒரு நிமிஷத்துக்கு முன்னால்வரைக்கும் அங்கேதான் இருந்தது. இதோ பார் இன்னொன்று,இது வேறு'' என்றேன்.
பணிப்பெண் எங்கள் ஆர்டரைக் கொண்டுவரும்வரை நாங்கள் அதையே பார்த்துக்கொண்டிருந்தோம்.அவள் வந்த கணத்தில் பறவை பறந்து கட்டிடத்தின் சுற்றுப் புறத்தில் மறைந்தது.
''நல்ல சகுனம் என்று நினைக்கிறேன்.ஹம்மிங்க் பேர்ட்ஸ். ஹம்மிங்க் பேர்ட்ஸ் அதிருஷ்டத்தைக் கொண்டு வருவதாக நம்பப்படுகிறவை'' என்றேன்.
''நானும் எங்கேயோ கேள்விப்பட்டிருக்கிறேன். எங்கே கேள்விப்பட்டேன் என்று ஞாபகமில்லை. ஆனால் கேள்விப்பட்டிருக்கிறேன். நமக்குத் தேவைப் படுவதும் அதிருஷ்டம்தானே? என்ன சொல்கிறீர்கள்?''

”அவை நல்ல சகுனம்தான்.காரை இங்கே நிறுத்தியதற்காக நான் சந்தோஷப்படுகிறேன்'' என்றேன்.
அவள் தலையசைத்தாள். ஒரு நிமிடம் பொறுத்து சாண்ட்விச்சை ஒரு கடி கடித்து விழுங்கினாள்.
****************
இருட்டுவதற்கு முன்பே யுரேகாவுக்குப் போய்ச்சேர்ந்தோம். சில வாரங்களுக்கு முன்பு சூஸனும் நானும் மூன்று இரவுகளைக் கழித்த மோட்டல் இருக்கும் நெடுஞ்சாலையைக் கடந்து திரும்பி நகரத்துக்கு நேர்முகமாக நிற்கும் குன்றுக்குப் போகும் சாலையைப் பிடித்தோம். வீட்டுச் சாவி என் சட்டைப்பையில் இருந்தது.குன்றின்மேல் ஒன்றிரண்டு மைல் தூரம் பணிமனையும் பலசரக்குக் கடையும் இருக்கும் நாற்சந்தியை அடையும்வரை வண்டியைச் செலுத்தினேன்.எங்களுக்கு முன்னால் பள்ளத்தாக்கில் மரங்களடர்ந்த மலைமடிப்புகள். சுற்றிலும் பரந்துகிடக்கும் மேய்ச்சல் நிலம். பணிமனைக்குப் பின்னால் நிலத்தில் மாடுகள் மேய்ந்துகொண்டிருந்தன. ''அழகான கிராமம்.எனக்கு வீட்டைப் பார்க்க ஆசையாக இருக்கிறது'' என்றாள் நான்ஸி.
''கிட்டத்தட்ட இங்கேதான். இந்த ரோட்டின் இறக்கத்தில் அந்த மேட்டைத் தாண்டியதும்'' என்றேன்.
''இங்கே'' என்று சொன்ன நிமிஷத்தில் இரண்டு ஓரங்களிலும் வேலிப்புதர்கள் அடர்ந்த நீண்ட ஓடுபாதையில் காரைத் திருப்பினேன்.''இதோ, இங்கே தான்.உனக்கு என்ன தோன்றுகிறது?'' என்று நானும் சூஸனும் இதே ஓடுவழியில் நின்றபோது அவளிடம் கேட்ட அதே கேள்வியை நான்ஸியிடமும் கேட்டேன்.
''அருமை. அற்புதமாக இருக்கிறது நாம் இறங்கலாம்''
அந்த முற்றத்தில் ஒரு நிமிஷம் நின்றோம். சுற்றிலும் பார்த்தோம். பின்னர் வராந்தா படிகளேறினோம்.வாசல் கதவைத் திறந்து விளக்குகளைப் போட்டேன். வீட்டுக்குள்ளே நுழைந்தோம். இரண்டு சிறிய படுக்கையறைகள். குளியலறை. பழைய இருக்கைகளுடன் வசிப்பறை. கணப்பு. பள்ளத்தாக்கைப் பார்க்கும்விதமாக பெரிய சமையலறை. எல்லாமிருந்தன.
''உனக்குப் பிடித்திருக்கிறதா?'' என்று கேட்டேன்.
''அற்புதமாகத் தோன்றுகிறது.நீங்கள் இதைக் கண்டுபிடித்ததில் எனக்கு சந்தோஷம். நாம் இங்கே இருக்கிறோம் என்பதில் சந்தோஷம்'' என்றாள் நான்ஸி.
குளிர்பதனப்பெட்டியைத் திறந்து அதன் மீது விரலை ஓடவிட்டாள். ''கடவுளே நன்றி. இது சுத்தமாக இருக்கிறது. நான் எதையும் சுத்தம் செய்ய வேண்டிய அவசியமேயில்லை.''
''படுக்கை விரிப்புகள் கூட சுத்தமாக இருக்கின்றன.நான் பரிசோதித்துப் பார்த்துவிட்டேன்.அவர்கள் இப்படித்தான் வாடகைக்கு விடுவார்களாம். நேர்த்தியான தலையணைகள். தலையணை உறைகள் கூட நேர்த்தியானவை''
''நாம் கொஞ்சம் விறகு வாங்கி வைக்கவேண்டும்.'' என்றாள். நாங்கள் வசிப்பறையில் நின்றுகொண்டிருந்தோம். ''இது மாதிரியான இரவுகளில் நமக்கு கணப்பு அவசியம்''
''நாளைக்கு விறகு வாங்கப் பார்க்கிறேன்.அப்படியே நாம் ஷாப்பிங் போகலாம். நகரத்தையும் பார்க்கலாம்''
அவள் என்னை ஏறிட்டுப் பார்த்தாள் ''நாம் இங்கே இருக்கிறோம் என்பதே எனக்கு மகிழ்ச்சி தருகிறது'' என்றாள்.
''எனக்கும் தான்'' என்றேன்.என் கைகளை விரித்தேன்.அவள் என்னை நெருங்கினாள். அவளைத் தழுவிக்கொண்டேன்.அவளுடைய நடுக்கத்தை என்னால் உணரமுடிந்தது. அவளுடைய முகத்தை உயர்த்தி இரு கன்னங்களிலும் முத்தமிட்டேன். ''நான்ஸீ'' என்றேன்.
''நாம் இங்கே இருக்கிறோம் என்பதே எனக்கு மகிழ்ச்சி தருகிறது'' என்றாள் அவள்.
********************
sukumaran-1 அடுத்த சில நாட்களை வீட்டை ஒழுங்குபடுத்துவதில் செலவிட்டோம்.சுற்றிப் பார்ப்பதற்காகவும் கடைகளை வேடிக்கை பார்ப்பதற்காகவும் யூரேகாவுக்குப் போனோம். வீட்டுக்குப் பின்னாலிருக்கும் புல்வெளியைத் தாண்டிக் காட்டுக்குப் போகும் வழிகளில் அலைந்தோம்.மளிகைச் சாமான்கள் வாங்கினோம்.செய்தித்தாளில் விறகு கிடைக்குமிடத்தைக் கண்டுபிடித்து அவர்களை அழைத்தேன். ஓரிரு நாட்களுக்குப் பிறகு நீளமாக முடி வைத்திருந்த இரண்டு இளைஞர்கள் லாரி நிறைய பூவரசமர விறகுகளைக் கொண்டுவந்து கார் நிறுத்துமிடத்தில் அடுக்கிவிட்டுப் போனார்கள். அன்றிரவு உணவருந்திய பிறகு கணப்புக்கு முன்னால் உட்கார்ந்து காப்பி குடித்துக்கொண்டே நாய் வாங்குவதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.
”குட்டி வேண்டாம். நாம்தான் எப்போதும் எதையாவது சுத்தம் செய்துகொண்டேயிருக்க வேண்டிவரும். இல்லையென்றால் அது எதையாவது கடித்து மென்று கொண்டிருக்கும். நமக்கு அது வேண்டாம். ஆனால் ஒரு நாய் வேண்டும்தான். நாம் நீண்டகாலமாக நாய் வளர்க்கவே இல்லை. இங்கே ஒரு நாயை வைத்துப் பராமரிக்க முடியுமென்று தோன்றுகிறது'' என்றாள் நான்ஸி.
''கோடைக்காலம் முடிந்த பிறகு? நாம் இங்கேயிருந்து போன பிறகு?'' என்று கேட்டேன்.அந்தக் கேள்வியை மாற்றிக் கொண்டேன்.''நகரத்திலும் நாயை வளர்க்கலாமே?''
”பார்ப்போம்.அதற்குள் நாயைத் தேடிப்பார்க்கலாம்.நல்ல ரகமானதாக இருக்கவேண்டும்.அதை பார்க்கும்வரை என்ன ரகம் வேண்டுமென்று எனக்கே தெரியாது. வரி விளம்பரங்களைப் பார்க்கலாம். வேண்டிவந்தால் விலங்குக் காப்பகத்துக்குப் போய்ப்பார்க்கலாம். ''நாள் கணக்காக நாங்கள் நாய்களைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தும் வீடுகளைக் கடந்துபோகும் போதெல்லாம் அங்கிருக்கும் நாய்களைச் சுட்டிக்காட்டிப் பேசிக்கொண்டிருந்தும் நாங்கள் விரும்பிய மாதிரியான நாய் கிடைக்கவில்லை. நாங்கள் நாயை வாங்கவில்லை.
நான்ஸி அவள் தாயை அழைத்து எங்கள் முகவரியையும் தொலைபேசி எண்ணையும் கொடுத்தாள்.ரிச்சர்ட் வேலைக்குப் போகிறான் என்றும் மகிழ்ச்சியாகத்தான் தெரிகிறான் என்றும் அவள் அம்மா சொன்னாள். அவளும் நன்றாக இருக்கிறாளாம். ''நாங்களும் நன்றாக இருக்கிறோம். இது ஒரு நல்ல மருந்து'' என்று நான்ஸி சொல்வதையும் கேட்டேன்.
ஜூலைமாத மத்தியில் ஒருநாள் கடலுக்கு அருகிலிருந்த நெடுஞ்சாலையில் வண்டியில் போய்க்கொண்டிருந்தோம்.ஒரு மேடு ஏறியதும் மணல் திட்டுகளால் கடலிலிருந்து பிரிந்த கடற்கழிகள் தென்பட்டன. கரையிலிருந்தபடியே சிலர் மீன்பிடித்துக்கொண்டிருந்தார்கள். நீரில் இரண்டு படகுகளும் இருந்தன.
காரை சாலையைவிட்டு விலக்கி ஓரமாக நிறுத்தினேன்.”என்ன மீனைப் பிடிக்கிறார்களென்று பார்க்கலாம்”என்றேன்.”நாமே சில மீன்பிடிப்புக் கருவிகளை வாங்கலாம்”'
”கொஞ்ச காலமாக நாம் மீன்பிடிக்கப் போகவேயில்லை”என்று பெருமூச்சுவிட்டாள் நான்ஸி.
''ரிச்சர்ட் சின்னவனாக இருக்கும்போது மவுண்ட் ஷாஸ்டாவுக்கு அருகில் தங்கியிருந்தோம்.உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?''
''ஞாபகமிருக்கிறது.மீன்பிடிப்பதை விட்டுவிட்டதைப் பற்றி இப்போதுதான் யோசித்துக்கொண்டிருந்தேன். இறங்கிப்போய் என்ன மீன்பிடிக்கிறார்கள் என்று பார்ப்போம்''
விசாரித்தபோது 'ட்ரௌட்' என்றான் அந்த ஆசாமி.சதிகார வானவில் 'ட்ரௌட்கள்'.கொஞ்சம் ஸ்டீல் ஹெட்மீன்களும் கோரை மீன்களும் கூட இருக்கின்றன.குளிர்காலத்தில் மணற்திட்டுகள் திறந்து கிடக்கும்போது வரும்.கோடைக் காலத்தில் திட்டுகள் தூர்ந்துபோகிறபோது இவையும் அகப்பட்டுக்கொள்கின்றன.இவற்றுக்கு வருடத்தில் நல்ல பருவம் இதுதான்.இன்றைக்கு நான் எதையும் பிடிக்கவில்லை.ஆனால் போன ஞாயிற்றுக்கிழமை நான்கு மீன்கள் பிடித்தேன். ஒவ்வொன்றும் ஒன்றே காலடி நீளம். உலகத்திலேயே சாப்பிட ருசியான மீன்கள். பிடிப்பதற்குள் போராட்டம் செய்துவிடும். படகிலிருப்பவர்கள் இன்று எதையாவது பிடித்திருப்பார்கள். ஆனால் எனக்குத்தான் இதுவரைக்கும் எதுவும் சிக்கவில்லை''
''தூண்டிலில் எதை இரையாக வைப்பீர்கள்?'' என்று கேட்டாள் நான்ஸி.
''எதை வேண்டுமானாலும்.புழுக்கள்,கோரை மீன்முட்டைகள்,முழுசான சோளம்.எதையாவது மாட்டித் தூண்டிலை ஆழத்தில் வீசிவிட்டுக் காத்திருக்கவேண்டும். தூண்டிலைத் தளர்வாக விட்டு கயிற்றின் மேல்கவனமாக இருக்கவேண்டும்''
நாங்கள் கொஞ்சம் அதிகமான நேரம் அங்கேயே சுற்றியிருந்தோம். அந்த ஆசாமி மீன்பிடிப்பதையும் கழிமுகத்தில் படகுகள் முன்னும்பின்னுமாக ததும்புவதையும் பார்த்துக்கொண்டிருந்தோம்.
''நன்றி.குட்லக்'' என்று அவனை வாழ்த்தினேன்.
''உங்களுக்கும்...உங்கள் இருவருக்கும் குட்லக்''
நகரத்துக்குத் திரும்பும் வழியில் விளையாட்டுக் கருவிகள் விற்கும் கடையில் வண்டியை நிறுத்தி லைசென்ஸ்கள் விலை அதிகமில்லாத தூண்டிற்கோல்கள், கப்பிகள்,நைலான் கயிறு,கொக்கிகள்,இரைகள்,மீன்பிடி கூடை எல்லாவற்றையும் வாங்கினோம்.மறுநாள் காலை மீன்பிடிக்கப் போகவேண்டுமென்று திட்டமிட்டோம்.
ஆனால் அன்று இரவு உணவருந்தி முடித்து பாத்திரங்களைச் சுத்தம் செய்துவிட்டு கணப்பில் நெருப்பு மூட்டிக்கொண்டிருந்தபோது தலையைப் பலமாகக் குலுக்கியபடி இது நடக்கப்போவதில்லை என்றாள் நான்ஸி.
''நீ ஏன் அதைச் சொல்கிறாய்? என்னதான் சொல்கிறாய்?''
”இது சரிவராது என்பதைத்தான் சொன்னேன். நாம் அதைச் சமாளிக்கவேண்டும்”' மறுபடியும் தலையைக் குலுக்கிக்கொண்டாள் அவள்.
''நாளைக் காலை மீன்பிடிக்கப்போக எனக்கு விருப்பமில்லை. நாய் வளர்க்க விருப்பமில்லை. நாயும் வேண்டாம். என் அம்மாவையும் ரிச்சர்டையும் தனியாகப்போய்ப் பார்க்கவேண்டும்.தனியாக...தனியாக இருக்க விரும்புகிறேன். ரிச்சர்டை விட்டுவிட்டு இருக்கமுடியவில்லை. ரிச்சர்ட் என் பையன்...என் குழந்தை... வளர்ந்ததும் என்னைவிட்டு போய்விட்டான்...அவனை விட்டுவிட்டு இருக்கமுடியவில்லை'' என்று அழுது புலம்பத் தொடங்கினாள்.
”அப்புறம் தெல்...தெல் ஷ்ரீடரைக் கூட விட்டுவிட்டு உன்னால் இருக்கமுடியவில்லை இல்லையா? உன்னுடைய பாய் பிரண்ட்...அவனை விட்டு விட்டும் இருக்கமுடியவில்லை?'' என்றேன்.
”இந்த இரவு எல்லாரையும் பிரிந்திருக்கிறேன்.உங்களைக் கூட இழந்திருக்கிறேன்.வெகுகாலத்துக்கு முன்னாலேயே உங்களை இழந்திருக்கிறேன். உங்களை மிக அதிகமாக இழந்து நீங்கள் எப்படியோ காணாமல் போய்விட்டீர்கள். அதையெல்லாம் விளக்க முடியாது. இனிமேலும் நீங்கள் என்னுடையவர் அல்ல''
''நான்ஸீ...'' என்றேன்.
”வேண்டாம்...வேண்டாம்” என்றாள்.தலையை உலுக்கிக்கொண்டாள்.கணப்புக்கு முன்னால் சோபாவில் உட்கார்ந்து தலையைக் குலுக்கிக் கொண்டேயிருந்தாள். ''நாளைக்கே போய் அம்மாவையும் ரிச்சர்டையும் பார்க்கவேண்டும். நான் போன பின்னால் நீங்கள் உங்கள் தோழியை அழைத்துக்கொள்ளலாம்''.
''நான் அதைச் செய்யமாட்டேன்.அப்படிச் செய்கிற உத்தேசமும் இல்லை'' என்றேன்.
''நீங்கள் அவளைக் கூப்பிடுவீர்கள்''
”நீயும்தான் தெல்லைக் கூப்பிடுவாய்”என்றேன்.அதைச் சொல்லும்போது அருவருப்பாகவும் உணர்ந்தேன்.
''உங்களுக்கு என்ன வேண்டுமோ அதைச் செய்துகொள்ளுங்கள்'' என்று சொல்லியபடி சட்டையின் கைப்பகுதியில் கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள்.”உண்மையாகத்தான் சொல்கிறேன்.ஹிஸ்டீரியா வந்ததுபோல கத்த விரும்பவில்லை.நாளைக்கு நான் வாஷிங்டன் போகிறேன்.இப்போது படுத்துக் கொள்ளப் போகிறேன். சோர்ந்துபோய் விட்டேன். வருத்தப்படுகிறேன்,டான், நம் இரண்டுபேருக்காவும் வருத்தப்படுகிறேன்.நம்மால் இதைச் சரிசெய்து கொள்ளவே முடியாது. இன்றைக்கு அந்த மீன்காரன் நமக்கு குட்லக் சொன்னானே...'' என்று தலையை உலுக்கினாள். ''நமக்காக நான் குட்லக் சொல்லிக் கொள்கிறேன். நமக்கும் அது அவசியம்''
குளியறைக்குப் போனாள் அவள். தொட்டியில் தண்ணீர் விழுவது கேட்டது. நான் வெளியே வந்து முற்றத்துப் படிகளில் உட்கார்ந்து சிகரெட்டைப் புகைத்தேன். வெளியில் இருட்டும் அமைதியுமாக இருந்தது. நகரமிருந்த பக்கம் பார்த்தேன். ஆகாயத்தில் மங்கலாக விளக்குகளின் வெளிச்சம்  படர்ந்திருப்பதையும் பள்ளத்தாக்கில் கடற்பனியின் படலம் மிதப்பதையும் பார்க்கமுடிந்தது. சூஸனைப் பற்றி யோசிக்கத் தொடங்கினேன். சிறிது நேரத்துக்குப் பின் நான்ஸி குளியலறையிலிருந்து வெளியே வந்தாள். படுக்கையறையின் கதவு தாளிடப்படுவதைக் கேட்டேன். நான் உள்ளே போய் அடுக்கிலிருந்து இன்னொரு விறகுக்கட்டையையெடுத்து கணப்பில் போட்டேன். அதன் பட்டையில் ஜுவாலைகள் பற்றியெரிவதுவரை காத்து நின்றேன்.இன்னொரு படுக்கையறைக்குள் நுழைந்து ஜன்னல்திரைகளை இழுத்துவிட்டேன். திரைவிரிப்பிலிருந்த பூவேலைகளை வெறித்துப் பார்த்தேன்.பிறகு குளித்து பைஜாமாவை அணிந்து மறுபடியும் கணப்பருகில்போய் உட்கார்ந்துகொண்டேன்.பனிமூட்டம் இப்போது ஜன்னலுக்கு வெளியில் வந்திருந்தது. நெருப்புக்கு முன்னால் உட்கார்ந்து புகைபிடித்தேன். ஜன்னலுக்கு வெளியே பார்த்தபோது பனிமூட்டத்தில் ஏதோ நகர்வது தெரிந்தது. கூர்ந்து பார்த்தபோது முற்றத்தில் ஒரு குதிரை மேய்ந்து கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது.
ஜன்னல் பக்கமாகப் போனேன்.குதிரை நிமிர்ந்து ஒரு நிமிடம் என்னைப் பார்த்துவிட்டு மறுபடியும் குனிந்து புற்களைக் கவ்விப் பிடுங்கத் தொடங்கியது. இன்னொரு குதிரை காரைத் தாண்டிவந்து முற்றத்தில் மேய ஆரம்பித்தது. முற்றத்து விளக்கைப் போட்டுவிட்டு ஜன்னல் அருகில் நின்று அவற்றைக் கவனித்தேன். நீளமான பிடரியுள்ள பெரிய வெண்குதிரைகள். வேலியைத் தாண்டியோ பக்கத்திலிருக்கிற பண்ணைகள் எதிலிருந்தாவது பூட்டப் படாத கதவைத் தாண்டியோ அவை வந்திருக்கவேண்டும். எப்படியோ வந்து எங்கள் முற்றத்தில் திரிந்துகொண்டிருந்தன. கிடைத்த சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டிருந்த போதிலும் அவை பதற்றத்துடன் இருந்தன. ஜன்னலுக்குப் பின்னால் நான் நிற்குமிடத்திலிருந்தே அவற்றின் கண்களில் வெண்மையைப் பார்க்க முடிந்தது. புல் கொத்துகளைப் பிடுங்கும்போது அவற்றின் காதுகள் உயர்ந்து தாழ்ந்தன. மூன்றாவது ஒரு குதிரையும் முற்றத்தில் திரிந்தது. அதைத் தொடர்ந்து நான்காவதாக ஒன்று. எங்கள் முற்றத்தில் வெண் குதிரைகளின் மந்தை மேய்ந்துகொண்டிருந்தன.
படுக்கையறைக்குப் போய் நான்ஸியை எழுப்பினேன். அவளுடைய கண்கள் சிவந்திருந்தன. கண்களைச் சுற்றியிருந்த ரப்பைகள் வீங்கியிருந்தன. கூந்தலை சுருட்டிவிட்டிருந்தாள். கட்டில் காலுக்குப் பக்கத்தில் தரையில் ஒரு சூட்கேஸ் விரியத் திறந்துகிடந்தது.
''நான்ஸி, ஹனி. முற்றத்தில் என்னவென்று வந்து பார். வந்து பாரேன். நீ கண்டிப்பாகப் பார்க்கவேண்டும். நம்பவே மாட்டாய். சீக்கிரம் வா'' என்றேன்.
''என்ன இது? என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள்.என்ன இது?''
”அன்பே!நீ கண்டிப்பாகப் பார்க்கவேண்டும்.நான் உன்னைக் கலவரப்படுத்தியிருந்தால் மன்னித்துக்கொள். ஆனால் கண்டிப்பாக நீ வந்து அதைப் பார்க்க வேண்டும்.”
நான் அந்த அறைக்குத் திரும்பி ஜன்னல் அருகில் நின்றேன். சில நிமிடங்களில் இரவு அங்கியின் முடிச்சைப் போட்டபடி நான்ஸி வந்தாள். ஜன்னலுக்கு வெளியில் பார்த்துவிட்டு, ''கடவுளே, எவ்வளவு அழகாக இருக்கின்றன, இவை எங்கேயிருந்து வந்திருக்கும், டான்? அழகாக இருக்கின்றன'' என்றாள்.
''இங்கே எங்கிருந்தாவது அவிழ்த்துக்கொண்டு வந்திருக்கும். பக்கத்திலிருக்கிற பண்ணைவீடுகள் எதிலிருந்தாவது. நான் ஷெரீபின் அலுவலகத்துக்குப் போன் செய்து இவற்றின் உரிமையாளர்களுக்குத் தெரிவிக்கச் சொல்கிறேன். ஆனால் அதற்கு முன்னால் நீ இவற்றைப் பார்க்கவேண்டும் என்று நான் விரும்பினேன்.''
''இவை கடிக்குமா? அதோ அங்கே நம்மையே பார்த்துக்கொண்டு நிற்கிறதே அதைக் கொஞ்சவேண்டும்போல இருக்கிறது. அதன் தோளில் தட்டிக் கொடுக்க ஆசைப்படுகிறேன். ஆனால் கடி வாங்க முடியாது. நான் வெளியே போகிறேன்''
''அவை கடிக்காது என்றுதான் நினைக்கிறேன். கடிக்கிற ரகத்தைச் சேர்ந்த குதிரைகள் மாதிரித் தெரியவில்லை. வெளியே போவதானால் கோட்டைப் போட்டுக்கொள். குளிர் அதிகம்.''
பைஜாமாவுக்கு மேலே கோட்டைப் போட்டுக்கொண்டு நான்ஸிக்காகக் காத்திருந்தேன். வாசல் கதவைத் திறந்து வெளியே வந்தோம். முற்றத்தில் குதிரைகளுக்கிடையில் நடந்தோம். அவை எல்லாமும் எங்களை நிமிர்ந்து பார்த்தன. இரண்டு குதிரைகள் மறுபடியும் புல்லை மேயத் தொடங்கின. மற்ற குதிரைகளில் ஒன்று கனைத்துவிட்டு கொஞ்சம் எட்டிநின்றது. பிறகு அதுவும் தலையைத் தொங்கவிட்டுக்கொண்டு புல்லைக் கொறித்து அசைபோடத் தொடங்கியது. நான் ஒரு குதிரையின் நெற்றியைத் தடவி முதுகில் தட்டிக்கொடுத்தேன். அது தொடர்ந்து அசைபோட்டுக்கொண்டிருந்தது. நான்ஸி இன்னொரு குதிரையை வருடி அதன் பிடறியைக் கோதி விட்டுக்கொண்டிருந்தாள். ''குதிரையே நீ எங்கேயிருந்து வருகிறாய்?எங்கே இருக்கிறாய்? இன்று இரவு ஏன் வெளியே வந்துவிட்டாய், குதிரையே!'' என்றெல்லாம் கொஞ்சியபடி அதன் பிடறியைக் கோதிக்கொடுத்துக் கொண்டிருந்தாள். குதிரை அவளை ஏறிட்டுப்பார்த்து உதடுகளால் ஊதிவிட்டு மறுபடியும் தலையைத் தொங்கப்போட்டது.அவள் அதன் முதுகில் தட்டிக்கொடுத்தாள்.
''நான் ஷெரீப்பைக் கூப்பிடப் போகிறேன்'' என்றேன்.
”இப்போது வேண்டாம்.இன்னும் கொஞ்ச நேரத்துக்குக் கூப்பிடவேண்டாம். இதுபோல ஒன்றை இன்னொருமுறை நம்மால் பார்க்க முடியாது.இனி ஒருபோதும் நமது முற்றத்தில் குதிரைகள் நிற்காது ஒருபோதும். டான் கொஞ்ச நேரம் பொறுங்கள்''
சிறிது நேரத்துக்குப் பிறகும் நான்ஸி ஒவ்வொரு குதிரையாக நகர்ந்து அவற்றின் முதுகைத் தட்டிக்கொடுத்துக்கொண்டும் பிடரியைக் கோதிக் கொண்டுமிருந்தாள். ஒரு குதிரை முற்றத்திலிருந்து நகர்ந்து கார் நிறுத்தும் இடத்துக்கு வந்து காரைச் சுற்றிக்கொண்டு நடந்து சாலையில் இறங்கியது. கூப்பிட்டுச் சொல்லவேண்டியதுதான் என்று புரிந்தது.
சற்று நேரத்தில் ஷெரீப் அலுவலகத்தின் இரண்டு கார்கள் பனிப்படலத்தில் சிவப்பு விளக்குகள் பளீரிடத் தோன்றின. அதற்குச் சில நிமிடங்களுக்குப் பிறகு ஆட்டுத் தோல் கோட்டுப் போட்ட ஒருவன் குதிரைகளை ஏற்றிச் செல்லும் டிரெயிலருள்ள பிக்கப் வண்டியுடன் வந்து சேர்ந்தான். குதிரைகள் தயங்கியும் முரண்டு பிடித்தும் ஓடின. டிரெயிலரிலிருந்தவன் கயிற்றைச் சுழற்றி வீசி ஒரு குதிரையின் கழுத்தில் மாட்டினான்.
''அதைத் துன்புறுத்த வேண்டாம்'' என்றாள் நான்ஸி.
வீட்டுக்குள் திரும்பிப்போய் ஜன்னலுக்குப் பின்னால் நின்று உதவியாளர்களும் மேய்ப்பனும் குதிரைகளை வளைத்துப் பிடிப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.
''நான் காப்பி போடப் போகிறேன். நான்ஸீ...உனக்கும் காப்பி வேண்டுமா?'' என்று கேட்டேன்.
''எனக்கு என்ன வேண்டுமென்று சொல்லவா? டான், எனக்கு மிதப்பது போல இருக்கிறது. நிறைவாக இருக்கிறது. எனக்கு என்னமாதிரி இருக்கிறது என்று சொல்லத் தெரியவில்லை. நீங்கள் காப்பி போடுங்கள். நான் ரேடியோவில் நாம் கேட்கக் கூடிய சங்கீதம் ஏதாவது வருகிறதா என்று பார்க்கிறேன். நீங்கள் மறுபடியும் கணப்பை மூட்டுங்கள். பரவசத்தில் என்னால் தூங்கக் கூட முடியாது''
கணப்புக்கு முன்னால் உட்கார்ந்து காப்பி குடித்தோம். யூரேகா வானொலி நிலைய இரவு ஒலிபரப்பில் சங்கீதம் கேட்டோம். குதிரைகளைப் பற்றி அப்புறம் ரிச்சர்டைப் பற்றி நான்ஸியின் தாயாரைப் பற்றி பேசினோம். நடனமாடினோம். தற்போதைய சூழ்நிலையைப் பற்றிப் பேசாமலிருந்தோம். ஜன்னலுக்கு வெளியில் பனிப்படலம் மிதந்துகொண்டிருந்தது.பரஸ்பர நேசத்துடன் பேசிக்கொண்டிருந்தோம். விடியப் போகிற நேரத்தில் வானொலியை அணைத்துவிட்டுப் படுக்கைக்குப் போய் உறவுகொண்டோம்.
மறுநாள் பிற்பகல். அவளுடைய எல்லா ஏற்பாடுகளையும் முடித்துக்கொண்டு சூட்கேசுகளைக் கட்டிவைத்து, அங்கேயிருக்கும் சிறிய விமான நிலையத்துக்கு அவளைக் காரில் கூட்டிப் போனேன். அங்கேயிருந்து போர்ட்லாண்டுக்குப் போகும் விமானத்தைப் பிடித்துப் போனால் இரவில் பாஸ்கோ செல்லும் விமானத்துக்கு மாறலாம்.
''நான் விசாரித்ததாக அம்மாவிடம் சொல். என் சார்பில் ரிச்சர்டை அணைத்து ஒரு முத்தம் கொடு. அவன் ஞாபகமாகவே இருக்கிறேன் என்று சொல். அவனை நேசிக்கிறேன் என்று சொல்.''
''அவனுக்கும் உங்கள்மேல் அன்புதான். உங்களுக்கே தெரியுமே. எப்படியோ இலையுதிர் காலத்தில் நீங்கள் அவனைப் பார்க்கத்தானே போகிறீர்கள்.''
நான் தலையாட்டினேன்.
”குட் பை”என்றபடி என்னை நெருங்கினாள்.இருவரும் கட்டித் தழுவிக்கொண்டோம்.
''நேற்றைய இரவு என்னை சந்தோஷமாக்கியது. அந்தக் குதிரைகள். நம்முடைய பேச்சு. எல்லாம்தான்.இதுவும் உதவுகிறது.அதை நாம் மறக்கமுடியாது'' என்றவள் அழத் தொடங்கினாள்.
''எனக்குக் கடிதம் எழுதுவாயா? நமக்கு இப்படி நடக்கும் என்று நான் யோசித்ததில்லை. இத்தனை வருடங்களில் ஒரு நிமிடம் கூட அப்படி நினைத்ததில்லை. நமக்கு அல்ல''
''நான் எழுதுகிறேன்.பெரிய கடிதங்களாகவே எழுதுகிறேன்.உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது உங்களுக்கு எழுதுவேனே அந்த மாதிரிப் பெரிய கடிதங்கள்''
''நான் அவற்றுக்காகக் காத்துக்கொண்டிருப்பேன்.''
அவள் மறுபடியும் ஏறிட்டுப் பார்த்து என் முகத்தை வருடினாள். திரும்பி தார்ப்பாதையைக் கடந்து விமானத்தை நோக்கி நகர்ந்தாள்.
போய் வா, அன்பே, கடவுள் உன்னோடு இருப்பாராக.
அவள் விமானத்தில் ஏறினாள். இன்ஜின்கள் இயங்க ஆரம்பித்து ஒரு நிமிடத்துக்குள் விமானம் ஓடுபாதையில் நகரத் தொடங்கும்வரை அந்த இடத்திலேயே இருந்தேன். அது உயர்ந்து ஹம்போல்ட் வளைகுடாவுக்கு மேல்பறந்து சீக்கிரமாகவே தொடுவானத்தில் ஒரு புள்ளியாக மாறியது.
நான் காரை வீட்டுக்குத் திருப்பி ஓட்டினேன்.நடைவழியில் நிறுத்தினேன்.கடந்த இரவில் தரையில் பதிந்திருந்த குதிரைகளின் குளம்படையாளங்களைக் கவனித்தேன். புல்தரையிலும் சகதியிலும் அழுத்தமாகப் பதிந்திருந்தன. எல்லா இடங்களிலும் குதிரைச் சாணம் குவிந்து கிடந்தது.வீட்டுக்குள் நுழைந்து கோட்டைக்கூடக் கழற்றாமல் தொலைபேசியை நோக்கிப் போய் சூஸனின் எண்ணைச் சுழற்றினேன்

தமிழில்: சுகுமாரன்.

http://en.wikipedia.org/wiki/Raymond_Carver

ஆங்கில மூலம் Call if you need me
flow1

மூன்று கனவுகள்-விளாதிமிர் நபொகோவ்

Vladimir Nabokov
தமிழில்: எஸ்.ஷங்கரநாராயணன்
1
பாரன் உல்ஃப் மரப்படிகளில் கைப்பிடிகளைப் பற்றியபடியே சிரமத்துடன் மேலேறி வந்தான். வாயில் விசில். தடதடவென்று அப்போது முதல்தளக் கூடத்தில் இருந்து இறங்கியோடி vladimir-nabokovவந்தாள் நடாஷா.
”எங்க இவ்ள அவசரமா…?”
“டாக்டர் எழுதிக் குடுத்திட்டுப் போன மருந்து வாங்கணும். அப்பாவுக்கு இப்ப பரவாயில்லை…”
“நல்ல விஷயம்!” 
தலையில் தொப்பியில்லாமல் மழைக்கோட்டு சலசலக்க இறங்கியோடினாள். கைப்பிடியில் சாய்ந்தபடி அவள் போகிறதை ரசித்தான். பளபளவென்ற பெண்மைக் கேசம்.
மேல் மாடியில் அவன் அறை. உல்லாசமாய் விசில் தொடர்ந்தது. போய் ஈர சூட்கேஸை மெத்தைமேல் வீசியெறிந்தான். கையைத் துப்புரவாக, திருப்தியாகக் கழுவிக் கொண்டு, கிழிறங்கி வந்து பெரியவர் கிரனோவின் கதவைத் தட்டினான்.
கூடம் தாண்டி உள்ளறையில் வயசாளி கிரனோவ் மகளுடன் வசிக்கிறார். ரெட்டைக் குதிரை வண்டிபோல் அகண்ட அவரது ஸ்பிரிங் கட்டிலின் பொடிக் கம்பிகள் மயிர்க்கற்றையாய்க் கொசகொசவென்று கிடக்கும். உட்கார எழ அமுங்கி விரியும். ஒரு பாடாவதி மேஜை, மேலே விரித்திருக்கும் அழுக்கு செய்தித்தாள். இவற்றுடன் வத்தி ஒடுங்கிய நோயாளி கிரனோவ். இவன் தன் பெரிய மொட்டைத்தலையை உள்ளே நீட்டுகிறான். கிரீச் மூச்சென்றது கட்டில். படுக்கையில் பின்சாய்ந்து போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டிருந்தவர், ”வா, ரொம்ப சந்தோஷம். உள்ள வாப்பா.” தஸ்சு புஸ்சென்று மூச்சு விட்டார். பக்கத்தில் மருந்து மேஜை பப்பரக்கா என்று பாதி திறந்து கிடந்தது.
”அலெக்சி இவானிச், கிட்டத்தட்ட முழுசும் குணமாயிட்டாப்லன்னு கேள்விப்பட்டேன்…” படுக்கை பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு தன் முட்டியில் தாளமிட்டான். வெளிறிய, விறைத்த கைகளை அவனிடம் நீட்டியபடியே ஆனால் தலையாட்டி மறுத்தார். ”நீ என்ன கேள்விப்பட்டியோ தெரியாது. ஆனா ஒண்ணு எனக்குத் துப்புரவாத் தெரியும், நாளை காலைல நான் மண்டையப் போட்டுருவேன்.” பேசும்போது வார்த்தை தவிர தேவையற்ற நிறைய ஒலிகள். காற்று சுதந்திரமாய் உள்ளே போய் வந்தது.
”பைத்தாரத்தனம்!” என்று சிரித்தான். பெரிய வெள்ளி சிகெரெட் பெட்டியைத் தன் சராய்ப் பையில் இருந்து வெளியே எடுத்தான். ”ஆட்சேபணை உண்டுமா?” துருப்பிடித்த லைட்டர். சடக் சடக்கென்றது. தீ பற்றவில்லை. கிரனோவ் கண் பாதி சொருகியிருந்தது. நீலம் பாரித்த, தவளையின் விரலிணைந்த ஜவ்வுப்பாதம் போன்ற கண் சிமிழ்கள். துருத்திக் கொண்டிருந்த நாசியில் ஆங்கங்கே நரைத் தூறல். கண்ணைத் திறக்காமலே, ”அப்டிதான் ஆகப்போகுது. அவங்க என் ரெண்டு பிள்ளைங்களையும் கொன்னுட்டாங்க. என்னையும் இவளையும் சொந்த மண்ணில் இருந்து பந்தாடிட்டாங்க. இப்ப விசிததிரமான எதோ ஊர்ல நாங்க தடுமாறி வாழ்ந்து தடுக்கி வீழ்ந்து செத்துப் போகணும்… என்ன மடத்தனம் இது. என்னவெல்லாம் நடக்குது. விதில சிக்கி வீதில விழுந்துட்டம்.”
பாரன் உல்ஃப் சத்தமாகவும் தீர்க்கமாகவும் பேசலானான். ஒமக்கு இன்னும் கொள்ளைக் காலம் கெடக்கு, சாக அவசரப்படண்டாம். எல்லாரும் அடுத்த வசந்த காலத்துக்குள்ளாற ருஷ்யா போயிருவோம். ஆடு மாடு கோழி காக்கா எல்லாமும் திரும்பிரும் பாரும் வேய்…..
”அந்தக் காலத்துல நான் காங்கோல சுத்தித் திரிஞ்சிட்டிருந்தனா… கேட்டீரா இவானிச்…” அவன் பெருத்த உடம்பு லேசாய் ஆடியது. ”ரொம்ப தூரத்ல இருக்குது அந்த நாடு, மகா தூரம், காங்கோ காடுகள்… தெரியுமில்லியா? காட்டுக்குள்ளாற ஒரு பட்டி, அங்கத்திய பொண்ணுகளுக்கு மேலாடை கிடையாத். மார்பே டிங் டாங். தண்ணியோட மினுமினுப்பு பாத்தா கரேல்னு கம்பளியாட்டுத் தோலாட்டம். கிட்டத்துல கிட்டத்துல குடிசைகள். மரம் ஒண்ணொண்ணும் இத்தா தண்டி, ரெண்டு கையாலும் அணைக்கேலாது, கேட்டீங்களா, ஒரு ஆரஞ்சு மரம், அடில பெரிய பழம் விழுந்து கெடக்கு, பார்க்க ரப்பர் பந்தாட்டம். அந்த மரப் பொந்துலேர்ந்து ராத்தியாச்சின்னா விநோதமாச் சத்தம், கடலலை பொங்கிவந்தாப் போல. என்ன சத்தம்? எதோ மிருகம் உள்ள வாழுதுபோல… ஊர்த் தலைவன்கிட்ட ரொம்ப நேரம் அரட்டை யடிச்சிட்டிருந்தேன். பாஷை மாத்தி அவனாண்ட எடுத்துச் சொல்லன்னு கூட வந்த எங்காளு பெல்ஜியக்காரன், இன்ஜினியர், அவனுக்கும் தெரிஞ்சிக்க ஒரு துடிப்பு. அவன்தான், அப்ப, 1895ல தங்கன்யிகா அடுத்த சதுப்புகள்ல விநோதமான முதலையுமில்லாத ஆமையுமில்லாத மிருகங்களைப் பார்த்தேன்னது. சரி, அந்த ஆதிவாசித் தலைவன்… அவன் உடம்பு முழுசும் கோபால்ட் தூசி. பளபளப்பு, விரல்ல பூரா நெளிநெளியா மோதிரங்கள். கொழு கொழு பப்ளிமாஸ்! பிதுங்கி பளபளன்னு தொங்கும் தொந்தி, வயிறா வண்ணாந்தாழியா… அப்பதான் ஒருநாள் என்னாச்சின்னா…” உல்ஃபுக்கு கதைசொல்லும் சுவாரஸ்யம். சொரசொர தலையில் தாளமிட்டுக் கொண்டான். மொட்டைத் தலையைத் தடவும் சுகமே தனிதான்.
”நடாஷா வந்திட்டா…” அமைதியாய் அழுத்தமாய் இடைமறித்தார் கிரனோவ். புருவங் கூட அசையவில்லை. சட்டென வெட்கத்துடன் திரும்பினான். கொஞ்சங் கழித்துதான், அதோ கீழ்வாசல் கிளிங். மாடியேறும் தடதட. உள்ளே வேகமாய் நுழைந்தாள். என்ன கண்கள்! கூசினான் அதைப் பார்க்க. ”அப்பா, எப்டி யிருக்கு உடம்பு?”
உல்ஃப் எழுந்துகொண்டபடியே பாவனையான உற்சாகத்துடன், ”சூப்பரா இருக்காரு. படுக்கைலியே ஏன் கெடக்கணும், எழுந்து நடமாட ஆரம்பிக்கலாம். ஒரு ஆப்ரிக்க வித்தைக்காரனைப் பத்தி அவராண்ட சொல்லலாம்னு ஆரம்பிச்சேன்…” அப்பாவைப் பார்த்துப் புன்னகைத்தபடியே நடாஷா மாத்திரைகளை எடுத்தாள். ”வெளிய நல்ல மழைப்பா. குளிர் வெடவெடங்குது…” வழக்கம்போல ஒராள் பருவநிலை பத்திப்பேச மற்றவர்கள் கண் தன்னைப்போல ஜன்னல்பக்கம். கிரனோவ் தலையை நிமிர்த்தியபோது கழுத்துச் சுருக்கத்தில் நரம்பு விண்ணென்று புடைத்தது நீலமாய். அப்படியே தலையணையில் பின் சரிந்தார். மருந்தை சொட்டு எண்ணி தம்ளரில் விட்டபோது அவள் உதடுகளை சேஷ்டை செய்தாள். அடர்த்தியான கருங் கூந்தலில் மழை முத்துக்கள். கண்ணின் கீழே நீலமாய் என்ன அழகான நிழல்கள்!
2
அறை திரும்பினான் உல்ஃப். மனம் துள்ளிக்கொண்டிருந்தது. இருப்புக் கொள்ளவில்லை. நாற்காலியில் உட்கார்ந்தான். படுக்கையில் உருண்டு புரண்டான். பின் ஏனோ போய் ஜன்னலைத் திறந்து அந்த இருளில் வாசல் வெளியை வெறித்தான். ஒலிகளை ரகசியம் போலச் சிந்திக் கொண்டிருந்தது இரவு. தோளைக் குறுக்கிச் சொடக்கெடுத்தான். போய்ப் பச்சைத் தொப்பி அணிந்து வெளியே போனான்.
கிரனோவ் ஒரு பக்கமாய் உட்கார்ந்திருக்க, நடாஷா அவரது படுக்கையைச் சரிசெய்து கொண்டிருந்தாள். ”உல்ஃப் சாப்பிடப் போறாப்ல…” என்றார் பார்க்காமலேயே. நோயாளி ஆனபிறகு தூரத்து சத்தங்களைக் கிரகிக்க ஆரம்பித்திருந்தார். ஹ்ம், என்று பெருமூச்சு. போர்வையை திரும்ப இழுத்துச் சுற்றிக் கொண்டார். ”ஆச்சு” என்றாள் நடாஷா. ”படுத்துக்கலாம்…”
ஊரே நசநசவென்று கிடந்தது. ஈர மாலை. தெருவில் அடர்த்தியாய் இழுவைத் தண்ணீர். வாகனங்கள். கூம்பாய் விரிந்த குடைகள் நடமாட்டம். உள்ளே தீ எரிகிற வெளிச்சத்தில் கடை ஜன்னல் பிம்பங்கள் மேல்கூரையில் ஆடின. மழையோடு கூட இரவும் மேலிருந்து வழிந்து பிரதேசத்தை நிரப்பிக் கொண்டிருந்தது. மெலிந்த நீளக் கால்களைக் காட்டியபடி வேசிகள் கூட்ட நெரிசலில் ரொம்ப அவசியம் போல ஊடே கடந்து போனார்கள். சிறு வெளிச்சத் திவலை அவர்கள் கண்ணில் பட்டு மின்னியது. எங்கோ உயர விளம்பரப் பலகையிலிருந்து பீறிட்டு வந்த கிரணத்தின் ஒரு சக்கரச் சுற்று.
நிசி நெருங்கவும் கிரனோவின் ஜுரம் அதிகரித்தது. தெர்மாமீட்டர் வெதுவெதுப்பாக சிவப்பு ஏணியில் விர்ரென்று உயர்ந்தது. தலையை உதறி, உதட்டைக் கடித்து எதோ பினாத்தினார். அப்படியே உறங்கிப்போனார். மங்கலான மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் நடாஷா உடை மாற்றிக் கொண்டாள். மங்கலான ஜன்னல்கதவுக் கண்ணாடியில் அவள் தன்னைப் பார்த்துக் கொண்டாள். மெலிந்த வெளிறிய கழுத்து. தோளை மறைத்து விழும் அடர்த்தியான கூந்தல். கொஞ்ச நேரம் அசையாமல் தன் யௌவனத்தையே புளகாங்கிதத்துடன் பார்த்துக் கொண்டாள். திடுமென்று எதோ நிகழ்ந்தது அங்கே. அந்த அறை, அந்த மகா கட்டில், சிதறிக் கிடக்கும் சிகெரெட் துண்டுகளுடன் அந்த மேஜை, ஒரு வயசாளி பொளந்த வாயுடன் சிரமமாய் மூச்சுத் தடுமாறத் தடுமாற பாதி உறக்கமும் பாதி விழிப்புமாய்த் திண்டாடும் அந்தப் படுக்கை… எல்லாமே அசைய ஆரம்பித்தது. மெல்ல அப்படியே மிதக்கிறாப்போல… கருத்த இரவில், கடலில் கப்பல் போல மெல்ல அசைவு கொடுத்தது. பெருமூச்சுடன் வெதுவெதுப்பான தோளை வருடிக் கொண்டாள். அதே அரைமயக்க நிலையில் கட்டில் பக்கம் குனிந்தாள். தனது பாடாவதி ஸ்டாக்கிங்குகளைச் சுருட்டி உருவினாள். அதில் நெய்த நூலை விட தைத்த நூலே அதிகம். திரும்பவும் அறையே நீந்த ஆரம்பித்திருந்தது. பிடரியில் யாரோ கதகதப்பாய் மூச்சு விடுகிறதார்கள். நீலம் குழைந்த வசீகரமான கண்களை விரியத் திறந்து பார்த்தாள். பூச்சி ஒன்று மெழுகுவர்த்தியை வட்டமடித்து அப்படியே கிறுகிறுப்புடன் போய்ச் சுவரில் மோதியது. போர்வைக்குள் தவழ்ந்து உள்ளே புகுந்துகொண்டு கால்நீட்டிப் படுத்தாள். தன்னைத் தானே மூணாம் மனுஷியாய்ப் பார்த்து தனக்குள்ளே பேசிக் கொண்டாள். அடியே வெதுவெதுப்பான அழகான உடல் உனக்கு, நீளமான தொடைகள்… தலைக்குப் பின்னால் கைகளைக் கட்டிக் கொண்டாள். திரும்ப எழுந்து மெழுகுவர்த்தியை அணைக்கச் சோம்பலாய் இருந்தது. இருந்த கனவு லாகிரியில் கால்களே மறந்திருந்தது. கண் சொருகியது அவளுக்கு. கிரனோவ் பெரிதாய் முனகி அப்படியே கையை மேலே தூ… தானாகவே கை துவண்டு தொய்ந்து உயிரற்று பொத்தென மார்பில் விழுந்தது. நடாஷா லேசாய்த் தலையுயர்த்தி மெழுகுவர்த்தியை ஊதியணைத்தாள். அவள் கண்முன்னே வண்ண வண்ண வளையங்கள் சுற்றிச் சுழன்றன…
ஆகா, எத்தனை சந்தோஷமாய் இருக்கிறது, என நினைத்து தலையணைக்குள் சிரித்துக் கொண்டாள். காலைச் சுருட்டிக்கொண்டதில் ஆளே இத்துனூண்டாகிப் போனாள். மூளையில் பளீரிடும் ஒவ்வொரு யோசனையும் மத்தாப்பூவாய்ச் சுற்றி ஒளி சிந்தியது. மெல்ல உறக்கம் பிடித்து அவள் அதன் ஆழத்துக்குப் போனபோது திடுக்கென மேலே வர நேர்ந்தது, ஊவென்ற பதறிய ஊளை.
”அப்பா என்னாச்சி?” தட்டுத் தடுமாறி மேஜையில் மெழுகுவர்த்தியை ஏற்றினாள். படுக்கையில் நெட்டுக்குத்தாய் உட்கார்ந்தபடி கிரனோவ், கை சட்டைக் காலரை அழுத்தி இழுத்துக் கொண்டிருந்தது. தஸ்சு புஸ்சென்று பெட்ரோமாக்ஸாய்ப் பெருமூச்சு. தற்செயலா முழிப்பு வந்து மெல்ல கண்ணைத் திறந்து அவர் பார்த்தால், பக்கத்து நாற்காலியில் கடிகாரம் மின்னியது. கைத்துப்பாக்கி ஓட்டையில் குண்டு போட்டு யாரோ துப்பாக்கியில் அவரையே… டுமீல் சத்தத்துக்கு, சாவுக்குக் காத்திருந்தார். எதுவும் நிகழவில்லை. சட்டென உடம்பு பதற வீறிட்டார். நெஞ்சு ஆசுவாசப்பட மெல்லத் திரும்பி பெண்ணைப் பார்த்தார், பலவீனமாய் அசட்டுச் சிரிப்பு சிரித்தார்.
”ஒண்ணுமில்லப்பா, பேசாமப் படுங்க…” காலாலேயே அவரது தலையணைகளை அவர் கால்கிட்டத்தில் இழுத்துக் கொடுத்தாள். புருவத்தைத் தொட்டாள். வியர்த்திருந்தது. ஹாவென்ற பெருமூச்சுடன் சுவரைப் பார்க்கத் திரும்பியபடி மெல்ல பினாத்தினார். ”அவங்க எல்லாரும்… ஆமாம் நானுந்தான். இல்லல்ல, என்னவோ பிரமை. ம்ஹும்,..” அப்படியே தூக்கம் அவரை வாரியிழுத்தது.
நடாஷா திரும்பப் படுத்துக் கொண்டாள். ஸ்பிரிங் கம்பிகள் அபாரமாய்க் குலுங்கின. தோளிலும் முதுகிலும் உறுத்தின. திரும்பி உருண்டு எப்படியோ தன்னை வசதி பண்ணிக் கொண்டு திரும்ப தன் கனவுலோகத்துக்குள் சஞ்சாரம் செய்ய முயன்றாள் அவள். என்ன அழகான கனவு, ஆனால் என்ன கனவு, நினைவில்லை.
காலை. அவளுக்கு முழிப்பு வந்தது. அப்பா அவளைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தார். ”நடாஷாக் கண்ணு, உடம்பு சுரத்தா இல்லை, கொஞ்சம் குடிக்கத் தண்ணி குடுக்கறியா?” ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து பிட்டுக்கொள்ள முடியாமல் தள்ளாடி வாஷ்பேசினை நோக்கிப் போனாள். தண்ணி பிடித்த போது நிதானந் தவறி டம்ளர் இடித்த கிளிங். ஆவேசமாய் அதை வாங்கி மடக்மடக்கெனக் குடித்தார். ”ஹா, இப்டியே போய்ச் சேர்ந்துட்டாத் தேவலை…”
”தேமேனு தூங்குங்கப்பா, நல்லாத் தூங்கினா எல்லாம் சரியாப்போகும்.” மேல்சட்டையை உருவிவிட்டு, அப்பாவின் படுக்கைக்கு அருகில் உட்கார்ந்து கொண்டாள். அவர் திரும்பச் சொன்னார். ”முடியல இவளே,” திரும்பத் திரும்பச் சொல்லிவிட்டு ஒரு கலவரமூட்டும் அஷ்டகோணல் புன்னகையைச் சிந்தினார். ”நடாஷா, அடிக்கொருதரம் நம்மூர்ல நான் நடந்து போயிட்டிருக்காப்ல நினைச்சிக்குவேன். அந்த அரவை ஆலை இல்லே, அதன் பக்கத்து நதிக்கரை… உனக்கு ஞாபகம் இருக்கில்லே? அந்த வழியா போயிட்டிருக்கேன். நடக்க முடியல. ஒரே மரத் தூள். மரத் தூசும் மண் புழுதியும். காலே உள்ள புதையுது. கால்பூரா சகதி அப்புது. ஒருதரம் நாம வெளிநாடு போயிருந்தமா…” தொண்டையைச் செருமிக் கொண்டார். அதுவரை என்ன சொல்லிக் கொண்டிருந்தோம் என்பதே மறந்து திருதிருவென்று விழித்தார்.
அப்போதெல்லாம் அப்பா எப்படி இருந்தார், என அவளுக்குத் துல்லியமாக நினைவு இருந்தது. அழகான குறுந்தாடி, சாம்பல் நிற தோல்கையுறைகள், கடல்நுரைத் தலையணையின் உறைபோல அவரது கட்டம்போட்ட தொப்பி… எப்ப வெளிய கிளம்பினாலும் அதைத்தான் அணிவார். உற்சாக அப்பா… அழுகை முட்டியது.
”ஆமா… அதான்.” என்றார் கிரனோவ் நீட்டி முழக்கி. வெளியே விடியலின் பனிமூட்டத்தைப் பார்த்தபடி பேசினார். ”நல்லாத் தூங்குங்க அப்பா. எனக்கு எல்லாம் ஞாபகம் இருக்கு.” நடுங்கும் கையால் தம்ளரை எடுத்து மேலே சிந்தியபடி தண்ணீர் குடித்தார். முகத்தைத் தேய்த்துவிட்டுக் கொண்டார். தலையணையில் சாய்ந்து படுத்துக்கொண்டார். வெளியே சேவல் ஒன்று தொண்டை விறைக்கக் கூவிற்று. குக்குகூ…கூ!
3
மறுநாள் காலை பதினோரு மணிக்கு உல்ஃப் அவர்கள் கதவைத் தட்டினான். உள்ளே சாப்பாட்டு மேஜையின் கரண்டி தம்ளர்களின் சிணுங்கல்கள். அதைமீறி நடாஷாவின் குபீர்ச் சிரிப்பொலி. கொஞ்சம் கழித்து கதவைப் பின்புறமாய்ச் சாத்தியபடி வெளியே வந்தாள் நடாஷா. ”ரொம்ப சந்தோஷமாய் இருக்கேன். அப்பா இன்னிக்கு எவ்ளவோ நல்லாயிருக்கார்.” வெள்ளைச் சட்டை, இடுப்பில் பட்டன் வைத்த சாம்பல் வண்ண கவுன். அழகிய நீள விழிகளில் உற்சாகம் ததும்பியது.
”ராத்திரியானா பொட்டுத் தூக்கங் கிடையாது,” என்று சட்டென்று தொடர்ந்தாள், ”இப்ப அமைதியாயிட்டாரு. ஜுரம் விட்ருச்சி. எழுந்து உட்கார ஆரம்பிச்சிட்டார். தாதிங்க வந்து உடம்பைத் துடைச்சி விட்டாங்க.”
”வெயில் வந்திட்டது.” என்று உல்ஃப் புதிர் போல் சொன்னான். ”நான் வேலைக்குப் போகல்ல.” வெளிக் கூடத்தில் சுவரில் சாய்ந்தபடி அவர்கள் நின்றிருந்தார்கள். மேலே என்ன பேச என்று ரெண்டு பேருக்குமே திகைப்பு. ”நடாஷா, ஒண்ணு தெரியுமா?” என்று சுவரில் இருந்து பரந்த தன் முதுகை விலக்கி அவளைப் பார்க்கத் திரும்பினான். கையை தன் கசங்கிய சாம்பல் நிறச் சராய்ப் பைக்குள் விட்டுக் கொண்டான். ”ஊருக்கு வெளியே காலாற ஒரு நடை போய்வருவமா? ஆறுக்குள்ள திரும்பி வந்துறலாம், என்ன சொல்ற?”
ஒரு தோளைச் சுவரில் அழுத்தியவாறு நின்றிருந்தாள் அவள். ”அப்பாவை விட்டுட்டு வரணுமே… அதான்!’ உல்ஃப் பிரகாசமானான். ”வா நடாஷா, அப்பாவுக்கு இன்னிக்கு நல்லாயிருக்கில்ல, பின்னென்ன? நம்ம வீட்டுக்காரம்மா, கிட்டத்துல இருக்கா, எதுவும் தேவைன்னா ஒத்தாசை செய்வா.”
”அப்பாட்டக் கேட்டுப் பாக்கறேன்.” குட்டைப் பாவாடை படக்கென்று துள்ள உள்ளே போனாள். மார்பை மறைக்கும் முண்டா பனியனுடன் கிரனோவ் மேஜையில் எதையோ தேடிக் கொண்டிருந்தார். ”நடாஷா, நடாஷா… நேத்திக்கு பேப்பர் வாங்கிட்டு வரல்லியா?”
ஸ்டவ்வில் டீ தயாரிப்பதில் மும்முரமாய் இருந்தாள் அவள். ”அப்பா சும்மா ஒர் ரவுண்டு ஊருக்குள்ள போயிட்டு வரலாம்னு பாக்கறேன். உல்ஃப் கூப்பிடறாரு.”
”சரிடி செல்லம். மவராசியாப் போயிட்டு வா.” எனும்போது அவரது வெளிர்நீலக் கண்கள் கண்ணீரால் நிறைந்தன. ”என்னை நம்பலாம், இப்ப நான் நல்லாயிருக்கேன். உடம்புதான் பலவீனமா இருக்கு, எழுந்திருச்சாலே ஆளைக் குப்புறத் தள்ளுது. வேடிக்கை!”
அவள் போனபின்னும் அறையைப் பார்வையால் வளைய வந்தார், எதையோ தேடுகிறாப்போல. செய்தித் தாளாய் இருக்கலாம். கட்டிலை அப்படியே நகர்த்தப் பார்த்தார். கட்டில் முனகியது. அப்படியே குனிந்து கட்டில் அடியே தேடி… முகங் குப்புற விழுந்தார். தலை கிறுகிறுவென்று வந்தது. கொஞ்ச நேரம் கிடந்தார். மெல்ல கடும் பிரயத்தனத்துடன் காலை ஊன்றி எழுந்… தள்ளாடி… படுக்கையை எட்டி, ஹாவென்று சரிந்தார். திரும்பவும் நினைவும் கனவுமான மயக்கத்தில் ஆழ்ந்தார். ஒரு பாலத்தைக் கடந்து கொண்டிருக்கிறார். மர ஆலை இரைச்சல். மஞ்களான மரத் துண்டுகள் நீந்துகின்றன. ஈர மரத்துகளில் கால் புதைகிறது. நதியிலிருந்து புறப்பட்டு வரும் சிலீரென்ற காற்று. உடம்பே வெடவெடக்கிறது…
4
”ஆமாம் நடாஷா… எத்தனையோ ஊர்சுத்தல். சிலபோது என்னைக் கடவுளாய் நினைக்சுக்குவேன்! எனக்கு ரகசியங்களே கிடையாது! சிலோனில் நிழல்களின் அரண்மனை… மடகாஸ்கர் நகரத்தின் சிறு மாடப்புறாக்களை டுமீல்னு சுட்டுத் தின்னிருக்கிறேன். அங்க ஆதிகுடிகள் முதுகெலும்பும் நரம்புகளையுமே நெக்லஸாக அணிந்திருந்தார்கள். இரவுகளில் கடற்கரைப் பக்கம் விநோதமான அவர்கள் பாடல்கள். இசைக்கு நரிகள் நாட்டியமாடுகிறாப் போல இருக்கும். தாமதாவுக்குப் பக்கத்திலேயே கூடாரம் போட்டு தங்கியிருக்கிறேன். செம்மண் பூமி, கடலோ கருநீலம். அதைப்பத்தி நிறையச் சொல்லலாம்னிருக்கு, சொல்லத் தெரியல நடாஷா!”
கையில் ஒரு பைன் குரும்பையைச் குலுக்கியபடியே வந்தவன் சட்டென்று மௌனமானான். தனது தடித்த உள்ளங்கையால் கன்னத்தைத் துடைத்தபடியே அடக்க மாட்டாமல் சிரித்தான். ”ஆ, இப்ப இங்க இருக்கேன். கைல தம்பிடி கிடையாத்! ஐரோப்பாவிலேயே மோசமோ மோசமான ஒரு ஊரில் மாட்டிக்கிட்டிருக்கேன். எதோ ஒரு வேலைல காலை மாலைன்னு வெட்டியாப் பொழுதை ஓட்டிக்கிட்டு, ரொட்டி, தரமில்லாத மட்டன்… டிரைவர் கிளீனர் சாப்பிடற ஓட்டல். ஆனாலும், நானும் வாழ்க்கைல அனுபவிச்சிருக்கேன், ஒரு காலத்துல.”
நடாஷா குப்புறக் கிடந்தாள். விரிந்த தோள்களுடன் தலை நிமிர்த்தி, ஒளிரும் பைன்மர உச்சிகள் நீலப் பின்னணியில் பணிந்து அசைவதைப் பார்த்தாள். அந்த வானத்தைக் கூர்ந்து கண்ணெடுக்காமல் பார்த்தாள். ஒளிப் புள்ளிகள் வளையங்களாய் அவள் கண்ணில் சிதறின. மரத்தில் இருந்து மரத்துக்கு தகதகவென்று அந்தப் பொன்தூவல் பாய்ந்தாற் போல ஒரு பிரமை. பக்கத்தில் காலைக் கட்டிக்கொண்டு உல்ஃப் உட்கார்ந்திருந்தான். வெளிர் சாம்பல் சூட். மொட்டைத் தலை குனிந்திருந்தது. குச்சியை இன்னமும் சுழற்றிக் கொண்டிருந்தான்…
நடாஷா பெருமூச்சு விட்டாள். ”நடுப்பட்ட காலத்தில்…” என ஆரம்பித்தாள். பார்வை பைன் மர உச்சிகளை வெறித்தது. ”அவர்கள் என்னை உயிரோடு எரித்திருப்பார்கள். அல்லது புனிதப் படுத்திக் கொண்டாடி யிருப்பார்கள். கழுத்தைப் பிடி அல்லது காலைப் பிடி. சிலப்ப எனக்கு விநோத உணர்வுகள் தட்டும். ஒரு மாதிரி புளகாங்கிதம், உடம்பே இல்லாத மாதிரி, நானே எங்கோ தூரத்தில் மிதந்திட்டிருக்கா மாதிரி, எல்லாமே துல்லியப் படுது அப்ப… வாழ்க்கை, மரணம், எல்லாமே! ஒரு தடவை, அப்ப எனக்குப் பத்து வயசிருக்கும்… கூடத்துல உட்கார்ந்து என்னமோ வரைஞ்சிட்டிருக்கேன். அலுப்பாய் இருந்தது, பென்சிலைக் கீழே போட்டுட்டு யோசிக்க ஆரம்பித்தேன். திடீர்னு பாத்தா ஒரு பெண் என்னைப் பார்க்க விறுவிறுன்னு உள்ள வந்தாள்! மங்கிய நீல உடைகள், காலில் செருப்புகூட கிடையாது, பெரிய கனமான வயிறு… சின்ன மெலிந்த மஞ்சள் முகம். அபூர்வமான மெல்லிய விளக்கவியலாத விழிகள்… என்னை அவள் சட்டையே பண்ணவில்லை, அப்படியே விர்ரென்று கடந்து அடுத்த அறைக்குள் மறைந்து விட்டாள்! என்னவோ, எனக்கு பயமாய் இல்லை அது. வீட்டைக் கூட்டிப் பெருக்கி சுத்தம் பண்ண வந்தவளாய் இருக்கும், என்றே தோன்றியது. அவளை அதற்குப் பிறகு நான் பார்க்கவே இல்லை. ஆனா அவ யார் தெரியுமா? கன்னி மேரி!”
உல்ஃப் புன்னகை செய்தான். ”எதுனால அது மேரின்னு சொல்லத் தோணுது உனக்கு நடாஷா?”
”தெரியும்!” என்றாள் நடாஷா. ”ஒரு அஞ்சி வருஷம் கழிச்சி என் கனவில் அவளே வந்தாள். கைக்குழந்தையுடன்… அவள் காலடியில் தோளில் சிறகுகளுடன் நிறையப் பச்சிளம் குழந்தைகள் பச்சைமிளகா தெரியுது, அல்லது அரசிலை டாலர் மூடியிருக்கு. ரஃபேல் ஓவியங்கள் போல! அவை பொம்மைகள், இதுங்கள் உயிரோடு! இவை தவிர, சில சமயம் சின்னச் சின்ன தரிசனங்கள் வாய்க்கும் எனக்கு. மாஸ்கோவில் அவர்கள் அப்பாவைக் கூட்டிட்டுப் போயிட்டாங்க, நான் மாத்திரம் வீட்டில் தனியே. அப்ப நடந்தது பார்… மேஜை மேல வெங்கல மணி, மந்தைக்குப் போகும் மாடுகளுக்குக் கழுத்தில் கட்டுவாங்களே, அந்த மணி. அப்பிடியே அந்த மணி அந்தரத்தில் எழும்பியது. கிணி கிணி கிணின்னு சத்தம். திரும்ப விழுந்திட்டது. என்ன அழகான துல்லியமான ஒலி!”
அவளை விசித்திரமாய்ப் பார்த்தான். கைக் குச்சியை எட்டியமட்டும் தூர விட்டெறிந்தான். நிதானமாய்ப் பேச ஆரம்பித்தான். ”ஒண்ணு உங்கிட்ட நான் சொல்லியே ஆவணும் இவளே. நான் ஆப்ரிக்காவுக்கோ, இந்தியாவுக்கோ ஒரு நாட்டையும் எட்டிப் பார்த்தது கிடையாது. எல்லாமே புளுகுமூட்டை. வயசு முப்பதாச்சி, நம்ம நாட்லயே ரெண்டுமூணு நகரம், ஒரு டஜன் கிராமங்கள், அப்றம் இதோ இந்த உப்பு பெறாத நாடு, இதைத் தாண்டி எங்கயும் போனதும் இல்லை, கண்டதும் இல்லை. என்னை மன்னிச்சிரு.” சோகமாய் அவளைப் பார்த்துப் புன்னகைத்தான். குழந்தைப் பருவத்தில் இருந்து அவனிடமே தங்கியிருந்த பிரும்மாண்டமான கனவுகள் அவை. பலூனை உடைத்துவிட்ட சோகம். ச்.
உலர்ந்த வெக்கையான காற்று வீசியது. தகதகப்பான பைன் மர உச்சிகள் முணுமுணுத்தன. ”எறும்பு” என எழுந்து கொண்டாள், சட்டையை எடுத்து உதறிக் கொண்டே. ”சரியா எறும்புப் புத்து மேலயே உட்கார்ந்திருக்கோம்…”
”என்னைப் பத்தி ரொம்ப மட்டமா நினைக்கிறியா இவளே?”
அவள் சிரித்தாள். ”கிறுக்குத்தனமாப் பேசாதே. நாம ரெண்டு பேரும் ஒரே தராசுத் தரம்தான். உன்னாண்ட நான் சொன்னேனே, என்னுடைய பரவசங்கள், கன்னி மேரி… அந்த வெங்கல மணி… எல்லாமே கட்டுக்கதைதான். ஒருநாள் அப்டில்லாம் நான் நினைச்சிப் பார்த்தேன்… அதுக்கப்பறம், அதெல்லாம் நடந்ததா நானே நினைக்க ஆரம்பிச்சிட்டேன்…”
”அப்டிதான்…” என்றான் அவன் பிரகாசமாய். ”உன் பிரயாணங்களைப் பத்தி இன்னுங் கொஞ்சம் சொல்லேன்!” என்றாள் நடாஷா, அதில் குத்தல் த்வனி இல்லை. வழக்கமான உற்சாகத்துடன் சிகெரெட் பெட்டியை வெளியே எடுத்தான். ”தங்கள் சித்தம் என் பாக்கியம்… போர்னியோ லேர்ந்து சுமத்ராவுக்கு தோணில போயிட்டிருந்தேன்.”
5
ஏரிக்குச் சரிந்திறங்கியது பூமி. தோணித்துறைக் கம்பங்களின் நிழல் நீரில் நெளிநெளியாய். குட்டையைத் தாண்டி அதே பைன் மரத் தோப்பு. ஆனால் இங்கொன்றும் அங்கொன்றுமாய் வெள்ளைத் தண்டும் மஞ்சள் பனிபோல் இலைகளுமான சவுக்கு மரங்கள். வெளிர்நீல நீர்ப்பரப்பில் பளபளவென்று மேகங்கள் நீந்தின. அவளுக்கு லேவிதனின் இயற்கை ஓவியங்கள் ஞாபகம் வந்தது. ருஷ்யாவிலேயே இருக்கிறாப் போல ஒரு பிரமை. தொண்டை விக்கும் இந்த சந்தோஷம் ருஷ்யாவில் இருந்தால்தான் சாத்தியம். உல்ஃப் தனது அற்புதமான கனவுகளைத் திரும்ப உளர ஆரம்பித்தது அவளுக்கு வேண்டியிருந்தது. பேசியபடியே ஏரித் தண்ணீரில் சில்லெறிந்தான் அவன். அவை ஜோராய் நீர் மேற்பரப்பில் தாவித் திரிந்தன. வேலைநாள், அந்தப் பக்கம் சந்தடி யற்றிருந்தது. அங்கங்கேயிருந்து சிரிப்பும் ஹாவென்ற ஆர்ப்பரிப்புமே தேய்ந்தொலித்தபடி இருந்தன. ஒரு பாய்மரத் தோணி தூரத்தில் தலையாட்டிப் போனது. ஏரிக்கரையோடு ரொம்ப நேரம் நடந்தார்கள். வழுக்கும் மேடேறினார்கள். அந்தப் பக்கம் ராஸ்பெரிப் புதரில் இருந்து சகதி நெடி. இன்னும் தள்ளி, ஏரித் தண்ணீருக்கு வலது பக்கம் ஒரு சிறு விடுதி, ஆளே இல்லை அங்கே. பரிமாறவும் ஆளில்லை, சாப்பிடவும் ஆளில்லை. எங்கோ அவசர ஆபத்து என்று எல்லாவனும் ஓடிப் போயிட்டாப் போல. அங்கே ஒரு டம்ளரும், தட்டும் கூட இல்லை. விடுதியைச் சுற்றி வந்தார்கள். ஒரு காலி மேஜையில் உட்கார்ந்து கொண்டார்கள். சாப்பிடுகிறாப் போலவும் குடிக்கிறாப் போலவும், பின்னணியில் ஒரு இசைக்குழு பாடுகிறாப்போலவும் பாவித்துக் கொண்டார்கள். ஒரே வேடிக்கை. நடாஷாவுக்கு உண்மையிலேயே ஆரஞ்சுத் தோட்டத்தில் இருந்து காற்று இசையைக் கொண்டு வந்தாப்போலிருந்தது. ஒரு உன்மத்தத்துடன் கரையில் ஓடினாள். தஸ்சு புஸ்சென்று மூச்சிரைக்க அவள் பின்னால் ஓடினான் அவன். ”இரு இவளே, பில்லு குடுக்காம வரப்டாது!”
தாண்டி பச்சைப் பசேல் புல்வெளியும் நாணல்களும். அதனூடே சூரியன் தண்ணிரில் தகதகவெனப் பொலிந்தான். மூக்கு விடைக்க நடாஷா திரும்பத் திரும்பச் சொன்னாள். ”ஆகா எல்லாம் எத்தனை ஜோரா இருக்கு.” இருந்த உற்சாகத்துக்கு வாயைக் குவித்து உஹுஹு… என்று காட்டில் கத்தினான், எதிரொலி கேட்காதது ஏமாற்றமாய் இருந்தது. அடங்கிப் போனான். அகண்ட ஏரிப் பரப்பில் வெயிலின் உக்கிரம். நிசப்தம். சூழலே சோகப் பாடல் பாடியது. அவள் தொண்டையைச் செருமிக் கொண்டாள். ”என்னவோ தெரியல, படபடங்குது. அப்பாவுக்கு எப்டி யிருக்கோ. ச், அவரைத் தனியா விட்டுட்டு நான் வந்திருக்கப்டாது…”
உல்ஃப் கிரனோவை நினைத்துக் கொண்டான். மெலிந்த நரைமுடிக் கால்கள். படுக்கையைப் பார்க்க பின் சரிந்த போது அநத்க் கால்கள் போர்வைக்கு வெளியே தெரிந்தன. சரி, இன்னிக்கேதான் அவர் டிக்கெட் எடுத்துட்டாதான் என்ன, என்று தோன்றியது. ”அப்டிச் சொல்லாத இவளே. அவரு நல்லாதான் இருக்காரு…” என்றான். ”ம். நானும் அப்டிதான் நினைக்கிறேன்…” என்று திரும்ப உற்சாகத்துக்கு மீண்டாள்.
மேல்கோட்டைக் கழற்றிக் கொண்டான். கோடுபோட்ட சட்டை.யிலிருந்து வியர்வை வெக்கை. அவளுடன் நெருங்கி நடந்து வந்து கொண்டிருந்தான். நேரே பார்த்தபடி வந்து கொண்டிருந்தாலும் பக்கத்தில் ஆம்பளை வாசனை, அவளுக்குப் பிடித்திருந்தது.
”என்ன மாதிரியெல்லாம் கனவுகள்! அற்புதமான கனவுகள்!” என்றான் அவன். கையில் இன்னொரு குச்சி, காற்றில் அதை வீசுந்தோறும் விஷ்க் விஷ்க் என்றது. ”என் பிரமைகளை எடுத்து விடும்போதெல்லாம் பொய்யா சொல்லிக் கொண்டிருக்கிறேன்? என் ஒரு சிநேகிதன், மூணு வருஷம் பம்பாயில் வேலை பார்த்தான். பம்பாய்? ஆகா, பேரே எத்தனை இசைக்கோர்வையாய் இருக்கிறது. பெயரிலேயே பிரம்மாண்டம். ஒளி வெள்ளம். இசைப் பரவசம். யோசிச்சிப் பாரு இவளே, அந்த மனுசன் வாழ்ந்திருக்கான், ஆனா. எதையும் அனுபவிச்சுச் சொல்லத் தெரியாது. வேலை தவிர எதையும் பேசமாட்டான். அந்த அபார சூடு. வியாதிவெக்கை. ஒரு பிரிட்டிஷ் இராணுவ அதிகாரியின் பெண்டாட்டி பற்றிக் கதை. நம்மள்ல யாரு இந்தியாவப் பாத்திருக்கோம்? ஹா, என்னைத் தவிர! நான் பாத்திருக்கேன், பம்பாய், சிங்கப்பூர்! எத்தனையோ சொல்வேன், உதாரணத்துக்கு.”
ஏரிக்கரையை ஒட்டியே நடந்தாள். குழந்தை அலைகள் அவள் காலை சிலீர் சிலீரென்று தழுவிப் போயின. தூரத்தில் தோப்புக்கு அப்பால் ரயில் ஒன்று கடந்து போனது. தண்டவாளம் வயலின் குச்சி போல இசையை வழங்கியது. அப்படியே ரெண்டு பேரும் நின்று அந்த இசையைக் கேட்டார்கள். தடதட தடதட. பொழுதே மேலும் மெருகேறி மென்மையாகி விட்டிருந்தது. ஏரியின் மறுபக்கத்து தோப்பு மரங்களில் நீலச் சாம்பல் அடர்ந்தது.
ரயிலடியில் ஒரு பொட்டலம் பிளம்ஸ் வாங்கினான், ச்சீ புளிப்பு தாளவில்லை. காலி ரயில்பெட்டி ஒன்றில் எறி உட்கார்ந்து கொண்டார்கள். ஒவ்வொரு பழமாக ஜன்னல் வழியே விட்டெறிந்தான் அவன். அந்த விடுதில இல்ல இவளே, பீர் குவளை வைக்கிற சின்ன தட்டுகள், ஒண்ணு ரெண்டு லவட்டிட்டு வந்திருக்கலாம், என்றான்.
”பிளம்ஸ் விழறதைப் பார் நடாஷா. சிட்டுகள் போல…” ஆனால் அவள் அலுப்பாய் இருந்தாள். சித்த கண்ணை மூடிக்கொண்டாள். இராத்திரிகள் போல அப்படியே உடலைத் தளத்தி மிதக்கிற பாவனைக்கு வரலாம், என்றிருந்தது.
”திரும்பப் போனதும் அப்பாகிட்ட நாம சுத்தியது பத்தி நான் பேசறச்ச இடை மறிக்கவோ, தடுக்கவோ வேண்டாம். நான் பாட்டுக்கு பாத்ததையும் பாக்காததையும் கதை விடுவேன். அழகழகான விஷயங்கள். அவர் புரிஞ்சுக்குவார்.”
திரும்ப ஊருக்குள் வந்ததும் அப்படியே வீடு திரும்பலானார்கள். உல்ஃப் இறக்கைகளை இழந்தாற் போல அமைதியாகி விட்டான். பாய்ங் பாய்ங் என ஹாரன் அடித்தபடி நகரும் வாகனங்கள். நகரம் பரபரப்பாய் இருந்தது. ஆனால் நடாஷா கிளர்ச்சி தளராமல் இருந்தாள். முகத்தில் பரந்த புன்னகை. மிதத்தல் நடை. கனவு அமிர்தமாய் உள்ளே சுரந்து கொண்டிருந்தது. பொழுது சாய்ந்திருந்தது, அவனும் சுருதியிறங்கி யிருந்தான். ஒரு தேவ வேளை முடிவுக்கு வருகிறது… தெருவில் வீடடைவதற்குக் கொஞ்சம் முன்னாலேயே அவன் நின்றுவிட்டான். அவ¢ள் சிட்டாய்க் கிளம்பியவள், அப்படியே அவளும் நின்றாள். சுற்றுமுற்றும் பார்த்தாள். தலையைக் குனிந்து சராய்க்குள் கைகளை விட்டுக் கொண்டபடி தோளைக் குலுக்கிக் கொண்டான், காளை மாட்டைப் போல. சங்கடத்தை உதறிவிட்டு அவன் சொன்னான். ”அடிப்பெண்ணே, நான் உன்னை நேசிக்கிறேன்!” அவள் முகத்தைப் பார்க்க ஏனோ வெட்கம்!. சிகெரெட்கடையை நோக்கிப் போனான்.
திடுக்கென்று அந்தரத்தில் அப்டியே நின்றாப் போலிருந்தது அவளுக்கு. மூச்சு விடுவதே தெரியவில்லை. மெல்ல தன்னை சுதாரித்துக் கொண்டு வீட்டைப் பார்கக நடந்தாள். இதையும் அப்பாகிட்டச் சொல்லணும், என நினைத்துக் கொண்டாள்.
சுற்றிலும் நீல நீலமாய் மேகத்திட்டுகளில் மிதந்து போகிறாள் அவள். தெருவிளக்குகள் ரத்தினக் கற்களாய் அந்த மேகத்துள் ஒளிர்கின்றன. ரொம்ப அலுப்பாய், வெக்கையாய் உணர்ந்தாள். தண்டுவடத்தில் சின்ன இம்சை. படுத்துக் கொள்கிற அலுப்பு.
கருப்புச் சட்டையை மாட்டியபடி அப்பா பூட்டிக்கொண்டு அவசரமாய்க் கிளம்பிக் கொண்டிருந்தார். பட்டன் போடாமல் திறந்திருந்தது சட்டை, கை காலரை சரிசெய்து கொண்டிருந்தது. கையில் சாவிக்கொத்து கிளிங்கியது. மாலைக்குளிர் நடுக்கி ஆளைக் கூன வைத்தது. சில சமயம் பேப்பர் பார்க்க என்று தவித்துப் போவார் அவர்.
”அட அப்பா!” என்று அவர் பின்னால் போனாள். வராந்தா ஓரத்தில் இருந்து திரும்பி என்ன என்பது போல் கம்பீரமாய்ப் பார்த்தார். ”ஏய்யா என் வெள்ளைப்பிடரி கிழட்டுச் சிங்கம், வெளிய போகக்கூடாது…” என்றாள் அவள்.
தலையை மறுத்துக் குலுக்கியபடி மென்மையாய் அவர் சொன்னார். ”செல்லம், இன்னிக்குப் பேப்பர்ல ஒரு அட்டகாசமான செய்தி. அடடா பர்சை எடுத்திட்டு வரல்லியே, ஜல்தி. மாடில போயி எடுத்தாறியா? நான் இப்டி இங்கியே நிக்கறேன்…”
கீழ்க் கதவை டிஷ்யும்.. என முட்டித் திறந்தாள். அப்பா எத்தனை ஜோராய் ஆகிவிட்டார்! படபடவென மாடியேறினாள், எல்லாம் மிதக்கிறாப்போல இருந்தது. கூடம் தாண்டி விரைந்தாள். வெளிய பனில நிக்கிறாரு எனக்காக,. சளி பிடிச்சிக்காம இருக்கணுமே…
கூடத்தில் ஏனோ விளக்கெரிந்து கொண்டிருந்தது. கதவைப் பார்க்கப் போகிறாள், உள்ளே மெல்லிய குரலில் பேச்சுக்குரல். படாரென்று கதவைத் திறக்கிறாள். மேஜைமேல் சீமெண்ணெய் விளக்கு. அடர்புகை எழும்புகிறது. வீட்டுக்காரியும், யாரோ புதுமுகமும்… முதுகுப்பக்கமாய்… படுக்கையை மறைத்து…. திரும்பிப் பார்க்கிறார்கள். ஊவென்று அவளைப் பார்க்க விட்டுக்கார அம்மாள் ஓடி வருகிறாள்.
நடாஷா படுக்கையைப் பார்க்கப் போனாள். அவள் வெளியே பார்த்த அப்பா அல்ல அது. மூக்கு மெழுகுச் சாயலில் விரைப்பு கண்டிருந்தது.
******
(சிர்கா 1924. ருஷ்ய மொழியில் இருந்து ஆங்கிலத்தில், திமித்ரி நபொகோவ்.)
மொழிபெயர்ப்பாளர் குறிப்பு :
கனவு சார்ந்த மறுகரை வாழ்க்கையை ஒரு போர்ப் பின்னணியில் சொல்ல வருகிறார். விவரணைகள் பெரும்பாலானவை தமிழில் எடுபடா அளவிலேயே இருந்தன என்றாலும் முடிந்தவரை கொண்டுவர முயற்சி செய்தேன். இன்றைய தமிழ் புனைகதை எழுத்தில், ஒரு காற்புள்ளி அரைப்புள்ளிக்குக் கூட மொத்தக் கதையில் தொடர்புடன் கவனக் குவிப்புடன் எழுத வேண்டியிருக்கிறது. யாரை வர்ணித்தாலும் உடைகளை வர்ணிப்பது அங்கத்திய வர்ணனை. காதல் வயப்பட்டவன், சாப்பிடப் போகையில் பஜாரில் வேசிகள் நடமாட்டத்தை பார்க்கிறதாக வெல்லாம் விவரங்கள்.
‘லோலிட்டா’ என்கிற நபொகோவின் நாவல் வெகு பிரசித்தம். பதின் பருவப் பெண்ணொருத்திக்கும் வயதான ஆண்மகனுக்குமான காதல் கதை அது. அதை ஆங்கிலத்தில் தான் எழுதினார். நிறைய ஃப்ரெஞ்ச் மற்றும் பிறமொழி இலக்கியங்களையும் நபொகோவ் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். இந்தக் கதை மகனே அப்பா கதையை மொழிபெயர்த்தது, மகன் தந்தைக் காற்றும் உதவி.

மூலக்கதையின் ஆங்கில மொழிபெயர்ப்பை இங்கே பெறலாம். மூலக் கதைத் தலைப்பு: நடாஷா
நன்றி: சொல்வனம்
flow1

வாளின் வடிவம்-போர்ஹே

Jorge Luis Borges
தமிழில்: பிரம்மராஜன்
ஒரு வன்மம் மிக்க வடு அவன் முகத்தின் குறுக்காகச் சென்றது. ஒரு முனையில் அவன் நெற்றிப் பொட்டுக்கும் மற்றொன்றில் கன்னத்துக்குமாக சுருக்கங்கள் ஏற்படுத்திய அது ஏறத்தாழ முழுமையடைந்த அரைவட்டமாகவும், சாம்பல் நிறத்திலும் இருந்தது. அவனின் உண்மையான பெயர் முக்கியமல்ல: டாகு ரெம்போவில் இருந்த எல்லோரும் அவனை கொலரோடோவிலிருந்து வந்த ஆங்கிலேயன் என்று அழைத்தார்கள். அந்த வயல்களின் சொந்தக்காரனான கார்டோசோ அவற்றை விற்க மறுத்தான்: எதிர்பார்த்திராத ஒரு விவாதத்திற்கு அந்த ஆங்கிலேjorge-luis-borges2யன் இட்டுச்  சென்றிருக்க வேண்டும்: அவன் கார்டோசோவிடம் தன் வடுவின் ரகசியத்தைக் கூறியிருக்க வேண்டும். ரியோ கிராண்ட் டேல் சர் என்ற பகுதியிலிருந்து, எல்லைப் புறத்திலிருந்து அந்த ஆங்கிலேயன் வந்தான். அவன் ஒரு கடத்தல்காரனாக பிரேஸிலில் இருந்தவன் என்று சொல்பவர்கள் நிறைய இருக்கிறார்கள். அந்த வயல்கள் புல் மண்டிக்கிடந்தன: நீர்ச்சுனைகள் உப்புக்கரித்தன: இந்தக் குறைபாடுகளை சரியாக்கும் பொருட்டு அந்த ஆங்கிலேயன் நாள் முழுவதும் தன் வேலையாட்களைப் போலவே கடினமாக உழைத்தான். கருணையின்மையின் எல்லைக்கு அவன் கண்டிப்பானவன் என்றும் துல்லியமான நியாயவாதி என்றும் அவனைப் பற்றிச் சொன்னார்கள்: ஒரு வருடத்தின் சில சமயங்களில் தன்னை ஒரு மாடி அறையில் வைத்துப் பூட்டிக்கொண்டான். இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து ஒரு போரிலிருந்தோ, ஒரு தலை சுற்றலில் இருந்தோ வெளிப்படுவது போல வெளுத்துப் போய், நடுங்கியபடி, குழம்பிப்போய் ஆனால் முன்பைவிட அடக்கி ஆள்பவனாக அவன் வெளிப்பட்டான். அந்தக் கண்ணாடி போன்ற கண்கள், சக்திமிக்க மெல்லிய உடல், மற்றும் நரைத்துப்போன மீசை ஆகியவை எனக்கு ஞாபகம் வருகின்றன. அவன் எவரிடமும் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை. அவன் பேசிய ஸ்பானிய மொழி மிக அரிச்சுவடித்தனமானதும் ப்ரேஸீல் மொழிக் கலப்பு மிக்கதும் எனபதும் உண்மை. ஏதாவது ஒரு துண்டுப் பிரசுரம் அல்லது ஒரு வியாபார சம்பந்தமான கடிதம் தவிர அவனுக்கு எந்தக் கடிதங்களும் வருவதில்லை.
வடக்குப் பிராந்தியங்கள் வழியாக நான் சென்றமுறை பயணம் செய்தபோது கராகுவடா அருவியின் எதிர்பாராத பொங்கி வழிதல் என்னை ஒரு இரவு கொலரோடாவில் தங்கும்படி கட்டாயப்படுத்தியது. சில கணங்களுக்குள் என் வரவு அங்கு சமயப் பொறுத்தமற்றுப் போனதை என்னால் உணர முடிந்தது.
என்னை அந்த ஆங்கிலேயனுக்கு உவப்பாக்கிக் கொள்ள முயன்றேன். சிறிதும் பகுத்து அறிதல் அற்ற பற்றுக்களில் ஒன்றை நான் பயன்படுத்தினேன்: தேசப்பற்று. இங்கிலாந்துபோன்ற வெல்ல முடியாத உணர்வுடைய ஒரு நாட்டினை என்னுடையதாகக் கூறினேன். என் நண்பன் ஒப்புக்கொண்டு ஆனால் தான் ஒரு ஆங்கிலேயன் இல்லை என்றான். அவன் அயர்லாந்தில் டங்கர்வான் பகுதியைச் சேர்ந்தவன். இதைக் கூறிய பிறகு, அவன் ஏதோ ஒரு ரகசியத்தைச் சொல்லிவிட்டது போல திடீரென்று நிறுத்தினான்.
இரவு உணவுக்குப் பிறகு நாங்கள் வானத்தைப் பார்க்க வெளியே சென்றோம். வானம் தெளிவாகி இருந்தது. ஆனால் தாழ்ந்த மலைகளுக்கு அப்பால் தெற்கு வானம் மின்னலால் கீறப்பட்டு, ஆழ்ந்து பிளக்கப்பட்டு, இன்னொரு புயலை கருக் கொண்டிருந்தது. சுத்தம் செய்யப்பட்ட உணவருந்தும் அறையில், இரவு உணவு பரிமாறிய பையன் ஒரு பாட்டில் ரம் கொண்டு வந்து வைத்தான். கொஞ்ச நேரம் நாங்கள் மௌனமாக அருந்தினோம்.
எனக்கு போதை ஏறிவிட்டதை நான் உணர்ந்தபோது என்ன நேரம் என்று தெரியவில்லை. என்னுடைய புத்துணர்ச்சியா, அல்லது சோர்வா, அல்லது பெருமகிழ்ச்சியா–அந்த வடுவைப் பற்றிக் குறிப்பிடச்செய்தது எது என்று தெரியவில்லை. ஆங்கிலேயனின் முகம் மாறுதல் அடைந்தது. அவன் என்னை வீட்டை விட்டு வெளியே தள்ளப்போகிறான் என்று சில வினாடிகள் நினைத்தேன். விரிவாக, தன் சாதாரண குரலில் அவன் கூறினான்:
“என் வடுவைப் பற்றிய வரலாற்றை ஒரு நிபந்தனையின் பேரில் நான் சொல்கிறேன்: அந்த பெரும் அவமானத்தை, இழிவான சந்தர்ப்பங்களின் தீவிரத்தை சற்றும் குறைக்கப் போவதில்லை.”
நான் ஒப்புக்கொண்டேன். அவனுடய ஆங்கிலத்தில் ஸ்பானிய மொழியையும், போர்ச்சுகீசிய மொழியையும் கலந்து அவன் சொன்ன கதை இதுதான்:
கிட்டதட்ட 1922இல் கன்னாட் நகரங்களில் ஒன்றில், அயர்லாந்தின் சுதந்திரத்திற்காக சூழ்ச்சியில் ஈடுபட்டிருந்த பலரில் நானும் ஒருவன். என்னுடைய தோழர்களில் சிலர்– தங்களை அமைதியான காரியங்களில் ஈடுபடுத்தியபடி இன்னும் உயிருடன் இருக்கிறார்கள்: மற்றவர்கள், புரிந்து கொள்ள முடியாத வகையில் பாலைவனத்திலும் கடலிலும் ஆங்கிலக்கொடியின் கீழ் போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள்; தகுதிவாய்ந்த மற்றொருவன் விடியல் நேரத்தில், ராணுவ வீரர்களின் குடியிருப்பு முற்றத்தில், தூக்கம் நிரம்பிய மனிதர்களால் சுடப்பட்டு இறந்தான். இன்னும் பலர் (மிகவும் அதிர்ஷ்டமற்றவர்கள் அல்ல) பெயரற்ற, உள்நாட்டுப் போரின் ரகசிய மோதல்களில் தங்கள் முடிவுகளை எதிர்கொண்டனர். நாங்கள் தேசீயவாதிகள்; கத்தோலிக்கர்கள்; நாங்கள் ரொமாண்டிக்குகள் என்று கூட சந்தேகப்படுகிறேன். .. அயர்லாந்து எங்களுக்கு நிறைவேற்றம் காணமுடியாத எதிர்காலமாக மட்டுமின்றி பொறுத்துக்கொள்ள முடியாத நிகழ்காலமாகவும் இருந்தது. அது ஒரு கசப்பான, போற்றிப் பாதுகாத்த புராணிகம்; அது வட்ட வடிவக் கோபுரங்களாகவும் சிவப்பு சதுப்பு நிலங்களாகவும் இருந்தது. பார்னலின் மறுதலிப்பாக இருந்தது. மாபெரும் காவியப் பாடல்களாக அவை காளைகளைக் களவாடிய நிகழ்வுகளைப் பாடின. இவை இன்னொரு பிறவியில் நாயகர்களாகவும் மற்றும் சிலவற்றில் மீன்களாகவும், மலைகளாகவும். . . . ஒருநாள் மதியம், நான் என்றைக்கும் மறக்க மாட்டேன். மன்ஸ்டர் நகரத்திலிருந்து வந்த கூட்டாளி எங்களுடன் சேர்ந்தான்: ஒரு ஜான் வின்சென்ட் மூன்.
அவன் இருபது வயது நிரம்பாதவன். அவன் ஒரே சமயத்தில் மெலிந்தும், தொங்கும் சதைப்பற்று உடலுடனும் காணப்பட்டான்;முதுகெலும்பு இல்லாத பிராணியொன்றினைப் போல அசௌகரியமான மனப்பதிவை ஏற்படுத்தினான். அவன் தீவிரத்துடனும், தற்பெருமையுடனும் ஒவ்வொரு பக்கத்தையும் படித்திருந்தான்–கடவுளுக்குத்தான் தெரியும் என்ன கம்யூனிஸ்ட் புத்தகங்கள் என்று. எவ்விதமான விவாதத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க அவன் இயக்கவியல் பொருள்முதல்வாதத்தைப் பயன்படுத்தினான். ஒருவன் மற்றவனை வெறுப்பதற்கு அல்லது விரும்புவதற்கு எல்லையற்ற காரணங்கள் கொண்டிருக்கலாம்: மூன் பிரபஞ்சத்தின் வரலாற்றையே மிக மோசமான ஒரு பொருளாதார பிரச்சனைக்குச் சுருக்கினான். புரட்சியானது வெற்றி யடையும்படி முன்பே தீர்மானிக்கப்பட்டிருக்கிறது என்று உறுதியாகக் கூறினான். ஒரு நாகரீகமான மனிதனுக்கு இழந்தபோன நோக்குகள் மட்டுமே கவர்ச்சிகரமானதாக இருக்கவேண்டும் என்று நான் அவனிடம் சொன்னேன். . . இரவு வந்துவிட்டிருந்தது; எங்களுடைய கருத்துமாறுபாடுகளை, கூடத்தில், மாடிப்படிகளில், தெளிவில்லாத தெருக்களில் தொடர்ந்தோம். அவன் வெளிப்படுத்திய தீர்மானங்களை விட அவற்றின் மறுக்க இயலாத, நிறுவப்பட்ட தன்மையே என்னைக் கவர்ந்தது. புதிய தோழன் விவாதிக்கவில்லை. உதாசீனத் துடனும் வெறுப்புடனும் தன் கருத்துக்களைக் கட்டளைத்தொனியில் தெரிவித்தான்.
“வெளிப்பகுதியில் அமைந்திருந்த வீடுகளுக்குப் பக்கத்தில் நெருங்கும் போது, சற்றும் எதிர்பார்க்காத துப்பாக்கிச் சத்தம் எங்களை ஸ்தம்பிக்க வைத்தது. (இதற்கு முன்பு அல்லது பிறகு ஒரு தொழிற்சாலையின் வெற்றுச் சுவரையோ அல்லது ராணுவவீரர்களின் குடியிருப்பையோ சுற்றி வந்தோம்)கற்கள் பாவப்படாத ஒரு தெருவில் நுழைந்தோம்; பற்றி எரியும் குடிசை ஒன்றிலிருந்து, நெருப்பு வெளிச்சத்தில் பூதாகரமாய்த் தெரிந்த ஒரு ராணுவ வீரன் வெளிப்பட்டான். உரக்கக் கத்தியபடி, எங்களை நிற்கச்சொல்லி உத்தரவிட்டான். என் நடையை துரிதமாக்கினேன்; என் தோழன் கூட வரவில்லை.நான் திரும்பினேன்: ஜான் வின்சென்ட் மூன் பயத்தினால் நித்தியப்படுத்தப்பட்டவன் போல ஈர்க்கப்பட்டு அசைவற்று நின்றான். நான் பின்னால் திரும்பி ஓடி ராணுவ வீரனை ஒரே அடியில் கீழே தள்ளி, வின்சென்ட் மூனை அவமானப் படுத்தி, என்னைத் தொடர்ந்து வர உத்தரவிட்டேன். நான் அவன் கையைப் பிடித்து இழுத்துச் செல்ல வேண்டியதாயிற்று; பயம் என்ற உணர்ச்சி அவனை ஏதும் செய்ய இயலாதவனாக்கி விட்டிருக்கிறது. ஒளிப்பிழம்புகளால் ஊடுருவப்பட்ட இரவின் ஊடாக நாங்கள் தப்பித்தோம். துப்பக்கிக் குண்டுகள் ஏராளமாய் எங்களை நோக்கியபடி வந்தபோது, அதில் ஒன்று மூனின் வலது தோளைக் காயப்படுத்தியது. பைன் மரங்களுக்கிடையில் நாங்கள் தப்பித்துச் சென்றபோது அவன் ஒரு பலவீனமான தேம்பலை வெளிப்படுத்தினான்.
“1923ஆம் வருடத்தின் இலையுதிர்காலத்தில் நான் ஜெனரல் பார்க்லியின் கிராமத்து வீட்டில் பாதுகாப்பாய் தங்கியிருந்தேன். (இதுவரை என்றும் நான் பார்த்திராத) அந்த ஜெனரல் நிர்வாகக் காரியமாற்றுவதற்கோ எதற்கோ பெங்கால் சென்றிருந்தார்; அந்த வீட்டுக்கு ஒரு நூற்றாண்டுக்கும் குறைவாகத்தான் வயதாகியிருக்கும். ஆனால் அது சிதைலமடைந்தும் நிழல் நிரம்பியும் இருந்தது. புரிபடாத வராந்தாக்களிலும் அர்த்தமற்ற பின் கூடங்களிலும் அது விரிவடைந்திருந்தது. காட்சிக் கூடமும், மாபெரும் நூலகமும் முதல் மாடியை ஆக்கிரமித்திருந்தன. சர்ச்சை மிகுந்த, உவப்பில்லாத புத்தகங்கள்–அவை ஒரு வகையில் 19ஆம் நூற்றாண்டின் வரலாறாக இருந்தன; நிஷாபூரின் அகன்ற முனைக் கொடுவாள்கள்–அவற்றின் உறைந்த வளைவுகளில் இன்னும் போரின் கொடூரமும் காற்றும் நிலைத்திருப்பது மாதிரியாகத் தோன்றியது. நாங்கள் பின்பக்கத்திலிருந்து (நான் நினைவு கொள்வது மாதிரி) நுழைந்தோம். மூன் நடுங்கியபடி, வாய் உலர்ந்து, அந்த இரவின் நடப்புகள் சுவாரஸ்யமானதென்று முணுமுணுத்தான்; நான் அவனின் காயத்திற்குக் கட்டுப்போட்ட பின் ஒரு கோப்பை தேநீர் கொண்டுவந்தேன்: என்னால் அவனின் “காயம்”’ மேலோட்டமானது என்று தீர்மானிக்க முடிந்தது. குழம்பிய நிலையில் அவன் திடீரென்று உளறினான்:
“உனக்குத் தெரியுமா நீ ஈடுபட்டது மிக ஆபத்தான காரியம்”.
அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்று நான் அவனுக்குச் சொன்னேன். (உள்நாட்டுப் போரின் பழக்கம், நான் எவ்வாறு இயங்க விரும்பினேனோ அவ்வாறு செயல்படத் தூண்டியது; மேலும் ஒரு நபர் பிடிபட்டாலும் கூட எங்கள் நோக்கத்திற்கு ஆபத்து ஏற்படும்).
“அடுத்த நாள் மூன் தன் நிதானத்தை அடைந்திருந்தான் ஒரு சிகரெட்டை ஏற்றுக் கொண்டு “நம் புரட்சிகர கட்சியின் பொருளாதார வழிமுறைகள்”’குறித்து என்னை ஒரு கடுமையான விசாரணைக்கு ஆளாக்கினான். அவன் கேள்விகள் மிகத் தெளிவாய் இருந்தன: நான் (உள்ளபடி) நிலைமை மோசமாக இருப்பதாகக் கூறினேன். ஆழ்ந்த துப்பாக்கி வெடி ஓசைகள் தெற்கைக் குலுக்கின. நம் தோழர்கள் நமக்காகக் காத்திருக்கிறார்கள் என்று மூனிடம் சொன்னேன். என்னுடைய மேல்கோட்டும் கைத்துப்பாக்கியும் என் அறையில் இருந்தன; நான் திரும்பியபோது மூன் கண்களை மூடியபடி சோபாவில் நீட்டிப் படுத்திருப்பதைப் பார்த்தேன். அவனுக்குக் காய்ச்சல் என்று அவன் கற்பனை செய்து கொண்டான். வலிமிக்க துடிப்பு ஒன்றினைத் தன் தோளில் அவன் வரவழைத்துக் கொண்டான்.
அந்த கணத்தில் அவனின் கோழைத்தனம் சரி செய்யவேமுடியாதது என்பதை நான் புரிந்து கொண்டேன். அவனைப் பத்திரமாக இருக்கும்படி குலைந்த தொனியில் வேண்டிக்கொண்டு நான் வெளியே கிளம்பினேன். இந்த பயந்த மனிதன் என்னை அவமானத்துக்கு உள்ளாக்கினான். வின்சென்ட் மூன் அன்றி ஏதோ நான்தான் கோழை என்பது போல. ஒரு மனிதன் எது ஒன்றைச் செய்தாலும், அது எல்லா மனிதர்களும் செய்ததைப் போலத்தான். அந்தக் காரணத்துக்காக தோட்டத்தில் இழைக்கப்பட்ட ஒரு துரோகம் மனித இனத்தையே மாசுபடுத்துவது தவறானாதல்ல. அந்தக் காரணத்துக்காக, அதைக் காப்பாற்றும் பொருட்டு ஒரு தனிப்பட்ட யூதனை சிலுவையில் அறைந்தது போதுமானது என்பது நியாயமற்றதாகாது. ஒருவேளை ஷோப்பன்ஹீரீன் கூற்று சரியாகவும் இருக்கலாம்: நானே எல்லா மனிதர்களும், எந்த மனிதனும் எல்லா மனிதனே, ஷேக்ஸ்பியரும் ஒரு வகையில் இந்த மோசமான ஜான் வின்சென்ட் மூன்தான்.
“ஜெனரலின் பிரம்மாண்டமான வீட்டில் ஒன்பது நாட்கள் கழிந்தன. போரின் அவசங்களையும் வெற்றிகளையும் பற்றி நான் பேசப் போவதில்லை:என்னை அவமானப்படுத்தும் அந்த வடுவின் வரலாற்றைக் கூற முயல்கிறேன். என் ஞாபகத்தில் அந்த ஒன்பது நாட்கள், கடைசி நாளின் முந்திய தினத்தைத் தவிர, ஒரே நாளாகத்தான் இருக்கிறது. அன்று எங்கள் ஆட்கள் ராணுவக் குடியிருப்புக்களில் நுழைந்தனர். எல்ஃபின் பிராந்தியத்தில் யந்திரத் துப்பாக்கிகளுக்கு இறையாகிப் போன எங்கள் பதினாறு தோழர்களுக்கு ஈடாய் மிகச்சரியாக வஞ்சம் தீர்க்க முடிந்தது அன்று. விடியற்காலையின் தெளிவின்மையில், காலை உதிக்கும் முன் நான் வீட்டிலிருந்து வெளியேறினேன். இரவு கவியும் சமயத்தில் திரும்பினேன். மேல் மாடியில் என் தோழன் எனக்காகக் காத்திருந்தான்: அவனின் காயம் அவனை வீட்டின் கீழ்ப்பகுதிக்கு இறங்க அனுமதிக்க வில்லை. எஃப்.என்.மாட் என்பவரோ அல்லது க்ளாஸ்விட்ஸ் என்பவரோ எழுதிய யுத்த தந்திரம் பற்றிய தொகுதி ஒன்றை அவன் கையில் வைத்திருந்தது என் நினைவுக்கு வருகிறது. “தரைப்படையே எனக்குப்பிடித்த ஆயுதம்”’ என்று ஒரு இரவு என்னிடம் மனம் திறந்து கூறினான். எங்களுடைய திட்டங்களைப் பற்றி விசாரித்தான்: அவற்றை விமர்சிக்கவோ அல்லது மாறுதல் செய்யவோ விரும்பினான். “நமது படுமோசமான பொருளாதார அடிப்படை”யை’அவன் கண்டனம் செய்யப் பழகியிருந்தான். வறட்டு கொள்கைக்காரனாகவும் கலகலப்பற்றவனாகவும் இருந்த அவன் ஒரு அழிவிற்கான முடிவை முன்னறிவித்தான். “அது ஒரு கொழுந்துவிட்டு எரியும் விவகாரம்”’ என்று முணுமுணுத்தான். உடல் அளவில் அவன் ஒரு கோழை என்பதை அசட்டை செய்ய வேண்டி அவனின் மன ஆணவத்தைப் பெரிதாக்கிக் காட்டினான். நல்லதற்கோ, கெட்டதற்கோ, இவ்வாறு ஒன்பது நாட்கள் கழிந்தன.
பத்தாவது நாள் நகரம் இறுதியாக வேட்டை நாய்களிடம் சிக்கியது. உயரமான, மௌனமான குதிரை வீரர்கள் சாலையில் திரிந்து கண்காணித்தார்கள். சாம்பலும் புகையும் காற்றில் மிதந்தது: ஒரு சதுக்கத்தின் மையத்தில் வீரர்கள் தங்கள் குறிக் கூர்மையை முடிவற்று பயிற்சி செய்துகொண்டிருந்த ஒரு போலி மனித உருவை விட மெலிதான மனப்பதிவே இருக்கக் கூடிய அளவில், தரையின் ஒரு மூலையில் மனிதச் சடலம் வீசப்பட்டுக் கிடந்ததைப் பார்த்தேன். . . . வானில் விடியல் தெரியும் நேரம் நான் கிளம்பினேன்: மதியத்திற்கு முன் நான் திரும்பிவிட்டேன். நூலகத்தில் மூன் யாருடனோ பேசிக்கொண்டிருந்தான்; அவன் குரலின் தொனி அவன் தொலைபேசியில் பெசிக் கொண்டிருக்கிறான் என்பதைத் தெரிவித்தது. பிறகு என் பெயர் காதில் விழுந்தது; பிறகு நான் ஏழு மணிக்குத் திரும்புவேன் என்பதும், பிறகு நான் தோட்டத்தைக் கடந்து வரும்போது அவர்கள் என்னைக் கைது செய்ய வேண்டும் என்ற குறிப்புணர்த்தலும். என்னுடைய நியாயமான நண்பன் என்னை நியாயமான வகையில் விற்றுக்கொண்டிருந்தான். அவனுக்கு தன் சுயபாதுகாப்பு பற்றிய உறுதி தரவேண்டும் என்று கேட்டதும் என் காதில் விழுந்தது.”
“இந்த இடத்தில் என் கதை தெளிவற்றுத் தொலைகிறது. மயக்கமடையச் செய்யும் ஆழ்ந்த படிக்கட்டுகள் வழியாகவும், பயம் கொள்ளத்தகுந்த கூடங்கள் வழியாகவும் என்னைக் காட்டிக் கொடுத்தவனைப் பின் தொடர்ந்தேன் என்பது எனக்குத் தெரியும். மூன் அந்த வீட்டை மிக நன்றாக, என்னைவிட நன்றாகத் தெரிந்து வைத்திருந்தான். வீரர்கள் என்னை நிறுத்துவதற்கு முன்பு அவனை மடக்கினேன். ஜெனரலின் ஆயுதச் சேர்ப்புக்களில் ஒரு வளைந்த குறுவாளைப் பிடுங்கி எடுத்தேன். அந்த அரைச் சந்திரனால் அவனுடைய முகத்தில் என்றென்றைக்குமாக ரத்தத்தினால் ஆகிய அரைச்சந்திரனைச் செதுக்கினேன்.”
“போர்ஹே, ஒரு அந்நியரான உங்களிடம் இந்த மனந்திறப்பினைச் செய்திருக்கிறேன். உங்களின் வெறுப்பு அவ்வளவாய் என்னை வருந்தச் செய்யவில்லை.”
இங்கு கதை சொன்னவன் நிறுத்தினான். அவன் கைகள் நடுங்குவதை நான் கவனித்தேன்.
“அப்புறம் அந்த மூன்?”’நான் கேட்டேன் அவன் காட்டிக் கொடுத்துக் பெற்ற பணத்தை எடுத்துக் கொண்டு பிரேஸீலுக்கு ஓடிவிட்டான். அந்த மதியம், சதுக்கத்தில் ஒரு போலி மனித உரு சில குடிகாரர்களால் சுடப்படுவதை அவன் பார்த்தான்.
நான் பலனின்றி கதையின் மிச்சத்திற்காகக் காத்திருந்தேன். இறுதியில் அவனை தொடர்ந்து சொல்லச் சொன்னேன்.
அப்பொழுது ஒரு கேவல் அவன் உடம்பை உலுக்கியது: ஒரு மெலிந்த மென்மையுடன் அவனின் வெண்மையான வளைந்த வடுவைச் சுட்டிக் காட்டினான்.
“நீங்கள் நம்பவில்லையா? அவன் திக்கினான். என் முகத்தின் மீது பெரும் பாதகத்தின் குறி எழுதப்பட்டு நான் அதைச் சுமந்து திரிவதை நீங்கள் பார்க்கவில்லையா? கதையின் இறுதிவரை நீங்கள் கேட்க வேண்டும் என்பதற்காக நான் இவ்வாறு கூறினேன். என்னைப் பாதுகாத்தவனைப் புறக்கணித்தேன் நான். நான்தான் வின்சென்ட் மூன். இப்பொழுது என்னைப் பழியுங்கள்.”
Translated by Donald A.Yates.
http://en.wikipedia.org/wiki/Jorge_Luis_Borges
flow1

சொல்லின் செல்வன்-ஆண்டன் பாவ்லொவிச் செகாவ்

Anton Pavlovich Chekhov

தமிழில் - எஸ். ஷங்கரநாராயணன்

கிரில் இவனோவிச் பாபிலோனவ் என்கிற கல்லுாரி உதவிப் பேராசிரியர் நல்லதோர் காலையில் நல்லடக்கம் செய்யப் பட்டார். நமது தேசத்தில் பரவலாக அறியப் பட்டபடி இரு துன்பங்களில் - மோசமான மனைவி மற்றும் போதைப் பழக்கம் - அவர் இறந்து போனார். அவரantChekhovது இறுதி ஊர்வலம் தேவாலயத்தில் இருந்து கல்லறை நோக்கிக் கிளம்பவும், அவருடன் பணியாற்றும் நண்பரான போப்லாவ்ஸ்கி நண்பன் ஒருவனைத் தேடி வாடகைக் கார் ஒன்றில் தாவியேறிப் போனார். கிரிகோரி பெட்ரோவிச் ஜபோய்க்கின் என்கிற அந்த நண்பன் இளைஞனேயானாலும் புகழ் மிக்கவன். மூர்த்தி சிறிது, கீர்த்தி பெரிது - என்னுடைய வாசகர்கள் அவனை அறிவார்கள் - ஜபோய்க்கின்  முன்தாயரிப்பே இல்லாமல் கல்யாணங்களிலும், பெருவிழாமேடைகளிலும், இழவு நிகழ்ச்சிகளிலும் உரையாற்ற வல்லவன். துாக்கமா, காலி வயிறா, மொடாக்குடியா, அட, கடும் காய்ச்சலா... எந்த நிலையிலும் நினைச்சால் அவனால் பேச முடியும். சீராகவும் மென்மையாகவும் வார்த்தைகள், ஏராளமான வார்த்தைகள் அவனிடம் இருந்து வழியும், குழாயில் இருந்து தண்ணீர் போல. அவனது பேச்சகராதியில் நெகிழ்ச்சிகரமாய் எராளமான, உணவு விடுதி ஈக்களைக் காட்டிலும் அதிகப்படியான, வார்த்தைகள் இருந்தன. உணர்வுபூர்வமாக நீண்ட உரையாகவே எப்போதும் பேசினான். அதனால் என்ன ஆகிப் போகுமென்றால், சில சந்தர்ப்பங்களில், குறிப்பாக சில வியாபாரிகளின் கல்யாணங்களில், அவன் பேச்சை நிறுத்த போலிசை வரவழைக்க வேண்டியதாகிவிடும்.
'உம்மைத் தேடித்தான் வந்தேன் பெரிய மனுஷா... ' போப்லாவ்ஸ்கி அவனது வீட்டில் நுழைந்தார். 'கோட்டும் தொப்பியும் போட்டுக்கோ. உடனே கிளம்பு. நம்மாள் ஒருத்தர் இறந்துட்டார். அந்தாளை மேலுலகத்துக்கு அனுப்பிட்டிருக்கோம். அவரை வழியனுப்ப நீயும் உன்னாலான உபசாரம் செய்யணும்... கூட்டத்தில் எங்க நம்பிக்கை நட்சத்திரமே நீதான். ஆள் ஏப்ப சாப்பையா இருந்தா உன்னைக் கூப்பிடற அளவுக்குப் பெரிய விஷயமா இராது. ஆனா பாரு... நம்ம செயலாளர் சாமி. ஒருவகையில் எங்க அலுவலகத்துத் துாண் மாதிரி. அத்தாம் பெரியாளை ஒரு நாலுவார்த்தை இல்லாம அடக்கம் செய்தா அசிங்கம் இல்லியா ? '
'ஓ செயலாளரா... ' என வாயைப் பிளந்தான் ஜபோய்க்கின். 'விடாக் குடியன்... அவரா ? '
'ஆமாம். நொறுக்குத் தீனி, மதியச் சாப்பாடு எல்லாம் உனக்குக் கிடைக்கும்.... வாடகைக்கார் செலவும் பாத்துக்குவோம். கிளம்பு அருமைப் பையா. வழக்கமான கல்லறை உரைபோல வந்து அடிச்சி நொறுக்கு.... ஊரே மூக்குல வெரல் வைக்கப் போறாங்க. '
ஜபோய்க்கின் உடனே ஒத்துக் கொண்டான். தலையைச் சரி செய்தான். முகத்தில் சிறிது பவுடர் பூச்சு. போப்லாவ்ஸ்கியுடன் தெருவில் இறங்கி நடந்தான்.
'உங்க செயலாளர்... எனக்குத் தெரியும் அவரை... ' காரில் ஏறியபடி அவன் சொன்னான். 'உள்ளொண்ணு வெச்சி வெளியே வேற மாதிரிப் பேசுவான். ரெளடிப்பயல். மிருகஜாதி... சொர்க்கவாசல் திறக்கட்டும் அவனுக்கு - அவனை மாதிரியாளுங்களை சாதாரணமா பாக்கவே முடியாது. '
'பாருப்பா, செத்தவர்களைத் திட்டுறது சரியில்லை... '
'ஆமாமா. செத்தவங்களை முடிஞ்சா பாராட்டு, இல்லியா விட்ரு...ன்னு வசனம். ஆனாக்கூட.... அவன் அயோக்கியனய்யா. '
இறுதி ஊர்வலத்தை எட்டிக் கடந்து அத்தோடு இணைந்து கொண்டார்கள். சவப்பெட்டி மெதுவாக வந்து கொண்டிருந்தது. பெட்டி கல்லறைக்கு வந்து சேர்வதற்குள் மூன்று முறை அவர்கள் - இறந்தவனின் ஆரோக்கியத்துக்காக என்றபடி - 'தாகசாந்தி ' செய்து கொண்டார்கள்.
ஊர்வலம் கல்லறை அருகே வந்தது. மாமியாரும், சம்சாரமும், மைத்துனி ஒருத்தியும் சம்பிரதாயப்படி கதறி அழுதார்கள். சவப்பெட்டி குழிக்குள் இறக்கப்பட்டபோது சம்சாரம், 'நானும் போயிர்றேன்... ' என கீச்சிட்டாள். ஆனால் போகவில்லை. ஓய்வூதியப் பணம் நினைவு வந்திருக்கக் கூடும். ஜபோய்க்கின் எல்லா சமாச்சாரமும் அடங்கட்டும் எனக் காத்திருந்துவிட்டு, முன்னால் வந்து நின்று, வந்திருந்த எல்லாரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, ஆரம்பித்தான்.
'என் கண்களையே, காதுகளையே நம்புவதா வேணாமா ? இந்தக் கல்லறை, இந்த அழுதுசிவந்த முகங்கள், இந்த முனகல்கள், இந்தத் துயரங்கள்... எல்லாம் கொடூரமான கனவுதானே ? ஆ - இது கனவு அல்ல. நம் கண்கள் நம்மை ஏமாற்றவும் இல்லை... சற்று முன்வரைகூட நாம் பார்த்தவர், மகா துணிச்சல்கார மனிதர், இளமைப் புத்துயிர்ப்பும் துாய்மையுமானவர், ஒரு தேனிபோல அபார சுறுசுறுப்புடன் நமது சமுதாயம் என்னும் தேன்கூட்டுக்காகப் பாடுபட்டவர்... மேலும்... ஆ அவர் இப்போது மண்ணோடு துாசியாகிப் போய்விட்டார். மாயக் கானல்நீராகிப் போனார். மீளமுடியாத மரணத்தின் கொடூரக் கரம் அவர் மேல் விழுந்து விட்டது. தொண்டுகிழ வயோதிகத்திலும் அவர் உற்சாகமும் பலமும் கொண்டிருந்தார். சாவு பற்றி நினைக்கவே இல்லை. ஈடு செய்யவே முடியாத இழப்பு இது! அவர் விட்டுச் சென்ற இடத்தை நிரப்ப வல்லார் யார் ? அரசுப் பணியாளர்களில் நல்லவர்கள் நிறைய இருக்கிறார்கள். ஆனால் புரோகோஃபி ஒசிபிச் தனித்தன்மைக்காரர். சுத்த சுயம்பு. தன் நேர்மையான பணியில் அவர் அடிமனதின் ஆழத்தில் இருந்து செயல்பட்டார். இரவு வெகுநேரம்வரை கூட அவர் அயராமல் பணிபுரிந்தார். ஆனாலும் ஆரோக்கியம் கெடாமல் இருந்தார். லஞ்ச லாவண்யங்களை அவர் சட்டை செய்ததும் இல்லை. ஆர்வப் பட்டதும் இல்லை.
லஞ்சம் வாங்க அவரைத் துாண்டியவர்களை அவர் எத்தனை வெறுத்தார். சிறு சிறு லெளகிகக் கையூட்டுகளால் தமது கடமைக்கு துரோகம் செய்ய அவரை இழுத்த நபர்களை அவர் ஒதுக்கினார். ஆமாமாம், நம்ம கண்ணு முன்னாடியே புரோகோஃபி ஒசிபிச் தமது சிறு மாத ஊதியத்தை, தம்மிலும் ஏழைபாழையான தம் அலுவலகப் பணியாளர்களோடு பகிர்ந்து கொண்டார். அவருடைய உதவி உபகாரத்தில் வாழ்ந்த அனாதைகளின், விதவைகளின் ஆழ்ந்த துக்கக் குரல்களை இப்போது நீங்களே கேட்டார்கள். தமது அலுவலகக் கடமையிலும் வேலையின் சிரத்தை மிகுதியிலும் அவர் தன் வாழ்வின் இன்பங்களையே ரெண்டாம் பட்சமாக்கினார். இல்வாழ்க்கையையே அவர் துறந்தார். உங்க எல்லாருக்குமே தெரியும்- தன் கடைசி நாள்வரை அவர் பிரம்மச்சாரி. ஆ தொழிற்சங்கத் தோழராக அவரை நிரப்ப யார் இருக்கிறார்கள் ? சவரம் செய்த அன்பான அவரது முகம்... அதன் மெல்லிய முறுவல்... இப்போதும் மனசால் நான் பார்க்க முடிகிறது. மிருதுவான சிநேகபூர்வமான அவரது குரல்... என்னால் கேட்க முடிகிறது. உங்க ஆத்மா சாந்தியடைக, புரோகோஃபி ஒசிபிச்... நேர்மையாளரே... புனிதமானவரே... உழைப்பாளரே... '
ஜபோய்க்கின் தொடர்ந்து பேசினான். ஆனால் கூட்டத்தில் ஜனங்கள் தங்களுக்குள் குசுகுசுக்க ஆரம்பித்து விட்டார்கள். எல்லாரையும் அவனது உரை திருப்திப் படுத்தவே செய்தது. சிலர் கொஞ்சம்போல அழக்கூட செய்தார்கள். ஆனால் அந்த உரை பலவிதங்களில் விசித்திரமாய் இருந்தது அவர்களுக்கு. முதல் விஷயம், இறந்து போனவரை பேச்சாளர் ஏன் புரோகோஃபி ஒசிபிச் என்று குறிப்பிட வேண்டும் ? மரித்தவர் கிரில் இவனோவிச் அல்லவா ? ரெண்டாவது, தொட்டுத் தாலி கட்டிய சம்சாரத்தோடு அவர் காலம்பூராவும் காள்பூளென்று கத்திக் கொண்டிருந்தார்... அவரை பிரம்மச்சாரி என்று எப்படிச் சொல்வ முடியும் ? மூணாவது, அவருக்கு செமத்தியான சிவப்பில் தாடி உண்டு. அதை அவர் எடுத்ததாக சரித்திரமே கிடையாது. ஆக ஒருத்தருக்கும் பேச்சாளர் சொன்ன, சவரம் எடுத்த முகம்... என்ற அடையாளம் விளங்கவில்லை. எல்லாரும் மண்டையைப் பிய்ச்சிக் கிட்டார்கள். ஒருத்தரை ஒருத்தர் பாத்துக் கிட்டு, தோளைக் குலுக்கிக் கொண்டார்கள்.
'புரோகோஃபி ஒசிபிச்... ' பேச்சாளன் தொடர்ந்தான். கல்லறையைப் பார்த்துக்கொண்டே அழுத்தமான பாதிப்புடன் பேசினான். 'துப்புரவான, எதையும் வெளிக்காட்டாத முகம். நீங்கள் பிடிவாதமான கண்டிப்புடன் செயல்பட்டார்கள். ஆனால் எங்க எல்லாருக்குமே தெரியும்... வெளிப் பார்வைக்கு எப்பிடி இருந்தாலும், உங்களுக்குள்ள இருந்தது நேர்மை தவறாத, சிநேகபூர்வமான அந்த இதயம். '
கொஞ்ச நேரத்தில் அந்தப் பேச்சில் மாத்திரம் அல்ல, பேச்சாளனிடத்திலேயே ஏதோ கோளாறு என ஜனங்கள் உணர்ந்தார்கள். ஓர் இடத்தில் அவன் குறிப்பாய்ப் பார்த்... லேசா அதிர்ந்து... அவனும் தோளைக் குலுக்கிக் கொண்டான். அந்தமேனிக்குப் பேச்சையே நிறுத்தி விட்டான். திக்குமுக்கிக்கிட்டு திரும்பி போப்லோவ்ஸ்கியைப் பார்த்தான்.
'அட அந்தாளு இருக்காருய்யா... ' என்றான் திகிலடிச்சிப்போய்.
'யாரு இருக்காருன்றே ? '
'ஏன் ? புரோகோஃபி ஒசிபிச்... அந்தா நிக்கிறாரு. அந்த கல்வெட்டு பக்கத்தில்... '
'அவரு சாகவே இல்ல. கிரில் இவானோவிச்தான் செத்திட்டாரு... '
'கிரில் இவானோவிச்தான் எங்க செயலாளர். நீ போட்டுக் கலக்கிட்டியே எல்லாத்தையும் பேமானி. புரோகோஃபி ஒசிபிச்சும் முன்ன எங்க செயலாளரா இருந்தவரு. அது நிஜம்தான். ஆனா ரெண்டு வருஷம் முன்ன அவர் தலைமை குமாஸ்தாவா செகண்ட் டிவிஷனுக்குப் போயிட்டாரு. '
'ஐய சாத்தானே நான் இப்ப என்ன பேச ? '
'நீ ஏன் நிறுத்தறே ? நீ பேசு. விவகாரம் அசிங்கமாயிரும்ல... '
ஜபோய்க்கின் கல்லறைப் பக்கம் திரும்பிக் கொண்டான். தொடர்ந்து அவன் விட்ட இடத்தில் இருந்து பேச்சை எடுத்தான். புரோகோஃபி ஒசிபிச் என்ற, மழுங்க சவரம் எடுத்த முகத்தார், அந்தப் பழைய குமாஸ்தா வாஸ்தவத்தில் அந்த இடத்தில் ஒரு நினைவுக் கல்வெட்டின் அருகில் நின்றிருந்தார். பேச்சாளனை அவர் பார்த்தபடி ஆத்திரத்துடன் உருமினார்.
அவரது சக ஊழியர்கள் 'வசம்மா மாட்டிக்கினியாக்கும் ' என்கிற தினுசில் அவரைப் பார்த்துச் சிரித்தார்கள். எல்லாரும் ஜபோய்க்கின்னுடன் சடங்குகள் முடிந்து திரும்பிக் கொண்டிருந்தார்கள். 'ஒராள உயிரோட புதைச்சாச்சி! '
'கடுப்படிச்சிட்டியே தம்பி ' என்று முணுமுணுத்தார் புரோகோஃபி ஒசிபிச். 'செத்தவனைப் பத்தி நீ அப்பிடிச் சொல்றது சரிதான். ஆனா உசிரோட இருக்கிறவன் அப்பிடி இருக்கறதாச் சொன்னா குசும்புக்கார கிண்டல்தான் அது. என்னத்தை நீ சொல்லிட்டிருந்தே ? லஞ்சம் வாங்க மாட்டார். அவருகிட்ட லஞ்சத்தை நீட்ட முடியாது. லஞ்சம் வாங்க இஷ்டப்படாதவர்... எவனையாவது போட்டுத் தாளிக்கணும்னா, அப்பிடிச் சொல்றதுதான். யாராவது உன்ட்ட என் முகத்தை விவரிக்கச் சொன்னாங்களா ? துப்புரவான, உணர்ச்சி தெறிக்காத... அட இருந்துட்டுப் போட்டும்யா. நான் பொறுமைசாலின்னு எல்லார் முன்னாடியும் சொல்லி அவமானப் படுத்திட்டியே... '
---
THE ORATOR by Anton Chekhov
நன்றி: திண்ணை
flow1