சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

04 டிசம்பர், 2011

மணியக்கா -- ஆக்கம்: மன்னார் அமுதன்


சந்திப்பிழை போன்ற
சந்ததிப்பிழை நாங்கள்
காலத்தின் பேரேட்டைக்கடவுள் திருத்தட்டும்
          -- நா.காமராசன் -காகிதப் பூக்கள்



மணியக்கா லயித்து ஆடிக்கொண்டிருந்தாள்.என்னதான் மாயம் இருக்குதடி... கண்ணண் இசைத்திடும் தேன்குழல் தான்.... இதயம் உருக்குதடி....என பாடலுக்குள் தன்னை இழந்தவளாக அனிச்சையாக உடல் வளைத்து ஆடிக்கொண்டிருந்தாள்.பரதம் தான் அவள்.அவள் தான் பரதம்.கண்கள் கிறங்கி, கண்ணணோடு ஒன்றாக கலப்பது போலவும், அவனோடு காற்று வெளியில் கை கோர்த்து நடப்பது போலவும் ஆடிக்கொண்டிருந்தாள். பெரிய பெரிய சபாக்களில் எல்லாம் அரங்கேற்றம் செய்தவள் மணியக்கா. ஆடிய காலும் பாடிய வாயும் சும்மாயிருக்காது என்பது போல் இன்று இந்த ஊர் மக்களின் ரெக்கார்ட் டான்ஸ் மேடையில் ஆடுகிறாள்.

மணியக்கா முறையாகப் பயின்ற நடனமங்கையாய் இருப்பாள் என யாருமே அறிந்திருக்கவில்லை. ஊரே வாய் திறந்து பார்த்துக் கொண்டிருந்தது. விமலனும் கண்வெட்டாமல் மணியக்காவையே பார்த்துக் கொண்டிருந்தான். வானிலிருந்து விழுந்து தெறிக்கும் ஆலங்கட்டிகளைப் போல வண்ண ஒளிகள் மணியக்காவின் மீது விழுந்து உருண்டு ஓடியது.

அவள் இடுப்பின் நெளிவும், மேல் துணியின் விலகலும் விமலனுக்குள் ஹார்மோனைத் தூண்டியது. குடித்திருந்த சாராயம் மணியக்கா சொன்ன அண்ணாச்சியின் சேட்டைகளை நினைத்து நினைத்து அவனுக்குள் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. ஆட்டம் முடியட்டும் என்று விமலன் பொறுமையின்றிக் காத்துக் கொண்டிருந்தான்.


-----------------------

மணியக்காவை முதன்முதலில் பார்த்த போது விமலனுக்கு வயிற்றுக்குள் ஏதோ பிசைந்தது.பேருந்தில் தூங்கிக்கொண்டிருந்தவனின் தோளில் ஒரு கை விழுந்து நெல்லூருக்கு எம்புட்டு தூரம் என்ற போது விமலன் திடுக்கிட்டுட்டான். பக்கத்தில் வாய் நிறைய வெற்றிலையும், நெற்றியில் பெரிய பொட்டும், பாவாடைக்குப் பதில் வேட்டியும், இரண்டு நாள் மீசை தாடியும் பின்னப்பட்ட தலைமுடியுமாக ஐந்தரை அடி உயரத்தில் இருந்தாள்.  ஒன்னுக்கொன்னு முரணா இருந்தாலும் கண்ணுல ஒளியும், முகத்துல ஒரு தேஜசும் இல்லாம இல்ல. நாலாவது இறக்கம் என்று விட்டேத்தியாய் சொல்லிவிட்டு திரும்பி மறுபக்கம் இருந்தவனிடம் வாடகைக்கு வீடு புடிக்க முடியுமா என்றாள். எண்ணங்களுக்குள் மூழ்கிக் கிடந்த விமலனுக்கு அவள் குரல் குளிக்கப் போகும் பௌபு செட்டுக் கிணத்துக்குள்ளிருந்து ஒலிப்பது போல இருந்தது.

விமலனுடைய உடலுக்குள் திடீரென ஏற்படும் மாற்றங்களுக்கும், மனதில் தோன்றும் விசித்திர எண்ணங்களுக்கும் உருவம் கொடுத்தது போல் இருந்தாள் அவள்.நானும் ஒரு நாள் இப்படித் தான் போய்விடுவேனோ என்ற எண்ணம் மேலோங்க உடல் சிலிர்த்தது. ஆம்பளையாடா நீ, நெளியாம நேரா நில்லுடா, ஒழுங்கா நட, நகத்தைக் கடிக்காத, நிலத்துல கோலம் போட்ட கட்ட விரலை உடைச்சுடுவேன், விமலா வாடா குளிக்கப் போலாம், அங்கல்லாம் கையை வைக்காதீங்க மாமா என்ற வார்த்தைக் கோர்வைகள் ஒன்றன் மேல் ஒன்றாய் விமலனின் காதுக்குள் விழுந்து மனதை நிறைத்துக் கொண்டிருந்தது.ஆம்பளைனா கோவப் படனும்டா, எல்லாத்துக்கும் அழுதுகிட்டு மூக்க வடிச்சிகிட்டா வந்து நிக்கிறதுனு அம்மா சொன்னது நினைவுக்கு வர, உனக்கெல்லாம் வீடு புடிச்சுக் குடுக்கிறது தான் எனக்கு வேலையான்னு நெஞ்சை நிமிர்த்திய போது பேருந்தில் இருந்தவர்கள் விமலனை ஒரு மாதிரியாய் பார்த்தார்கள். ஊருக்கு புதுசு அதான் கேட்டேன் முடியலன்னா விட்டுரு என்று பலகீனமாய் முனங்கிவிட்டு நெற்றியில் பூத்திருந்த வியர்வையை ஆட்காட்டிவிரலால் வழித்து, கட்டை விரலோடு சேர்த்து நளினமாய் சுண்டினாள்.

ஒரு துளி விமலனில் தெறிக்க தலையை உலுப்பித் திரும்பிப் பார்த்தான். அவள் அவனையே பாவமாய் பார்த்துக் கொண்டிருந்தாள். என்ன பேரு  என்றான். சுப்பிரமணி, மணியக்கானு கூப்பிடுவாக என்றாள்.

--------------

வேப்பங்குளத்துள ஒரு பெரிய வீடு வந்திருக்கு.கான்ராக்ட் எடுத்தாச்சு, வேலையாள் மட்டும் தான் பாக்கி. விமலா நீயும் வாறியா என்று பெயிண்டர் அண்ணாச்சி கேக்கும் போதே விமலன் சைக்கிளை எடுத்துக் கொண்டு தயாராகினான். முன்னாடி போயிட்டிரு விமலா. மாரியம்மன் கோயில் முக்குல நில்லு. இன்னும் ரெண்டாள பாத்து கூட்டியாந்திடுறன்னு போன அண்ணாச்சி அரை மணிநேரம் கழித்து மணியக்காவையும், சேகரையும் கூட்டிக் கொண்டு வந்துட்டிருந்தார்.


சைக்கிள் பாரில் ஒரு காலைப் போட்டுக் கொண்டு ஒரு காலால் ஊன்றி நின்று வேப்பமரத்தில் ஓடிக்கொண்டிருந்த அணில்களைப் பார்த்துக் கொண்டிருந்த விமலனுக்கு மணியக்காவைப் பார்த்ததும் கால்கள் வலுவிழந்து நிலத்தில் சரிவது போல இருந்தது. என்ன விமலா நாறின மீன நாயி பாக்காப்ல பாக்க... அதுவும் உன்னப்போல ரெண்டுங்கெட்டான் தான் என்ற அண்ணாச்சியின் தொனியில் நக்கல் தூக்கலாக இருந்தது.

முட்டிக் கொண்டு நின்ற கண்ணீரை அடக்கியபடி நா.. ஒன்னும் அப்டி இல்ல அண்ணாச்சி. சும்மா வாய்க்கு வந்தத பேசி ஆளுக முன்னாடி அவமானப் படுத்தாதிக என்று மட்டுமே விமலனால் சொல்ல முடிந்தது. அண்ணாச்சி விமலனைப் பற்றிச் சொன்ன தகவல் மணியக்காவிற்கு புதிதாக இருந்தது. ரொம்பத் தான் அலுத்துக்குறடே. அண்ணாச்சி இல்லாததையா சொல்லிட்டாக நீ ஆம்பளனா நாலு அடி நெளியாம நடந்து காட்டு என அண்ணாச்சியோடு சேர்ந்து கொண்டான் சேகர்.


அண்ணாச்சி வேலை கொடுக்கிறீக எங்கிறதுக்காக எது வேணும்ணானும் பேசலாம்னு நினைச்சிக்கிடாதிக. இந்த வேலை இல்லன்னா இன்னொரு வேலை. சின்னப் பயல அழ வைச்சிப் பாக்காதீக என்று மணியக்கா சொல்ல விமலனுக்கு மணியக்காவின் மீது முதல் முறையாக மரியாதை வந்தது.

உனக்கென்ன மணி. வாயிருக்கு .. பிழச்சுக்குவ. நம்மால அப்டியெல்லாம் முடியாது. பெயிண்ட் அடிச்சா தான் சோறு. பேசிகிட்டே நிக்காம நீயும் விமலனுமா அந்த கதைவுகளையும் சுவரையும் சாண்ட் பேப்பர் போட்டு தேச்சிருங்க. சேகரு சுண்ணாம்பை வடிச்சு நீலத்தைக் கலந்து ஒரு கோட்டிங் அடிச்சிட்டிருடேன்னு சொல்லிட்டே அண்ணாச்சி சைக்கிள எடுத்துட்டு கிளம்பிட்டாரு. அண்ணாச்சி திரும்ப வரும் போது மப்புல தான் வருவார்னும் விமலனுக்குத் தெரியும்.


அண்ணாச்சியோடு வெள்ளையடிக்க வருவது அவனுக்கு இது முதல் முறையில்ல. அண்ணாச்சிக்கு ஆள் கிடைக்கலன்னா விமலனையும் சேத்துக்குவார். விமலனுக்கு முக்காச் சம்பளம் குடுத்தாப் போதும். மேலதிகமா வேணும்னு கேட்கக் தெரியாதவன்.மேற்பார்வைக்கு ஆளில்லைனாலும் குடுத்த வேலையை செய்வான். இப்புடி எத்தன பேரு சம்பளத்த புடிச்சுகிட்டு குடுத்தாலும் புள்ளபேறுக்கு போயிருக்கிற அண்ணாச்சி பொண்டாட்டிக்கு பத்தவே பத்தாது.அவ வயிரும் வத்தவே வத்தாது.

ஆளில்லாத வீட்டில் ஆளுக்கொரு மூலையில் நின்று வேலை செய்வது ரெண்டு பேருக்குமே சங்கடமாக இருந்தது. யாரு முதலில் பேசுறதுன்னு யோசித்துக் கொண்டிருக்கும் போதே விமலன் தும்மினான். விமலா மூக்க மறைச்சு துண்ட கட்டிக்கோ. தூசியால்ல இருக்கு என சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டாள் மணியக்கா.


இரண்டாம் நாளிலேயே நீண்ட கால நண்பர்களைப் போல இருவரும் பேசிச் சிரித்துக் கொண்டே சைக்கிளில் போகும் போது ”ரெண்டுங் கெட்டான் ரெண்டும் ஒண்ணா போகுது.. இவனுக முகத்துல முழிச்சா உருப்பட்டாப் போல தான் என்று தொப்பையைத் தள்ளிக்கொண்டே போனார் தலையாரி.


தனக்குள் ஏற்படும் எதிரும் புதிருமான எண்ண அலைகளை மணியக்காவிடம் எப்படியாவது சொல்ல வேண்டும் என விமலன் நினைத்தாலும் கூச்சம் தடுத்தது. எப்படியாவது பேச்சை ஆரம்பிக்க வேண்டும் என்பதற்காக மணியக்கா, நீ நல்லா உயரமா ஆம்பளை மாதிரி தானே இருக்கிற, பிறகெதுக்கு பொம்பிளை மாதிரி நடந்துக்குற என்றான்.

கேட்டுக் கேட்டு புளிச்சுப் போய் எரிச்சல் படுத்துற கேள்வியா இருந்தாலும் அறிஞ்சுக்கனும்னு கேக்கிறவனுக்கு சொல்றது தானே நியாயம்னு மணிக்கு தோணிச்சு. பிறக்கிறப்போவும், வளர்றப்போவும் நானும் உன்ன மாதிரி ஆம்பிளயா தான் இருந்தேன். போக போக மனசோட ஆசை அதிகமாகி மூளையை கட்டிப் போட்டிருச்சு. நானும் இப்படியெல்லாம் இருக்கக் கூடாதுன்னு தான் முயற்சி பன்றேன். முடியலயே. மூளை தோத்துருது..ஆசை ஜெயிச்சுருது.

மனுசனோட வேறுவேறான குணாதிசயங்களுக்கும் காரணமான வெவ்வேறு மரபணுக்களை கற்றையாக ஒருங்கே கொண்டிருப்பது தான் குரோமோசோம். இந்த 46 குரோமோசோம்களும் இரண்டிரண்டாக மொத்தம் 23 ஜோடிகளாக இருக்கும். இதுல 22 ஜோடிகள் உடலின் பால் சம்பந்தப்படாத மற்ற அனைத்துப் பண்புகளையும் கட்டுப்படுத்தும். கடைசி ஜோடி குரோமோசோம்கள் பாலினம் சம்பந்தப்பட்டவை. அது எக்ஸ் எக்ஸ் என்று ஆண்களிலும் எக்ஸ் வை என்று பெண்களிலும் இருக்கும். இனப்பெருக்கத்தின் போது ஆண்களில் அது எக்ஸ் மற்றும் வை ஆகவும், பெண்களில் இரண்டு எக்ஸ்களாகவும் அளவில் மட்டுமல்ல பண்புகளிலும் சரிபாதியாக பிரிந்து கரு உருவாக உதவும். உருவாகும் கருவில் ஆணின் எக்ஸ்சும் பெண்ணின் எக்ஸ்சும் இணைந்து ரெண்டு எக்ஸ் குரோமோசோம் உருவானால் அது பெண்ணாக வளரும். ஆணின் வையும் பெண்ணின் எக்ஸ்சும் இணைந்து எக்ஸ்வை குரோமோசாமாக உருவானால் ஆணாகவும் வளரும். இன்னும் வேறுவிதமாக கூறினால் உருவாகும் கருவில் Y குரோமாசோம் இருந்தால் அது ஆணாகவும் Y இல்லையென்றால் அது பெண்ணாகவும் வளர்ச்சியடைகிறது எனலாம். ஒரு எக்ஸ் அல்லது ஒரு வை குரோமோசோம்  அதிகமாகிவிட்டால் அந்தக் குழந்தை என்னைப் போல் பிறந்துவிடுகிறது.ஆண் பெண் என்பதனை உறுப்பின் மூலமாக அறிஞ்சிரலாம். ஆனா திருநங்கை என்பதை ஆணும் பெண்ணும் பருவ மாற்றம் அடையும் பதிமூனு வயசிக்கு மேல தான் கண்டுபிடிக்கலாம்ன்னு அறிவியல் விளக்கமும் குடுத்தா மணியக்கா. ஆனா அது ஒன்னும் விமலனுக்குப் புரிவதாக இல்லை.மணியக்கா பேசிட்டிருக்கிறப்பவே சாராய நெடியோடு அண்ணாச்சி உள்ளே நுழைந்தார்.

வாங்குற சம்பளத்துக்கு வேலை செஞ்சா தான் உடம்புல ஒட்டும். ஆராய்ச்சி என்ன வேண்டிக் கிடக்கு. பேசிட்டே நின்னு பழகினா உடம்பு தினவெடுத்திரும் விமலா. வேலை செய்ய வளையாது. மணி நீ மேல வா, வேலையிருக்குனு சொல்லிட்டே அண்ணாச்சி மாடிப்படியேறி மேல் அறைக்குள் போனார். பின்னாலயே மணியும் போனா. போன வேகத்துலயே திரும்பின மணி நீ எல்லாம் மனுசனாடா.இப்புடிப் பொழைக்கிறதுக்கு சாகலாம்னு அண்ணாச்சியை வசைபாடிகிட்டே மாடிப்படிகளில் கீழிறங்கினாள்.

பின்னாலேயே ஓடி வந்த வந்த அண்ணாச்சி பாதிப் படிகளிலேயே மணியின் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு ஆரஞ்சு மிட்டாய்க்கு அடம் பிடிக்கும் சிறு குழந்தையைப் போல கெஞ்சினார். புரிஞ்சுக்கோ மணி.. பொண்டாட்டி வேற ஊரில இல்ல. சம்பளத்துல வேணும்னா இருபது ரூபா கூட்டித் தாறேன். மண்ணு தின்னுற உடம்ப மனுசன் தின்னுறதுல என்ன தப்பிருக்கு சொல்லு.அப்புடியே காப்பாத்தி வச்சு நீ யாருக்கு குடுக்கப் போறனு சொல்லிட்டே மணியக்காவை மேல் மாடிக்கு இழுத்துட்டுப் போனார்.


இதே போல தான் விமலன் பம்பு செட்டுல குளிச்சுட்டு இருக்கிறப்போ அங்க வந்த தலையாரி கிணத்துக்குள் குதிச்சு குளிக்க ஆரம்பித்தார். கொஞ்ச நேரத்துல விமலா நீச்சல் தெரியுமாடே உனக்குன்னு கேட்டவரிடம் எட்டிப் பார்த்து இல்லையென்று தலையாட்டினான். நீச்சல் தெரியாதவன்லாம் ஆம்பளையாடா . வா நா நீச்சல் பழக்கி விடுறேன்னு கூப்பிட தண்ணிக்குப் பயந்து படிகளில் இறங்கினான் விமலன்.

பயப்படாதடே இறங்கி வா நா இருக்கன்லே.. முதல்ல தண்ணிப் பயம் போகனும். பயப்படாம குதிச்சிரு.. முங்க விடாம நா தூக்கிடுறன்னு தலையாரி கரிசனையாய் சொல்ல விமலனும் குதித்தான். குதிச்சதும் தண்ணி வாய் மூக்கெல்லாம் போயி நாசியில ஏற மூச்செடுக்க முடியாமல் ஒரு நிமிடத்தில் சாவு இப்புடித் தான் வரும் போல என விமலன் நினைத்துக் கொண்டான். அதற்குள் தலையாரி விமலனின் முடியைப் புடிச்சு இழுத்து கடைசிப் படியில போட்டார். தலையாரி தொப்பையை நீருக்கு மேல் விட்டு ஒரு தவளை தலைகீழாய்க் கிடப்பது போல் மிதப்பதை பார்க்கும் போது விமலனுக்கும் நீச்சலை எப்படியாவது பழகிரனும்னு வைராக்கியம் வந்துருச்சு. மூச்சிரைப்பு அடங்கியதும் படியில புடிச்சுக்கிட்டே காலை மட்டும் அடிக்கத் தொடங்கினான். அதைப் பார்த்து பெரிதாய் சிரித்த தலையாரி தண்ணிக்குள்ள வந்தாத் தானுடா நீச்சல் பழகலாம்.என் கையப் புடிச்சுக்கோன்னு சொல்லி விமலனை நடுக்கிணத்துக்கு கூட்டிட்டு போயி அவன் எதிர்பார்க்காதப்போ இறுக்கி உதட்டோடு உதடு பதித்தார்.

சீய் விடுய்யா மானங்கெட்டவனேன்னு விமலன் உதறித் தள்ளி தண்ணிக்குள் மூழ்கி மூச்சுத் திணறி ஒரு கல்லைப் பிடித்து படியேறும் போது தலையாரி கட்டியிருந்த துண்டு விமலனின் கையில் இருந்தது.தலையாரி எதுவும் நடக்காதது போல் சிரித்துக் கொண்டே போகப் போக பழகிரும் வான்னு சொல்ல அருவருப்பாய் பார்த்த விமலன் துண்டைத் தூக்கி அவன் மேல் எறிந்துவிட்டு படியேறினான்.

படியிலிருந்து வேர்க்க விறுவிறுக்க இறங்கி வந்த அண்ணாச்சி நின்னுட்டே கனவு காணுறியோடே, இன்னைக்குள்ள தேய்ப்பு வேலையை முடிச்சுடனுன்னு சொல்லிட்டே போனார்.மணியக்காவுக்கு என்ன ஆயிருக்கும்னு அறிய விமலன் மாடிக்கு ஓடினான். அங்க மணியக்கா குப்புறக் கிடந்தா. விமலனைக் கண்டதும் உடையை ஒதுக்கியபடி எழுந்து கழிப்பறைக்குள் போனாள். உதடு கொஞ்சம் வீங்கியிருந்தது. பிறகு அன்றைய நாள் முழுவதும் ரெண்டு பேருமே பேசிக்கல.

வேலை முடிந்தும் இருவரும் பேசிக் கொள்ளாமலேயே வந்தார்கள்.விமலனின் வீட்டைக் கடக்கும் போது அப்பறங்காட்டி வீட்டுக்கு வா விமலா, ரெக்கார்ட் டான்ஸ் பாக்கப் போகலாம்னு மணியக்கா சொல்ல அதைக் கேட்டுக்கொண்டு நின்ற விமலனின் அம்மா சேர்க்கை சரியா இருந்தாத் தானடே நீ சரியா இருப்ப. இப்புடி ரெண்டுங் கெட்டாங் கூட திரியறதுக்கா ஒத்தப் பிள்ளையப் பெத்தன். நீ பசங்க கூட திரியறது தானே. எதுக்கு இது கூடல்லாம் சேருறன்னு கத்தினா.

எல்லாம் எனக்குத் தெரியும்னு சொன்னபடியே விமலனும், எதையுமே கேட்காதது போல மணியக்காவும் ஆளுக்கொரு பக்கமாய் போனார்கள். குளிச்சு, சாப்பிட்டுட்டு கொஞ்சம் இருட்ட ஆரம்பிக்க மணியக்கா வீட்டுக்குப் போனான் விமலன். மணியக்கா நல்லா குடிச்சுட்டு கிறங்கிய கண்களுடன் வீட்டிற்கு வெளியில் இருந்தாள். விமலனைக் கண்டதும் நா குழற எதோ சொல்லிவிட்டு கைகளை ஆட்டி பக்கத்தில் கூப்பிட்டாள். அவனுக்குள் கொஞ்சம் ஊத்திக் கொடுத்தா. முதலில் வேண்டாம் என மறுத்த விமலன் பிறகு மணந்து பார்த்துவிட்டு வாங்கிக் குடிச்சுட்டு மாங்காய் ஊறுகாயையும் முறுக்கையும் கடித்தான்.

மாடியில் என்ன நடந்திருக்கும் என்பதை எப்படியாவது அறிய வேண்டும் எனும் துடிப்பில் விமலன் காலையில் விட்ட கதையின் மீதியை மணியக்காவிடம் கேட்டான். மணியக்காவிற்கும் ஏதாவது சொல்ல வேண்டும் போல இருந்தது. ஆலய குருக்களா இருந்த அப்பாவுக்கு சேவை செய்ய கோயிலுக்குப் போனது, சங்கீதம், நாட்டியம் படிச்சது, முதல் முறையா சேலையோடு தன்னை பார்த்த தகப்பனார் கோயில் ஆனையின் காலில் கொண்டு போய் கட்டி விட்டது, காப்பாத்துறன் பேர்வழின்னு கூட்டிட்டுப் போய் இரவு முழுக்க தூங்க விடாம இம்சை பண்ணின சின்னக் குருக்கள் என்று எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சமா மணியக்கா சொன்னா.

விமலனும் தன் பங்குக்கு தனக்கு நடந்த சில சம்பவங்களையும் சொல்லி அழுதான். அழாதடா விமலா. எல்லாரும் குரோமோசோம் மாற்றத்தால இப்படி ஆகிறதில்ல.. சில பேர் வளர்ப்புலயும், முறையான பாலியல் கல்வி இல்லாததாலயும் இலகுவாக் கிடைக்கிற கலவி இன்பத்துக் அடிமைப்பட்டும் மனசளவில தன்னை ஒரு பெண்ணா நம்புறதாலயும் இப்படியாயிடுறாங்க. சம்போகிச்சு சுகம் அனுபவிக்கிற வரைக்கும் ஒவ்வொரு ஆம்பளையும் தன்னைத் தானே சந்தேகப்பட்டுக் கொண்டுதான் இருப்பான். ஆம்பளயாவோ பொம்பிளையாவோ பிறந்தா சந்தோசப்படனும்டா விமலா. அத விட்டுட்டு இவனுக நான் தான் பெருசு, நீ தான் பெருசுன்னு சண்டை போட்டுட்டே செத்துப் போயிடறானுக. வாழ்க்கையில நமக்கு ஒரு பொருள் கிடைக்கவே கிடைக்காதுன்னு தெரியறப்போ தான் அதன் வலியை உணர முடியும்.

எல்லாரையும் போல புருசன் வேணும், புள்ள வேணும்னு எனக்கும் ஆசை தான். ஆனா இவனுக எல்லாம் சம்போகிக்க மட்டும் தானே வருவானுக. இவனுகளுக்கு அன்புன்னா என்னன்னே தெரிய மாட்டேங்குது. தெரிஞ்சிருந்தாலும் அதை ஏன் என்கிட்ட காட்ட மாட்டேனுறானுக. நல்ல சினேகிதனாக் கூட பழக ஒருத்தனுக்கும் மனசில்லையே விமலா. நீ என் கூட சிநேகிதனா இருப்பியா, என் மேல அன்பா இருக்கியான்னு போதை உச்சத்துக்கு ஏற மணியக்கா விமலனிடம் அலம்பிக் கொண்டே கையை நீட்டி சத்தியம் செய்யச் சொன்னாள். விமலன் சத்தியம் செய்தபடி அவள் கையைப் பிடித்து எழுப்பி வா ரெக்கார்ட் டான்ஸ் பாக்கப் போகலாம்னு கூட்டிட்டுப் போனான்.

--

மணியக்கா ஆடிக் களைத்து மேடையில் நிற்கையில் ஒரு இரசிகக் குடிமகன் தள்ளாடிக் கொண்டே மேடையில் ஏறி மணியக்காவின் நெஞ்சுச் சட்டையில் 100 ரூபாயைச் செருவிட்டு விசிலடித்துக் கொண்டே இறங்கினான். அவன் பின்னாலேயே மணியக்காவும் தள்ளாடிக் கொண்ட இறங்க தலையாரியும் அண்ணாச்சியும் வழியை மறித்துக் கொண்டு நின்றார்கள்.அண்ணாச்சி தலையாரியிடம் சொல்லியிருப்பான். தலையாரி பல்லைக் காட்டிக் கொண்டே மணி எனக்காக நீ வீட்டுக்கு ஒருக்க வந்து ஆடனும், வெளிநாட்டு சரக்கு  வாங்கி வெச்சிருக்கேன்னு தலையைச் சொறிந்தார்.

அண்ணாச்சியையும் தலையாரியையும் இடித்துக்கொண்டு நடுவில் புகுந்த விமலன் சொருகிய கண்களோடு வா போகலாம் என மணியக்காவின் கையைப் பிடித்து இழுத்தான். அந்தப் பிடி அண்ணாச்சி காலையில் பிடித்து இழுத்ததைப் போலவே இருந்தது. கைய விடு விமலா என உதறி முடியாமல் போகவே விமலனின் பின்னால் போனாள் மணியக்கா.

நீ வா, நா சொல்றேன்னு பிடியைத் தளர்த்தாமல் இழுத்துப் போனான் விமலன். மணியக்கா ஆடும் போது வண்ண விளக்குகளில் மின்னித் தெறித்த அங்கங்கள் அவனுக்கு திரும்பத் திரும்ப கண்ணுக்குள் வந்தது. கொஞ்ச தூரம் இழுத்துப்போன விமலன் எதிர்ப்பட்ட மரத்தின் மறைவில் மணியக்காவை தள்ளினான். நடக்கப் போவதை புரிந்து கொண்ட மணியக்கா, விமலா நீ சத்தியம் பண்ணினடா, மறந்துட்டியா, நாம சிநேகிதனுகடாண்ணூ ஏக்கத்தோடு முணங்கிக் கொண்டே விழுந்தாள்.=====================================================நன்றி: ஜீவநதி டிசம்பர் (இளம் எழுத்தாளர்கள் சிறப்பிதழ் )

17 ஜூலை, 2011

ஆகஸ்ட் மாதப் பேய்கள்-கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்

Gabriel García Márquez,
தமிழில்: ரா.கிரிதரன்

காப்ரியல் கார்ஸியா மார்க்கெஸ் தமிgarcia-marquez-300x210ழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர்தான். கொலம்பியாவைச் சேர்ந்த தென்னமெரிக்க எழுத்தாளர். மாய யதார்த்தக் கதைகளின் பிதாமகராகக் கருதப்படுபவர். ‘One Hundred Years of Solitude’, ‘Love in the Time of Cholera ’ ஆகியவை இவரெழுதிய பிரபலமான புதினங்கள். 1982-ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு இவருக்குக் கிடைத்தது. இவருடைய ‘The Ghosts of August’ என்ற பிரபலமான சிறுகதையை ரா.கிரிதரனின் மொழிபெயர்ப்பில் படிக்கலாம்.
நடுப்பகலுக்கு சற்று முன்பாகவே நாங்கள் அரேட்சோ வந்து சேர்ந்துவிட்டோம். கடந்த இரண்டு மணிநேரங்களாக வெனிசுலாவைச் சேர்ந்த எழுத்தாளர் மிகைல் ஒடேரோ சில்வா வாங்கியிருந்த மாளிகையை அற்புதமான டஸ்கன் பகுதியில் தேடிக்கொண்டிருந்தோம். அது உக்கிரமான ஆகஸ்ட் வெயில் தினம். சுற்றுலாவுக்கு வந்த ஜனத்திரள் மட்டுமே இருந்ததால், அந்த இடத்தைப் பற்றித் தெரிந்தவர்கள் யாருமே இல்லை. பல வீணான முயற்சிகளுக்குப் பிறகு எங்கள் காருக்குத் திரும்பினோம். ஸைப்ரஸ் மரங்கள் வரிசையாக இருந்த, திசைக் காட்டும் பலகைகள் இல்லாத ஒரு தெருவைக் கடந்து நகரத்தை விட்டு வெளியே வந்தோம்.
அந்த மாளிகைக்கு ஒரு வயதான பாட்டி சரியான வழியைக் காட்டினாள். மாளிகையில் அன்று இரவைக் கழிக்கும் எண்ணமுண்டா என அந்தப் பாட்டி கேட்டாள். அங்கே மதிய உணவுக்கு மட்டும் செல்வதே எங்கள் நோக்கமெனக் கூறி பாட்டிக்கு விடைகொடுத்தோம். `அப்படியென்றால் சரி. ஏனென்றால் அது ஒரு பேய் வீடு` என பயங்காட்டினாள் பாட்டி.
நடுப்பகல் பேய்களை நம்பாத என் மனைவியும் நானும் அவளின் அறியாமையைக் கண்டு சிரித்தோம். ஆனால், ஒன்பது மற்றும் ஏழு வயதான என் இரு மகன்களும் பேயை நேரில் சந்திக்கப்போவதை எண்ணி மிகவும் மகிழ்ந்தனர்.
எங்களுக்காக மறக்கமுடியாத அற்புதமான மதிய உணவுடன் காத்துக்கொண்டிருந்த மிகைல் ஒரு தேர்ந்த உணவு ரசிகர் மட்டுமல்லாது ஓர் அற்புதமான எழுத்தாளரும் ஆவார். நேரம் கடந்து வந்ததால் மாளிகைக்கு உள்ளே பார்க்க முடியாமல் மேஜையில் சாப்பிட உட்கார்ந்துவிட்டோம். பூக்களால் அழகாக அலங்கரிக்கப்பட்ட மொட்டை மாடியில் சாப்பிட்டுக் கொண்டிருந்த எங்கள் முன் படர்ந்து விரிந்திருந்த நகரம் இயல்பை சற்றே தளர்த்தியது. மேலும் மாளிகையில் வெளிப்புறத் தோற்றத்தில் பயப்படும்படியாக ஒன்றுமே இல்லை.தொண்ணூறாயிரம் பேர் மட்டுமே கொண்ட அந்த மலையிலிருந்து பல அற்புதமான மேதாவிகள் பிறந்தார்கள் என்பதை நம்பமுடியவில்லை. அவர்களனைவரும் அரேட்சோவில் பிறந்தவர்களில்லை என அவருக்கே உரித்த கரிபியன் ஹாஸ்யத்துடன் மிகைல் ஒடேரோ சில்வா கூறினார்.
`லுடோவிகா எல்லாரைவிடவும் சிறந்தவர்` எனத் திட்டவட்டமாகக் கூறினார்.
குடும்பப்பேரைக் குறிப்பிடாது வெறும் லுடோவிகா: இந்த மாளிகையை ஆசையோடு கட்டிய அவர் கலைகளுக்கும் போர்களுக்கும் பெரிய ரசிகர். சாப்பிடும்போது லுடோவிகாவின் பிரம்மாண்டமான வலிமை, குழப்பங்களிலான அவர் காதல், குரூரமான அவர் இறப்பு என பலவற்றைப் பற்றி மிகுவேல் கூறினார். தன் மனைவியுடன் கலவிக்குப் பின் பைத்தியம்போல் படுக்கையிலேயே அவளைக் கத்தியால் குத்திவிட்டு, தன் மேலேயே உக்கிரமான வேட்டை நாய்களை ஏவி, உடம்பின் பகுதிகள் கிழிய அவர் இறந்ததையும் குறிப்பிட்டார். தன் காதலின் பாவங்களுடன் சமாதானம் செய்ய இரவு லுடோவிகா இதே மாளிகையில் பேயாக உலாத்துவதை அவர் உறுதிப்படுத்தினார்.
மாளிகையின் உட்புறம் பெரிதாக, அமானுஷமாக இருந்தது. நல்ல வெளிச்சமான பகல் பொழுதில் வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு, நிறைந்த மனத்துடன் கேட்ட இந்த கதைகள், விருந்தாளிகளை உற்சாகப்படுத்த உண்டாக்கப்பட்ட வழிகளில் ஒன்றாக எனக்குத் தோன்றியது. எங்கள் சிரமபரிகாரத்திற்குப் பிறகு பல எஜமானர்களால் மாற்றியமைக்கப்பட்ட அறைகளை அமானுஷம் பற்றிய பயமில்லாமல் நடந்து பார்த்தோம். புதுமையான படுக்கையறை, அழகான பளிங்குத் தரை, நேர்த்தியான குளியல் தொட்டி மற்றும் உடற்பயிற்சி சாதனங்கள் என முதல் தளம் மிகைலால் முழுவதாக மாற்றப்பட்டிருந்தது. நாங்கள் மதியம் உணவருந்திய மொட்டை மாடியும் மிகைலால் அழகான பூக்களுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது. இரண்டாவது தளத்தில் பலநூறு வருடங்களாக உபயோகப்படாமலிருந்த அறைகள் பல வடிவங்களில் இருந்தன. அந்த அறைகளின் அலங்காரங்கள் அவற்றின் போக்கிற்கு கை விடப்பட்டிருந்தன. ஆனால் மேல்தளத்தில், காலம் கூட நுழைய முடியாத அறையில், லுடோவிகாவின் படுக்கையறை எந்த மாற்றமுமில்லாமல் பழையபடியே இருந்ததைப் பார்த்தோம்.
அது அற்புதமான மாயக்கணம். தங்க நூல்களாலான விரிப்புடனிருந்த படுக்கை லுடோவிகா பலியிட்ட காதலியின் ரத்தத்தால் உறைந்திருந்தது.
அந்த அறையில் தங்கக் கேடயங்களுடன் இருந்த வாளும், கணப்புப் பிறையில் இருந்த சாம்பல் சரடுகளும், கல்லாய் மாறிய மரத்துண்டும் இருந்தன. வாழும் காலத்தில் அதிர்ஷ்டமில்லாமல் வாழ்ந்த ஒரு ஃப்ளோரெண்டீன்  பகுதிக் கலைஞரால் தங்க வேலைப்பாடுகளுடன் வரையப்பட்ட எண்ணெய் ஓவியம் ஆழ்ந்து யோசிக்கும் வீரனின் மன ஓட்டத்தை பிரதிபலித்தது. விவரிக்க இயலாத ஒருவித பழத்தின் மணம் அங்கே பரவியிருந்தது. அந்த மணம் என்னை மிகவும் பாதித்தது.
டஸ்கனியில் பகல் பொழுது நீண்டதாகவும் நிதானமாகவும் இருந்தது. சூரியன் இரவு ஒன்பது மணிவரை மறையவில்லை. மாளிகைக்குள் நடந்து முடிக்க மாலை ஐந்து மணியானது. அதன் பின்னர், ஸான் ஃபிரான்ஸ்கோவின் திருச்சபையில் பியரோ டெல்லா ஃப்ரான்செஸ்கா வரைந்த ஓவியங்களைப் பார்க்க மிகைல் வற்புறுத்தினார். சதுக்கத்தில் காபி குடித்துச் சற்று பொழுது போக்கிவிட்டு பெட்டிகளை எடுக்க மாளிகைக்குத் திரும்பும்போது இரவு உணவு தயாராக இருந்தது.  அதனால் சாப்பிடுவதற்காகத் தங்கினோம்.
நட்சத்திரங்கள் குழுமியிருந்த வானத்தின் கீழே நாங்கள் சாப்பிடும் போது, பிள்ளைகள் விளக்கின் உதவியுடன் மாடி அறைகளின் இருளை ஆராய்ந்துகொண்டிருந்தார்கள். முரட்டுக் குதிரைகளைப் போல் சத்தமிட்டுக்கொண்டே படிகளில் ஓடினர். என் பிள்ளைகள், லுடோவிகாவின் அறைகளுக்குள் அவர் பெயரை சந்தோஷமாக உரக்கக் கத்திக்கொண்டிருந்தது கேட்டது. அந்த மாளிகையிலேயே தூங்கலாமென்ற தந்திர யோசனையைக் கூறியதும் அந்த இருவர் தான். சந்தோஷத்துடன் மிகைலும் அவர்களை வழிமொழிய, விருந்தோம்பலின் கோட்பாட்டுக்கு மரியாதை கொடுக்கும் விதமாய் நாங்களும் மறுக்கவில்லை.
பயந்ததற்கு எதிர்மறையாய் என் மனைவியும் நானும் முதல் தள படுக்கையறையிலும், பிள்ளைகள் அதற்கு அடுத்த அறையிலும் நன்றாகவே தூங்கினோம். புதிதாக வடிவமைக்கப்பட்டிருந்ததால், இரண்டு அறைகளும் எந்தவிதமான அமானுஷத்தன்மையும் இல்லாமலிருந்தன.
உறக்கம் வரக் காத்திருக்கும்போதுதான் வரவேற்பறையின் கடிகாரத்திலிருந்து வந்த தூக்கமிலா பனிரெண்டு மணியோசை, அந்த பாட்டியின் மோசமான எச்சரிக்கையை எனக்கு ஞாபகப்படுத்தியது. மிகவும் களைப்பிலிருந்ததால் நாங்கள் இடரில்லாத ஆழமான தூக்கத்திலாழ்ந்தோம். காலை ஏழு மணிக்குப் பிறகு சூரிய ஒளி எங்கள் ஜன்னலின் வழியாக ஊடுருவிய போதுதான் நான் கண்விழித்தேன். மனைவி என் பக்கத்தில் அப்பாவித்தனமான உறங்கிக்கொண்டிருந்தாள். `இந்த காலத்திலும் பேய்களை நம்புவது என்ன மடத்தனம்` எனக் கூறிக்கொண்டேன்.
அப்போதுதான் அந்த பழங்களின் வாசனை என்னை அடைந்தது. உறைந்த சாம்பல்களும், கல்லாய் மாறிய மரத்துண்டுகளும், சோக வீரனின் தங்க வேலைப்பாடு மிகுந்த ஓவியமும் மூன்று அடி தூரத்திலிருந்து எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தது.
ஏனென்றால், நாங்கள் தூங்கிக்கொண்டிருந்தது முதல் மாடி படுக்கையிலில்லை; மாறாக அழுக்கான படுக்கை விரிப்பின் மேல், காதலியின் சூடான ரத்தத்தில் உறையாமல் ஊறிப்போயிருந்த - லுடோவிகாவின் படுக்கை.
***
நன்றி: சொல்வனம்
flow1

வான்கா- ஆண்டன் பாவ்லொவிச் செகாவ்

Anton Pavlovich Chekhov,
ஒன்பது வயது சிறுவன் வான்கா ழூக்கவ் வேலை பயிலுவதற்காக மூன்று மாதங்களுக்கு முன்பு புதைமிதி தயாரிப்பாளர் அல்யாஹினிடம் விடப்பட்டவன். கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முந்திய இரவு அவன் தூங்கவில்லை. எசமானும் எசமானியும் முதுநிலை வேலைப் பயிற்சியாளர்களும் கோவிலுக்குப் புறப்பட்டுச் செல்லும் வரை காத்திருந்தான்;பிறகு அலமாரியிருந்து மசிப்புட்டியையும் துருபிடித்த முனை கொண்ட பேனாக் கட்டையையும் எடுத்து வந்து, கசஙிப் போன காகிதத்தைப் பிரித்து வைத்துக் கொண்டு எழுத்த் தயாராகிவிட்டான். முதலாவது எழுத்தை வரைanton_pavlovich_chekhovயு முன் நெஞ்சு  படபடக்க இரண்டொரு தரம் வாயிற் கதவையும் ச்ன்னலையும் பார்த்துக்கொண்டான். புதைமிதி அச்சுக்கட்டை அடுக்குத் தட்டுகளுக்கு நடுவிலிருந்த சாமிப் படத்தை உற்று நோக்கியவாறு விக்கிச் செறுமிப் பெருமூச்சு விட்டுக் கொண்டான். காகிதம் பெஞ்சின்மேல் இருந்த்து, வான்கா பெஞ்சின் பக்கத்தில் தரையில் ம்ண்டியிட்டு அமர்ந்திருந்தான்.
     “அன்புக்குரிய தாத்தா கன்ஸ்தன்தீன் மக்காரிச்!” என்று எழுதினான். ”உனக்கு நான் கடிதம் எழுதுகிறேன்.கிறிஸ்மஸ் வாழ்த்துககள் அனுப்பிகிறேன்,ஆண்டவன் உனக்கு அருள் புரிய வேண்டுகிறேன்.எனக்கு அப்பாவும் இல்லை,அம்மாவும் இல்லை;உன்னை தவிர யாருமே இல்லை எனக்கு.”
இருண்ட சன்னல் கண்ணாடியை நோக்கி வான்கா கண்களை உயர்த்தினான். மெழுகுவத்தியின் பிம்பம் சன்னல் கண்ணாடியில் ஆடித் துடித்தது. அவனுடைய மனக் கண்முன் தாத்தா கன்ஸ்தன்தீன் மக்காரிச்தெளிவாய்த் தோற்றமளித்தார். ழிவரியோவ் என்றொரு நிலப்பிரபுவின் பண்ணையில் அவர் இரவு நேரக் காவற்காரராய் வேலை பார்த்து வந்தார். மெலிந்து சிறியவரான கிழவர் அவர், வயது சுமார் அறுபத்தைந்து இருக்கும். ஆனால் குறிப்பிடத்தக்க துடிப்பும் விறுவிறுப்பும் வாய்ந்தவர், சிரித்த முகமும் குடிபோதை கொண்டு மங்கிய கண்களுமுடையவர். பகற்பொழுதில் பின்கட்டு சமையலறையினுள் தூங்குவார், அல்லது சமையற்காரிகளோடு வேடிக்கையாய் பேசிக்கொண்டு உட்கார்ந்திருப்பார். இரவில் பெரிய ஆட்டுத்தோல் கோட்டு அணிந்து சடசடப்பியை ஆட்டி ஒலித்தவாறு பண்ணையைச் சுற்றி நடப்பார். அவருக்குப் பின்னால் கிழட்டு கஷ்கான்காவும் விலாங்கு என்ற இன்னொரு நாயும் தலையைத் தொங்க போட்டுக்கொண்டு செல்லும்.அதன் கரிய நிறத்துக்காகவும் நீளமான நீர்நாயை ஒத்த உடலுக்காகவும் அதற்கு விலாங்கு என்று பெயர். இந்த விலாங்கு பணிவு மிக்கதாய்  அருமையாய் வாலைக் குழைத்துக்கொண்டு வரும்; தெரிந்தவர்களாயினும் தெரியாதவர்களாயினும் எல்லோரையும் அன்பு ஒழுகும் அதே பார்வை கொண்டுதான் உற்று நோக்கும்.ஆயினும் யாராலும் அதை நம்ப முடியாது.அதன் அடக்கமும் பணிவும் வெளிவேஷமே தவிர மெய்யானவையல்ல; அதன் கள்ளத்தனத்தையும் குரோதத்தையும் மூடிமறைக்கவே பயண்பட்டன இவை.திருட்டுத்தனமாய் அணுகி வந்து காலைக் கடிப்பதிலும் , யார் கண்ணிலும் படாமல் குளிர்க் கிடங்கினுள் நுழைவதிலும், விவசாயிகளுடைய கோழிக்குஞ்சுகளைக் கவர்ந்து கொண்டு ஓடுவதிலும் அது தேர்ந்த திறமைசாலி. அதன் பின்னங்கால்களில் எத்தனையோ தரம் வெட்டு காயம் பட்டிருக்கும், இருமுறை அதைக் கட்டி அந்தரத்தில் தொங்க விட்டார்கள், வாரம் தவராமல் நையப் புடைத்து உயிர் போகும் நிலையில் விட்டுச் சென்றார்கள். ஆனால் அது யாவற்றையும் சமாளித்துக் கொண்டு உயிர் வாழ்ந்து வந்தது.
தாத்தா இந்நேரங்களில் அனேகமாய் வெளி வாயில் அருகே நின்று கண்களைச் சுளித்துக்கோண்டு,கோயில் சன்னல்களிலிருந்து சென்னிறத்தில் பளிச்சிடும் ஒளியைப் பார்ப்பார்;ஒட்டுக்கம்பளப் பொதிமிதிகளைக் கால்களில் மாட்டிக்கொண்டு தத்துப்புத்தென நடந்து வேலையாட்களோற்டு கும்மாள மடிப்பார். அவருடைய சடசடப்பி இடுப்பு வாரில் தொங்கும். குளிராயிருக்கிறது என்று சொல்லிக் கைகளை விரித்துத் தன்னைத்தானே கட்டிப்பிடித்துக் கொள்வார். அல்லது யாராவது சமையல் காரியையோ பணிப்பெண்ணையோ கிள்ளிவிட்டு கிளுகிளுத்துக் கிழட்டுச் சிரிப்பு சிரித்துக் கொள்வார்.
   “ஒரு சிமிட்டா எடுத்துக்கொள்” என்று அந்தப் பெண்களிடம் தனது பொடி டப்பாவைக் காட்டுவார்.
ஒரு சிமிட்டா எடுத்து மூக்கினுள் இழுத்து உடனே தும்முவார்கள் அந்தப் பெண்கள். தாத்தாவுக்கு ஆனந்தம் தாங்க முடியாது, வயிறு குலுங்கச் சிரிப்பார்.
    “உறைந்து போன மூக்குக்கு நல்லது! என்று கூவுவார்.”
நாய்களுக்குங்கூட மூக்குப்பொடி கொடுப்பார். கஷ்தான்கா தும்மிவிட்டுத் தலையை ஆட்டி ஆட்சேபித்தவாரு விலகிச் செல்லும். ஆனால் பணிவடக்கம் மிகுந்த விலாங்கு தும்முவது சரியல்ல என்று வாலைக் குழைத்துக் கொண்டு நிற்கும். வானிலை அற்புதமாயிருந்தது.காற்று அசங்காது அமைதியாய்,பளிங்கு போல் தெளிவாய், மாசு மறுவற்றியிருந்தது. கரிய இரவென்றாலும் கிராமத்தின் வெண்ணிறக் கூரைகளும், புகைபோக்கிகளிலிருந்து எழும் புகையும், உறைபனிக் கவசமிட்டு வெள்ளிபோல் பளபளத்த மரங்களும், வெண்பனிப் பெருக்குகளும் தெட்டத் தெளிவாய்க் கண்ணுக்குத் தெரிந்தன. ஒய்யாரமாய்க் கண் சிமிட்டும் விண்மீன்கள் வானத்தில் வாரியிறைக்கப் பட்டிருந்தன. பால்வெளி மண்டலம் விழா நாளுக்காகக் கழுவிச் சுத்தம் செய்யப்பட்டு வெண்பனியால் தேய்த்து மெருகிடப்பட்டது போல் கண்ணைப் பறிக்கும்படி எடுப்பாய் தெரிந்தது…..
வான்கா பெருமூச்சு விட்டவாறு பேனாவால் மசியைத்தொட்டு, மேலும் எழுதிச் சென்றான்:
     ”நேற்று என்னை அடித்து நொறுக்கிவிட்டார்கள். முடியைப் பிடித்து எசமான் என்னை வெளி முற்றத்துக்கு இழுத்துச்சென்று கடிவாள வாரால் நையப்புடைத்தார். காரணம் என்னவென்றால் அவர்களுடைய குழந்தையை ஆட்டிக் கொண்டிருக்கையில் தவறிப் போய் நான் தூங்கிவிட்டேன். சென்ற வாரத்தில் ஒரு நாள் எசமானி என்னைக் கெண்டை மீனைச் சுத்தம் செய்யச் சொன்னாள். நான் வால் பக்கத்தில் இருந்து ஆரம்பித்தேன். உடனே எசமானி அந்த மீனைப் பிடுங்கி அதன் தலையை என் முகத்திலே வைத்து தேய்த்தாள். ஏனைய வேலைப் பயிற்சியாளர்கள் என்னைக் கேலி செய்கிறார்கள், மது விடுதிக்குப் போய் வோத்கா வாங்கி வரச் சொல்கிறார்கள், எசமானுடைய வெள்ளரிக் காய்களை திருடி வரும்படிக் கூறுகிறார்கள்.எசமான் கைக்குக் கிடைப்பதை எடுத்து என்னை அடித்து கொல்லுகிறார். சாப்பிட இங்கே எனக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. காலையில் ரொட்டி தருகிறார்கள். மத்தியானத்துக் கஞ்சியும் இரவில் மீண்டும் ரொட்டியும் கொடுக்கிறார்கள். தேநீரோ, முட்டைக்கோஸ் சூப்போ எதுவும் எனக்குக் கிடப்பதில்லை, யாவற்றையும் அவர்களே தீர்த்துக் கட்டிவிடுகிறார்கள். என்னை நடையிலே படுக்கச் சொல்கிறார்கள், அவர்களுடைய குழந்தை கத்தும் போது நான் தூங்கக்கூடாது, அதை ஆட்டிக் கொண்டிருக்க வேண்டும். எனது அருமைத் தாத்தா, உனக்கு புண்ணியம் உண்டு, என்னை இங்கிருந்து அழைத்துச் சென்றுவிடு, கிராமத்துக்கு கூட்டிச் சென்றுவிடு, என்னால் இனி பொறுக்க முடியாது. தாத்தா உன்னை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்,எந்நாளும் மறக்காமல் உனக்காக பிரார்த்தனை செய்வேன், என்னை இங்கிருந்து அழைத்துச் சென்றுவிடு,இல்லையேல் நான் செத்துதான் போவேன்…..”
வான்காவின் உதடுகள் துடித்தன, கரிபிடித்த முட்டிக்கையால் கண்களைத் துடைத்துக் கொண்டு செறுமினான்.
     ”உனக்கு மூக்குப் பொடி இடித்து தருவேன்” என்று தொடர்ந்து எழுதினான்.
“உனக்காக ஆண்டவனை வேண்டிக் கொள்வேன். நான் எதாவது குறும்பு செய்தால் நீ எவ்வளவு வேண்டுமானாலும் என்னை உதைக்கலாம். எனக்கு அங்கே இருக்காதென நீ நினைத்தால், நான் காரியக்காரரிடம்  போய் என் மீது இரங்கக் கொள்ளும்படிக் கேட்பேன், புதைமிதிகளுக்குப் பாலிஷ் போடும் வேலையை எனக்குத் தரும்படி வேண்டுவேன்.அல்லது ஃபெத்யாவுக்குப் பதில் நான் ஆடு மேய்க்கப்போவேன். எனது அன்புக்குரிய தாத்தாவே, என்னால் சகிக்கமுடியவில்லை, எனக்கு உயிர் போகிறது. இங்கிருந்து ஓடிவிடலாம், நடந்தே கிராமத்துக்கு வந்துவிடலாம் என்று நினைத்தேன்.ஆனால் எனக்கு புதைமிதிகள் இல்லை, கொடுங்குளிர் தாங்கவே முடியாதே என்று பயந்து கொண்டு சும்மாயிருந்தேன். நான் பெரியவனானதும் உன்னைக் கருத்துடன் கவனித்துக் கொள்வேன். யாரும் உன்னைத் துன்புறுத்த விடமாட்டேன். நீ இறந்த பின் உன்னுடைய ஆத்மாவுக்காக பிரார்த்தனை செய்வேன், என் அம்மாவுக்காகப் பிரார்த்திக்கிறேனே அதே போல செய்வேன் உனக்காகவும்.
     ”மாஸ்கோ மிகப் பெரிய ஊர், கனவான்களது வீடுகளுக்குக் கணக்கே இல்லை, குதிரைகளும் ஏராளம்.ஆனால் ஆடுகள் இல்லை, நாய்கள் கொஞ்சங்கூட மூர்க்கமின்றி சாதுவாய் இருக்கின்றன. கிறிஸ்மஸ் பண்டிகையின் போது பையன்கள் நட்சத்திரம் எடுத்துச் செல்வதில்லை. கோயிலில் நம்மை பாட விடமாட்டேன்கிறார்கள். தூண்டில் முட்கள் அப்படியே தூண்டில் நூல்களும் கோல்களும் அடங்கலாய்க் கடையில் விற்கப்படுவதை முன்பு ஒரு தரம் பார்த்தேன் நான். எந்த மீன் வேண்டுமானாலும் பிடிப்பதற்க்கு ஏற்றவையாய் விதம் விதமாய் நன்றாய் இருந்தன, ஒரு பூடு எடையுள்ள பெரிய தோப்பா மீனைத் தாங்கக்கூடிய ஒன்று கூட இருந்தது. ப்ண்ணை வீட்டில் எசமான் வைத்திருக்கிறாரே அந்த மாதிரி துப்பாக்கியும் இன்னும் பலவிதமான துப்பாக்கிகளும் கடைகளில் விற்கிறார்கள், நான் பார்த்தேன்.ஒவ்வொன்றும் நூறு ரூபிகளுக்கு குறையாது. கசாப்புக் கடைகளில் காட்டுக் கோழிகளும் உள்ளான்களும் முயல்களும் இருக்கின்றன, ஆனால் கடையில் இருப்பவர்கள் இவை எங்கே சுடப்பட்டவை என்று சொல்ல மாட்டேன்கிறார்கள்.
     ”அருமைத் தாத்தா, பண்ணை வீட்டில் கிறிஸ்மஸ் மரம் வைக்கையில் எனக்கு ஒரு தங்கக் காய் எடுத்துப் பச்சைப் பெட்டியில் பத்திரமாய் வை. திருமதி ஓல்கா இக்னத்யென்னாவிடம் கேட்டு வாங்கு,வான்காவுக்கு என்று சொல்லு.”
நெடுமூச்சு விட்டு மீண்டும் சன்னல் கண்ணாடியை உற்றுப் பார்த்தான் வான்கா. பண்ணை விட்டு கணவான்களுக்கு கிறிஸ்மஸ் மரம் கொண்டு வருவதற்காக பேரனையும் அழைத்துக்கொண்டு தாத்தா புறப்பட்டுச் சென்றது அவனுக்கு நினைவுக்கு வந்தது. ஆகா அப்போதெல்லாம் காலம் எவ்வளவு இன்பகரமாய் இருந்தது! தாத்தா கெக்கலித்துக் கொள்வார், உறைபனி மூடிய தோப்பும் கெக்கலிக்கும், இதைப் பார்த்துவான்காவும் கெக்கலித்துக் கொள்வான். பிர் மரத்தை வெட்டத் தொடங்குமுன் தாத்தா புகைக் குழாயைப் பற்ற வைத்துப் புகைபிடிப்பார், ஒரு சிமிட்டா பொடி எடுத்து மூக்கில் வைத்து நெடுநேரம் உறிஞ்சுவார், குளிரில் நடுங்கும் வான்காவை பார்த்துச் சிரிப்பார்….உறைபனிக் கவசம் பூண்ட பிர் மரங்கள் தம்மில் சாவுக்காகக் குறிக்கப்பட்டிருப்பது யாராய் இருக்குமோ என்று ஆடாமல் அசையாமல் காத்திருந்தன. அப்பொழுது திடுமென ஒரு முயல் வெண்பனிப் பெருக்கைத் தாவி அம்பு போல் பாய்ந்து ஓடிற்று….தாத்தா இருப்பு கொள்ளாமல் துடிதுடித்துக் கத்துவார்:
     ”நிறுத்து அதை! நிறுத்து அதை!... நிறுத்து! ஓ! குட்டை வாலுச் சைத்தான்!”
மரத்தைத் தாத்தா பண்ணைவீட்டுக்கு இழுத்து வருவார், அவர்கள் அதைச் சிங்காரிக்கத் தொடங்குவார்கள்….திருமதி ஓல்கா இக்னத்தியெவ்னுதான் வான்காவுக்கு மிக்கப் பிடித்தவர், யாவரையும் விட முன்னிலையில் நின்று ஓடியாடி வேலைகள் செய்வார். வான்காவின் தாயாகிய பெலகெயா உயிரோடு இருந்த காலத்தில், பண்ணை வீட்டில் அவள் வேலை புரிந்து வந்தபோது ஓல்கா இக்னத்தியெவ்னா வான்காவுக்கு மிட்டாய் தருவது வழக்கம். அவனுக்கு அவர் எழுதவும் படிக்கவும் நூறு வரை எண்ணவும் சொல்லிக் கொடுத்து மகிழ்வார், நடனமாடுவதற்க்குக்கூட கற்றுத் தந்தார். ஆனால் பெலகேயா இற்ந்த பிறகு,அனாதையாகி விட்ட வான்கா பின்கட்டுச் சமையலறைக்கு, அவனுடைய தத்தாவிடம் அனுப்பப்பட்டுவிட்டான். அங்கிருந்து மாஸ்கோவுக்கு புதைமிதி தயாரிப்பாளர் அல்யாஹினிடம் கொண்டு வந்து விடப்பட்டான்…..
     ”தாத்தா, உடனே புறப்பட்டு வா, என்னை இங்கிருந்து அழைத்துச் சென்றுவிடு” என்று மேலும் எழுதினான் வான்கா. “ ஏசுநாதர் அருள் புரிவார், என்னை அழைத்துச் சென்றுவிடு, உன்னை நான் மன்றாடி கேட்டுக் கொள்கிறேன். அனாதைச் சிறுவன் நான், துன்புறுகிறேன், எனக்கு கருணை காட்ட வேண்டும்.எந்நேரமும் என்னை அடிக்கிறார்கள், எந்நேரமும் நான் பசியாய் இருக்கிறேன். துன்பம் தாங்க மாட்டாமல் எந்நேரமும் இங்கு நான் அழுது கொண்டிருக்கிறேன். புதைமிதி அச்சுக் கட்டையால் எசமான் என் மண்டையில் அடித்தார்.அப்படியே கிழே விழுந்த நான் மீண்டும் எழுந்திருக்கப் போவதில்லை என்றே நினைத்தேன். இங்கு எனது நிலை நாயினும் கேடானதாய் இருக்கிறது….அல்யோனாவுக்கும் ஒற்றைக் கண் எகோருக்கும் கோச் வண்டிக்காரனுக்கும் என் அன்பைத் தெரிவிக்கிறேன். என்னுடைய கன்சர்ட்டினா இசைத் துருத்தியை யாரிடமும் கொடுத்து விடாதே. உன்னுடைய பேரன் இவான் ழூக்கவ். அருமைத் தாத்தா, வா என்னிடம்.”
காகிதத்தை நான்காய் மடித்தான், ஒரு கப்பேக்கு கொடுத்து அதற்கு முந்திய தினம் அவன் வாங்கி வைத்திருந்த உறையினுள் அதைப் போட்டு மூடினான்…பிறகு சற்று சிந்தனை செய்து விட்டு, பேனாவால் மசியைத் தொட்டு எழுதினான்: “தாத்தா- தலையைச் சொறிந்து கொண்டு மீண்டும் சிந்திட்டுவிட்டு எழுதினான்:
கன்ஸ்தந்தீன் மக்காடிச். கிராமம்.
யாரும் குறுக்கிட்டு தன்னை எழுத விடாமல் தடுக்கவில்லையென மனம் மகிழ்ந்தவனாய்க் குல்லாவை எடுத்துத் தலையில் போட்டுக் கொண்டான். கோட்டு போட்டுக் கொள்ளாமலே வெறுஞ் சட்டையோடு தெருவுக்கு ஓடினான்.
முந்திய நாளன்று அவன் விசாரித்த போது, கசாப்புக் கடையில் இருந்தவர்கள் கடிதங்களைத் தபாற் பெட்டிகளில் போட வேண்டும். இந்தப் பெட்டிகளிலிருந்து அவை மூன்று குதிரைகளையும் குடிமயக்கம் கொண்ட வண்டிக்காரர்களையும் கணகணத்து ஒலிக்கும் மணிகளுமுடைய கோச் வண்டிகள் மூலம் உலகெங்கும் அனுப்பப்படுகின்றன என்பதாய்ச் சொல்லியிருந்தார்கள். யாவற்றிலும் அருகாமையிலிருந்த தபாற் பெட்டியிடம் ஓடி மதிப்பிடற்கரிய தனது கடிதத்தை அதன் இடுக்கினுள் போட்டான்…..
இதன்பின் ஒரு மணி நேரத்துக்கெல்லாம் இனிய நம்பிக்கைகள் இதமாய்த் தட்டிக் கொடுத்து அவனைத் தூங்க வைத்தன….அவனுடைய கனவில் ஒரு கணப்படுப்பு தோன்றியது. கணப்படுப்புப் பரணில் காலைத் தொங்கப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்த அவனுடைய தாத்தா அந்தக் கடிதத்தைச் சமையல்காரிகளுக்குப் படித்துக் காட்டினார்….கணப்படுப்புக்கு முன்னால் விலாங்கு தனது வாலைக் குழைத்துக் கொண்டு மேலும் கீழுமாய் நடை போட்டது….
1886
flow1

பெட்ரோல் நிலையம்-இடாலோ கால்வினோ

Italo Calvino,
தமிழில் பிரம்மராஜன்
அது பற்றி நான் முன்பே யோசித்திருக்க வேண்டும். ஆனால் இப்போது மிகவும் தாமதமாகிவிட்டது. பன்னிரண்டரை மணிக்கு மேலாகிவிட்டது. நான் நிரப்பிக் கொள்ள மறந்துவிட்டேன். சேவை நிலையங்கள் மூன்று மணிவரை மூடியிருக்கும். ஒவ்வொரு வருடமும் பூமியின் பாறை மடிப்புகளில், லட்சக்கணக்கான நூற்றாண்டுகளாய் மணல் மற்றும் களிமண் படிவங்களுக்கு இடையிலாக சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் இரண்டு மில்லியன் கச்சா எண்ணெய் மேலே கொண்டு வரப்படுகிறது. இப்பொழுது நான் புறப்பட்டால் பாதி வழியில் தீர்ந்துபோய் விடும் ஆபத்Calvino-italo து இருக்கிறது. எச்சரிக்கை அளவைமானி கொஞ்ச நேரமாகவே டேங்க் ரிசர்வ்வில் இருக்கிறது என்று எச்சரித்துக் கொண்டிருக்கிறது. பூமிக்கு அடியிலான உலகளாவிய சேமிப்புகள் இருபது சில்லரை வருடங்களுக்கு மேல் தாக்குப் பிடிக்காது என்று அவர்கள் கொஞ்ச காலமாகவே எச்சரித்து வந்திருக்கிறார்கள். அது  பற்றி  சிந்திப்பதற்கு  எனக்கு நிறைய நேரம்  இருந்தது.  எப்போதும்  போல  பொறுப்பில்லாமல்  நான் இருந்திருக்கிறேன். டேஷ்போர்டில் சிவப்பு விளக்கு மினுங்கி எரியத் தொடங்கும் பொழுது நான் கவனம் செலுத்துவதில்லை அல்லது விஷயங்களைத் தள்ளிப்போடுகிறேன். பயன்படுத்துவதற்கு முழு சேமிப்பும் இன்னமும் மிச்சமிருக்கிறது என்று எனக்கு  நானே  சொல்லிக் கொள்கிறேன் பிறகு மறந்து போய் விடுகிறேன். இல்லை, ஒரு வேளை, அதுதான் கடந்த காலத்தில், காற்று அளவுக்கே பெட்ரோல் அபரிமிதமாக இருந்த அந்த நாட்களில் நடந்திருக்கக் கூடும்.  கவனக் குறைவாக இருந்து விட்டு பிறகு அதைப் பற்றி மறந்து விடுவது. இப்பொழுது அந்த மினுங்கல்  வெளிச்சம்  வரும்  பொழுது அது ஒரு அபாயகரத்தையும், பெரும் அச்சுறுத்தலையும், ஒரே சமயத்தில் தெளிவின்றியும் ஆனால் நடந்து விடக்கூடியது என்கிற மாதிரியும் பரிமாற்றம் செய்கிறது.  பலவிதமான  பதற்றம்  நிறைந்த  சமிக்ஞைகள்  என எனது பிரக்ஞையின் மடிப்புகளுக்கிடையே படிந்து விடும் அவற்றுடன்  அந்த  செய்தியையும்  நான் எடுத்துப் பதிவு செய்து கொள்கிறேன். இது எனது ஒருவிதமான மனோநிலையில் கரைந்து விடுகிறது. அந்த மனோநிலையில் அதை என்னால் உதறிவிட முடிவதில்லை. அதே சமயம் அது அதன் விளைவானதொரு கச்சிதமான நடைமுறைக் காரியம் செய்வதற்கு என்னைத் தூண்டுவதில்லை. எடுத்துக் காட்டாக நான்  காண்கிற  முதல்  பெட்ரோல் நிலையத்தில் நிறுத்தி நிரப்பிக் கொள்வதற்கு.  அல்லது  சேமிப்பதற்கான உள்ளுணர்வு என்னைப் பற்றிக் கொண்டிருக்கிறதா–ஒரு அனிச்சையான  கஞ்சத்தனம்?  என்னுடைய டேங்க் தீர்ந்து போகப் போகிறது என்பதை  நான்  உணர்கிற  மாதிரியே  எண்ணெய்  சுத்தகரிப்பு கையிருப்புகள் குறைந்து வருவதையும், எண்ணெய்க் குழாய்களின் போக்குகள் பற்றியும், மேலும் எண்ணெய்க் கப்பல்கள் பாரங்களுடன் கடல்களை உழுது செல்வதையும் உணர்கிறேன். டிரில் பிட்டுகள் பூமியின் ஆழங்களைத் துழாவுகின்றன.  ஆனால்  அழுக்கு  நீரைத்  தவிர  வேறு எதையும் மேலே கொண்டு வருவதில்லை.  ஆக்ஸிலேட்டரின் மீதான  எனது கால் நமது பூமிக்கோளம் சேமித்து வைத்திருக்கும் கடைசி பீற்றுதாரை சக்தியை அதன் மிக எளிய அழுத்தம் கூட எரித்து விடக் கூடும் என்ற உண்மையை உணர்வதாகிறது. என்னுடைய கவனம் கடைசி சொட்டு எரிபொருளை உறிஞ்சுவதில் நிலை கொள்கிறது. டேங்க் ஏதோ ஒரு  எலுமிச்சைப்  பழம்  என்பது  போலவும்  அதிலிருந்து  ஒரு சொட்டு கூட வீணாக்கப்படாமல் பிழியப்பட வேண்டும் என்பது போலவும் நான் பெடலை அழுத்துகிறேன். நான்  வேகத்தைக்  குறைக்கிறேன்.  இல்லை.  அதிகப்படுத்துகிறேன். என் உள்ளுணர்வு பூர்வமான எதிர்வினை, நான் எந்த அளவுக்கு வேகமாகச் செல்கிறேனோ அந்த அளவுக்கு தூரமாக எனது பிழிதலில் இருந்து எனக்குக் கிடைக்கும் என்பதாக இருக்கிறது. மேலும் அது கடைசியானதாய் இருக்கவும் கூடும்.
நிரப்பிக் கொள்ளாமல் நகரத்தை விட்டுச் செல்லும் ஆபத்தில் நான் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை. நிச்சயமாக  திறந்திருக்கும் ஒரு பெட்ரோல் நிலையத்தை நான் கண்டுபிடிப்பேன். நிழல்மரச் சாலைகளில் காரை ஓட்டிக் கொண்டு, வேறுபட்ட பெட்ரோலிய கம்பெனிகளின் வர்ண அறிவிப்புப் பலகைள் முளைத்து நிற்கும் நடைபாதைகளையும், மலர்ப்படுகைளையும் தேடிக் கொண்டு செல்கிறேன். முன்பு அவை இருந்த ஆக்கிரமிப்புடன் இன்றில்லை–அந்த நாட்களில் புலிகளும் பிற விலங்குகளும் நமது என்ஜின்களுக்குள்  தீப்பிழம்புகளை உமிழ்ந்த காலத்தில் போல.  மீண்டும் மீண்டும் நான் திறந்திருக்கிறது  என்ற  அறிவிப்புப்  பலகையைப்  பார்த்து முட்டாளாகிறேன். அதற்கு அர்த்தம் என்னவென்றால் நிலையம் வழமையான நேரத்தில்  திறந்திருக்கும் எனவே மதிய இடைவேளையின் போது மூடியிருக்கும்.  சில  நேரங்களில்  ஒரு பெட்ரோல்  நிலைய  உதவியாளன்  ஒரு மடக்கு  நாற்காலியில் அமர்ந்தபடி  சாண்ட்விச்சை  சாப்பிட்டுக் கொண்டோ, அல்லது,  அரைத் தூக்கத்திலோ இருக்கிறான். மன்னிப்பு கோரும் தோரணையில் அவன் கைகளை விரித்தும் காட்டுகிறான் சட்டங்கள் அனைவருக்கும் ஒன்றுதான் — எனது கேள்வி கேட்கும் சைகைகள்  நான் அவை அவ்வாறு ஆகும் என்று அறிந்திருந்தவாறு பயனற்றவையாகின்றன. சகலமும்  எளிமையாகத் தோன்றிய காலம் முடிந்து விட்டது, அதாவது மனித சக்தியானது இயற்கை சக்தியைப் போலவே நிபந்தனையற்றும் தீராவே தீராமலும் உங்கள் சேவையில் இருக்கிறது என நீங்கள் நம்ப முடிந்த காலம். அப்போது பெட்ரோல் நிலையங்கள் எல்லாமும் உங்கள் வழியில், வரிசையாக கவர்ச்சியுடன் முகிழ்த்தவாறு, அவற்றின் உதவியாளன் பச்சை அல்லது நீலம் அல்லது கோடுபோட்ட தொளதொள முழு அங்கியை அணிந்தவாறு வண்டுகள் கூட்டத்தின் அரைபடலால் காரின் முன்பக்கத்துக் கண்ணாடி அசுத்தப்பட்டுப் போனதைத் துடைப்பதற்குத் தயாராக நீர் சொட்டும் ஸ்பாஞ்சினை கையில் வைத்துக் கொண்டிருப்பான்.
அல்லது, மாறாக. ஒரு சில வேலைகளை மேற்கொண்டிருந்த சிலர் இருபத்தி நாலு மணி நேரமும் வேலை செய்து கொண்டிருந்த  காலங்களின்  முடிவுக்கும்,  சிலவித  பொருள்கள் என்றைக்குமே தீர்ந்து போகாது  என்று  நீங்கள்  கற்பனை செய்திருந்த காலங்களின் முடிவுக்கும் இடையில் ஒரு முழு வரலாறே இருக்கிறது–அதன் நீளம் ஒரு நாட்டுக்கும் பிற நாட்டுக்கும்  வேறுபடுகிறது, ஒரு தனிநபருக்கும்  இன்னொரு  தனிநபருக்கும் கூட.  அதனால் நான் சொல்கிறேன் இந்த கணத்தில் செழுமைச் சமுதாயங்கள் என்று  அழைக்கப் பட்டவற்றின்  எழுச்சியையும்,  உச்சத்தையும்  வீழ்ச்சியையும்  நான்  ஒரே  சமயத்தில்  அனுபவம்  கொள்கிறேன்– ஒரு சுழலும் டிரில் கருவி ஒரு கணத்தில் பிளியோசீனிய, கிரெடீசிய, டீரசீய படிவப் பாறைகளின் ஊடாக ஒரு மில்லினியத்திலும் அடுத்த மில்லினியத்திலும் நுழைவதைப் போல.
கிலோமீட்டர்மானி தந்திருக்கிற தகவல்களை உறுதி செய்து கொண்டு காலம் மற்றும் புவி வெளியில் எனது நிலைமையைக் கணக்கெடுக்கிறேன். இப்பொழுதான் முள் பூஜ்யத்திற்கு வந்து நிற்பதையும், எரிபொருள் மானி இப்பொழுது நிலையாக பூஜ்யத்தில் நிற்பதையும் காலக் கடிகாரத்தின் சிறிய மணிக்கை இன்னும் மேற்புற கால்வட்டத்தில் நிற்பதையும் பார்க்கிறேன். மதிய வேளைகளில் தண்ணீருக்கான ஒப்பந்தம் தாகமாக இருக்கும் புலியையும் மானையும் கலங்கிய ஒரே குட்டைக்குக் கொண்டு வந்தது போல என்னுடைய கார் அதன் எண்ணெய் ஒப்பந்தம் அதை, ஒரு பெட்ரோல் நிலையம் அடுத்து மற்றொன்றுக்கு ஓடச் செய்யும் பொழுது  பயனின்றி புத்துணர்ச்சிக்காகத் தேடுகிறது. கிரெடீசிய உயிர்களின் உச்சிவேளைப் பொழுதுகளில் கடலின் மேற்பரப்பில் பொங்கிப் பரவின–வாழ் உயிரிகள் நுண்ணிய பாசிக்கூட்டங்கள்  நுண்ணிய பாசிகளின் அடர்ந்த கூட்டம், ப்ளாங்க்டன்களின் மெல்லிய ஓடுகள், மிருதுவான கடல் பஞ்சுகள், கூர்மையான பவளப் பாறைகள்–அவற்றினூடாய் ஒரு வாழ்வு சாவைத் தொடரும் நீண்ட சுழற்சியில் தொடர்ந்து கொதித்து, அவற்றினூடாய் வாழ்ந்து கொண்டேயிருக்கும்  சூரியனைக் கொண்டிருக்கும் அவை. இவை ஒரு கனமற்ற விலங்கு மற்றும் தாவரக் கசடுகளின் மழையாய் மாற்றப்படும் பொழுது,  மேலோட்டமான நீர்களில் படிந்து, பிறகு சகதியில் அமிழ்ந்து, பின் கடந்து செல்லும் பிரளயங்களினால் வழியாக அவை கால்கரீயப் பாறைகளின் தாடைகளில் மெல்லப்பட்டு,  சின்க்லைன் மற்றும் ஆன்ட்டிக்கிளைன் ஆகிய மடிப்புகளில் செரிக்கப்பட்டு, அடர்த்தியான எண்ணெய்யாக மாற்றப்பட்டு, இருண்ட, பூமியின் அடியிலான போரோசைட்டு களின் வழியாக மேலே உந்தித் தள்ளப்படுகின்றன–அவை பாலைவனங்களுக்கு மத்தியில் பீச்சி அடிக்கும் வரை. பின்பு பிழம்புகளாக வெடித்து மீண்டும் ஒரு முறை பூமியின் தளத்தை ஒரு புராதன மதியம் போல கண்கூசும் ஒளியால் சூடாக்குகின்றன.
மேலும், இங்கே மதியத்தின் மத்தியில் உள்ள நாகரீக பாலைவனத்தில் ஒரு திறந்திருக்கும் சேவை நிலையத்தைக் கண்டுபிடித்துவிட்டேன். கார்களின் கூட்டம் ஒன்று அதைச் சுற்றி பரபரத்துக் கொண்டிருக்கிறது. உதவியாளர்கள் ஒருவருமில்லை. பணநோட்டுக்களை மெஷின்களில் எடுத்துக் கொள்ளக் கூடிய சுய சேவை நிலையங்களில் ஒன்றுதான் அது. குரோம் நிற பம்ப் நாஸில்களை அவற்றின் உறைகளில் இருந்து வெளியில் எடுத்தபடி சுறுசுறுப்பாக இருக்கின்றனர். இயக்கக் குறிப்புகளை வாசிப்பதற்காக அவர்களின் கையசைவுகளை பாதியிலேயே நிறுத்திவிடுகின்றனர். தானாகவே உள்ளிழுத்துக் கொள்ளக் கூடிய ரப்பர் பம்ப்புகள் பாம்புகள் போல வளைகின்றன.  மாறுதல்களின் காலத்தில் உருவான,  எனது கைகள், எனது உயிர் பிழைப்புக்கான அத்தியவாசிய செயல்பாடுகளை வேறு கைகள் நிகழ்த்துவதற்குக் காத்திருந்து பழகிவிட்ட அந்த என்னுடைய கைகள் பம்ப்புடன் தடுமாறுகின்றன. இந்த நிலைமை நிலையானதல்ல என்பதை நான் எப்போதோ கொள்கை ரீதியில் அறிந்திருந்தேன். கோட் பாட்டளவில் என் கைகள் மனித இனத்தின் உடல் ரீதியான இயக்கங்கள் அனைத்தையும் மீட்டுக் கொள்வது தவிர வேறு எதையும் செய்ய விரும்பாது. பழங்காலத்தில் சீற்றம் மிகுந்த இயற்கையை இரண்டு வெறுங்கைகளால் மாத்திரம் நேர் கொண்டது மாதிரி இன்று காட்டுமிராண்டித்தனமான  இயற்கையை  விட அதிகம் எளிதாய், சந்தேகத்திற்கிடமின்றி இயக்கி விட முடியக் கூடிய யந்திர உலகத்தினை நாம்  எதிர் கொண்டிருக்கிறோம்.  நமது கைகள் இனி தமக்குத் தாமாகவே சமாளித்துக் கொண்டாக வேண்டிய, நமது தினசரி வாழ்வு சார்ந்திருக்கிற யந்திர உழைப்பினை பிற கைகளுக்கு மாற்றிக் கொடுக்க  இனி இயலாத உலகத்தில் இருக்கிறோம்.
நிஜத்தில் எனது கைகள் சிறிது ஏமாற்றம் அடைந் திருக்கின்றன.  பயன்படுத்துவதற்கு பம்ப் மிக எளிதாக இருக்கிறது.  சுயசேவை  நிலையங்கள்  ஏன்  பல  ஆண்டுகளுக்கு முன்னரே  சர்வ சாதாரணமாக ஆகவில்லை என வியக்க வைக்கிறது. ஆனால், ஒரு தானியங்கி சாக்லேட் விநியோக யந்திரத்தைப் பயன்படுத்துவதில் இருப்பதை விடவும் அல்லது வேறு எந்த பணம் எண்ணும் இயந்திரத்தை  இயக்குவதால் வருவதை விடவும் இதில் நீங்கள் கூடுதலான சந்தோஷத்தை பெறவில்லை. சிறிது கவனம் தேவைப்படும் ஒரே செயலாக்கம் பணம் செலுத்துவதில் அடங்கியிருக்கிறது. ஒரு சிறிய இழுப்பறையில் நீங்கள் ஒரு ஆயிரம் லயர் நோட்டை சரியாக வைக்க வேண்டும்–அதன் எலக்ட்ரிக் ஒளிக்கண் ‘குய்செப் வெர்டி’யின் தலை உருவப்பொறிப்பினை அடையாளப்படுத்திக் கொள்வதற்கு ஏற்றவாறு, அல்லது, ஒவ்வொரு வங்கி நோட்டின் குறுக்காகச் செல்லும் மெல்லிய உலோகப்பட்டியை அடையாளம் காணுமளவுக்கு குறுக்காகச் செல்லும்படி. அந்த நோட்டு விழுங்கப்படும் போது ஒரு வெளிச்சம் கிளம்பும்.  அப்பொழுது நான் விரைய வேண்டும், பம்ப்பின் நுனியை டேங்கின் வாயில் நுழைத்து  கச்சிதமாக, நடுங்கியபடி வரும் ஜெட்டை உள்ளே பொங்கிப் பீறிட நுழைக்க வேண்டும்.  இந்தப் பரிசினை நான் அனுபவிக்க விரைய வேண்டும். இது எனது அறிவுணர்வுகளை சந்தோஷப் படுத்துவதற்கு தகுதியற்றது எனினும் எனது போக்குவரத்து வழியாக இருக்கும் எனது உடற்பகுதிகள் அதற்கு ஆர்வத்துடன் ஏங்குகின்றன.  இவை எல்லாவற்றையும் சிந்தித்து முடித்ததுதான் தாமதம். அப்பொழுது ஒரு கூர்மையான ‘க்ளிக்’ ஓசையுடன் பெட்ரால் வருவது நின்று போய் சமிக்ஞைவிளக்குகள் அணைந்து போகின்றன. சில விநாடிகளுக்கு முன்பாக இயக்கி விடப்பட்ட சிக்கலான கருவி ஏற்கனவே இயக்கமற்று நிறுத்தப்பட்டுவிட்டது.  எனது சடங்குகள் உயிர் கொடுத்த நிலவுலகம் சார்ந்த சக்திகளின் நகர்வுகள் ஒரு கணத்திற்கு மேலாக நீடிக்கவில்லை.வெறும்  உலோகப் பட்டிகையாகக்  குறைக்கபட்ட ஆயிரம் லயர் நோட்டுக்கு மாற்றாக பம்ப் மிகக் குறைந்த அளவு பெட்ரோலையே தரும். கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை பதினோரு டாலர்.
நான் மீண்டும் ஆரம்பத்திலிருந்து தொடங்க வேண்டும். வேறு ஒரு நோட்டு, பிறகு மற்றது, ஒரு தடவைக்கு ஒரு ஆயிரம் என தர வேண்டும். பணமும் பாதாள லோகமும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. அவை நீண்டகாலம் பின்னோக்கிச் செல்கின்றன. அவற்றின் உறவு ஒரு பிரளம் அடுத்து மற்றொரு பிரளயமாக வெளிப்பாடு காண்கிறது–சில நேரங்களில் மந்தமாகவும், சில நேரங்களில்  மிகத்  திடீரென்றும். எனது டேங்கை சுயசேவை நிலையத்தில் நிரப்பிக் கொண்டிருக் கையில் பாரசீக வளைகுடாவில் புதையுண்டிருக்கும் ஒரு கருப்பு ஏரியில் ஒரு வாயுக் குமிழி வீங்கி உயர்கிறது. ஒரு எமீர் மௌனமாக தனது அகன்ற வெண்ணிற சட்டையில்  மறைக்கப்பட்ட கைகளை உயர்த்தி தனது மார்புக்கு குறுக்காக மடிக்கிறார். ஆகாயத்தைத் தொடும் அடுக்கு மாடிக் கட்டிடம் ஒன்றில் எக்ஸான் கம்ப்யூட்டர் ஒன்று எண்களை மெல்லுகிறது. கடலில் மிகத் தொலைவில் ஒரு சரக்குக்கப்பல் அது வேறு திசையில் செல்ல வேண்டும் என்ற ஆணையைப் பெறுகிறது. எனது பாக்கெட்டுகளில் நான் துழாவுகிறேன். காகிதப் பணத்தின் நோஞ்சான் சக்தி ஆவியாகிப் போகிறது.
என்னைச் சுற்றிலும் நான் பார்க்கிறேன். ஆளற்ற பம்ப்புகளுக்கிடையில் நான் ஒருவன் மட்டுமே மிஞ்சியிருக்கிறேன்.  இந்த நேரத்தில்  திறந்திருக்கும் ஒரே பெட்ரோல்  நிலையத்தைச் சுற்றியிருந்த கார்களின் முன்வருதலும் பின்போதலும் எதிர்பாராத விதத்தில் நின்று போயிற்று.  ஏதோ மிகச் சரியான இந்தக் கணத்தில் பதுங்கிக் கொண்டிருந்த பிரளயங்களின் ஒருமிப்பு திடீரென்று அந்த உச்சபட்சமான பிரளயத்தை உருவாக்கி விட்டதைப் போல–ஒரே சமயத்தில்  பம்ப்புகள், கார்புரேட்டர்கள், மற்றும் எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் எண்ணெய்க் கிணறுகளின் குழாய் வழிகள் போன்ற சகலமும் வறண்டு போகின்றன. முன்னேற்றம் அதற்கான ஆபத்துக்கள் நிறைந்ததாகத்தான் இருக்கிறது, இதில் பொருட்படுத்தப்பட வேண்டியது என்னவென்றால் நீங்கள் இதையெல்லாம் முன்னரே எதிர்நோக்கி விட்டீர்கள் என்று சொல்ல முடிவதுதான். இப்பொழுது சமீப காலமாக எதிர்காலத்தை என்னால் அச்சமின்றி கற்பனை செய்ய முடிகிறது. என்னால் ஏற்கனவே வரிசை வரிசையான, நூலாம்படை படிந்த, கைவிடப்பட்ட கார்களைப் பார்க்க முடிகிறது.  இந்த நகரம் ஒரு பிளாஸ்டிக் காயலான் கடையாக சிறுத்துப் போவதையும், முதுகின் மேல் சாக்குகளுடன் திரியும் மனிதர்கள் எலிகளால் துரத்தப்படுவதையும்  இப்பொழுதே என்னால் பார்க்க முடிகிறது.
திடீரென்று இந்த இடத்தை விட்டு அகல வேண்டும் என்ற ஏக்கத்தால் நான் பீடிக்கப்படுகிறேன். ஆனால், எங்கே போவது? எனக்குத் தெரியவில்லை. அதனால் பரவாயில்லை. ஒரு வேளை  சக்தியின் எந்தச் சிறு மிச்சம் விடப்பட்டிருக்கிறதோ அதை எரித்து சுழற்சியை முற்றுப் பெறச் செய்ய விரும்புகிறேனாக இருக்கலாம். இன்னும் ஒரு தாரைப் பெட்ரோலை வடித்து விட நான் கடைசி ஆயிரம் லயர் நோட்டைத் தோண்டி எடுக்கிறேன்.
ஒரு ஸ்போர்ட்ஸ் கார் பெட்ரோல் நிலையத்தில் வந்து நிற்கிறது. அதன் ஓட்டுநர் ஒரு இளம்பெண். அவளுடைய வழிந்தோடும் கூந்தல் சுழற்சிகளினாலும், கழுத்தை இறுக்கிப் பிடிக்கிற மாதிரி ஸ்வெட்டராலும் ஸ்கார்ஃபாலும் சுற்றப்பட்டு தெரிகிறாள். இந்த சிக்கு விழுந்த குவியலில் இருந்த ஒரு சிறிய மூக்கினை உயர்த்தியபடி சொல்கிறாள்: ”அவளை நிரப்பு”
நான் அங்கே பெட்ரோல் நிரப்பும் நாஸிலுடன் நின்று கொண்டிருக்கிறேன்.  நான் நிகழ்த்தும் இயக்கங்கள், நான் பயன்படுத்தும் பொருட்கள்,  நான் எதிர்பார்க்கும் மீட்பு என சகலமும் கவர்ச்சியில்லாமலிருக்கும் ஒரு உலகத்தில் குறைந்த பட்சம் அவை எரியும் பொழுது மகிழ்ச்சிகரமான ஞாபகங்களையாவாது விட்டுச் செல்லட்டும் என்பதற்கு வேண்டி இந்தக் கடைசி ஆக்டேன்களை அவளுக்கு அர்ப்பணம் செய்யலாம். ஸ்போர்ட்ஸ் காரின் எரி பொருள் செலுத்தும் மூடியைக் கழற்றுகிறேன். பம்ப்பின் வளைந்த மூக்கினை உள்ளே நுழைத்து பித்தானை அழுத்துகிறேன். அந்தப் பிரவாகம் உள்ளே செல்வதை உணர்கையில் இறுதியாக ஒரு தூரத்துச் சுகிப்பின் ஞாபகமொன்றினை அனுபவம் கொள்கிறேன். ஒரு உறவினை உருவாக்கக் கூடிய ஒரு விதமான வீர்ய சக்தி, ஒரு திரவ ஒழுகலோட்டம் எனக்கும் கார் ஸ்டீயரிங் வளையத்திற்கு முன்னால் அமர்ந்திருக்கும் அந்த அந்நியளுக்கும் இடையே நிகழ்கிறது.
அவள் என்னைப் பார்க்க வேண்டி திரும்புகிறாள். அவளது மூக்குக் கண்ணாடியின் பெரிய சட்டங்களை உயர்த்துகிறாள். அவளுக்கு ஒளிகசியும் ஊடுருவல் மிகுந்த பச்சைக் கண்கள் இருக்கின்றன: ”ஆனால் நீங்கள் பெட்ரோல் நிலைய உதவியாளர் இல்லையே. . .என்ன செய்கிறீர்கள் நீங்கள். . .ஏன்?” என் பக்கத்து காதலின் அதீதமான செயல்பாடு இது என அவள் புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மனித இனம் தன்னுடையதென சொந்தம் கொண்டாடிக் கொள்ளக் கூடிய வெப்பத்தின் கடைசி வெடித்தலில் அவளை நான் இணைக்க விரும்புகிறேன். அந்த செயல்பாடு ஒரு காதல் செயலாக இருக்கையில் வன்முறைச் செயலாகவுமிருக்கும், ஒருவிதமான வன்புணர்ச்சி, பாதாள சக்திகளின் ஆளை அழிக்கும் உக்கிரத் தழுவல்.
bramarajanஅ வளைக் ‘கப்சிப்’ என்று இருக்கச் சொல்லி சைகை செய்கிறேன். காற்றில் என் கையைக் கொண்டு கீழ் நோக்கிச் சுட்டுகிறேன். இந்த மயக்குநிலை எந்த கணத்தில் வேண்டுமானாலும் துண்டிக்கப் பட்டுவிடலாம் என எச்சரிப்பதற்கு என்பது போல. பிறகு நான் ஒரு விதமான வட்டவடிவக் கையசைப்பினைச் செய்கிறேன்–பெரிதாக ஒன்றும் வித்தியாசமில்லை என்று சொல்வது போல. மேலும் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால்  என் மூலமாக கருப்பு நிற புளூட்டோ பாதாள உலகிலிருந்து மேலே வருகிறான், அவள் வழியாக ஒரு சுடர் விடும் பெர்ஸிஃபோன்*þஐ தூக்கிச் செல்ல. ஏனெனில் அவ்வாறுதான் வாழும் வஸ்துக்களை கருணையற்று விழுங்குபவளான பூமி தன்னுடைய சுழற்சியை மீண்டும் தொடங்குகிறாள்.
தனது கூர்மையான, இளமையான முன்பற்களை வெளிக் காட்டியபடி அவள் சிரிக்கிறாள். அவள் தீர்மானமில்லாதவளாக இருக்கிறாள். காலிஃபோர்னியாவில் எண்ணெய்ப் படிவு களுக்காக மேற்கொள்ளப்பட்ட தேடல் அதில் வாள் வடிவப் பற்களையுடைய புலியும் அடக்கம்–கரிய ஏரிக்குழியின் மேற்புறமிருக்கும் நீர்ப்பரப்பால்தான் அந்த மிருகம் கட்டாயமாக ஈர்க்கப் பட்டிருக்கும். அந்த நீர்ப்பரப்பு அதை உறிஞ்சி உட்கொண்டு விட்டது.
ஆனால் எனக்கு அளிக்களிக்கப்பட்ட குறைந்த நேரம் முடிந்துவிட்டது.  பெட்ரோல் வருவது நின்று விட்டது. பம்ப் சலனமில்லாதிருக்கிறது. அணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது. மனித இனத்தின் சுழற்சி வாழ்வு நின்று போய், எல்லா இடங்களிலும் சகல என்ஜின்களும் எரிப்பதை நிறுத்திவிட்ட மாதிரி ஒரு கனத்த மௌனம் நிலவுகிறது.  இந்த பூமியின் மேல் ஓடு இந்த நகரங்களை மறுபடி உள்ளிழுத்துக் கொள்ளும் நாளில், மனித இனமாக இருந்த இந்த ப்ளாங்க்டன் படிவம் ஒரு மில்லியன் வருடங்களில் ஆஸ்பால்ட் மற்றும் சிமிண்ட்டின் புவியியல் அடுக்குகளால் மூடப்பட்டு விடும்  அது எண்ணெய்ப் படிவுகளாய்ப் பெருகும். யார் பொருட்டு என்று நாம் அறியோம்.
அவளுடைய கண்களுக்குள் நான் பார்க்கிறேன்: அவள் புரிந்து கொள்வதில்லை. ஒரு வேளை அப்பொழுதான் பயப்படத் தொடங்கியிருக்கிறாள்  போலும்.  நல்லது.  நான் நூறு வரை எண்ணுவேன். மௌனம் தொடர்ந்தால், நான் அவள் கையைப் பற்றுவேன். பிறகு நாங்கள் ஓடத் தொடங்குவோம்
.• .• .•
_______________________________________________
*பெர்ஸிஃபோன் பாதாள உலகத்தின் தேவதை. கிரேக்கப் புராணிகத்தின்படி ஒரு வருடத்தின் மூன்றில் ஒரு பகுதியில் பாதாள உலகத்திலும் ஒரு பகுதியில் பூமியிலும் வாழ்கிறாள். ரோமானியர்கள் Prosperina என்று இவளை அழைத்தனர். விதைகள் பூமியில் முளைக்கக் காரணம் என்று கருதப்படுகிறவள். எனினும் விதைமுளைப்புச் சடங்குகளில் பெர்சிஃபோனின் பெயரைச் சொல்லக் கூடாது என்ற ஐதீகம் இருந்தது.
Petrol Pump-Numbers in the Dark [1999] Vintage Edition, New York translated by  Tim Parks
flow1