குறுநாவல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குறுநாவல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

05 மார்ச், 2012

அவளைக் கொல்ல பத்து வழிகள்-மதியழகன் சுப்பையா -கொலை

கொலை




எனது எல்லாத் திட்டங்களும் தோல்வில் முடிந்தது குறித்து கவலையாக இருந்தது. சரி, கொலைத் திட்டங்களால் காரியம் சாதிக்க முடியவில்லை. அவளை எப்படியாவது கழற்றி விட்டு விடுவது என்று முடிவு செய்தேன். பலமுறை கொலைத் திட்டங்களை தீட்டிய நான் அவைகளில் தோல்விகளைத் தழுவியிருந்த போதிலும் திட்டமிடும் கலையில் தேர்ந்து விட்டிருந்தேன்.





நான் அவளுடனான உறவில் திருப்தியாக இல்லை என்றும் இத்துடன் உறவை நிறுத்திக் கொள்ளலாம் என்றும் குறுஞ்செய்தி ஒன்று தட்டி விட்டேன். உண்மையில் நான் அவளை விட்டு முற்றிலுமாக விலகுவதில் தீர்மானமாக இருந்தேன்.



அடித்துப் பிடித்து என் தொலைபேசியில் அழைத்தாள், நான் எடுத்துப் பேசவில்லை. தொடர்ந்து குறுஞ்செய்திகளை அனுப்பினாள், நான் கண்டுகொள்ளவில்லை. அழைப்புக்கும், குறுஞ்செய்திக்கும் பதிலளிக்காமல் இருந்தேன். நண்பர்கள் மூலம் தொடர்பு கொள்ள முயன்றாள். எல்லாவற்றையும் தட்டிக் கழித்தேன். முழுதாக ஒருநாள் கூட கடக்கவில்லை. பார்க்கலாம் என்னதான் செய்கிறாளென்று என்று கல்லாக இருந்து விட்டேன்.



’நீ இப்ப போன எடுக்கலைன்னா நான் செத்துடுவேன்’ என்று செய்தி அனுப்பினாள். இந்த செத்துப் போகும் வசனம் எல்லாரும் சொல்வதுதான் என்று போனை கொஞ்ச நேரம் ஆஃப் செய்து வைத்து விட்டு நண்பர்களுடன் பொழுதைப் போக்கினேன். இடையில் போனை எடுத்துப் பார்க்கவும் இல்லை. எதாவது கெஞ்சல் செய்திகளையும், அவளுடைய அழைப்புகளின் எண்ணிக்கையையும் வைத்து நான் மனமிறங்கிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.



மறுநாள். காலையில் போனை ஆன் செய்தேன். போனில் செய்திகள் அடுக்கிக் கொண்டிருந்தன. போன் ஒலித்தது. நண்பனின் அழைப்பு. போனை எடுத்து என்னடா? என்றேன்.



டேய்.. என்னடா ஆச்சு உன் போனுக்கு..எத்தனை தடவை கால் பண்றது மெசேஜ் பண்றது..? மெசேஜ் பாத்தியா? என்றான். ‘ டேய் போன் ஆஃப்பா இருந்துச்சு, என்ன விஷயம்?’ என்றேன்



’’உன் ஆளு தற்கொலை பண்ணிக்கிட்டாடா... ‘’ நாங்க ஹாஸ்பிட்டல்ல இருக்கோம். நீ வரியா? அவளுக்கு என்ன புராப்ளம்டா? உங்கிட்ட எதாவது சொன்னாளா? அவன் பேசிக் கொண்டே போனான். இடையிடையே ஹலோ.. ஹலோ என்றும் கத்திக் கொண்டிருந்தான். நான் அமைதியாக இருந்தேன். போனை துண்டித்து விட்டு அவள் பிணத்தைப் பார்க்கக் கிளம்பினேன். காகிதத்தில் விட்ட துளி எண்ணெய் போல் ஏதோ ஒரு திருப்தி என்னுள் படர்ந்து கொண்டிருந்தது.



அவளைக் கொல்ல பத்து வழிகள்-மதியழகன் சுப்பையா 10

பத்து




ஒரு கொலை செய்வது என்ன அவ்வளவு கஷ்டமான காரியமா? தினம் செய்தித் தாளில் வாசிப்பது எரிச்சலை உண்டு பண்ணியது. எப்படி இவ்வளவு சுலபமாக கொலைகளைச் செய்கிறார்கள் என்று வியப்புக்கு மேல் வியப்பாக இருந்தது. ஆனால் அவர்கள் மாட்டிக் கொள்ளும் கதை பயத்தையும் உண்டு பண்ணத் தவறவில்லை.





எனது திட்டங்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்து கொண்டிருப்பது எனக்கு மிகுந்த வருத்தமாகவும் அவமானமாகவும் இருந்த்து. ஒருவேளை திட்டங்கள் சரியில்லாமல் இருக்கலாம். அல்லது தடயங்கள் ஏதுமில்லாமல் நான் கொலை செய்ய திட்டமிடுவதால் இப்படி ஆகிறதோ என்னவோ. இல்லை அவளுக்கு ஆயுசு கெட்டியாக இருக்கலாம் இல்லையா? அப்படியெல்லாம் ஒன்றுமிருக்காது. இந்தக் கொலைத் திட்டம் நிறைவேறும் வரை கண்டிப்பாக நாத்திகனாக இருக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தேன்.



இந்த முறை நிச்சயம் கொலை நடக்கும். நான் வழக்கமாக போகும் மருத்துவர் ஊசிப் போடும் ஊசியோடு இணைந்த மருந்து குப்பியை ஆட்காட்டி விரலால் தட்டி விடுவார் பின் கொஞ்சம் மருந்தை பீய்ச்சி அடிப்பார். சிறு வயது முதல் மருத்துவரின் இந்த செயலைப் கவனித்து வருகிறேன். அதற்கான காரணம் கேட்ட போது. நரம்புக்குள் செலுத்தும் மருந்தில் காற்றுத் துளிகள் இருந்தால் அது மனிதனைக் கொன்று விடும் என்று விளக்கம் சொன்னார். எனக்கு வியப்பாக இந்தாலும் சந்தேகமாகவும் இருந்தது. ஆனாலும் இத்தனை ஆண்டுகள் அனுபவமிக்க ஒரு மருத்துவர் சொல்வது சரியாகத்தானே இருக்கும். அதுவுமில்லாமல் இது எளிய வழியும் கூட. சாட்சி, தடையம் இல்லாமல் கொலை செய்து விடலாம்.



இப்படியான அற்பக் காரணங்களால் மரணம் சம்பவிக்கும் வேறு செயல்கள் எவை என்று கேட்டேன். தலைக்குப் பின் புறம் கழுத்துப் பகுதி வழியாக மூளைக்கு போகும் நரம்புகளில் ஒன்றின் மீது கூர்மையான ஊசியால் குத்தி விட்டால் கூட மரணம் சம்பவிக்கும்.. ஆனால் ஊசி கண்டிப்பாக நரம்புகளில் ஒன்றில் தான் குத்தப் பட வேண்டும் என்றார் அழுத்தமாக.



என் தலைக்கு மேல் பல்ப் எரிந்தது. கண்டிப்பாக இந்த முறையில் அவளைக் கொலை செய்யலாம் என்று முடிவு செய்தேன். இது மிகவும் எளிமையான முறை மற்றும் தடயங்கள் குறித்து அக்கரைப் பட வேண்டியதில்லை.



மருத்துவரின் ஊசிப் போடும் முறைக்கு அவள் நோய்ப்பட வேண்டும். ஊசி போட்டுக் கொள்ளும் படி நோய் தீவிரமாக இருக்க வேண்டும். இதை ஏற்படுத்த முடியாது மேலும் இதில் மருத்துவரின் ஒத்துழைப்பும் தேவையாயிருக்கிறது. அதனால் இந்த வழி வேண்டாமென ஒதுக்கி விட்டேன். ஆனால் அவள் கழுத்து நரம்புகளில் ஒன்றில் ஊசியால் குத்திக் கொல்ல முடியுமே.



இதோ ஊசி தயார். அவளை சந்திக்க வேண்டும் கழுத்தில் ஊசி குத்தும் நிலையில் அவளை உட்கார வைத்துக் கொள்ள வேண்டும். ஆள் அரவமில்லாத இடமும் நேரமும் குறித்துக் கொண்டு ஆயத்தமானேன்.



ஆக்‌ஷா பீச். சரியான இடத்தேர்வு. ஆக்‌ஷா பீச்சில் மதிய நேரம் ஆள் நடமாட்டம் குறைவு. அதுவும் அந்த குன்றுப் பகுதியில் அடர்ந்தசெடிகளுக்கிடையில் யார் வரப் போகிறார்கள். காதலர்கள் அங்கே பல நிலைகளில் இருப்பதை பள்ளிப் பருவம் முதல் கண்டு வந்திருக்கிறேன்.



பீச்சுக்கு கூட்டிப் போவதாக சொன்னதும். அவள் கண்டிப்பாய் துள்ளியிருப்பாள். மிகுந்த உற்சாகத்துடன் பேசினாள். அவள் இப்படி பேசும்போதெல்லாம் வருத்தமாக இருக்கும். மனதை மாற்றிக் கொள்ளலாம் என்று கூட தோன்றும். ஆனால் இல்லை. இப்படி எவ்வளவோ முறை எப்படியெப்படியோ மனதை மாற்றிக் கொண்டாயிற்று.



மால்வானி சர்ச் பகுதியில் சந்திக்க திட்டம். பின் பைக்கில் ஆக்‌ஷா பீச் செல்ல முடிவு. இன்று புடவையில் வந்திருந்தாள். மெல்லிய அலங்காரம் தான் ஆனால் அப்படியொரு அழகு. பெண்களை மிக அழகாகக் காட்டும் ஆடைகளில் புடவைக்கு முதலிடம் கொடுக்கலாம். ரிக்‌ஷாவில் வந்து இறங்கியவளை பைக்கில் ஏற்றிக் கொண்டு பறந்தேன்.



ஆக்‌ஷா பீச்சை நெருங்கியதும் மெல்லிய காற்று இதமாக இருந்தது. பைக்கை ஓரமாக நிறுத்தி விட்டு அவளை செடிகளுக்குள் இழுத்துச் சென்றேன். அவளுக்கு அங்கே வேண்டாம் என்று இருந்தது. அலைகளைப் பார்த்தபடி பாறை மேல் உட்கார விருப்பம் தெரிவித்தாள். எனது திட்டம் என்னவாவது. கட்டாயப் படுத்தி கூட்டிச் சென்றேன். கண்டிப்பாய் உள்ளே போனால் கசமுசா செய்வான் என்று அவளும் ஆவலாய் வந்தாள்.



குறித்த இடம் காலியாகவே இருந்தது. ஆள் நடமாட்டமும் அவ்வளவாக இல்லை. குறிப்பாக நாங்கள் புதர் பகுதிக்குள் நுழைவதை ஒரு காக்கா குருவி கூட பார்த்திருக்காது என்பதில் உறுதியாக இருந்தேன்.



முதலில் நான் உட்கார்ந்து கொண்டேன். அவள் முதுகைக் காட்டி உட்காரச் சொன்னேன். வேண்டாமென மறுத்தவள், கட்டாயப் படுத்தியதும் உட்கார்ந்து கொண்டாள். அவள் கழுத்தின் கீழ் பகுதியிலும் முதுகின் மேல் பகுதியிலும் இதழ்களால் உழுதேன். அவள் சருமத்தின் வாசனை மூளையின் செயலற்ற பகுதிகளை சுறுசுறுப்பாக்கிக் கொண்டிருந்தது. விஷம் போல அவள் வாசம் என்னுள் ஏறிக் கொண்டிருந்தது.



என் பெயரை சொல்லி முனகியபடி என்மீது சாய்ந்தாள். சுதாரித்துக் கொண்ட நான் அவள் முதுகைப் பற்றி முன்னுக்குத் தள்ளினேன். ஊசியை மெல்ல எடுத்தேன். விரல்களில் குத்தி விடுமோ என்று பயந்தேன். ஆனால் அப்படி நடக்கவில்லை.



இன்று எல்லாமும் நலமாக நடந்து கொண்டிருக்கிறது. கொலை கண்டிப்பாய் நடந்தேறும் என்று மனதுள் மகிழ்ச்சி. முத்தங்களைப் பதித்துக் கொண்டே ஊசியை கழுத்தின் புடைத்த நரம்பொன்றின் மேல் வைத்து அழுத்தினேன். ‘’ ஸ்ஸ் அஆஆ’ என்று கைகளால் பின்னால் தடவப் பார்த்தாள். நான் ஊசியை விலக்கிக் கொண்டு அவ்விடத்தில் அழுந்த முத்தமிட்டேன்.



’எவ்வளவு மென்மையானவள் இவள். ஆனால் சருமம் ஏன் இப்படி தடித்துக் கிடக்கிறது. ஒருவேளை ஊசி முனையில் கூர்மை குறைவாக இருக்குமோ’ இப்படி பல கேள்விகள். அடுத்த முயற்சிக்கு ஆயத்தமாகி விட்டேன். இந்த முறை இன்னொரு நரம்பு. ஊசியால் அழுந்த குத்தினேன். மீண்டும் ‘ஸ்ஸ்ஸ அ ஆ ஆ’ என்று என்னை விலகி கைகளால் குத்து பட்ட இடத்தை தேய்த்தாள். நான் மீண்டும் அவளை பழைய நிலையில் இழுத்தி இருத்தினேன்.



‘ என்னமோ கடிக்குடா? ரொம்ப வலிக்கு’ என்று முகத்தில் வலி காட்டினாள். ஊசியை இதை விட வேகமா, ஆழமாக குத்த முடியாது என்றாகி விட்டது. மீண்டும் முத்தங்களை விதைக்கும் பணியில் மூழ்கினான். அவள் சொக்கிப் போய் என் மேல் கனமானாள். ஊசி குத்தப் பட்ட இடத்தில் கடுகு அளவில் ரத்தம் காய்ந்து இருந்தது.



தனது ஈரமான கைகளை சேலையை விலக்கி பாவாடையில் துடைத்துக் கொண்டாள். இளநீர் குடித்துவிட்டு பைக்கில் திரும்பினோம். புறப்பட்ட இடம் வந்து சேர்ந்தோம். ஏனோ இருவரும் எதுவும் பேசிக் கொள்ள வில்லை.



அவளைக் கொல்ல பத்து வழிகள்-மதியழகன் சுப்பையா 9

ஒன்பது




விபத்துக்குள்ளாக்கிக் கொல்வது ஒன்றும் பெரிய காரியமில்லைதான். ஆனால் இதில் எனது உயிரையும் பணயம் வைக்க வேண்டும். விபத்துக்கான சூழலில் நான் தப்பித்து அவளை மட்டும் சிக்க வைக்க வேண்டும். இதற்கு அதிக கவனமும் சிரத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.



அதே நேரம் அவள் முழுமையாக செத்துப் போகாமல் கை, கால் ஊனத்துடன் தப்பித்துக் கொண்டால் சிரமமாகி விடும். பின் காதலித்த பாவத்திற்காய் அவளை ஆயுசு முழுக்க கவனிக்கும்படியாகி விடும். இந்த திட்டத்தில் நானும் கூட செத்துப் போக வாய்ப்புகள் அதிகமாக இருந்தது.



ஆனாலும் சில முயற்சிகளுக்குப் பின் இந்த திட்டத்தை கை விட்டேன்

அவளைக் கொல்ல பத்து வழிகள்-மதியழகன் சுப்பையா 8

எட்டு




மின்சாரம் பாய்ச்சிக் கொள்வது மிகவும் எளிய முறை கொலைத் திட்டமாகும். இயற்கையான மரணம் என்று நிறுபித்தும் விடலாம். இந்த முறை நம்பிக்கை கூடி விட்டிருந்தது. இந்த திட்டம் சரியாக முடியுமென்று நம்பிக்கை கூடிக் கொண்டிருந்தது.





மீண்டும் என் வீடு. பிரிட்ஜில் நேரடியாக மின்சாரத்தை இணைத்தேன். வீட்டிற்கு வந்த அவளிடம் பிரிட்ஜில் அவளுக்காக கேக் மற்றும் சாக்கலேட் வைத்திருப்பதாகச் சொன்னேன்.



கிட்சனுக்கு அவள் போனதுதான் தாமதம் மின்சாரம் போய் விட்டது.



அவளைக் கொல்ல பத்து வழிகள்-மதியழகன் சுப்பையா 7

ஏழு




இந்த முறை பாம்பை ஏவி விட்டு கொலை செய்வது என்று முடிவு செய்தேன். பாம்பை ஏவி விடுதல் என்பது சரியான வாக்கியமாக இருக்காது பாம்பை பயன் படுத்தி என்று சொல்லலாம். இப்படி சொல்வது கூட மிகச் சரியாக இருக்காது. ஏனென்றால் பாம்பு போன்ற ஜீவன்களை நாம் பயன்படுத்தி விட முடியுமா என்ன?





பாம்பு என்றால் எனக்கும் பெரும் பயம் தான். ஆனால் என்ன செய்ய என் கொலைத் திட்டங்கள் எல்லாம் மண்ணைக் கவ்விக் கொண்டிருக்கும் பட்சத்தில் வேறு வழியில்லாமல் இந்த வழியைத் தேர்ந்தெடுத்துள்ளேன். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பசுமைகளைத் தேடி மக்கள் அலைந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் இவ்வாறான ஜந்துகளை எங்கே பிடிப்பது.



மீராரோடு பகுதியில் பாம்புகளை வைத்து வித்தை காட்டும் ஒருவனை நண்பன் ஒருவன் மூலம் தேடிப் பிடித்தேன். அவன் காட்டிய பாம்பின் அளவுகளைக் கண்டதும் அவற்றை எப்படி கொண்டு வந்து அவள் மீது ஏவி விட்டுக் கொல்வது என்று தெரியவில்லை.



எதாவது சிறிய அளவிலான பூச்சி கிடைத்தால் நன்றாக இருக்கும். ஆனால் அது கொடிய விஷமுள்ளதாக இருத்தல் வேண்டும். அளவில் சிறியதான ஆனால் விஷமிகு பூச்சிகள் கிடைத்தால் நன்று என்றிருந்தேன்.



நீண்ட இடைவேளைக்குப் பின் அப்படியொரு பூச்சி கிடைத்தது. இது கொலை செய்யுமா என்று தெரியவில்லை. அதை சோதித்துப் பார்க்கவும் முடியாது. இணையத்தில் அது பற்றி வாசிக்கலாம் ஆனால் அதன் பெயர் தெரியாது. அதைக் கொடுத்த அந்த நண்பன் சொன்ன பெயரை வைத்து தேடிப் பார்த்தால் தகவல் இல்லை. அதன் அடையாளங்களைச் சொன்ன போது அதன் ஆங்கிலப் பெயரைச் சொன்னான் பூச்சிகள் மீது பிரியமான ஒரு நண்பன். அவன் சொன்ன ஆங்கிலப் பெயரை வைத்து அகராதியில் தேடிய போது ‘ அது ஒரு வகை விஷமிக்க பூச்சி’ என்று சொல்லப் பட்டிருந்தது. அதன் பெயர் குறிப்பிடப் படவில்லை.



அதற்கு உணவாக என்னக் கொடுப்பது என்று தெரியவில்லை. மேய்வதற்கு விடவும் பயம். அது கடித்து நான் போய்ச் சேர்ந்து விட்டால், என்னவாவது. அதன் ஜீவன் முடிந்து போகும் முன் அதை பயன் படுத்தி இன்னொரு ஜீவனை கொல்ல வேண்டும். பத்திரமாக எடுத்துக் கொண்டு போனேன்.



இந்தமுறை பார்க்கில் சந்திப்பு. திட்டமிட்டபடி எல்லாமும் நடந்து கொண்டிருந்தது. டப்பாவிலிருந்த அந்த விஷ ஜந்துவை எடுத்து அவள் ஆடைக்குள் விட தயாரானேன். நான் நெளிவதைக் கண்ட அவள் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருந்தால். வேகமாகத் திரும்பியவளின் தோள் பட்டு அந்த ஜந்து கீழே தவறி விழுந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் காணாமலும் போய் விட்டது.



எனது கொலைத்திட்டம் தோல்வியானது குறித்து கவலையில்லை ஆனால் காணமல் போன அந்த ஜந்து பூங்காவில் மயக்க நிலையில் காதல் செய்து கொண்டிருக்கும் யாரையாவது கடித்து விடக் கூடாது என்று வேண்டிக் கொண்டேன்.



‘ஓஹோ’ இப்ப புரியுது என்று எதையோ கண்டு பிடித்தவளைப் போல் என் இதழ்களின் வழி உயிரை உறிஞ்சிக் கொண்டிருந்தாள். நான் விட்ட ஆழமான மூச்சுக்காற்றால் பூச்சித் திட்டம் பொசுங்கிப் போச்சு.



அவளைக் கொல்ல பத்து வழிகள்-மதியழகன் சுப்பையா 6

ஆறு




எந்த தீக்குச்சியை கொழுத்தினாலும் உடனே ஒரு பங்கு வாயு சுவாசத்தில் கலக்கும். இது இயல்பு. பெரும்பாலும் இதை கட்டுப் படுத்த முடியாது. மிக கவனமாக இதைத் தவிர்க்க திட்டமிட்டால் மட்டுமே தடுத்துக் கொள்ள முடியும்.





சைனைடு தடவிய தீக்குச்சியை பயன் படுத்திக் கொல்ல திட்டமிட்டேன். விஷ தீக்குச்சி ரெடி. சமீபமாக நானே அவளை அழைத்துக் கொண்டிருந்த படியால். இந்த முறை அவளாக வீட்டுக்கு வரும் சந்தர்ப்பத்தை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தேன். விடுமுறையொன்றில் வருவதாக தொலைப்பேசினாள். சொன்னபடி வந்தும் சேர்ந்தாள். தேனீர் போட்டுத் தாவெனக் கேட்டேன். வாயு அடுப்பின் லைட்டரை மறைத்து வைத்து விட்டு தீப்பெட்டியை அடுப்பருகில் வைத்திருந்தேன்.



பாத்திரத்தில் பாலை எடுத்துக் கொண்ட அவள் லைட்டரைக் காணாது தீப்பெட்டியிலிருந்து குச்சியை எடுத்து உரசினாள். தீப்பெட்டி கையிலிருந்து விடுபட்டு பாலில் விழுந்தது. ’ஐய்யோ’ என்று பதரியபடி எடுத்து உதரினால். தீப்பெட்டி பாலில் விழுந்து விட்டதாகவும் அதனை வெயிலில் காய வைக்கும் படியும் என்னை அழைத்துக் கேட்டுக் கொண்டாள்.



மேலும் லைட்டரைத் தேடித்தா அல்லது வேறு தீப்பெட்டி வாங்கி வா என்று விரட்டினாள். எனது கொலைத்திட்டங்கள் இப்படி வேடிக்கையாய் தோல்வியடைந்து கொண்டிருப்பதை நினைத்து அழுகையாய் வந்தது. வேறு வழியில்லாமல் வேறு தீப்பெட்டி வாங்கி வந்தேன்.



தீப்பெட்டி விழுந்த பாலை சாக்கடையில் ஊற்றிவிட்டு பாத்திரத்தை நன்கு தேய்த்து கழுவிய பின் புதுப் பாலில் மணக்கும் தேனீர் தயாரித்துக் கொடுத்தாள். கோப்பையை ஏந்தியபடி ஒரு மாதப் பத்திரிக்கையை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தாள்.



ஐரோப்பாவின் அந்த கால ஓவியப் பெண்ணைப் போல் உடலை சோபாவில் கிடத்தியிருந்தாள். அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். தேனீரின் ஒவ்வொரு மிடரும் எனக்குள் திடப் பொருளாய் இறங்கிக் கொண்டிருந்தது.



அவளைக் கொல்ல பத்து வழிகள்-மதியழகன் சுப்பையா 5

ஐந்து




விரைவாக கார் ஓட்டும் பந்தையத்தில் ஜெயிப்பதற்கு, திறமையாக கார் ஒட்டும் தகுதி மட்டும் இருந்தால் போதாது கோளாறு செய்யாத காரும் அவசியம். அதேப்போல் கொலைத்திட்டத்திற்கும் சரியான கொலைக் கருவியை தேர்வது மிக அவசியமாகிறது.





துப்பாக்கி மிகச் சிறப்பான கருவியாக இருக்குமெனப் பட்டது. யாரிடம் போய் துப்பாகி வாங்கிக் கொள்வது. பீட்டர், ஆமாம் அவன் தான் சரியான ஆள். கோவான்ஸ் காரன். எவர்ஸைன் நகர் பகுதியில் அவன் பெயரைக் கேட்டால் பீதி. பீட்டரைப் பிடித்து துப்பாக்கி வேண்டுமென்றேன். விலைக்கு வேண்டாம் வாடகைக்கு கிடைத்தால் போதுமென்றேன். விஷயம் கேட்டான். ஒன்றுமில்லை பயன் படுத்திப் பார்க்கத்தான் என்று சமாளித்தேன்.



அவன் பெரிதாய் கேள்விகள் கேட்கவில்லை. மறுநாள் தருவதாக சொல்லி விட்டு மொபைலில் பேசியபடி பேண்டிலிருந்து பிதுங்கி வெளியே தெரியும் புட்டத்தைக் காட்டிக் கொண்டு போய் விட்டான். அவன் ஏன் எதற்கு என்று கேட்காதது வியப்பாக இருந்தது.



அவளைச் சந்திக்க அழைப்பு விடுதாயிற்று. எந்த தடையுமில்லாமல் வருவதாக வாக்களித்தாள். ஏன் வரமாட்டாள். வந்துதான் ஆக வேண்டும். அவள் அழைத்த போதெல்லாம் நான் ஓடியிருக்கிறேனே.



துப்பாக்கியை ஒரு துணியில் பொதிந்து கொடுத்தான். ‘ புல்லட்ஸ்’ என்று கேட்டேன். லோட் செய்திருப்பதாக சொன்னான். ஆகா, எவ்வளவு அற்புதமான நண்பன் கிளம்பினேன். ‘ ஜாக்கிரதை/ எஞ்ஜாய்’ இந்த இரண்டு வார்த்தைகளையும் சிறிய இடைவெளியில் சொல்லி விட்டு மொபைலில் பேசியபடி பிதுங்கிய புட்டத்துடன் போய் விட்டான்.



துப்பாக்கி பயன் படுத்த சரியான இடம் போரிவலி நேஷனல் பார்க். அடர்த்தியான காட்டுப் பகுதி. பல கொலை செய்திகளை பத்திரிக்கைகளில் வாசித்திருக்கிறேன். மும்பையில் பரந்த பசுமைப் பகுதி இது. எங்கும் குளுமையும், பறவைகளின் கீறிச்சிடும் சத்தங்களும் மட்டுமே இருந்தன.



சில முத்தங்களையும் தழுவல்களையும் பரிமாறிக் கொண்ட பின் அவளை நான் ஷுட் செய்யப் போவதாச் சொன்னேன். ‘ அப்படின்னா.. பண்ணு’ என்று மூன்றடி விலகி நின்று இடுக்கில் கைகளை ஊன்றி போஸ் கொடுத்தாள். குறி தப்பி விடக் கூடாது என்று அருகில் நின்றபடியே துப்பாக்கியை எடுத்து அவளை நோக்கிப் பிடித்தேன்.



‘’ ஹேய், என்ன இது? மொபைல் போன்ல ஷுட் பண்ணுவன்னு பார்த்த துப்பாக்கிய எடுக்கிற?’ என்றாள். இடுப்பிலிருந்து கைகளை அகலமாகப் பரப்பி சாவதற்கு சவுகரியமாக நின்றாள். ‘ஹா..ஹா’ வென வில்லன் சிரிப்பு சிரித்து விட்டு ‘டிஸ்கியாவ்’ என்று சுட்டேன். ‘’ஆ..ஆ..ஆ’’ என்று கத்தி கொண்டு வயிற்றை இரண்டு கைகளாலும் பொத்திக் கொண்டு கத்தினாள்.



’சக்ஸஸ்’ என்று வெற்றிக் களிப்பு கொண்டேன். ஆனால் மார்பை நோக்கி வைத்த குறி வயிற்றில் பாய்ந்தது கொஞ்சம் அவமானமாக இருந்தது. ‘ ஒரு தோட்டாத்தான் இருந்துச்சா?’ என்று கேட்டபடி மீண்டும் கைகளை அகட்டி நின்றாள். ‘ டிஸ்கியாவ்... டிஸ்கியாவ்’’ பெரிய சத்தம் மட்டுமே வந்து கொண்டிருந்தது. தோட்டாக்கள் வெடித்தன. ஆனால் பாயவில்லை. சதையைக் கிழித்துக் கொண்டு அவளைக் கொல்ல வில்லை. தோட்ட வெடித்த சத்தம் கேட்கு வெகு தூரத்தில் கூட ஒரு பறவைகள் படபடவென பறந்தோடுவதை உணர முடிந்தது.



’குடு நான் சுடுறேன்’ என்று வாங்கி வானத்தை நோக்கி சுட்டாள். பின் என்னை நோக்கி. நானும் செத்துப் போவது போல் நடித்தேன். நிஜமாகவே செத்துப் போய் விடலாம் போல் இருந்தது. பீட்டர் சொதப்பி விட்டான். அவள் சாகாதது கடுப்பாக இருந்தது. அவள் துப்பாக்கியை அப்படி இப்படி பிடித்து போஸ் கொடுத்துக் கொண்டிருந்தாள். சினிமா வில்லன்களைப் போல் அபிநயித்துக் கொண்டிருந்தாள்.



அன்று மாலையே பீட்டரை சந்தித்தேன். கடுமையான கோபத்துடன் ‘இதில் இருந்த தோட்டாக்கள் போலியானதா?’ என்று கேட்ட கேள்விக்கு. ஆமாம். ரொம்ப கஷ்டப் பட்டு அதனை வாங்கி வந்தாகச் சொன்னான். எஞ்ஜாய் பண்ணினாயா என்று கேட்டான். துப்பாக்கியை வாங்கி இன்னொருவனிடம் கொடுத்து பத்திரப் படுத்த சொல்லி விட்டு மொபைலில் பேசியபடி பிதுங்கிய புட்டம் காட்டிச் சென்றும் விட்டான்.



போலி குண்டுகளை ஏன் கொடுத்திருப்பான் என்று விளங்கவில்லை. அவளைக் கொலை செய்யக் கிடைத்த நல்ல சந்தர்ப்பம் நழுவிப் போனது குறித்து வருத்தமாக இருந்தது. தொலைபேசியில் ‘மிஸ் யூ’ என்ற குறுஞ்செய்திக்கு.. ‘ ஐ ரியலி மிஸ்ட்’ என்று ரிப்ளை எழுதினேன்.



அவளைக் கொல்ல பத்து வழிகள்-மதியழகன் சுப்பையா 4

நான்கு




கத்தியால் குத்திக் கொலை செய்தல் பாரம்பரிய கொலை யுக்திகளில் ஒன்றாகும். ஆனால் இது மிக எளிய முறை. மேலும் இது ஆபத்தானதும் கூட. அதாவது கொலை செய்பவருக்கு ஆபத்தானது. காரணம் கத்தி ஒரு தடையமாகி விடக் கூடும். கொல்லப் பட்டவர் குத்திக் கொல்லப் பட்டால் காவல் துறையினருக்கு கொலையாளியைக் கண்டு பிடிப்பதில் அத்தனை சிரமம் இருக்காது.



கத்தியால் ஒருவரின் உடல் பாகத்தைக் கிழித்து ரத்தமிழக்கச் செய்து கொல்வது கொடூரமானதும் கூட. அதுவும் வயிறு இதயம் போன்ற பகுதியில் குத்தினால் மரணம் சம்பவிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்ளாது. கத்தியை ஆழமாக குத்தி பின் திருகி இழுத்தால் உள்ளுருப்புகள் அறுந்து காப்பாற்ற முடியாது என்றும் படித்திருக்கிறேன். ஆனால் வேறு பாகங்களில் குத்தினால் கொல்லப் படுபவர் தப்பித்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. கழுத்தை அறுத்து விடலாம். மரணம் நிச்சயம் ஆனால் அதற்கு கொலை அனுபவம் அவசியம்.



இவள் என் காதலி. அவளது கழுத்தை எத்தனை முறை முகர்ந்திருப்பேன். இன்னும் அவளது கழுத்தின் பிரத்யேக வாசனை என் மூளையின் முடிச்சுகளில் சுருண்டு கிடக்கிறது. மார்பு பகுதி பற்றி என்ன சொல்ல. அது சொர்க்கத்தின் வாசல். வயிற்றுப் பகுதியில் ஒரு பூனையைப் போல் எத்தனை நாள் என் தலை வைத்து இதம் கண்டிருக்கிறேன்.



அவள் சருமம் பற்றி சொல்லச் சொல்லித் தீராது. இப்படியிருக்கையில் கத்தி போன்ற கூர்மையான ஆயுதத்தால் எப்படி கொல்ல முடியும். அதுவும் இதற்கு முன்னான முயற்சிகளில் நான் அவளைக் கொலை செய்யப் போவது அவளுக்குத் தெரியாது. நான் தோல்வி கண்டது குறித்து அவளுக்கு கிஞ்சித்தும் அறிவில்லை. ஆனால் இந்தத் திட்டத்தில் தவறினால் பின் அவள் சுதாரித்துக் கொள்ளக் கூடும். எனினும் முயற்சித்துப் பார்த்து விடுவது என்ற தீர்மானத்துக்கு வந்து விட்டேன்.



மும்பையின் புறநகர்ப் பகுதியில் வைத்து அவளைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ள காரணத்தால் அங்கிருந்து சுமார் இரண்டு மணி நேர பயணத் தொலைவிலுள்ள நவிமும்பைக்குச் சென்று அங்குள்ள ஹைபர் சிட்டி மாலிலிருந்து கூர்மையான கத்தி ஒன்றை வாங்கினேன். கத்தியில் கடுமையான கூர்மை இருந்த போதிலும் மீண்டும் அதனை சைக்கிளில் வந்த கத்தி தீட்டுபவனிடம் கொடுத்து இன்னும் கூர்மையாக்கி கொண்டேன். கத்தியின் கூர்மை பகுதி கொஞ்சம் இளைத்துப் போய் கடுமையான கூர்மை பெற்றிருந்தது. இதனை கத்தி என்று தமிழில் சொல்லிக் கொண்டாலும் இது பிளேடு வகையைச் சேர்ந்தது. அதாவது இதில் அதிகம் அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. சவரம் செய்யும் பிளேடுக்கு நிகரான கூர்மையைக் கொண்டது.



கத்தியில் கைரேகைப் படக் கூடாது என்பதற்காக அதன் பிடியில் பிளாஸ்டிக் காகிதம் சுத்தினேன். அதனை மறைவாக படுக்கையில் மறைத்து வைத்தேன். ஆமாம் இந்த முறையும் என் வீட்டார் இல்லாத ஒரு நல்ல வாய்ப்பு.



வழக்கம்போல் வந்தாள். நான் வழக்கத்திற்கு மாறாக அவளை தொட்டுப் பேசினேன். சற்றே வியந்தாள். அதிகமாகவே பிகு செய்தாள். அவளாகத் துவங்கியிருந்தால் இப்படி செய்திருக்க மாட்டாள். எல்லாப் பெண்களும் இப்படித்தானாம். நண்பர்கள் அனுபவம் பகிர்ந்திருக்கிறார்கள். ஒரு முத்தம் கொடுக்கக் கூட நிறைய பிரயத்தனப் பட வேண்டியதிருக்கிறது.



அப்படியிப்படி அவளை மூடுக்கு கொண்டு வந்து விட்டேன். இடுப்போடு அணைத்தபடி படுக்கைக்கு கொண்டு சென்றேன். உடம்பெல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தது. இன்னும் சில நொடிகளில் அவள் பிணமாகி விடக் கூடும். அவள் உடலை அப்புறப் படுத்துவது குறித்து பெரிதாய் யோசித்திருக்கவில்லை. ஆனால் அவளைக் கொன்று விடும்பட்சத்தில் இதற்கெல்லாம் வழி கிடைக்காமலா போய் விடும் என்று சமாதானமானேன்.



நாற்பத்தாறு கிலோ எடை முழுவதும் காதலாகி என்னைப் பார்த்தாள். அத்தனைக் காதலும் கண்களில் தேக்கி எனக்குக் காண்பித்தாள். அங்கே வெறும் காதல் மட்டுமே இருந்தது. இன்றையத் தழுவலில் அவள் கண்டிப்பாய் காம உணர்வை எட்டவில்லை. எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. என் உடலில் காதலுமில்லாமல் காமமுமில்லாமல் கொலைவெறியும் அச்செயலுக்கான தயக்கமும் தான் இருந்தது. அவள் உடலையும் உணர்வையும் நான் புரிந்து கொண்டது போல் என்னையும் அவள் புரிந்து கொண்டிருப்பாலோ என்ற ஐயம் வேறு.



அவளது மென்மையான தொடுகை உடல், மனம் இரண்டிருலும் மாற்றத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தது. முழுமையான மாற்றம் கண்டுவிடும் முன் அவள் கதையை முடித்து விட வேண்டும்.



அவள் மேல் படர்ந்த நிலையில் படுக்கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை வெளியில் எடுக்க முயன்றேன். கத்தியின் கூர்மையானப் பகுதி என் நான்கு விரல்களையும் பதம் பார்த்தது. மேலும் கத்தியில் கைபட்ட இடமெல்லாம் குருதி கொட்டிக் கொண்டிருந்தது. ‘ஆ’ வென்ற அலரலுடன் துள்ளினேன். கையிலிருந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது.



பதற்றத்துடன் படுக்கையிலிருந்து எழுந்தவள் சத்தமிட்டு அழுதாள். ’எப்படியாச்சு? எங்க கைய வச்ச?’ என்ற கேள்விகளைக் கேட்டுக் கொண்டே தன் இடுப்புக்குக் கீழேப் பார்த்தாள். பின் என் கைகளை அழுந்த பிடித்துக் கொண்டு முதலுதவிக்காக பொருட்களைத் தேடினாள். படுக்கைக்கு அடியிலிருந்து கவனமாக கத்தியை எடுத்தாள். ‘ இத யாரு இங்க வச்சது?’ ‘ அதையேன் நீ இந்த நேரத்தில எடுத்த?’ என்பது போன்ற விடை வேண்டா கேள்விகளைக் கேட்டபடி கத்தியை கவனமாக மேசையின் மேல் வைத்தாள். அவள் குரல் மெலிந்து போயிருந்தது. எனக்கு உண்டான காயத்திற்காய் அவள் அழுது கொண்டிருந்தாள்.



அருகிலிருந்த டாக்டர் ஷர்மாவிடம் கூட்டிப் போனாள். தையல் போடும் அளவுக்கு காயம் பெரியதாயும் ஆழமாயும் இல்லையென மருந்திட்டு கட்டுப் போட்டு அனுப்பி வைத்தார். காயம் பட்ட கையை குழந்தை போல் ஏந்திக் கொண்டு தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். கண்களிலிருந்து சூடான கண்ணீர்த் தாரை வழிந்து கொண்டிருந்தது.



என் உடலும் காதலால் பெருகி அவளை அனைத்துக் கொண்டது. தனது கூர்மை முழுமையாய் பயன் படுத்த படாத நிலையில் வெறித்துக் கொண்டிருந்தது மேசையின் மேல் கத்தி.



அவளைக் கொல்ல பத்து வழிகள்-மதியழகன் சுப்பையா 3

மூன்று




பள்ளித் தோழன் ராஜன், கராஜ் வைத்திருக்கிறான். அவனிடம் வரும் வண்டிகளை எடுத்துக் கொண்டு நாங்கள் பல சாகசங்களைக் கற்று வைத்திருந்தோம். பழுதுபார்க்க வந்திருக்கும் வண்டிகளை எங்கள் ஆசை தீர ஓட்டி விளையாடி விட்டுத்தான் உரிமையாளரிடம் கொடுப்பது வழக்கம்.





ராஜனிடம் நல்ல வண்டி ஒன்றைக் கேட்டேன். சந்தையில் புதிதாக வந்த வண்டியொன்று கிரிசிங் பணிக்கு வந்திருப்பதாக சொல்லி காட்டினான். நான் எடுத்துப் போகக் கேட்டேன். உரிமையாளரை எப்படியாவது அவன் சமாளித்து விடுவான். ஆனால் அவன் யாரையோ வெளியில் கூட்டிப் போவதாய் செய்திருந்த திட்டம் நடக்காது. வேறு பிரச்சனை இல்லை. வெள்ளிக் கிழமை இரவு எடுத்துக் கொண்டு போன வாகனத்தை என் அடுத்த திட்டதிற்கு தயார் படுத்தினேன். சனிக் கிழமை மாலை அவளை அழைத்துப்போய், சொர்க்கலோகம் அனுப்பி வைக்க திட்டம். அவள்தான் சொர்க்கத்திற்குப் போக வேண்டி வாரம் தவறாமல் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறாளே.



மூன்று முறை ஐ லவ் யூக்கள் சொல்லி அவள் அழகை வர்ணித்த பின்னர் அன்று மாலை மரண பயணத்திற்கு சரி சொன்னாள். கார் என்றதும் அலுவலகத்துக்கே மட்டம் போட்டு விடுவதாய் துள்ளினாள். வேண்டாம் மாலை வந்தால் போதுமென சமாதானப் படுத்தினேன்.



நீண்டதொரு ரப்பர் குழாய் வாங்கி வாகனம் வெளியேற்றும் கார்பனை வண்டிக்குள் விட்டு அவளை கார்பன் மோனாக்சைடு மூலம் கொல்லத் திட்டம் போட்டேன். காந்திவிலி சார்கோப்பைத் தாண்டி அடர்ந்திருக்கும் புதர் பகுதிக்கு காரைச் செலுத்தினேன். சில கேக் துண்டுகளும் சாக்கலேட் கட்டிகளும் கடிக்கக் கொடுத்தேன். குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தி சுற்றுமுற்றும் நோட்டமிட்டேன். பார்வை எட்டும் தூரம் வரை ஆளில்லை. கார் இல்லை. கருப்பு கண்ணாடி ஏற்றிய காருக்குள் என்னை கட்டிக்கொண்டாள். வண்டியை ஆப் செய்யாமல் இருந்தேன். பெட்ரோல் டங்கி நிரம்ப மரணம் சூடாகிக் கொண்டிருந்தது.



காரிலிருந்து இறங்கி ரப்பர் பைப்பை கார்பன் குழாயுடன் சைலன்சர் குழாயை இணைத்தேன். தண்ணீர் வாங்கச் செல்வதாக சொல்லிக் கிளம்பினேன். காரின் அத்தனை கதவுகளின் ஒயர்களையும் அறுத்து விட்டிருந்தபடியால் உள்ளிருந்து திறக்க இயலாதபடி செய்து விட்டேன். இன்னும் ஐந்தாறு நிமிடங்களில் அவள் மூச்சுத் திணறி செத்து விடுவாள் என்று மனதுக்குள் ஒரு வில்லத்தனமான சிரிப்பு சிரித்துக் கொண்டேன்.



புகை கார் முழுவதும் பரவ காருக்கு ஆக்சிலேட்டர் இயங்கிக் கொண்டிருந்தது. புகை காருக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் நிரம்பிக் கொண்டிருக்கும் என்று முழுமையாய் நம்பினேன். ரப்பர் பைப்பை இணைத்தப் பின் புகை வருவது குறித்து எனக்குத் தெரியவில்லை. கண்ணாடி வழி காருக்குள் பார்க்கவும் முடியாது. ஆனால் என் திட்டம் புகையாய் பொசுங்கிப் போயிருக்கலாம் என்பது மட்டும் உணர முடிந்தது.



நான் காரிலிருந்து இறங்கிய மாத்திரத்தில் அவள் வீணாக இயங்கிக் கொண்டிருக்கும் காரை ஆஃப் செய்ய காரின் கீயை உருவி காரை நிறுத்தியிருக்கிறாள். காரின் கீ உருவப் பட்டு இஞ்ஜின் ஆஃப் ஆனதால் காருக்குள் புகை நிரம்பியிருக்கவில்லை.



என் திட்டம் புஷ்வானமாகி விட்டது என்பது உறுதியாகிப் போனாது. காரின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனேன். கண்களில் பயத்தை நிரப்பிக் கொண்டு என்னைக் கட்டிக் கொண்டாள். காருக்குள் கார்பன் வாசனை தூக்கலாக இருந்தது.



காரை அப்படியே விட்டுப் போனதாலும் காருக்குள் புகை கசிந்த காரணத்தாலும் அவள் செய்வதரியாது காரின் சாவியை எடுத்ததாக பயத்துடன் சொல்லிக் கொண்டிருந்தாள். இனிமேல் எப்பொழுதும் இப்படி தனியாக விட்டுப் போக வேண்டாமென இருக்கமாக கட்டிக் கொண்டு சொன்னாள்.



கார் கண்ணாடிகளை இறக்கி விட்டேன். உள்ளே மாலை நேர மெல்லிய காற்று நிரம்பிக் கொண்டிருந்தது. அவளும் நானும் ஆழமாக சுவாசித்துக் கொண்டோம்.



அவளைக் கொல்ல பத்து வழிகள்-மதியழகன் சுப்பையா 2

இரண்டு




மும்பையில் தற்சமயம் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன. காலியிடங்கள், சாக்கடைகள், பழையக் கட்டிடங்கள், குடிசை வீடுகள் என எல்லாப் பகுதிகளும் அடுக்கு மாடிக் கட்டிடங்களாய் மாறிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான கட்டிடங்களை கட்டி முடிப்பதற்குள் பல உயிர் பலிகள் ஆகி விடுவது சகஜமாகிப் போனது. அது கட்டிடப் பணியின் போது ஏற்படும் விபத்துக்களால் மட்டுமல்ல, நில அனுமதி, அபகரிப்பு என பல ஆரம்பகட்ட பணிகளின் போது இந்த சாவுகள் சகஜமாகி விட்டன.





எனது வீட்டிற்கு எதிர்த்தார்போல் பிரபல பில்டர், பிள்ளைகள் விளையாட இருந்த மைதானத்தை வளைத்துப் போட்டு கட்டிட வேலையை ஆரம்பித்து விட்டிருந்தான். கடந்த ஆறு மாத காலமாக எப்பொழுதும் மண்ணும் சிமெண்டும் காற்றில் கலந்து சுவாசக் காற்றோடு கொஞ்சம் மண்ணையும் சிமெண்டையும் நாங்கள் சுவாசித்துக் கொண்டிருந்தோம்.



தினமும் குளித்தபின் மூக்கை துடைத்தால் ஒரு கண் மை டப்பாவை நிரப்பும் அளவுக்கும் மண் - சிமெண்ட் கலவையை மூக்கிலிருந்து துடைத்து எடுக்க முடியும். எனது அடுத்த திட்டம் இங்குதான். உயர்ந்த கட்டிடங்களுக்காக எழுப்பப் பட்டிருக்கும் எதாவதொரு தூண்களுக்குள் ஒன்றில் அவளை மயக்கமடையச் செய்து தள்ளி விட்டு சிமெண்ட் போட்டு விடுவது என்று.



திட்டத்தின் படி என் வீட்டார் இல்லாத ஒரு பொழுதில் அவளை வீட்டுக்கு அழைத்தேன். என் அழைப்பைத்தான் அவள் தட்டுவதில்லையே. வாழ்க்கை காலத்தால் ஆனது என்பதால் கிடைக்கும் பெரும்பாலான வாய்ப்புகளை அவள் தவற விடுவதில்லை. அவளிடம் பிடித்த குணம் இதுதான். அதே சமயம் பிடிக்காத குணமும் இதுவே. அவளுக்கு கிடைக்கும் அத்தனை அழைப்புகளையும் அவள் எப்படியாவது சமாளித்து அட்டண்ட் செய்து விடுவது எனக்கு கடும் துன்பத்தைக் கொடுத்தது.



அன்றும் வழக்கம் போல் அழகு தேவதையாக வந்திருந்தாள். அலுவகலத்திலேயே மெல்லிய அலங்காரமும் உதடுகள் மின்னச் சாயமும் மெல்லிய வாசனையுடனும் வந்தாள். கதவைத் திறந்ததும் வீட்டில் யாருமில்லாததை புரிந்து கொண்ட அவள் என் மேல் படர்ந்தாள். அப்படியே சில நிமிடங்கள் பேசாமல் இருந்தோம்.



எனக்கும் மனம் மாறி விடும் போல் இருந்தது. ஆனால் நான் எனது கற்பனையை கிண்டி விட்டேன். இதற்கு முன் நடந்ததைப் பற்றியெல்லாம் அசை போட்டேன். இதோ மூளையின் ஏதோ ஒரு பகுதியில் முடங்கிக் கொண்டிருந்த கொலை வெறி அவிழ்ந்து கொண்டது. ஆயத்தமாகி விட்டேன்.



இனிப்பு பண்டங்கள் என்றால் அவளுக்கும் என்னைப் போல் அலாதி பிரியம். மயக்க மருந்து கலந்து வைத்திருந்த கேரட் அல்வாவை கொடுத்தேன். பெண்களுக்கு அல்வா என்றால் என்ன ப்ரியமோ தெரியவில்லை. கோழி விழுங்குவதைப் போல் விழுங்கினாள். எனக்கும் ஊட்ட முயன்றவளைத் தடுத்து தப்பித்தேன்.



வீட்டிற்கு எதிரே நடக்கும் கட்டுமானப் பணியிடத்தை நோட்டமிட்டேன். வேலை முடித்து ஆட்கள் கிளம்பி விட்டிருந்தார்கள். நடமாட்டமும் குறைந்திருந்தது. அவள் முழுவதும் மயங்கிப் போகுமுன் கட்டித்தின் முதல் தளத்துக்கு கூட்டிப் போக முடிவு செய்தேன். அவளும் இசைந்தாள்.



என் வீட்டுக்கு வருவது அவளுக்கு பெரும் பிரச்சனை. அவள் அண்ணன்களும் மாமாக்களும் இங்கு உலவுவதுண்டு. ஆனால் ஒரு முறை எங்கள் காம்பவுண்டுக்குள் நுழைந்து விட்டால் நிம்மதியாகி விடுவாள். யாருக்கும் தெரியாமல் கடந்த ஐந்து ஆண்டுகளாக அவள் என்னை வீட்டில் வைத்து சந்தித்துக் கொண்டிருப்பது வியப்பானதுதான். எனக்கு இதுவும் பிரச்சனையே. என் காதலுக்கு சாட்சியே இல்லாமல் இருந்தது. ஆனால் இன்று அதுவே சாதகமாகவும் ஆகிப் போனது.



இப்பொழுது உடம்பிலிருந்த பய அதிர்வுகள் அடங்கிப் போயிருந்தன. இருள் படர்ந்த கட்டிடத்தின் முதல் தளத்துக்கு அவளை அழைத்துப் போனேன். எதையெதையோ காட்டிக் கொண்டிருந்த என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு முழுமையான மயக்கம் வரக் காத்திருந்தேன்.



ஒரு மாதிரி வயிற்றில் பிசைவது போல் உணர்வதாகச் சொன்னால். முகம் முழுவதும் வியர்த்து விட்டிருந்தது. திடிரென வாந்தி எடுத்தாள். அவள் கால்கள் தடுமாறின அவளாகவே கீழே இறங்கிக் கொண்டிருந்தாள். நான் அவளை எப்படியாவது முதல் தளத்தில் மரச் சட்டங்கள் அடித்து தயார் நிலையில் இருக்கும் பெரிய தூணுக்குள் தள்ளிவிட கடுமையாய் போராடினேன். நான் அவளைக் கட்டிப் பிடிக்க முயல்வதாகவும், தூணில் சாய்த்துக் கொண்டு சல்லாபம்செய்ய இருப்பதாகவும் அவள் நினைத்திருக்கலாம். மயக்க மருந்து அவளுக்கு இன்னும் தெம்பை கொடுத்ததோ என்னவோ. வேண்டாம்.. போகலாமென கட்டிடத்தின் வாசல் வரை வந்து மயங்கிப் போனாள்.



எதிரே இருந்த இரண்டு பெண்கள் ஓடி வந்து அவளுக்கு உதவினார்கள். என் வீட்டிற்குள் தூக்கிப் போயாயிற்று. அருகிலிருந்த டாக்டர் ஷர்மா வந்து விட்டார். வாந்தி தான் நல்ல மருந்தாக செயல் பட்டிருக்கிறது, பயப்பட ஒன்றுமில்லை புட் பாய்சன் என்று ஊசியும் மருந்து கொடுத்து விட்டு அரை மணி நேரத்தில் சரியாகி விடுமென்றார். இருநூறு ரூபாயுடன் என்னைப் பார்த்து கண்ணை சிமிட்டி விட்டு போய்விட்டார்.



ஒரு மணி நேரத்தில் எழுந்தும் விட்டாள். அவள் தோழியை அழைத்து அவளுடன் வீட்டிற்கு கிளம்பினாள். ஆழமான ஒரு முத்தம் கொடுத்தாள். அரை மயக்கத்தில் வீட்டுக்கு கிளம்பினாள்.



கட்டிடத்தின் அந்த நிரப்பப் படாத தூணையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.



அவளைக் கொல்ல பத்து வழிகள்-மதியழகன் சுப்பையா 1

ஒன்று




கோரேகான் கிழக்குப் பகுதியில் நெடுஞ்சாலையை ஒட்டினாற்போல் ஃபேண்டசி லேண்ட் என்னும் கேளிகைப் பூங்கா உள்ளது. வார நாட்களில் இங்கு கூட்டம் குறைவாகவே இருக்கும். மார்வே கடலிலிருந்து முக்கால் மணி நேர படகு பயண தூரத்தில் குட்டித் தீவு ஒன்றில் இருக்கும் எஸ்சல் வொர்ல்டு சரி பட்டு வராது. அங்கே வாரம் முழுவதும் கூட்டமிருக்கும். வார இறுதி பற்றிச் சொல்லவே வேண்டாம்.



ராட்சத ராட்டினமும் ரோலர் கோஸ்டர் என்னும் உயர்ந்து தாழ்ந்து இருக்கும் ஒருவகை சறுக்கு விளையாட்டும் ஃபேண்டஸி லேண்டில் சிறப்பானவைகள். நான் தேர்ந்துள்ளது ரோலர் கோஸ்டரை. அதில் ஒரு திறந்த சதுரப் பெட்டிக்குள் இரண்டு பேர் மட்டுமே பாதுகாப்புக்கு இடுப்பு வார் அணிந்து கொண்டு பறக்க முடியும். சுமார் பத்து அடுக்கு கட்டிட உயரத்திற்குப் போய் தலைகீழாக சுழன்று கீழிறங்கும் அப்பெட்டிகள்.



இரண்டு நாட்கள் போய் உட்கார்ந்து சரியாகத் திட்டமிட்டு விட்டேன். வயிற்றிலிருக்கும் குடல் வகையாறக்கள் வாய்க்கு வந்து விடுவது போலிருந்தது. வரும் புதன் கிழமை அவளைக் கூட்டிப் போகத் திட்டம். அலுவலகத்திற்கு அல்வா கொடுத்து விட்டு அவள் வந்து விடுவாள். இப்படியான சமாளிப்புகளில் அவள் கில்லாடி.



புதன்கிழமை. ஷாம்பு போட்டு குளிப்பாட்டிய கூந்தல் காற்றில் அசைந்து அவளைச் சுற்றி ஒரு சிறிய சுற்றளவுக்கு வாசனை பரப்பிக் கொண்டிருந்தது. இதழ்களில் அழியாப் புன்னகை. கண்களில் பல்லாயிரக்கணக்கான பக்கங்களுக்கு அர்த்தம் எழுதிவிடும் அளவுக்கு செய்திகள். அவளைக் கண்டவர்கள், நின்று பார்த்தார்கள், நடந்து கொண்டே பார்த்தார்கள், பலர் அவளது உருவத்தை மனதுக்குள் படம் பிடித்துக் கொண்டிருந்தார்கள். பிற சந்தர்ப்பங்களில் பயன் படுத்திக் கொள்ளக் கூடும்.



அவள் என்னருகில் வந்து நின்றதும் அவள் மீது பாய்ந்து கொண்டிருந்த பார்வை வெள்ளம் என்னையும் நனைத்தது. நான் அவளைக் கொலை செய்யும் காரணங்களில் இதுவும் ஒன்று. இவ்வளவு அழகாய், வடிவாய் அவள் பிறந்திருக்கக் கூடாது தான்.



”போகலாமா?’’ என்றாள். சரி என்னும் பாவனையில் அகலப் புன்னகை ஒன்றை உதிர்த்துக் கிளம்பினேன். என் தோளில் ஒரு கையை மட்டும் இறகு போல் ஊன்றிக் கொண்டு பைக்கின் பின்னிருக்கையில் உட்கார்ந்தாள். மலாடு ரயில்வே பாலம் தாண்டி, நெடுஞ்சாலை வழியாய் திண்டோஷி வந்து சேர்ந்தோம்.



அருகில் அவள் இருந்த காரணத்தால் ஏனோ மதியம் பனிரெண்டு மணிக்கான உஷ்ணத்தை உணர முடியவில்லை. பேண்டஷி லேண்டில் கூட்டமில்லை. எண்ணிவிடும் அளவுக்கே ஆட்கள். பெரும்பாலும் ஜோடிகள். எங்களைப் போல் என்று சொல்ல முடியாது. ஆனால் இன்றையத் தினம் கண்டிப்பாய் யாரும் எங்களைப் போல் இருக்கவே முடியாது. நான் அவளைக் கொலை செய்ய அல்லவா கூட்டி வந்திருக்கிறேன். ஜோடிகளில் பலரின் கண்களில் ஒருவருக்காக ஒருவர் உயிரைக் கொடுக்க தயாராய் இருக்கும் உணர்வே காணக் கிடைத்தது. என் கண்ணிலும் இந்த உணர்வு எக்கச்சக்கமாக இருந்திருக்கிறது. அதுவொரு காதல் காலம். இது கொலைக் காலம். உடலின் அத்தனை அனுக்களும் அவளைக் கொல்லத் துடித்துக் கொண்டிருந்தன.



டிக்கெட் எடுத்து விட்டு ஒரு பழச்சாறு குடித்தோம். அதுவும் அவளுக்குப் பிடித்த அன்னாசி பழச்சாறு. இரண்டு மூன்று விளையாட்டுகளில் மகிழ்ந்தாயிற்று. அடுத்து லோலர் கோஸ்டர். அவள் வர மறுத்தாள். பயப் படுவதாய் சொன்னாள். நான் விடுவதாயில்லை. என் திட்டம் என்னாவது. ‘ நான் தான் பக்கத்தில இருக்கேன்ல’ என்று இழுத்துப் போனேன்.



பெட்டியில் உட்கார்ந்தாயிற்று. இடுப்பு வார் கட்டியாயிற்று. பெட்டி புரப்பட்டது. அவள் கண்களை மூடிக் கொண்டாள். என் கைகளை இறுக்கமாக பற்றிக் கொண்டாள். மிகுந்த சிரமத்திற்குப் பின் அவளது கைகளை விலக்கி அவளைத் தனிமை படுத்தினேன். அவள் கொஞ்சம் பயம் தெளிந்து அனுபவித்துக் கொண்டிருந்தாள். இதுதான் சமயமென அவளது இடுப்பு வாரை கையில் வைத்திருந்த பிளேடால் வெட்டி விட்டேன். அவளுக்குத் தெரியவில்லை. திட்டம் மிகச் சரியாக ஒவ்வொரு கட்டமாய் நகர்ந்து கொண்டிருந்தது.



குறிப்பிட்ட இடத்தில் தலைகீழாக ஏறி இறங்கியது பெட்டி. அவள் எம்பினாள். அவளைப் பிடித்து தள்ளப் பார்த்தேன். நான் வேடிக்கை செய்வதாக எண்ணி என்னை இன்னும் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள். எத்தனை முயன்றும் அவளை பெட்டியிலிருந்து தள்ளி விட முடியவில்லை. புரப்பட்ட இடத்துக்கே பெட்டி வந்து சேர்ந்தது. இடுப்பு வாரைப் பார்த்தவள் திடுக்கிட்டாள். ’நல்லவேளை ஒன்னும் ஆகலை’ என்றும் நான் கூட இருந்ததால் எல்லாம் நலமாக இருந்தது என்றாள்.



பெட்டியிலிருந்து விழாமல் இருக்க அவள் பிடித்த இடங்கள் அப்படியே அச்சு பதிந்து விட்டிருந்தன. அவள் ஒரு பெரும் சாதனையைச் செய்து விட்டு வந்தவளைப் போல் பெட்டியிலிந்து இறங்கினாள். நான் படு தோல்வியின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தேன்.



மீண்டும் பழச்சாறு பருகினோம். இம்முறை நான் எனக்குப் பிடித்த ஆரஞ்சு பழச் சாறும், அவளுக்கு அன்னாசி பழச்சாறும் வாங்கிக் கொண்டோம். அவள் கைப்பேசியில் தனது தோழி ஒருத்தியிடம் ( அது தோழனாகக் கூட இருக்கலாம்) செத்துப் பிழைத்தவளைப் போல் அனுபவம் பகிர்ந்தாள். உண்மையாகவே சாகப் போனவள் பிழைத்தாள் என்பது எனக்கு மட்டுமே தெரிந்த உண்மை.



ஒரு தழுவலுடனும் நான்கு முத்தங்களுடன் முதல் திட்டம் தவிடு பொடியானது.



அவளைக் கொல்ல பத்து வழிகள்-மதியழகன் சுப்பையா

அவளைக் கொல்ல பத்து வழிகள்


(கண்டிப்பாய் யாரும் பின்பற்றக் கூடாதவைகள்)



பூஜ்யம்



ஒரு குண்டூசிக்கு உயிரை ஊட்ட முடிவதில்லை, ஆனால் ஒரு எறும்பை கொன்று விட முடிகிறது. ஒரு பசுவை ஒரு ஆட்டை ஏன் ஒரு மனிதனைக் கூட கொன்று விட முடியும். பிற உயிர்களைக் கொல்லும் போதும் அவைகளைக் கொன்ற பின்னும் உண்டாகும் பதட்டத்தை, தவிப்பை விடவும் ஒரு மனிதனைக் கொல்லும் போது பதட்டமும் தவிப்பும் குற்றவுணர்வும் மிகுதியாகி விடுகிறது.



உயிர் என்றால் எல்லாம் உயிர் தானே. எறும்போ கொசுவோ அல்லது இவ்வகை பூச்சிகளோ பார்க்க உருவத்தில் சிறியதாக இருப்பினும் அதிலுள்ள உயிர் ஒன்றுதானே. உயிரை பரித்தப்பின் எந்தவொரு அறிவியலாலும் மரித்துப் போனவைகளை உயிர்ப்பிக்க முடியாது இல்லையா?. ஒரு உயிரியின் பாகங்களை செயலிழக்கச் செய்யலாம். செயற்கை பாகம் கொண்டு அதனை சீர் படுத்தியும் விடலாம், ஆனால் உயிருக்கு இந்த சீர்படுத்தும் சூத்திரங்கள் எந்த ஆய்விலும் கண்டு பிடிக்க முடியவில்லை என்றே நினைக்கிறேன்.



நானொரு கொலை செய்யத் திட்டமிட்டிருக்கிறேன். எறும்பை அல்ல கொசுவை அல்ல பூச்சியை அல்ல விலங்கை அல்ல. ஒரு மனுஷியை. நான் காதலித்த, என்னை காதலிப்பதாய் சொன்ன ஒரு தேவதையை. அவளை தேவதை என்று குறிப்பிட்டுள்ளதால் அவள் கொலை செய்ய முடியாதவளாகி விடப் போவதில்லை. தேவதைகளும் தேவைப் பட்டால் கொல்லப் படலாம். தேவதைகளை முழுமையாகக் கொல்ல முடியாது என்று நினைக்க வேண்டாம். தேவதை என்ற நாமகரணம் நான் சூட்டியதுதான். அவளிடம் தேவதைக்கான லட்சணங்கள் தென்பட்டதால் அப்படி அழைத்திருக்கிறேன். ஆனால் அவளைக் கொள்வதென முடிவாகி விட்டது. இனி யார் தடுப்பினும் முடிவில் மாற்றமில்லை. அவள் கொல்லப் படும் முறையை வேண்டுமானால் மாற்றிக் கொள்ளக் கூடும். கொடூரத்தை வேண்டுமானால் குறைத்துக் கொள்ள முடியும். கொலை செய்யும் எண்ணத்தை மாற்றிக் கொள்ள முடியாது.



நான் செய்திருக்கும் கொலைத் திட்டங்களில் எதாவது ஒன்றின் மூலம் அவளைக் கொன்று விட முடிவு செய்துள்ளேன். என்னுடன் உரையாடிய பல பொழுதுகளில் அவள் செத்துவிட்டதாகச் சொல்லி என்னைச் சாகடித்திருக்கிறாள். இனி அவளை நிஜமாகவே கொல்லப் போகிறேன். அவளுக்கு சாவின் முகத்தைக் காட்டி சாகடிக்கப் போகிறேன்.



நமக்கு விருப்பமானவர்களைக் கொல்ல நிறைய சிரமப் பட வேண்டியதிருக்கும் என்று நினைக்கிறேன். பலப்பல திட்டங்களை தீட்ட வேண்டிய நிலையும் வரலாம். காரணம் கொலைத் திட்டத்தை நிறைவேற்றுகையில் அன்பு மிகுதியால் நாமே கூட அவர்களைக் காப்பாற்றி விடக் கூடும். அதனால் ஒன்றல்ல இரண்டல்ல பல திட்டங்களும் முயற்சிகளும் செய்யதாக வேண்டும். திட்டங்களைத் தீட்டி விட்டேன். இனி செயல் படுத்த வேண்டியதுதான்.



பத்து திட்டங்கள் வைத்துள்ளேன். ஒன்றில் தப்பினால் மற்றொன்று. மற்றொன்றில் தப்பினால் பிரிதொன்று. எப்படியும் கொன்று விடுவேன். ஒரு திட்டத்தை ஒரு முறைக்கு மேல் பயன் படுத்த மாட்டேன். தோற்றுப் போன கொலைத் திட்டம் அவளுக்கு புரிந்து விடக் கூடும். எனவே தான் இத்தனை மாற்றுத் திட்டங்கள். பாரம்பரிய கொலைத் திட்டங்களைக் கொண்டுதான் கொல்லப் போகிறேன். நானும் பாரம்பரியமானவன் தானே. நவீன கொலைத்திட்டங்கள் குறித்து தெரியாது. நவீனம் குறித்து பெரிய புரிதலும் இல்லை.



அவளைக் கொல்லும் திட்டங்களை நாவல்களிலிருந்தும், திரைப்படங்களிலிருந்து, பத்திரிக்கை செய்திகளிலிருந்தும், நண்பர்களிடமிருந்தும் கேட்டு அதற்கான ஆயத்தங்களைச் செய்துள்ளேன். எனது திட்டங்களில் தோல்வியடைந்தால் நீங்கள் எனக்கு உதவலாம். கண்டிப்பாய் உங்கள் கணக்கில் பாவத்தின் சிறிதொரு பாகமும் சேராது. என்னை நடை பிணமாக்கி விட்ட அவளைக் கொல்வது, என் அறிவிற்கு சரியெனவே படுகிறது. என்னை தவறாக நினைப்பவர்கள், எனக்கு அறிவுரை சொல்ல துடிப்பவர்கள். கண்டிப்பாய் இதற்குமேல் வாசிக்க வேண்டாம்.



அவள் உயிரோடு இருந்தால் நான் தினமும் அவளைப் பேசிப் பேசியே கொன்று விடக் கூடும். தினம் என் வார்த்தைகளால் காயப் பட்டு அவள் தவனை முறையில் சாவதை விட என் கொலைத் திட்டங்களில் ஒன்றின் மூலம் செத்துப் போவது நல்லதெனப் படுகிறது. பல அவலங்களை கண்டு அனுபவித்த நான் இப்படிச் செய்வதை ஆகச் சரியென நினைக்கிறேன். எனக்கு யாரும் உதவ வேண்டாம். அதே நேரம் அவளை யாரும் காப்பாற்ற நினைக்க வேண்டாம். அவரவர் இஷ்ட தெய்வங்களை வேண்டிக் கொண்டு அவளைக் காப்பாற்ற பரிந்துரைக்க வேண்டாம். நான் கொலைக் கடவுளிடம் அனுமதியும் பெற்றாகி விட்டது.



அதிர்ந்து பேசுவதைக் கூட தவிர்க்கும் நான் கொலை செய்யப் போவது என்னைத் தெரிந்த சகலருக்கும் வியப்பாகவே இருக்கும். வியந்து விட்டுப் போகட்டும். என் கவலையை, கஷ்டத்தைப் பகிர்ந்து கொள்ள யார் வந்தார்கள். ஒருவருமில்லையே. இப்படியானவர்களைப் பற்றி எனக்கும் அக்கரையில்லை. இப்படி அற்பக் காரணங்களுக்கு கொலைதான் முடிவா? என்று மீண்டும் அறிவுரைக்கு தயாராக வேண்டாம். நான் கேட்கப் போவதில்லை.



நான் கொலை செய்யும் அளவுக்கு கொடூரமாக மாறியதற்கான காரணங்களை வேண்டுமானால் கண்டுபிடித்து புரிந்து கொள்ள முயலுங்கள். கண்டிப்பாய் சரியெனவேப் படும். நடக்கப் போகும் கொலையை முன்கூட்டியே அறிவித்து விட்டு கொல்லும் சாமர்த்திய சாலி என எனக்கு புகழாரம் வேண்டாம். நான் கொலை செய்யப் போகிறேன். நீங்கள் சாட்சியாக இருங்கள். அவ்வளவுதான்.