04 ஜனவரி, 2012

காந்தி தாழ்த்தப்பட்டவர்களுக்கு செய்த மாபெரும் துரோகம்

காந்தி தாழ்த்தப்பட்டவர்களுக்கு செய்த மாபெரும் துரோகம்

http://www.vimaladhasan.wordpress.com/




“தங்களுக்கு அரசியல் பாதுகாப்புகள் அளிக்கப்படவேண்டுமென்ற தீண்டப்படாதவர்களின் கோரிக்கைகளை வட்டமேசை மாநாட்டில் திரு காந்தி எதிர்த்தார். தீண்டப்படாதவர்களின் குறிக்கோளை முறியடிக்க அவர் தம்மால் முடிந்த அனைத்தையும் செய்தார். அவர்களது கோரிக்கைகளுக்குப் பின்னால் உள்ள வாத வலிமையை பலவீனப்படுத்துவதற்கும் அவர்களைத் தனிமைப்படுத்துவதற்கும் முஸ்லீம்களை தமது பக்கம் ஈர்ப்பதற்கு முஸ்லீம்களது 14 அம்சக் கோரிக்கைகள் முழுவதையும் ஏற்க முன்வந்தார். சிறுபான்மையினர் துணைக்குழுக் கூட்டத்தில் பேசும்போது திரு காந்தி பின்வருமாறு கூறினார்: “குழு தனது அங்கீகாரத்தை அளிக்குமானால் தீண்டப்படாதோரின் கோரிக்கையை எதிர்க்க நான் தயார்.” என்றார். ஷெட்யூல்டு வகுப்பினரின் கோரிக்கைகளை எதிர்ப்பதற்கு பிரதியாக முஸ்லீம்களின் 14 அம்சக் கோரிக்கைகளை முற்றிலுமாக ஏற்பதற்கு முன்வந்து சிறுபான்மைக்குழுவின் முடிவை முறியடிப்பதற்கு திரு காந்தி முயன்றார். இது திரு காந்தி செய்த மிகப்பெரிய தவறாகும்.



இதில் அவர் மிகவும் சூட்சுமான சூழ்ச்சி முறையை கையாண்டார். ஒன்று தங்களது 14 அம்சக் கோரிக்கைகளை ஏற்க திரு காந்தி முன்வந்ததை ஏற்று, தீண்டப்படாதவர்களின் கோரிக்கைக்கு அளிக்கும் ஆதரவை முஸ்லீம்கள் திரும்பப் பெறவேண்டும். அல்லது தீண்டப்படாதவர்களுடன் சேர்ந்துகொண்டு தமது 14 அம்சக் கோரிக்கைகளை இழக்க வேண்டும் என்ற கடினமான சோதனையை முசல்மான்கள்முன் அவர் வைத்தார். முடிவில் திரு காந்தியின் சூழ்ச்சி படுதோல்வி அடைந்தது. முசல்மான்கள் தங்களது 14 அம்சக் கோரிக்கைகளை இழக்கவுமில்லை. தீண்டப்படாதவர்களும் தங்களது குறிக்கோளில் தோல்வியடையவுமில்லை. எனினும் இந்த நிகழ்ச்சி திரு காந்தியின் நயவஞ்சகத்திற்கு ஒரு கண்கண்ட சாட்சியாக அமைந்து உள்ளது.



ஒருவர் மற்றவருக்கு அளித்த வாக்குறுதியை மீறும்படி பண்பற்ற முறையில் தூண்டும் ஒரு மனிதரை, ஒருவரை நண்பர் என்று அன்போடு, பரிவோடு அழைத்துவிட்டு பின்னர் அவர் முதுகில் குத்துவதற்குத் திட்டமிடும் ஒருவரை வேறு எந்தமுறையில் வர்ணிக்கமுடியும்? இத்தகைய ஒருவரை நேர்மையானவர், நாணயமானவர் என்று தீண்டப்படாதவர்கள் எப்படி கருதமுடியும் ? தீண்டப்படாதோருக்கு தனிப்பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே காந்தி எரவாடா சிறையில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து அதைத் தடுத்துவிட்டார். “



பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கர்.



(நூல் தொகுப்பு 10)

கருத்துகள் இல்லை: