22 அக்டோபர், 2011

சோசலிஷம் எதற்காக? (ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்)

பொருளாதார, சமூகப் பிரச்சினைகளில் வல்லுனராக இல்லாத ஒருவர் சோசலிஷம் என்ற பொருள் பற்றிக் கருத்துத் தெரிவிப்பது சரியானதா? பற்பல காரணங்களினால் சரியானது என்றே நான் நம்புகிறேன்.
விஞ்ஞான அறிவுக் கண்ணோட்டத்திலிருந்து முதலில் இந்தப் பிரச்சினையை நோக்குவோம். வானியலுக்கும் பொருளாதாரத்துக்கும் இடையில் சாராம்சமான நடைமுறை ரீதியான வேறுபாடுகள் எதுவும் இல்லை என்பதுபோலத் தோன்றலாம்: இரு துறைகளையும் சார்ந்த விஞ்ஞானிகள் ஒரு வரம்புக்குட்பட்ட தொகுப்பில் அடங்கிய நிகழ்வுகளுக்கு இடையேயான பரஸ்பரத் தொடர்பினைக் கூடுமானவரைத் தெளிவாகப் புரிந்து கொள்ளும் பொருட்டு, அந்த நிகழ்வுகளின் தொகுதிக்குப் பொதுவாக ஏற்றுக் கொள்ளத் தக்க விதிகளைக் கண்டறிய முயல்கிறார்கள். ஆனால் எதார்த்தத்தில் அத்தகைய நடைமுறை ரீதியான வேறுபாடுகள் இருக்கவே செய்கின்றன. பொருளாதாரத் துறையை எடுத்துக் கொண்டால், பொருளாதார நிகழ்வுகள் பெரும்பாலும் அனேகக் காரணிகளால் பாதிக்கப்படுகின்றன. அக்காரணிகள் ஒவ்வொன்றையும் தனித்தனியே மதிப்பீடு செய்வது மிகவும் கடினம் ஆகும். இத்தகைய சூழ்நிலை, பொருளாதாரத் துறையில் செயல்படும் பொதுவான விதிகளைக் கண்டறியும் பணியைச் சிக்கலாக்கியுள்ளது. அதோடுகூட, மனித வரலாற்றில், நன்கு அறியப்பட்ட நாகரிகக் காலப்பகுதி என்று சொல்லப்படுகின்ற காலந்தொட்டு இன்றுவரை நாம் சேர்த்து வைத்துள்ள அனுபவத்தின்மீது பெருமளவு செல்வாக்குச் செலுத்திய, கட்டுப்படுத்திய காரணிகள் முற்றாகப் பொருளாதார இயல்பு கொண்டவையே அன்றி வேறல்ல. எடுத்துக்காட்டாக, வரலாற்றில் இடம்பெற்றுள்ள பெரும் பேரரசுகளில் பெரும்பாலானவை போர் வெற்றிகளாலேயே நிலைபெற்றுள்ளன. வெற்றி பெற்ற மக்கள், வெற்றி கொள்ளப்பட்ட நாட்டின் சிறப்புரிமை பெற்ற வர்க்கமாக சட்ட ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் தம்மை நிலைநிறுத்திக் கொண்டனர். அந்நாட்டு நிலங்களின் மீதான ஏகபோக உரிமையை தமக்கென அபகரித்துக் கொண்டனர். தங்களுடைய ஆட்களையே அந்நாட்டில் மதக் குருக்களாய் நியமித்தனர். அம்மதக் குருக்கள் கல்வியைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, சமுதாயத்தில் நிலவிய வர்க்கப் பிரிவினைகளை நிரந்தர சமூக அமைப்புகளாக மாற்றிவிட்டனர். அந்நாட்டு மக்கள் தமது சமுதாய நடவடிக்கைகளில் பின்பற்றக்கூடிய சமூக மதிப்புகளின் கட்டமைப்பை உருவாக்கினர். மக்கள் பெரும்பாலும் தங்களை அறியாமலேயே அதன்படி வழிநடத்தப்பட்டனர். ஆனால், தார்ஸ்டெயின் வெப்லென் (Thorstein Veblen) அவர்கள், மனிதகுல வளர்ச்சியில் ”கொள்ளைசார்ந்த காலகட்டம்” (predatory phase) என்று அழைக்கிற நேற்றைய வரலாற்று மரபை நாம் எங்கேயும் உண்மையிலேயே விட்டொழித்ததாகத் தெரியவில்லை. அந்தக் காலகட்டத்துக்குரிய அறியக்கூடிய பொருளாதார உண்மைகள் மற்றும் அவற்றிலிருந்து நாம் தருவிக்க முடிகிற விதிகளும்கூட வரலாற்றின் பிற காலகட்டங்களுக்குப் பொருந்தாதவை ஆகும். சோசலிஷத்தின் உண்மையான நோக்கம், துல்லியமாக, மனிதகுல வளர்ச்சியின் கொள்ளைசார்ந்த காலகட்டத்திலிருந்து விடுபடுவதும், அதனையும் தாண்டி முன்னேறுவதுமே ஆகும். பொருளாதார விஞ்ஞானம் இப்போதிருக்கும் நிலையில் வருங்கால சோசலிஷ சமுதாயம் பற்றி எதுவும் கூற இயலாத நிலைமையே உள்ளது.
இரண்டாவதாக, சோசலிஷமானது ஒரு சமூக–அறநெறி முடிவை நோக்கி (towards social-ethical end) நெறிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், விஞ்ஞானத்தால் முடிவுகளை உருவாக்க முடியாது. மேலும் முடிவுகளை மனிதர்களுக்குள் புகட்ட அதைவிடவும் முடியாது. விஞ்ஞானம், அதிகப் பட்சமாக, சில முடிவுகளை எட்டுவதற்கான சாதனங்களை வழங்க முடியும். ஆனால் இத்தகைய முடிவுகள் தம்மளவில், உன்னத அறநெறி இலட்சியங்களைக் கொண்டுள்ள தலைவர்களின் சிந்தனையில் உருவானவையே ஆகும். சாராம்சமான, உந்துசக்தி மிக்க இந்தக் கருத்துகள் எண்ணத்திலிருந்து வெளிப்பட்டவுடனே, சமுதாயத்தின் மெதுவான பரிணாம வளர்ச்சியைத் தீர்மானிக்கின்ற மக்கள் திரள் அக்கருத்துகளை ஏற்றுக் கொண்டு, முன்னெடுத்துச் செல்கின்றனர். அவர்களில் பாதிப்பேர் தங்களை அறியாமலேயே இதில் ஈடுபடுகின்றனர்.
இந்தக் காரணங்களினால், மானுடப் பிரச்சினைகள் என்று வரும்போது, விஞ்ஞானம் மற்றும் விஞ்ஞான வழிமுறைகளைப் பற்றி அதிகமாக எடைபோட்டுவிடாமல் கவனமாக இருக்க வேண்டும். சமுதாய அமைப்பினைப் பாதிக்கின்ற பிரச்சினைகளின் மீது வல்லுநர்கள் மட்டுமே கருத்துக் கூறும் உரிமை பெற்றவர்கள் என நாம் கருதிவிடக் கூடாது.
மனித சமுதாயம் ஒரு நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது, அதன் நிலைப்புத் தன்மை மிக மோசமாக ஆட்டம் கண்டுள்ளது என்று அண்மைக் காலமாக எண்ணற்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இத்தகைய சூழலில் தனிமனிதர்கள் தாம் சார்ந்த குழுவின்பால் – அது சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் – வெறுப்பும், பகைமையும் காட்டுவது இயல்பாய் உள்ளது. என்னுடைய கருத்தை விளக்கும் பொருட்டு என்னுடைய சொந்த அனுபவம் ஒன்றை இங்குப் பதிவு செய்ய விரும்புகிறேன். நான் அண்மையில், அறிவாளியான சிறந்த அந்தஸ்தில் உள்ள ஒருவருடன், இன்னொரு போர் வருவதற்கான அபாயம் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய கருத்தில் இன்னொரு போர் என்பது மனிதகுலத்தின் இருப்புக்கே மிக மோசமான ஆபத்தினை விளைவிக்கும். தேசங்களுக்கு அப்பாற்பட்ட அமைப்பு ஒன்றினால் மட்டுமே இந்த ஆபத்திலிருந்து மனிதகுலத்தைக் காப்பாற்ற முடியும் என்று அவரிடம் கூறினேன். அதற்கு அந்த மனிதர் மிகவும் அமைதியாக, நிதானமாக என்னிடம் சொன்னார்: ”மனித இனம் அழிந்து போவதை இவ்வளவு ஆழமாக எதற்காக நீங்கள் எதிர்க்கிறீர்கள்?”
ஒரு நூற்றாண்டு அளவிலான மிகக் குறுகிய காலத்துக்கு முன்னால் இதைப்போன்ற ஒரு கூற்றை இவ்வளவு அக்கறையின்றி எவரும் கூறியிருக்க முடியாது என என்னால் நிச்சயமாகக் கூற முடியும். தனக்குள்ளேயே ஒரு சமநிலைத் தன்மையை அடைவதற்கு வீணே போராடி, ஏறத்தாழ வெற்றி பெறுவதில் நம்பிக்கையை இழந்துவிட்ட ஒரு மனிதனின் கூற்றாகும் இது. வலிமிகுந்த தனிமையில் தனித்து ஒதுக்கப்பட்ட ஒருவரின் மன வெளிப்பாடு என்றே கொள்ள வேண்டும். இதற்குக் காரணம் யாது? இதிலிருந்து மீள்வதற்கு வழியுண்டா?
இத்தகைய கேள்விகளை எழுப்புவது எளிது. ஆனால், அக்கேள்விகளுக்கு ஓரளவுக்கேனும் நம்பிக்கையுடன் விடையளிப்பது கடினம். நமது உணர்வுகளும் முயற்சிகளும் எப்போதுமே முரண்பட்டும் தெளிவற்றும் உள்ளன. அவற்றை எளிய, சாதாரணச் சூத்திரங்களில் விளக்கிவிட முடியாது. இந்த உண்மையை நான் நன்கு அறிந்துள்ள போதிலும், என்னால் முடிந்த அளவுக்கு மேற்கண்ட கேள்விகளுக்குப் பதில்கூற முயல்கிறேன்.
மனிதன் என்பவன் ஒரே நேரத்தில் தனிமனிதனாகவும் சமூக மனிதனாகவும் இருக்கிறான். தனிமனிதன் என்ற நிலையில், அவன் தன் சொந்த விருப்பங்களைத் திருப்திப்படுத்தும் பொருட்டும், தன் உள்ளார்ந்த திறமைகளை வளர்த்துக் கொள்ளும் பொருட்டும், அவனுடைய வாழ்க்கையையும் அவனுக்கு மிகவும் நெருக்கமாக உள்ளவர்களின் வாழ்க்கையையும் பாதுகாத்துக் கொள்ள முயல்கிறான். சமூக மனிதன் என்ற நிலையில், அவனுடன் வாழும் மனிதர்களின் அங்கீகாரத்தையும் அன்பையும் பெறவும், அவர்களுடைய மகிழ்ச்சிகளைப் பகிர்ந்து கொள்ளவும், அவர்களுடைய துயரத்தில் பங்கு கொள்ளவும், அவர்களுடைய வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தவும் விரும்புகிறான். இத்தகைய, வேறுபட்ட, அடிக்கடி மோதிக் கொள்ளும் முயற்சிகள் இருப்பதே ஒரு மனிதனின் தனிச்சிறப்பான பண்புக்குக் காரணமாக அமைகிறது. இவற்றின் குறிப்பிட்ட சேர்க்கையே ஒரு தனிமனிதன் எந்த அளவுக்கு அகச் சமன்நிலையை அடைய முடியும், சமுதாயத்தின் நலனுக்குப் பங்காற்ற முடியும் என்பதைத் தீர்மானிக்கிறது. இந்த இருவேறு உந்து சக்திகளின் ஒப்பீட்டுப் பலம், பிரதானமாக மரபு வழியில் நிர்ணயிக்கப்படுவது சாத்தியமே. ஆனால், ஒரு மனிதனில் முடிவாக வெளிப்படும் ஆளுமை, அவனுடைய வளர்ச்சியின்போது அவன் வாழ நேர்ந்த சூழல், அவன் வளர்ந்த சமுதாயத்தின் கட்டமைப்பு, அந்த சமுதாயத்தின் மரபு, அந்தச் சமுதாயம் குறிப்பிட்டவகை நடத்தை பற்றிக் கொண்டுள்ள மதிப்பீடு ஆகியவற்றாலேயே பெருமளவு உருவாக்கப்படுகின்றது. தனிமனிதனைப் பொறுத்தவரை “சமுதாயம்” என்கிற அருவமான கருத்துருவின் (abstract concept) பொருள், அவனது சமகால மனிதர்களோடும், முந்தைய தலைமுறைகளின் அனைத்து மக்களோடும் அவன் கொண்டுள்ள நேரடியான மற்றும் மறைமுகமான உறவுகளின் ஒட்டு மொத்தத்தையே குறிக்கிறது. ஒரு தனிமனிதர் தானாகவே சிந்திக்க, உணர, முயல, வேலை செய்ய இயலும்; ஆனால், அவருடைய உடல் ரீதியான, அறிவு ரீதியான, உணர்வு ரீதியான வாழ்க்கையில் அவர் சமுதாயத்தின் மீது வெகுவாகச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. சமுதாயம் என்னும் கட்டமைப்புக்கு வெளியே அவர் தன்னைப் பற்றிச் சிந்திக்கவோ, தன்னைப் புரிந்து கொள்ளவோ இயலாது. சமுதாயமே மனிதனுக்கு உணவு, உடை, உறையுள், வேலைக்கான கருவிகள், மொழி, சிந்தனையின் வடிவங்கள், சிந்தனையின் பெரும்பாலான உள்ளடக்கம் ஆகியவற்றை வழங்குகிறது. “சமுதாயம்” என்னும் சிறிய சொல்லின் பின்னால் மறைந்துள்ள, இக்காலத்து மற்றும் கடந்த காலத்து மக்கள் பலகோடிப் பேரின் உழைப்பின் மூலமாகவும், செயல்பாடுகளின் மூலமாகவுமே மனிதனின் வாழ்க்கை சாத்தியமாகியுள்ளது.
எனவே, தனிமனிதன் சமுதாயத்தின் மீது சார்ந்துள்ள தன்மையானது இயற்கையின் உண்மை என்பது வெளிப்படையாகும். எறும்புகள், தேனீக்கள் விஷயத்தில் நடந்ததைப் போல இந்த உண்மையை அழித்துவிட முடியாது. என்றாலும், எறும்புகள், தேனீக்களுடைய மொத்த வாழ்க்கையின் நிகழ்வுப்போக்கும் மிக நுண்ணிய அசைவுகள் வரைக்கும், கறாரான, பரம்பரை ரீதியான உள்ளுணர்வுகளினாலேயே நிர்ணயிக்கப்படுகின்றன. அதே வேளையில், மனிதர்களின் சமூகப் பாங்கும், பரஸ்பர உறவுமுறைகளும் மிகவும் வேறுபட்டவையாகவும் மாறக்கூடிய இயல்புடையனவாகவும் இருக்கின்றன. நினைவிருத்தல், புதிய சேர்க்கைகளை உருவாக்கும் திறன், பேச்சுவழித் தகவல் தொடர்பென்னும் கொடை ஆகியவை மனிதர்களிடையே வளர்ச்சியைச் சாத்தியமாக்கியுள்ளன. இவை உடலியல் ரீதியான தேவைகளால் ஆட்டுவிக்கப்படுவதில்லை. இத்தகைய வளர்ச்சியின் அடையாளங்கள் மரபுகளிலும், சமூக நிறுவனங்களிலும், அமைப்புகளிலும், இலக்கியத்திலும், விஞ்ஞான, பொறியியல் செயல்பாடுகளிலும், கலைப் படைப்புகளிலும் வெளிப்படுகின்றன. இது, ஒருவகையில், மனிதன் தன் சொந்த நடத்தை மூலமாக அவனுடைய வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்த முடிவதும், இந்த நிகழ்வுப் போக்கில் உணர்வு பூர்வமான சிந்தனையும், போதாமையும் ஒரு பங்கு வகிக்க முடிவதும் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை விளக்குகிறது.
மனிதன் பிறப்பின்போது, மனித இனத்துக்கே உரிய இயற்கையான வேட்கைகளுடன் பரம்பரை வழியான உடல் கட்டமைவைப் பெறுகிறான். இவற்றை நிலையானதென்றும் மாற்ற முடியாதது என்றும் நாம் கருத வேண்டும். அதோடுகூட, அவனுடைய வாழ்நாளில் தகவல் தொடர்பு மற்றும் பிற வகையான பல்வேறு தாக்கங்கள் மூலமாகச் சமுதாயத்துடன் தகவமைத்துக் கொள்வதிலிருந்து ஒரு கலாச்சாரக் கட்டமைவைப் பெறுகிறான். காலத்தின் ஓட்டத்தில் மாற்றத்துக்கு உள்ளாகக் கூடிய இந்த கலாச்சாரக் கட்டமைவுதான் தனிமனிதனுக்கும் சமுதாயத்துக்கும் இடையிலான உறவுமுறையை மிகப் பெருமளவுக்குத் தீர்மானிக்கின்றது. நடப்பிலுள்ள கலாச்சாரப் பாங்குகளைப் பொறுத்தும், சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்தும் சமூக அமைப்பின் வகைகளைப் பொறுத்தும் மனிதர்களின் சமூக நடத்தை மிகப்பெரும் அளவுக்கு வேறுபட முடியும் என்பதை புராதனக் கலாச்சாரங்கள் என்று சொல்லப்படுவனவற்றை ஒப்பீட்டாய்வு செய்ததன் மூலம் நவீன மானிடவியல் நமக்குக் கற்பித்துள்ளது. மனித குலத்தை மேம்படுத்த முயன்று வருவோர் தமது நம்பிக்கைகளை இதன்மீது ஊன்றலாம்: மனிதர்கள் அவர்களுடைய உடல்கூறு அமைப்பின் காரணமாக ஒருவரை ஒருவர் அழித்தொழிக்கவோ, கொடூரமான, தாங்களே விதித்துக் கொண்ட விதியின் தயவில் வாழ்வதற்கோ சபிக்கப்படவில்லை.
மனித வாழ்க்கையைச் சாத்தியமான வரையில் திருப்திகரமானதாக ஆக்கிக் கொள்ளும் பொருட்டு, சமுதாயத்தின் கட்டமைப்பும், மனிதனின் கலாச்சார அணுகுமுறையும் எவ்வாறு மாற்றப்பட வேண்டும் என்று நம்மை நாமே கேட்டுக் கொள்வோமானால், சில நிலைமைகள் நம்மால் மாற்றியமைக்க முடியாதவாறு உள்ளன என்னும் உண்மையை எப்போதும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கும். ஏற்கெனவே குறிப்பிட்டவாறு, எந்த வகையில் பார்த்தாலும், மனிதனின் உடலியல் ரீதியான இயல்பு, மாற்றத்துக்கு உட்படாதது. அதற்கும் மேலாக, கடந்த சில நூற்றாண்டுகளில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப, சமூகநிலை வளர்ச்சிகள் இங்கே நிலைத்து நிற்கக் கூடிய நிலைமைகளை உருவாக்கி வைத்துள்ளன. தமது தொடர்ச்சியான வாழ்க்கைக்கு இன்றியமையாத சாதனங்கள் தேவைப்படுகின்ற, சற்றே நெருக்கமான மக்கள் தொகை கொண்ட சமுதாய அமைப்பில் தீவிரமான உழைப்புப் பிரிவினையும் மிக அதிகமாக மையப்படுத்தப்பட்ட உற்பத்தி முறையும் கட்டாயத் தேவையாகும். தனிமனிதர்களோ, ஓரளவு சிறிய குழுக்களோ முழுமையான தன்னிறைவுடன் வாழ முடிகின்ற காலம் – திரும்பிப் பார்த்தால் சொர்க்கமாய் இருந்த அந்தக் காலம் – போயே விட்டது. மனிதகுலம் இப்போதும்கூட உற்பத்தி மற்றும் நுகர்வு சார்ந்த பூமிவாழ் சமூகத்தையே கொண்டுள்ளது என்று கூறினால் மிகையாகாது.
என்னைப் பொறுத்தவரை நமது காலத்து நெருக்கடியின் சாராம்சம் என்ன என்பதைச் சுருக்கமாகச் சுட்டிக்காட்ட வேண்டிய கட்டத்துக்கு நான் இப்போது வந்துவிட்டேன். அது தனிமனிதருக்கு சமுதாயத்தோடுள்ள உறவுநிலை பற்றியதாகும். தனிமனிதர் சமுதாயத்து மீதுள்ள தனது சார்புத் தன்மையை முன் எப்போதையும்விட இப்போது அதிகமாக உணர்கிறார். ஆனால், இந்தச் சார்புத் தன்மையை ஒரு சாதகமான அனுகூலமாகவோ, ஓர் இயற்கையான பந்தமாகவோ, ஒரு பாதுகாப்பான சக்தியாகவோ அனுபவத்தில் அவர் உணரவில்லை. மாறாக, அவருடைய இயல்பான உரிமைகளுக்கும் அவருடைய பொருளாதார வாழ்வுக்குமேகூட ஓர் ஆபத்தாகவே கருதுகிறார். மேலும், சமுதாயத்தில் அவர் வகிக்கும் இடம், அவரின் உள்ளார்ந்த ’தான்’ என்னும் தன்முனைப்பு உந்துதலை எப்போதும் வலியுறுத்துகின்ற நிலையிலேயே உள்ளது. அதே வேளையில், அவருடைய சமுதாய ரீதியான உந்து சக்திகள் இயல்பாகப் பலவீனமாகவே உள்ளன, படிப்படியாக நசிந்து வருகின்றன. அனைத்து மனிதர்களுமே, அவர்கள் சமுதாயத்தில் எத்தகைய அந்தஸ்தில் உள்ளவராயினும், இத்தகைய நசிவுப் போக்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களை அறியாமலேயே தமது சொந்தத் தன்னகந்தையின் கைதிகளாக இருக்கும் இவர்கள் பாதுகாப்பற்று இருப்பதாகவும், தனித்து விடப்பட்டுள்ளதாகவும் உணர்கின்றனர். சூதுவாது இல்லாத, எளிய, பகட்டில்லாத முறையில் வாழ்க்கையை அனுபவிக்க முடியாமல் தடுக்கப்பட்டுள்ளனர். வாழ்க்கை குறுகியதாகவும் ஆபத்தானதாகவும் இருந்த போதிலும், மனிதன் சமுதாயத்துக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்வதன் மூலமாக மட்டுமே வாழ்க்கையின் அர்த்தத்தைக் காண முடியும்.
[இன்றைய மனித சமூகத்தின்] கேடுகளுக்கு உண்மையான மூல காரணம் இன்றைக்கு நிலவுகின்ற முதலாளித்துவ சமுதாயத்தின் பொருளாதார அராஜகமே என்பது என்னுடைய கருத்தாகும். உற்பத்தியாளர்களைக் கொண்ட ஒரு பெரிய சமூகக் குழுவின் உறுப்பினர்கள், அவர்களுடைய கூட்டு உழைப்பின் பலன்களை அனுபவிக்க விடாமல் ஒருவர் மற்றவரைத் தடுப்பதற்கு தொடர்ந்து முயன்று வருகின்றனர் என்பதை நம் கண்முன்னால் காண்கிறோம். பலாத்காரத்தின் மூலமாக அல்ல, மொத்தத்தில் சட்டப்படி நிலைநாட்டப்பட்டுள்ள விதிகளுக்கு உட்பட்டே இதனைச் செய்து வருகின்றனர். இந்தவகையில், உற்பத்தி சாதனங்கள் அனைத்தும் அதாவது, நுகர்வுப் பண்டங்களையும் அதோடுகூட மூலதனப் பண்டங்களையும் உற்பத்தி செய்வதற்குத் தேவையான ஒட்டுமொத்த உற்பத்தி சக்தி அனைத்தும் சட்ட ரீதியாகவே தனிநபர்களின் தனிச்சொத்தாக இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியது முக்கியமாகும்.
இனிவரும் விவாதத்தில், எளிமை கருதி, உற்பத்தி சாதனங்களின் உரிமையில் பங்கில்லாத அனைவரையும் “தொழிலாளர்கள்” என்று அழைக்க இருக்கிறேன், வழக்காற்றில் இச்சொல்லை அந்தப் பொருளில் பயன்படுத்துவதில்லை என்றபோதிலும். உற்பத்தி சாதனங்களின் உரிமையாளர் தொழிலாளியின் உழைப்புச் சக்தியை விலைக்கு வாங்குகின்ற நிலையில் உள்ளார். உழைப்பு சாதனங்களைப் பயன்படுத்தி தொழிலாளி உற்பத்தி செய்யும் புதிய பண்டங்கள் முதலாளியின் உடைமையாக ஆகின்றன. இந்த நிகழ்வுப்போக்கு பற்றிய சாராம்சமான கருத்து என்னவெனில், தொழிலாளி உற்பத்தி செய்த பொருள், அவருடைய கூலி இவை இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பே ஆகும். இரண்டும் உண்மை மதிப்பின் மூலமே அளவிடப்படுகின்றன. உழைப்புக்கான ஒப்பந்தம் சுதந்திரமாக இருக்கும் பட்சத்தில், தொழிலாளி கூலியாகப் பெறுவது அவர் உற்பத்தி செய்த பண்டங்களின் உண்மையான மதிப்பைக் கொண்டு நிர்ணயிக்கப்படுவதில்லை. தொழிலாளியின் குறைந்தபட்சத் தேவைகள், உற்பத்தி வேலைகளுக்காகப் போட்டியிடும் தொழிலாளர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் முதலாளிக்குத் தேவைப்படும் உழைப்பு சக்தி ஆகியவற்றைக் கொண்டே [தொழிலாளியின் கூலி] நிர்ணயிக்கப்படுகிறது. கொள்கை அளவில்கூட, தொழிலாளிக்கு வழங்கப்படும் கூலி அவர் உற்பத்தி செய்யும் பொருளின் மதிப்பு அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவதில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியது முக்கியம்.
தனியார் மூலதனம் ஒருசிலரின் கைகளிலேயே குவியத் தொடங்குகிறது. முதலாளிகளுக்கு இடையே நிலவும் போட்டி இதற்கு ஒரு காரணமாகும். தொழில்நுட்ப வளர்ச்சியும் வேலைப் பிரிவினையின் அதிகரிப்பும் சேர்ந்து, சிறிய அளவில் உற்பத்தி செய்யும் தொழிலகங்களை விழுங்கிப் பெரிய அளவிலான தொழிற்சாலைகள் அமைவதற்கு உதவுவதும் இன்னொரு காரணமாகும். இத்தகைய வளர்ச்சிப்போக்கின் விளைவாக, தனியார் மூலதனத்தைக் கையில் வைத்துள்ள ஒருசிலரின் ஆதிக்க ஆட்சி உருவாகிறது. அதன் அளவிறந்த ஆற்றலை ஜனநாயக ரீதியில் அமைந்த ஒர் அரசியல் சமுதாயத்தால்கூடத் தீர்மானகரமாய்த் தடுத்து நிறுத்த இயலாது. இது உண்மை ஆகும். காரணம், தனியார் முதலாளிகள் பெருமளவு நிதியுதவி அளிக்கின்ற அல்லது பிறவகையில் செல்வாக்குச் செலுத்துகின்ற அரசியல் கட்சிகளே சட்டமன்றங்களின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றன. எந்த வகையில் பார்த்தாலும், வாக்காளர்களைச் சட்டமன்றங்களிலிருந்து பிரித்து விடுகின்றனர். இதன் விளைவாக, மக்களின் பிரதிநிதிகள் [என்று சொல்லப்படுகின்றவர்கள்] சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் நலன்களைப் போதுமான அளவுக்குக் காப்பாற்றுவதில்லை. மேலும், தற்போது நிலவும் சூழ்நிலையில், தனியார் முதலாளிகள், நேரடியாகவோ மறைமுகமாகவோ, பிரதான தகவல் சாதனங்களை (பத்திரிகை, வானொலி, கல்வி) தவிர்க்க முடியாதவாறு தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். எனவே, ஒரு தனிக் குடிமகன் புறநிலையான முடிவுகளுக்கு வருவதோ, தனது அரசியல் உரிமைகளை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக் கொள்வதோ மிகமிகக் கடினம், பல நேரங்களில் நிச்சயமாக முடியாததும் ஆகும். மூலதனத்தின் மீதான தனிச் சொத்துரிமையின் அடிப்படையில் அமைந்த பொருளாதாரத்தில் நிலவுகின்ற சூழலை இரண்டு பிரதானக் கோட்பாடுகளின் மூலம் இவ்வாறாக விளக்கலாம்: முதலாவதாக, உற்பத்தி சாதனங்கள் (மூலதனம்) தனியாருக்குச் சொந்தமாக இருக்கின்றன. அதன் உரிமையாளர்கள் தாம் விரும்பியவாறு அவற்றைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இரண்டாவதாக, உழைப்பு ஒப்பந்தம் சுதந்திரமானது. என்றாலும், இந்த அர்த்தத்தில், கலப்பற்ற முதலாளித்துவ சமுதாயம் என எதுவும் கிடையாது. குறிப்பாக, தொழிலாளர்கள் நீண்ட கசப்பான அரசியல் போராட்டங்களின் மூலமாக, சில வகையினத் தொழிலாளர்களுக்குச் சற்றே மேம்பட்ட வடிவில் “சுதந்திர உழைப்பு ஒப்பந்தம்” பெற்றுத் தருவதில் வெற்றி கண்டனர். ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், இன்றைய பொருளாதாரம், “கலப்பற்ற” முதலாளித்துவத்திலிருந்து பெரிதாக வேறுபடவில்லை. உற்பத்தியானது இலாபத்துக்காக செய்யப்படுகின்றது, பயன்பாட்டுக்காக அல்ல. வேலை செய்ய முடிகிற, வேலை செய்ய விரும்புகின்ற அனைவருக்கும் எப்போதும் வேலை கிடைப்பதற்கான உத்திரவாதம் அளிக்கின்ற சட்டம் எதுவுமில்லை. எந்த நேரத்திலும் வேலை பறிபோகலாம் என்ற பயத்திலேயே தொழிலாளி வாழ்கிறான். வேலையற்ற தொழிலாளர்களும் மிகக் குறைவான கூலி பெறும் தொழிலாளர்களும் இலாபகரமான சந்தைக்கு உதவ மாட்டார்கள். இதன் காரணமாக, நுகர்வுப் பண்டங்களின் உற்பத்தி கட்டுப்படுத்தப்படுகிறது. மிகுந்த இன்னலே இதன் விளைவாகும். தொழில்நுட்ப முன்னேற்றம், அனைவரின் வேலைச் சுமையைக் குறைப்பதற்குப் பதிலாக, பெரும்பாலும் மிகுதியான வேலையின்மைக்கே வழி வகுத்துள்ளது. இலாப நோக்கம், முதலாளிகளுக்கு இடையேயான போட்டியுடன் சேர்ந்து, மூலதனக் குவிப்பிலும், அதன் பயனாக்கத்திலும் ஒரு நிலையற்ற தன்மைக்குக் காரணமாக அமைகிறது. இதுவே, மிகுதியான அளவில், மிக மோசமான பொருளாதார நெருக்கடிகளுக்கு இட்டுச் செல்கிறது. வரம்பிலாப் போட்டி, மிகுதியான உழைப்பு விரயத்துக்கும் நான் ஏற்கெனவே குறிப்பிட்டபடி, தனிமனிதர்களின் சமூக உணர்வு ஆட்டம் காண்பதற்கும் காரணமாகிறது.
தனிமனிதர்களின் சிதைவையே முதலாளித்துவத்தின் மிக மிக மோசமான கேடாகக் கருதுகிறேன். நமது மொத்தக் கல்வி அமைப்பே இந்தக் கேட்டினால் கெட்டுக் கிடக்கிறது. ஒரு மிகைப்படுத்தப்பட்ட போட்டி மனப்பான்மை மாணவனுக்குள்ளே வளர்க்கப்படுகிறது. அவன் தன்னுடைய எதிர்கால முன்னேற்றத்துக்குப் பொருளாயத வெற்றிகளைப் பூஜிப்பதற்கே பயிற்றுவிக்கப்படுகிறான். இத்தகைய மோசமான கேடுகளையெல்லாம் களைவதற்கு ஒரேயொரு வழி மட்டுமே உள்ளது என நான் நம்புகிறேன். ஒரு சோசலிஷப் பொருளாதார அமைப்பை நிறுவி, சமூக நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு கல்வி முறையை நடைமுறைப்படுத்துவதே ஒரே வழி. அத்தகைய ஒரு பொருளாதார அமைப்பில் உற்பத்திச் சாதனங்கள் அனைத்தும் சமுதாயத்துக்கே சொந்தமானதாக இருக்கும். திட்டமிட்ட முறையில் அவை பயன்படுத்திக் கொள்ளப்படும். சமுதாயத்தின் தேவைகளுக்கு ஏற்ப உற்பத்தியை ஒழுங்குபடுத்தும் ஒரு திட்டமிட்ட பொருளாதார அமைப்பாக அது இருக்கும். செய்யப்பட வேண்டிய வேலைகள், வேலை செய்ய முடிகிற அனைவர்க்கு இடையேயும் பகிர்ந்தளிக்கப்படும். ஒவ்வொரு மனிதனுக்கும், பெண்ணுக்கும், குழந்தைக்கும் வாழ்க்கைக்கு உத்திரவாதம் அளிக்கும். ஒருவருக்கு அளிக்கப்படும் கல்வி, அவரின் உள்ளார்ந்த ஆற்றல்களை வளர்ப்பதோடு, தற்கால சமுதாயத்தில் இருப்பதைப்போல அதிகாரத்தையும் அதன் வெற்றியையும் போற்றுகின்ற மனப்பான்மைக்குப் பதிலாக, சக மனிதர்கள் மீதான ஒரு அக்கறை உணர்வை அவருக்குள்ளே வளர்ப்பதற்கு முயலும்.
எனினும், திட்டமிட்ட பொருளாதாரம் என்பது சோசலிஷம் ஆகிவிடாது என்பதை நினைவில் கொள்வது முக்கியம். திட்டமிட்ட பொருளாதாரத்துடன், இயல்பாகவே தனிமனிதனின் முழுமையான சார்புநிலையும் சேர்ந்தே வரலாம். சோசலிஷத்தை அடைய, மிகமிகக் கடினமான சில சமூக – அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது அவசியமாகிறது: தீவிர விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய, அரசியல், பொருளாதார அதிகாரங்களை மையப்படுத்தலை நோக்குகையில், அதிகார வர்க்கம் எல்லாம் வல்லதாகவும், அகங்காரம் மிக்கதாகவும் ஆகிப்போவதைத் தடுப்பது எவ்வாறு சாத்தியம்? தனிமனிதனின் உரிமைகளை எவ்வாறு பாதுகாக்க முடியும்? அதன்மூலம், அதிகார வர்க்கத்தின் அதிகாரத்துக்கு ஒரு ஜனநாயக எதிரீட்டை உறுதி செய்வது எவ்வாறு? [புதிய கட்டத்துக்கு] மாறிச் செல்லும் நமது காலத்தில், சோசலிஷத்தின் நோக்கங்கள் பற்றியும் அதன் பிரச்சினைகள் பற்றியும் தெளிவு பெறுவது மிகப்பெரும் முக்கியத்துவம் பெறுகிறது. இன்றைய சூழ்நிலையில், இத்தகைய பிரச்சினைகள் பற்றிய சுதந்திரமான, குறுக்கீடில்லாத விவாதம் சக்திமிக்க தடைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதால், இந்தப் பத்திரிகையைத் தொடங்குவது ஒரு முக்கியமான பொதுச் சேவையெனக் கருதுகிறேன்.
[1949 மே மாதம் தொடங்கப்பட்ட “மன்த்லி ரிவ்யூ” என்ற பத்திரிகையின் முதல் இதழில் வெளியான கட்டுரை]
***** http://marxism.sivalingam.in/articles/whysocialism.htm

கம்யூனிசத்தின் கோட்பாடுகள் (ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்) தமிழாக்கம்: மு.சிவலிங்கம்

[கம்யூனிஸ்ட் லீக்குக்காக 1847-இல் ஏங்கெல்ஸ் இரண்டு வரைவுத் திட்டங்களை (Draft Programmes) கேள்வி-பதில் வடிவில் தயாரித்தார். முதலாவதை, ஜூன் மாதத்தில், “Draft of a Communist Confession of Faith” என்ற பெயரிலும், இரண்டாவதை, அக்டோபர்-நவம்பர் மாதத்தில், “Principles of Communism” என்ற பெயரிலும் எழுதினார். இவற்றுள் முதல் வரைவு 1968-ஆம் ஆண்டில்தான் முதன்முதலாகக் கண்டறியப்பட்டு, 1969-இல் ஹம்பர்க்கில் வெளியிடப்பட்டது. இரண்டாவது வரைவான இந்த நூல் முதன்முதலாக 1914-இல் ஜெர்மனியில் ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சி இதழில் வெளியிடப்பட்டது. இதன் ஆங்கில மூலம் 1969-இல் மாஸ்கோவில் முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்ட மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் தேர்வு நூல்கள் முதல் தொகுதியில் 81-97 பக்கங்களில் இடம்பெற்றுள்ளது. ஆங்கில மொழியாக்கம் செய்தவர் பால் ஸ்வீஸி என்பவர். இரண்டு வரைவுகளையும் ஒப்பிட்டு நோக்கினால், “கம்யூனிசத்தின் கோட்பாடுகள்” என்னும் இந்த இரண்டாவது வரைவு, முதலாவது வரைவின் திருத்தப்பட்ட வடிவமாகத் தோன்றுகிறது. கம்யூனிஸ்ட் லீக்கின் இரண்டாவது மாநாட்டில் (1847, நவம்பர் 29 - டிசம்பர் 8) மார்க்ஸும் ஏங்கெல்ஸும் இரண்டாவது வரைவில் காணப்படும் கம்யூனிசத்தின் விஞ்ஞான அடிப்படையிலான கோட்பாடுகளை வலியுறுத்திப் பேசினர். கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையைத் தயாரிக்கும் பொறுப்பை மாநாடு இருவருக்கும் வழங்கியது. மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் சேர்ந்து “கம்யூனிஸ்ட் அறிக்கையை” (Communist Manifesto) உருவாக்கும்போது, “கம்யூனிசத்தின் கோட்பாடுகள்” என்னும் இந்த வரைவு அறிக்கையில் காணப்படும் கருத்துருக்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டனர்.]
(1) கம்யூனிசம் என்றால் என்ன?
கம்யூனிசம் என்பது பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான சூழ்நிலைகள் பற்றிய கொள்கை விளக்கம் ஆகும்.
(2) பாட்டாளி வர்க்கம் என்றால் என்ன?
பாட்டாளி வர்க்கம் என்பது சமுதாயத்தில் நிலவுகிற, முற்றாகத் தனது உழைப்பை விற்பனை செய்வதன் மூலம் மட்டுமே வாழ்ந்து வருகிற, எந்த வகையான மூலதனத்திடம் இருந்தும் லாபம் பெற்றுக் கொள்ளாத ஒரு வர்க்கமாகும். இந்த வர்க்கத்தின் இன்பமும் துன்பமும், வாழ்வும் சாவும், இதன் இருப்பும்கூட உழைப்புக்கான தேவையின் மீதே சார்ந்திருக்கின்றன. அதன் காரணமாக, மாறிக்கொண்டே இருக்கும் வணிக நிலைமையின் மீதும், கட்டுப்பாடற்ற வணிகப் போட்டியின் புரியாத போக்குகளின் மீதும் சார்ந்திருக்கின்றன. ஒரு சொல்லில் கூறுவதெனில், பாட்டாளி அல்லது பாட்டாளி வர்க்கம் என்பது 19-ஆம் நூற்றாண்டின் உழைக்கும் வர்க்கத்தைக் குறிக்கிறது.[1]
(3) பாட்டாளிகள் என்பவர்கள் எப்போதுமே இருந்திருக்க வில்லையா?
இல்லை. ஏழை மக்களும் தொழிலாளி வர்க்கத்தினரும் எப்போதும் இருந்து வந்துள்ளனர். மேலும் தொழிலாளி வர்க்கம் பெரும்பாலும் ஏழ்மையாகவே இருந்துள்ளது. ஆனால் இன்று இருப்பதைப் போன்ற சூழ்நிலைமைகளில் வாழ்ந்து வருகின்ற தொழிலாளர்களும் ஏழை மக்களும் எப்போதும் இருந்திருக்கவில்லை. வேறு சொற்களில் கூறுவதெனில், இன்றைய சுதந்திர, கட்டுப்பாடற்ற [வணிகப்] போட்டிகள் எப்போதும் இருந்திருக்கவில்லை; அதுபோலவே இன்றைய பாட்டாளி வர்க்கத்தினர் எப்போதும் இருந்திருக்கவில்லை.
(4) பாட்டாளி வர்க்கம் எப்படி உதித்தது?
கடந்த (18-வது) நூற்றாண்டின் பிந்தைய பாதியில் இங்கிலாந்தில் உருவாகியதும், அதன்பின்னர் உலகின் அனைத்து நாகரிக நாடுகளிலும் தொடர்ந்து நிகழ்ந்ததுமான தொழில் புரட்சியின் விளைவாகவே பாட்டாளி வர்க்கம் உதித்தது.
நீராவி எஞ்சின், பல்வேறு நூற்பு எந்திரங்கள், விசைத்தறி மற்றும் இதர எந்திரக் கருவிகள் பலவற்றின் கண்டுபிடிப்பினால் இந்தத் தொழில் புரட்சி வலுப்பெற்றது. இந்த எந்திரங்கள் அதிக விலையுள்ளவை. எனவே பெரிய முதலாளிகளால் மட்டுமே வாங்க இயலும். இவை, உற்பத்திமுறை முழுவதையும் மாற்றி விட்டன. மேலும் இதுவரை இருந்துவந்த தொழிலாளர்களை வெளியேற்றின. காரணம், தொழிலாளர்கள் தமது திறனற்ற கைராட்டைகள், கைத்தறிகள் மூலம் உற்பத்தி செய்யக்கூடிய பண்டங்களைவிட மலிவான, சிறப்பான பண்டங்களை எந்திரங்கள் உற்பத்தி செய்தன. இவ்வாறாக, எந்திரங்கள் தொழில்துறையை முழுமையாகப் பெரும் முதலாளிகள் வசம் ஒப்படைத்துவிட்டன. மேலும், தொழிலாளர்களின் அற்ப சொத்துகளை (கருவிகள், கைத்தறிகள் போன்றவற்றை) முற்றிலும் பயனற்றவை ஆக்கிவிட்டன. இதன் விளைவாக, முதலாளிகள் வெகுவிரைவில் எல்லாவற்றையும் வசப்படுத்திக் கொண்டனர். தொழிலாளர்களுக்கென எதுவும் மிஞ்சவில்லை. துணி உற்பத்தித் துறையில் ஆலை உற்பத்திமுறை புகுத்தப்பட்டது இதற்கு ஓர் அடையாளம் ஆகும்.
எந்திரங்கள் மற்றும் ஆலை உற்பத்தி முறையைப் புகுத்திட ஒரு தூண்டுதல் அளிக்கப்பட்டவுடனே ஆலை முறை தொழில்துறையின் இதர பிரிவுகள் அனைத்திலும் குறிப்பாக, நெசவு, புத்தக அச்சடிப்பு, மண்பாண்டம் மற்றும் உலோகத் தொழிலகங்களில் மிக விரைவில் பரவியது.
உழைப்பு, தனித்தனித் தொழிலாளர்களுக்கிடையே மேலும் மேலும் பிரித்துக் கொடுக்கப்பட்டது. எனவே, முன்பெல்லாம் ஒரு முழுப் பொருளையும் உருவாக்கிய ஒரு தொழிலாளி இப்போது அந்தப் பொருளின் ஒருபகுதியை மட்டுமே உற்பத்தி செய்தான். இந்த உழைப்புப் பிரிவினை, பொருட்களை முன்பைவிட விரைவாகவும் மலிவாகவும் உற்பத்தி செய்வதைச் சாத்தியம் ஆக்கியது. இது ஒவ்வொரு தொழிலாளியின் பணியையும், இடையறாது திரும்பத்திரும்ப நிகழும் எளிதான எந்திர இயக்கமாகக் குறைத்தது. தொழிலாளி செய்துவந்த வேலையை, ஓர் எந்திரமானது அதே தரத்தில் மட்டுமின்றி, அதைவிட மேலும் சிறப்பாகவும் செய்ய முடியும். இவ்வாறாக, நூற்பு மற்றும் நெசவுத் தொழில்களில் ஏற்கெனவே நிகழ்ந்தது போலவே, அனைத்துத் தொழில்துறைகளும் ஒன்றன்பின் ஒன்றாக நீராவி, எந்திரங்கள் மற்றும் ஆலை முறையின் ஆதிக்கத்தின்கீழ் வந்தன.
ஆனால், அதேவேளையில் அத்தொழில்துறைகள் பெரும் முதலாளிகளின் கைகளில் மாட்டிக் கொள்ளவும் செய்தன. மேலும் அவற்றின் தொழிலாளர்கள் தங்களிடம் மிஞ்சியிருந்த கொஞ்சநஞ்ச சுதந்திரத்தையும் பறிகொடுத்தனர். பெரும் முதலாளிகள் மிகப்பெரிய தொழிற்கூடங்களை அமைப்பதன்மூலம் சிறிய கைவினைத் தொழில் விற்பன்னர்களை மிகப் பெருமளவில் வேலையிழக்கச் செய்தனர். இத்தொழிற்கூடங்கள் பல செலவுகளைச் சிக்கனப்படுத்தின; மிக விரிவான உழைப்புப் பிரிவினைக்கும் வழிவகுத்தன. இதன் காரணமாய்ச் சீரான பட்டறைத் தொழில் மட்டுமல்ல, கைவினைத் தொழில்களும்கூடப் படிப்படியாக ஆலை முறையின் ஆதிக்கத்தின்கீழ் வந்தன.
இவ்வாறாகவே, நாகரிகமடைந்த நாடுகளில், தற்போதைய காலகட்டத்தில், ஏறத்தாழ உழைப்பின் அனைத்து வடிவங்களும் தொழிற்கூடங்களில் நிறைவேற்றப்படுகின்றன. அனேகமாக வேலையின் அனைத்துப் பிரிவுகளிலும், கைவினைத் தொழிலும், பட்டறைத் தொழிலும் விழுங்கப்பட்டுவிட்டன. இந்த நிகழ்ச்சிப்போக்கு, முன்னெப்போதையும்விட மிகப் பெருமளவில், பழைய நடுத்தர வர்க்கத்தைக் குறிப்பாக சிறிய கைவினைத் தொழில்முனைவோரைச் சிதைத்து அழித்துவிட்டது; தொழிலாளர்களின் வாழ்நிலையை முற்றிலுமாக மாற்றி அமைத்துவிட்டது; இரண்டு புதிய வர்க்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவை பிற வர்க்கங்கள் அனைத்தையும் படிப்படியாக விழுங்கி வருகின்றன. அந்த இரு வர்க்கங்களாவன:
(1) பெரும் முதலாளிகளின் வர்க்கம். இந்த வர்க்கத்தினர், ஏற்கெனவே எல்லா நாகரிக நாடுகளிலும், பிழைப்புப் சாதனங்கள் அனைத்தையும், உற்பத்திக் கருவிகளையும் (எந்திரங்கள், தொழிற்கூடங்கள்), பிழைப்புச் சாதனங்களின் உற்பத்திக்குத் தேவைப்படும் மூலப்பொருள்களையும், ஏறத்தாழ தங்களின் தனிப்பட்ட கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இவர்களே முதலாளித்துவ வர்க்கம் [பூர்ஷ்வா வர்க்கம்] அல்லது முதலாளிகள் [பூர்ஷ்வாக்கள்].
(2) அறவே உடைமையற்ற வர்க்கம். தங்கள் வாழ்வுக்குத் தேவையான பிழைப்புச் சாதனங்களைப் பெறும்பொருட்டு, தங்கள் உழைப்பை முதலாளிகளுக்கு விற்கக் கடமைப்பட்டவர்களின் வர்க்கம். இவர்களே பாட்டாளி வர்க்கம் அல்லது பாட்டாளிகள் எனப்படுகின்றனர்.
(5) பாட்டாளிகளின் உழைப்பு முதலாளிகளுக்கு விற்கப்படுவது எந்த நிலைமைகளின் கீழ் நடைபெறுகிறது?
உழைப்பு என்பது ஏனைய பண்டங்களைப் போலவே ஒரு பண்டமாகும். எனவே, அதன் விலையும் பிற பண்டங்களின் விலையைத் தீர்மானிக்கும் அதே விதிகளாலேயே தீர்மானிக்கப்படுகிறது. பெருவீதத் தொழில்துறை அல்லது கட்டற்ற போட்டியின் – இந்த இரண்டும் ஒன்றிலேயே முடியும் என்பதை நாம் காண இருக்கிறோம் – ஆதிக்கத்தில் சராசரியாக ஒரு பண்டத்தின் விலை எப்போதும் அந்தப் பண்டத்தின் உற்பத்திச் செலவுக்குச் சமமானதாக இருக்கிறது. எனவே உழைப்பின் விலையும் அந்த உழைப்பின் உற்பத்திச் செலவுக்குச் சமமானதாக இருக்கிறது.
உழைப்பின் உற்பத்திச் செலவு என்பது, தொடர்ந்து வேலை செய்துவருவதற்கான சக்தியைத் தொழிலாளிக்கு வழங்கவும், தொழிலாளி வர்க்கத்தை அழிந்துபோய் விடாமல் தடுக்கவும் தேவைப்படுகின்ற பிழைப்புச் சாதனங்களின் அளவையே துல்லியமாய்க் குறிக்கிறது. எனவே, இந்த நோக்கத்துக்குத் தேவைப்படுவதைக் காட்டிலும் அதிகமாகத் தொழிலாளி தனது உழைப்புக்காகப் பெறப்போவதில்லை. வேறு வகையாகக் கூறுவதெனில், உழைப்புக்கான விலை அல்லது கூலியானது, ஆகக் குறைந்ததாக, வாழ்க்கைப் பராமரிப்புக்குத் தேவைப்படுகின்ற குறைந்தபட்ச அளவாக இருக்கும்.
என்றபோதிலும், வணிக நிலைமை சிலவேளை நன்றாகவும், சிலவேளை மோசமாகவும் இருப்பதால், தொழிலதிபர் தமது பண்டத்துக்குச் சிலவேளை அதிகமாகவும், சிலவேளை குறைவாகவும் பெறுவதைப் போன்றே தொழிலாளியும் சிலவேளை அதிகமாகவும், சிலவேளை குறைவாகவும் பெறுகிறார். ஆனால் தொழிலதிபர் சராசரியாக, நல்ல நிலைமையிலும் சரி, மோசமான நிலைமையிலும் சரி தமது பண்டத்துக்கு அதன் உற்பத்திச் செலவைக் காட்டிலும் கூடுதலாகவோ குறைவாகவோ பெறுவதில்லை. அதுபோலவே தொழிலாளி சராசரியாக, அவனது குறைந்தபட்சத் தேவைக்கு அதிகமாகவோ குறைவாகவோ பெறுவதில்லை.
உற்பத்தியின் அனைத்துப் பிரிவுகளையும் பெரும் தொழில்துறை எந்த அளவுக்கு அதிகமாகத் தன் வசப்படுத்திக் கொள்கிறதோ அந்த அளவுக்குக் கண்டிப்பாக, கூலி தொடர்பான இந்தப் பொருளாதார விதி செயல்படுகிறது.
(6) தொழில் புரட்சிக்கு முன்னால் நிலவிய தொழிலாளி வர்க்கங்கள் எவை?
தொழிலாளி வர்க்கங்கள் எப்போதுமே, சமுதாய வளர்ச்சியின் வெவ்வேறு கால கட்டங்களுக்கு ஏற்ப, வெவ்வேறு சூழ்நிலைமைகளில் வாழ்ந்து வந்துள்ளன; அவை உடைமை மற்றும் ஆளும் வர்க்கங்களுடன் வெவ்வேறு வகையான உறவுநிலைகளைக் கொண்டிருந்தன.
பல பின்தங்கிய நாடுகளிலும், அமெரிக்க நாட்டின் தென்பகுதியிலேகூட இப்போதும் இருந்து வருவதைப்போலப் பண்டைக் காலத்தில் தொழிலாளர்கள் உடைமையாளர்களிடம் அடிமைகளாக இருந்தனர்.
ஹங்கேரி, போலந்து, ருஷ்யா ஆகிய நாடுகளில் இப்போதும் இருந்து வருவதைப்போல, மத்திய காலங்களில் இவர்கள் நிலவுடைமைப் பிரபுக்களின் பண்ணை அடிமைகளாக இருந்தனர். இவர்கள் தவிர, மத்திய காலங்களில், சொல்லப்போனால் தொழில் புரட்சி காலம் வரையிலும்கூட, நகரங்களில் குட்டி முதலாளித்துவ எஜமானர்களின் சேவையில் வேலை செய்துவந்த கைவினைத் தொழிலாளர்கள் இருந்தனர். பட்டறைத் தொழில் வளர்ச்சி அடைந்தபோது, படிப்படியாக, இந்த கைவினைத் தொழிலாளர்கள் பட்டறைத் தொழிலாளர்களாக மாறினர். பின்னாளில் அவர்கள் பெரும் முதலாளிகளால் வேலைக்கு அமர்த்தப்பட்டனர்.
(7) பாட்டாளிகள் அடிமைகளிடமிருந்து எந்த வகையில் வேறுபடுகின்றனர்?
அடிமை ஒரேயடியாக விற்பனை செய்யப்பட்டுவிடுகிறான்; பாட்டாளியோ ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும் தன்னை விற்றுக் கொள்ள வேண்டும்.
ஒரு தனிப்பட்ட அடிமையானவன், ஓர் எஜமானனின் சொத்து ஆவான். அந்த எஜமானனின் நலன்கருதியே. எவ்வளவு கேவலமானதாக இருந்தபோதிலும், அடிமைக்கென ஒரு வாழ்க்கை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஒவ்வொரு தனிப்பட்ட பாட்டாளியும் ஒருவகையில் முதலாளித்துவ வர்க்கம் முழுமையின் உடைமையாகிறான். பாட்டாளியின் உழைப்பை, அது யாரேனும் ஒரு முதலாளிக்குத் தேவைப்படும்போது மட்டுமே, முதலாளித்துவ வர்க்கம் விலைக்கு வாங்குகிறது. எனவே, ஒரு தனிப்பட்ட பாட்டாளியின் வாழ்க்கைக்கு உத்திரவாதம் ஏதுமில்லை. [பாட்டாளி] வர்க்கம் முழுமைக்குமாகத்தான் அத்தகைய வாழ்க்கை உத்திரவாதம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அடிமை போட்டிக்கு வெளியே நிற்கிறான். பாட்டாளியோ, அதனுள்ளேயே நிற்கிறான்; போட்டியின் ஏற்ற இறக்கங்கள் அனைத்தையும் அனுபவிக்கிறான்.
அடிமை ஒரு பண்டமாகவே கருதப்படுகிறான், சமுதாயத்தின் ஓர் உறுப்பினனாகக் கருதப்படுவதில்லை. அதேவேளை, பாட்டாளியானவன் சமூக வளர்ச்சியின் ஓர் உயர்ந்த கட்டத்துக்கு உரியவனாகவும், அடிமையைக் காட்டிலும் ஒர் உயர்ந்த சமூக அந்தஸ்தைப் பெற்றவனாகவும் இருக்கின்ற போதிலும், அடிமையானவன் பாட்டாளியைக் காட்டிலும் சிறந்த வாழ்க்கையைப் பெற முடியும்.
அடிமையானவன், தனியார் சொத்துடைமையின் உறவுகள் அனைத்திற்குள்ளும் அடிமை உறவை மட்டுமே முறித்துக் கொள்வதன்மூலம் தன்னை விடுவித்துக் கொள்கிறான்; அதன்மூலம் ஒரு பாட்டாளியாகப் பரிணமிக்கிறான். ஆனால், பாட்டாளியோ, பொதுவாகத் தனியார் சொத்துடைமையை ஒழிப்பதன் மூலம் மட்டுமே தன்னை விடுவித்துக் கொள்ள முடியும்.
(8) பாட்டாளிகள் பண்ணை அடிமைகளிடமிருந்து எந்த வகையில் வேறுபடுகின்றனர்?
பண்ணையடிமை உற்பத்திக் கருவியான ஒரு துண்டு நிலத்தை உடைமையாய்க் கொண்டு, அதைப் பயன்படுத்துகிறான். அதற்கு ஈடாக அவன் தனது உற்பத்தியில் ஒரு பகுதியை விட்டுக் கொடுக்கிறான். அல்லது தனது உழைப்பின் சேவைகளில் ஒரு பகுதியை வழங்குகிறான்.
பாட்டாளியானவன் இன்னொருவருக்குச் சொந்தமான உற்பத்திக் கருவிகளைப் பயன்படுத்தி வேலை செய்கிறான். அதற்கு ஈடாகத் தனது உற்பத்தியில் ஒரு பகுதியை பெறுகிறான்.
பண்ணையடிமை கொடுக்கிறான், பாட்டாளி பெறுகிறான். பண்ணையடிமைக்கு உறுதிப்படுத்தப்பட்ட வாழ்க்கை உள்ளது, பாட்டாளிக்கு அத்தகைய வாழ்க்கை இல்லை. பண்ணையடிமை போட்டிக்கு வெளியே இருக்கிறான், பாட்டாளியோ போட்டியின் உள்ளேயே இருக்கிறான்.
பண்ணையடிமை மூன்று வழிகளில் தன்னை விடுவித்துக் கொள்கிறான்: நகரத்துக்குத் தப்பி ஓடி அங்கே ஒரு கைவினைப் பணியாளன் ஆகிறான்; அல்லது தனது நிலப்பிரபுவுக்கு உற்பத்திப் பொருட்களையும் உழைப்பையும் கொடுப்பதற்குப் பதில் பணத்தைக் கொடுத்து, அதன்மூலம் சுதந்திரமான குத்தகைதாரர் ஆகிறான்; அல்லது தனது நிலப்பிரபுவை விரட்டிவிட்டுத் தானே நிலத்துக்கு உடைமையாளன் ஆகிவிடுகிறான். சுருங்கக்கூறின், ஏதேனும் ஒரு வழியில் உடைமை வர்க்கத்தின் அங்கமாகிப் போட்டியில் நுழைந்துவிடுவதன் மூலம் தன்னை விடுவித்துக் கொள்கிறான். பாட்டாளியோ தொழில்போட்டி, தனியார் சொத்துடைமை மற்றும் அனைத்து வர்க்க வேறுபாடுகளையும் ஒழிப்பதன் மூலமே தன்னை விடுவித்துக் கொள்வான்.
(9) பாட்டாளிகள் கைவினைப் பணியாளரிடமிருந்து எந்த வகையில் வேறுபடுகின்றனர்?
பாட்டாளிக்கு வேறுபட்டவனான கைவினைப் பணியாளன் என்று சொல்லப்படுபவன், கடந்த நூற்றாண்டு [18-ஆம் நூற்றாண்டு] வரையில் ஏறத்தாழ எங்கெங்கும் நிலவி வந்தவன். இப்போதுங்கூட அங்கும் இங்கும் நிலவுகின்றவன். அவன், அதிகப்பட்சம் தற்காலிகமாக, ஒரு பாட்டாளியாக இருக்கிறான். பிற தொழிலாளர்களைச் சுரண்டித் தனக்கென மூலதனத்தைச் சேர்த்துக் கொள்வதே அவனது குறிக்கோளாகும். கைவினைக் குழுமங்கள் (guilds) இன்னும் நிலவிவரும் சூழலிலும், கைவினைக் குழுமக் கட்டுப்பாடுகளிலிருந்து கிடைக்கும் சுதந்திரம், கைவினைத் தொழிலில் பட்டறைத் தொழில் பாணியிலான வழிமுறைகளைப் புகுத்தும் அளவுக்கோ அல்லது கடுமையான தொழில்போட்டிக்கோ இன்னும் இட்டுச் செல்லாத நிலையிலும், அவன் பெரும்பாலும் இந்தக் குறிக்கோளை எட்டவே செய்கிறான். ஆனால், கைவினைத் தொழிலில் பட்டறை அமைப்புமுறை அறிமுகப்படுத்தப்பட்டு, தொழில்போட்டி முழுமையாய்ச் செழுதோங்கியவுடனே இந்தக் கண்ணோட்டம் மங்கத் தொடங்கியது; கைவினைப் பணியாளன் மேலும் மேலும் பாட்டாளியாகப் பரிணமித்தான். எனவே, கைவினைப் பணியாளன் முதலாளியாக மாறுவதன் மூலமோ, அல்லது நடுத்தர வர்க்கத்தில் பொதுவாக நுழைவதன் மூலமோ, போட்டியின் காரணமாய் ஒரு பாட்டாளியாகப் பரிணமிப்பதன் மூலமோ (இதுவே தற்போது பெருமளவு நடைமுறையாய் உள்ளது) தன்னை விடுவித்துக் கொள்கிறான். மூன்றாவது வகைப்பட்டவன், ஏறத்தாழ கம்யூனிச இயக்கமாகவே நடந்துவரும் பாட்டாளி வர்க்க இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொள்வதன்மூலம் தன்னைத்தானே விடுவித்துக் கொள்ள இயலும்.[2]
(10) பாட்டாளிகள் பட்டறைத் தொழிலாளர்களிடமிருந்து எந்த வகையில் வேறுபடுகின்றனர்?
16-வது நூற்றாண்டு முதல் 18-வது நூற்றாண்டு வரையிலான காலகட்டம் முழுவதும் பட்டறைத் தொழிலாளி, சில விதிவிலக்குகள் தவிர, அவனது தறி, குடும்ப நூற்பு ராட்டினம், தனது ஓய்வு நேரத்தில் பயிர்செய்யும் சிறிய துண்டு நிலம் போன்ற ஏதேனும் ஓர் உற்பத்திக் கருவியைத் தன் சொந்த உடைமையாக வைத்திருந்தான். பாட்டாளியோ இவற்றில் எதையுமே வைத்திருக்கவில்லை.
பட்டறைத் தொழிலாளி கிட்டத்தட்ட எப்போதுமே நாட்டுப்புறத்தில், தனது நிலப்பிரபு அல்லது முதலாளியுடன் ஏறத்தாழ தந்தைமுறை உறவுநிலையில் வாழ்ந்து வருகிறான். பாட்டாளியோ பெரும்பாலும் பெருநகரங்களில் வாழ்கிறான். தன்னுடைய முதலாளியுடனான அவனது உறவு முற்றிலும் பண உறவே.
பட்டறைத் தொழிலாளி, பெருவீதத் தொழில்துறையால் அவனது தந்தைமுறை உறவுநிலையிலிருந்து பிரித்தெறியப்பட்டு, மிச்சம் மீதியிருந்த தன் சொத்துடைமைகளை இழக்கிறான். இவ்வாறாக அவன் ஒரு பாட்டாளியாக மாறுகிறான்.
(11) தொழில் புரட்சியினாலும், முதலாளித்துவ வர்க்கம் பாட்டாளி வர்க்கம் என்ற வகையிலான சமுதாயப் பாகுபாட்டினாலும் ஏற்பட்ட உடனடி விளைவுகள் என்ன?
முதலாவதாக, எந்திர உழைப்பின் காரணமாக மிக மிக மலிவாகிப்போன தொழிற்சாலை உற்பத்திப் பொருட்கள், உடல் உழைப்பை அடிப்படையாகக் கொண்ட பட்டறைத் தொழில் மற்றும் பிற தொழில்துறையின் பழைய உற்பத்திமுறையை உலகின் அனைத்து நாடுகளிலும் முழுமையாக அழித்தொழித்துவிட்டது.
இவ்வாறாக, அரை-அநாகரிக (semi-barbarian) நாடுகள் அனைத்தும் அவற்றின் தனிமை நிலையிலிருந்து பலவந்தமாக வெளிக்கொணரப்பட்டன. இதுநாள்வரையில் அவை வரலாற்று வளர்ச்சிப் போக்கிலிருந்து ஏறத்தாழத் துண்டிக்கப்பட்டிருந்தன். பட்டறைமுறை அடிப்படையிலான தொழில்துறையைக் கொண்டிருந்தன. அவை ஆங்கிலேயர்களின் மலிவான பண்டங்களை விலைக்கு வாங்கித் தமது சொந்த பட்டறைத் தொழிலாளர்களின் அழிவுக்கு இடமளித்தன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் வளர்ச்சியின்றிக் கிடந்த நாடுகள் – எடுத்துக்காட்டாக, இந்தியா – முற்றிலும் புரட்சிகர மாற்றத்துக்கு உள்ளாயின. இப்போது சீனாவுங்கூட ஒரு புரட்சியை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது.
இங்கிலாந்தில் புதிதாய்க் கண்டுபிடிக்கப்பட்ட ஓர் எந்திரம் ஓராண்டு காலத்துக்குள் லட்சக்கணக்கான சீனத் தொழிலாளர்களின் அன்றாட உணவைச் சூறையாடும் ஒரு நிலைமைக்கு நாம் வந்து சேர்ந்துள்ளோம்.
இவ்வாறாக, பெருவீதத் தொழில்துறை இப்புவியின் அனைத்து மக்ககளையும் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ளச் செய்துள்ளது. அனைத்து வட்டாரச் சந்தைகளையும் ஒருங்கிணைத்து ஒற்றை உலகச் சந்தையை உருவாக்கியுள்ளது. எங்கெங்கும் நாகரிகமும் முன்னேற்றமும் பரவ வழிவகுத்துள்ளது. இதன்மூலம் நாகரிகமடைந்த நாடுகளில் என்ன நிகழ்ந்தாலும், அது பிற நாடுகள் அனைத்திலும் பின்விளைவுகளைக் கொண்டிருக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
இதிலிருந்து அறியவருவது, இங்கிலாந்து அல்லது ஃபிரான்சு நாட்டிலுள்ள தொழிலாளர்கள் இப்போது தம்மை விடுவித்துக் கொள்வார்கள் எனில், அது இதர பிற நாடுகள் அனைத்திலும் புரட்சியைத் தொடங்கிவைக்கும். இந்தப் புரட்சிகள் விரைவிலோ அல்லது சற்றுப் பின்னரோ அந்தந்த நாட்டுத் தொழிலாளர் வர்க்கத்தின் விடுதலையைப் பெற்றுத் தரும்.
இரண்டாவதாக, எங்கெல்லாம் பெருவீதத் தொழில்துறை பட்டறைத் தொழிலை இல்லாமல் செய்ததோ அங்கெல்லாம் முதலாளித்துவ வர்க்கம், செல்வத்திலும் அதிகாரத்திலும் ஆக உயர்ந்த நிலைக்கு வளர்ந்து, தன்னை நாட்டிலேயே முதன்மை வர்க்கமாக ஆக்கிக் கொண்டது. இதன் விளைவு என்னவெனில், எங்கெல்லாம் இது நிகழ்ந்ததோ அங்கெல்லாம் முதலாளித்துவ வர்க்கம் அரசியல் அதிகாரத்தைத் தன் கைகளில் எடுத்துக்கொண்டது. இதுகாறும் இருந்துவந்த ஆளும் வர்க்கங்களான பிரபுக்குலத்தார், கைவினைக் குழும எஜமானர்கள் மற்றும் இவர்களின் பிரதிநிதியாகச் செயல்பட்ட வரம்பிலா முடியாட்சியையும் ஒழித்துக் கட்டியது.
நிலச்சொத்தின் நிரந்தர உடைமைகளை ஒழித்ததன் மூலமும், வேறு சொற்களில் கூறுவதெனில் நிலச்சொத்துக்களை வாங்கவும் விற்கவும் உட்படுத்தியதன் மூலமும், பிரபுக்குலத்தின் சிறப்புச் சலுகைகளைப் பறித்துக் கொண்டதன் மூலமும், முதலாளித்துவ வர்க்கம் உயர்குடியினர், பிரபுக்குலத்தினரின் ஆட்சி அதிகாரத்தைப் பூண்டோடு அழித்தொழித்தது. கைவினைக் குழுமங்களையும், கைவினைஞரின் சலுகைகளையும் ஒழித்துக்கட்டியதன் மூலம் முதலாளித்துவ வர்க்கம் கைவினைக் குழும எஜமானர்களின் அதிகாரத்தை அழித்தொழித்தது. அவற்றின் இடத்தில் தொழிற்போட்டியை இடம்பெறச் செய்தது. அதாவது, தொழில்துறையின் எந்தப் பிரிவிலும் ஈடுபட ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ள, தொழில் தொடங்கத் தேவையான மூலதனம் இல்லை என்பது தவிர வேறெந்தத் தடங்கலும் இல்லாத ஒரு சமுதாய அமைப்புமுறையை இடம்பெறச் செய்தது.
இவ்வாறு, கட்டற்ற போட்டியை அறிமுகப்படுத்தியதானது, இப்போது முதற்கொண்டு சமுதாயத்தின் உறுப்பினர்கள் அவர்களது மூலதனம் சமமற்றது என்ற அளவுக்கு மட்டுமே சமமற்றவர்கள் எனவும், மூலதனமே தீர்மானகரமான சக்தி எனவும், இதனால் முதலாளிகள் அதாவது முதலாளித்துவ வர்க்கம் சமுதாயத்தின் முதன்மை வர்க்கமாக ஆகிவிட்டது எனவும் அறிவிக்கின்ற ஒரு பகிரங்கப் பிரகடனம் ஆகும்.
பெருவீதத் தொழில்துறையை நிறுவுவதற்குக் கட்டற்ற போட்டி அவசியம். ஏனெனில் பெருவீதத் தொழில்துறையின் வளர்ச்சிக்குரிய சமுதாய நிலைமை அது மட்டுமே. முதலாளித்துவ வர்க்கமானது, பிரபுக்குலம் மற்றும் கைவினைக் குழும எஜமானர்களின் சமூக அதிகாரத்தை அழித்தபின், அவர்களது அரசியல் அதிகாரத்தையும் அழித்தொழித்தது. முதலாளித்துவ வர்க்கம், சமுதாயத்தின் முதன்மை வர்க்கமாகத் தன்னை உயர்த்திக் கொண்டபின், அதிகாரம் மிக்க அரசியல் வர்க்கமாகவும் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டது. சட்டத்தின் முன் முதலாளித்துவ சமத்துவம், கட்டற்ற போட்டிக்கு அங்கீகாரம் ஆகியவற்றைச் சார்ந்து நிற்கிற பிரதிநிதித்துவ அமைப்பு முறையை நிறுவியதன் மூலம் இதனைச் சாதித்தது. இது ஐரோப்பிய நாடுகளில் அரசமைப்புச் சட்டத்துக்கு உட்பட்ட முடியாட்சி வடிவத்தில் அமைந்தது. அரசமைப்புச் சட்டத்துக்கு உட்பட்ட இந்த முடியாட்சிகளில் ஓரளவு மூலதனம் வைத்திருப்பவர்கள் மட்டுமே, அதாவது முதலாளித்துவ வர்க்க உறுப்பினர்கள் மட்டுமே வாக்காளர்கள் ஆவார்கள். இந்த முதலாளித்துவ வாக்காளர்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த முதலாளித்துவப் பிரதிநிதிகள் வரிகளுக்கு எதிராய் வாக்களிக்கும் உரிமை வாயிலாக, ஒரு முதலாளித்துவ அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
மூன்றாவதாக, எல்லா நாடுகளிலும் முதலாளித்துவ வர்க்கத்தோடு கூடவே பாட்டாளி வர்க்கமும் படிப்படியாய் வளர்ச்சி பெற்றது. முதலாளித்துவ வர்க்கம் செல்வத்தில் வளர்ச்சி பெற்ற அதே அளவுக்குப் பாட்டாளிகள் எண்ணிக்கையில் அதிகரித்தனர். பாட்டாளிகளை மூலதனம் மூலம் மட்டுமே வேலைக்கு அமர்த்த முடியும், உழைப்பை வேலைக்கு அமர்த்துவதால் மட்டுமே மூலதனம் அதிகரிக்க முடியும். இந்தக் காரணங்களினாலேயே மூலதன வளர்ச்சியுடன் கூடவே துல்லியமாக அதே வேகத்தில் பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சியும் பின்தொடரும் என்பது புலனாகிறது.
இந்த நிகழ்ச்சிப் போக்கு, ஏககாலத்தில் முதலாளித்துவ வர்க்கத்தினரையும் பாட்டாளி வர்க்கத்தினரையும் பெருநகரங்களில் ஒன்றாகக் கொண்டுவந்து சேர்க்கிறது. இங்குதான் தொழில்களை மிகவும் லாபகரமான முறையில் நடத்த முடியும். இவ்வாறு மிகப்பெரும் மக்கள் திரளை ஒரே இடத்தில் ஒன்று குவிப்பதானது, பாட்டாளி வர்க்கத்தினர்க்கு அவர்களின் சொந்த வலிமை குறித்த உணர்வினை நல்குகிறது.
இதற்கும் மேலாக, இந்த நிகழ்ச்சிப் போக்கு மேலும் முன்னேறிச் செல்லும்போது, உடல் உழைப்பைச் சிக்கனப்படுத்தும் புதிய எந்திரங்கள் எவ்வளவு அதிகமாகக் கண்டுபிடிக்கப் படுகின்றனவோ அந்த அளவு அதிகமாகப் பெருவீதத் தொழில்துறை கூலியைக் குறைப்பதில் முனைப்புக் காட்டும். நாம் அறிந்தவாறே, கூலி அதன் மிகக் குறைந்தபட்ச அளவைத் தொடும். அதனைத் தொடர்ந்து, பாட்டாளி வர்க்கத்தின் நிலைமை மென்மேலும் சகிக்க முடியாத அளவுக்குத் தாழ்ந்து போகும். இவ்வாறாக, பாட்டாளி வர்க்கத்தின் பெருகிவரும் அதிருப்தியுடன் சேர்ந்து, ஒரு பாட்டாளி வர்க்கச் சமூகப் புரட்சிக்குத் தயார்ப்படுத்துவதற்கான அதன் வல்லமையும் அதிகரிக்கிறது.
(12) தொழில் புரட்சியின் இதற்கும் மேலான விளைவுகள் எவை?
தொழில்துறை உற்பத்தியை முடிவில்லாமல் விரிவுபடுத்தவும், வேகப்படுத்தவும், உற்பத்தி செலவைக் குறைக்கவும் பயன்படும் சாதனங்களை நீராவி எஞ்சின் மற்றும் பிற எந்திரங்களின் உருவிலே பெருவீதத் தொழில்துறை உருவாக்கியது. இவ்வாறு வாய்ப்பு வசதிபெற்ற உற்பத்தியோடு, பெருவீதத் தொழில்துறையிலிருந்து பிரிக்க முடியாத நிச்சய விளைவான கட்டற்ற போட்டி மிகவும் தீவிர வடிவங்களை எடுத்தது. பெருந்தொகையான முதலாளிகள் தொழில்துறையில் படையெடுத்தனர். மிகக் குறுகிய காலத்திலேயே தேவைக்கும் அதிகமான அளவுக்கு உற்பத்தி பெருகியது.
இதன்விளைவாக உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்களை விற்பனை செய்ய இயலவில்லை. வணிக நெருக்கடி என்று சொல்லப்படும் பிரச்சினை வெடித்தது. ஆலைகளை மூட வேண்டியதாயிற்று. அவற்றின் உரிமையாளர்கள் திவாலாயினர். தொழிலாளர்கள் சோற்றுக்கு வழியின்றிப் பட்டினி கிடந்தனர். எங்கெங்கும் சொல்லொணாத் துயரம் கோலோச்சியது.
சில காலத்துக்குப் பின் தேங்கிக் கிடந்த பொருட்கள் விற்பனை ஆயின. ஆலைகள் மீண்டும் செயல்படத் தொடங்கின. கூலிகள் உயர்ந்தன. படிப்படியாக வணிகம் முன் எப்போதையும்விடச் செழித்தோங்கியது.
ஆனால் மீண்டும் குறுகிய காலத்துக்குள்ளேயே அளவுக்கு அதிகமான பண்டங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. ஒரு புதிய நெருக்கடி வெடித்தது. முந்திய நெருக்கடியின் போக்கிலேயே இதுவும் சென்றது.
இந்த [19-ஆம்] நூற்றாண்டு தொடங்கிய காலந்தொட்டே தொழில்துறையின் நிலைமை, செழிப்பான காலகட்டங்களுக்கும் நெருக்கடியான காலகட்டங்களுக்கும் இடையே தொடர்ந்து ஊசலாடிக் கொண்டேதான் இருந்தது. ஏறத்தாழ ஐந்து முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு புதிய நெருக்கடி இடைமறித்தது. இந்த நெருக்கடிகள் தொழிலாளர்களுக்கு எப்போதும் கடுந்துயரைக் கொடுப்பதாகவே இருந்தன. அதுமட்டுமின்றி, அவை எப்போதும் பொதுவான புரட்சிகர எழுச்சியுணர்வுகளையும், நிலவிவரும் சமுதாயக் கட்டமைப்பு முழுமைக்குமான நேரடி அபாயத்தையும் தம்முடன் சேர்த்தே கொண்டு வந்தன.
(13) குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து நிகழும் இத்தகைய வணிக நெருக்கடிகளில் இருந்து பெறக்கூடிய முடிவுகள் எவை?
முதலாவது:
பெருவீதத் தொழில்துறை தனது வளர்ச்சியின் மிகமிகத் தொடக்கக் காலகட்டத்தில் கட்டற்ற போட்டியை உருவாக்கிய போதிலும், அது [பெருவீதத் தொழில்துறை] இப்போது கட்டற்ற போட்டியையும் விஞ்சி நிற்கிறது;
இந்தப் போட்டி மற்றும் பொதுவாகத் தனித்துவமான உற்பத்தி அமைப்பு ஆகியவை பெருவீதத் தொழில்துறைக்கு ஒரு தளையாகி விட்டன. இந்தத் தளையை அது கட்டாயம் தகர்க்க வேண்டும், தகர்க்கும்.
பெருவீதத் தொழில்துறை இப்போதுள்ள அடிப்படையில் தொடர்ந்து இருந்துவரும் காலம்வரை, ஒவ்வொரு ஏழாண்டுகளிலும் [தொழில்துறை நெருக்கடி வடிவில்] நிகழுகின்ற பொதுக் குழப்படிக்கான விலையைத் தந்துதான் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியும். அத்தகைய நெருக்கடி நிகழும் ஒவ்வொரு முறையும் ஒட்டுமொத்த நாகரிகச் சமுதாயத்தையே அச்சுறுத்துகின்றது. மேலும், பாட்டாளிகளைத் துயரத்தில் ஆழ்த்துவதோடு மட்டுமின்றி, முதலாளித்துவ வர்க்கத்தின் பெரும்பகுதியையும் சீரழிக்கின்றது.
எனவே, பெருவீதத் தொழில்துறையையே கைவிட வேண்டும், இது முற்றிலும் சாத்தியமற்ற ஒன்றாகும். இதற்கு மாற்றாக, இச்சூழ்நிலை முற்றிலும் ஒரு புதிய சமுதாயக் கட்டமைப்பைத் தவிர்க்கவியலா அவசியம் ஆக்குகிறது. இப்புதிய சமுதாய அமைப்பில், பரஸ்பரம் போட்டியிடும் தனிப்பட்ட தொழிலதிபர்கள் உற்பத்தியை நெறிப்படுத்த மாட்டார்கள். பதிலாக, ஒரு வரையறுக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில், மக்கள் அனைவரின் தேவைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, ஒட்டுமொத்தச் சமுதாயமே உற்பத்தியை முறைப்படுத்தும்.
இரண்டாவது:
பெருவீதத் தொழில்துறையும் அதனால் சாத்தியமாக்கப்பட்ட உற்பத்தியின் எல்லையிலா விரிவாக்கமும், ஒரு புதிய சமூக அமைப்புமுறையைக் கைக்கெட்டும் தொலைவில் கொண்டுவந்துள்ளது. அப்புதிய அமைப்புமுறையில் சமுதாயத்தின் ஒவ்வோர் உறுப்பினரும் தனது சகல சக்திகளையும் ஆற்றல்களையும் பரிபூரண சுதந்திரத்துடன் பயன்படுத்தவும் மேம்படுத்தவுமான ஒரு நிலையில் இருப்பர். அந்த அளவுக்கு அதிகமான உற்பத்தி அங்கு இருக்கும்.
இவ்வாறு, நமது இன்றைய கால சமுதாயத்தில் துன்பங்களையும் நெருக்கடிகளையும் விளைவிக்கின்ற பெருவீதத் தொழில்துறையின் அதே பண்புகள்தாம் வேறுபட்ட வடிவிலான ஒரு சமுதாய அமைப்பின்கீழ் இந்தத் துன்பங்களையும் பேரிடரான துயரங்களையும் அழித்தொழிக்கும் என்பது புலனாகிறது.
தெள்ளத்தெளிவாக நாம் காண்பதாவது:
(1) இன்றைய எதார்த்த நிலைமையின் தேவைப்பாடுகளுக்கு இனிமேலும் ஒவ்வாதென ஆகிப்போன இந்தச் சமூக அமைப்புமுறை மட்டுமே மேற்கண்ட கேடுகளுக்கெல்லாம் காரணம் என இப்போது முதற்கொண்டு சாற்றிக் கூற முடியும்; மேலும்,
(2) ஒரு புதிய சமூக அமைப்புமுறை மூலமாக இந்தக் கேடுகளை முழுமையாக ஒழித்துக் கட்டுவது சாத்தியமாகும்.
(14) இந்தப் புதிய சமூக அமைப்புமுறை எந்த வகைப்பட்டதாக இருக்கும்?
எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தப் புதிய சமூக அமைப்புமுறை, பரஸ்பரம் போட்டியிட்டுக் கொள்ளும் தனிநபர்களின் கைகளிலிருந்து, தொழில்துறையின் கட்டுப்பாட்டையும் உற்பத்தியின் அனைத்துப் பிரிவுகளையும் எடுத்துக் கொள்ளும். பதிலாக, பொருளுற்பத்தியின் இந்தப் பிரிவுகள் அனைத்தையும் ஒட்டுமொத்த சமுதாயமே நிர்வகிக்கின்ற ஓர் அமைப்புமுறையினை, சமுதாயம் முழுமைக்காகவும், ஒரு பொதுத் திட்டத்தின்படியும், சமுதாயத்தின் உறுப்பினர்கள் அனைவரின் பங்கேற்புடனும் நிறுவும்.
வேறு வகையில் கூறுவதெனில், அது போட்டியை ஒழித்து அதனிடத்தில் ஒத்துழைப்பை நிலைநாட்டும்.
மேலும், தொழில்துறையின் நிர்வாகம் தனிநபர்கள் கையில் இருப்பது, தவிர்க்க முடியாதபடி தனியார் சொத்துடைமைக்கு இட்டுச் செல்கிறது. போட்டி என்பது நடைமுறையில் வெறுமனே, தனியார் சொத்துடைமையாளர்களின் கட்டுப்பாட்டில் தொழில்துறை இருப்பதன் தன்மையும் வடிவமுமே ஆகும். ஆக, போட்டியிலிருந்தும், தொழில்துறையின் தனிநபர் மேலாண்மையிலிருந்தும் தனியார் சொத்துடைமையைப் பிரிக்க முடியாது என்பது இதிலிருந்து புலனாகும். எனவே, தனியார் சொத்துடைமை ஒழிக்கப்பட வேண்டும். அதற்குப் பதிலாக, உற்பத்திக் கருவிகள் அனைத்தும் பொதுப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். உற்பத்திப் பொருட்கள் அனைத்தும் பொது உடன்பாட்டின்படி வினியோகிக்கப்பட வேண்டும். சுருக்கமாக இது ’உற்பத்திப் பொருட்களின் மீதான கூட்டு உடைமை’ என்று அழைக்கப்படுகிறது.
உண்மையில், தனியார் சொத்துடைமை ஒழிப்பு என்பது, ஐயத்துக்கு இடமின்றி, தொழில்துறை வளர்ச்சியின் தவிர்க்க முடியாத விளைவான, ஒட்டுமொத்த சமூக அமைப்புமுறையில் ஏற்படும் புரட்சியை விவரிக்க மிகச் சுருக்கமான, மிகவும் குறிப்பிடத்தக்கதொரு வழிமுறை ஆகும். இந்தக் காரணத்தால்தான், மிகச்சரியாகவே கம்யூனிஸ்டுகள் தங்களின் முதன்மையான கோரிக்கையாகத் தனியார் சொத்துடைமை ஒழிப்பை முன்வைக்கின்றனர்.
(15) தனியார் சொத்துடைமை ஒழிப்பு முந்தைய காலகட்டத்தில் சாத்தியமானதாக இருக்கவில்லையா?
இருக்கவில்லை. சமூக அமைப்புமுறையில் ஒவ்வொரு மாற்றமும், சொத்துடைமை உறவுகளில் ஏற்படும் ஒவ்வொரு புரட்சியும், புதிய உற்பத்திச் சக்திகளின் உருவாக்கத்தினால் ஏற்படும் கட்டாய விளைவே ஆகும். புதிய உற்பத்தி சக்திகள் பழைய சொத்துடைமை உறவுகளுடன் இனிமேலும் ஒத்துப் போகா.
தனியார் சொத்துடைமை என்றென்றும் நிலவியிருக்கவில்லை.
மத்திய காலப்பகுதியின் இறுதியில் ஒரு புதிய உற்பத்தி முறை அதாவது பட்டறை உற்பத்தி முறை புகுத்தப்பட்டது. பழைய சொத்துடைமை உறவுகளையும் மிஞ்சி அது வளர்ச்சி பெற்றது. அன்று நிலவிவந்த நிலப்பிரபுத்துவ, கைவினைக் குழும வடிவிலான சொத்துடைமை அமைப்பின்கீழ் அதனை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலையில், அது தனியார் சொத்துடைமை என்னும் ஒரு புதிய சொத்துடைமை வடிவத்தைப் படைத்தது. பட்டறைத் தொழில் அமைப்பிலும், பெருவீதத் தொழில்துறை வளர்ச்சியின் மிகத் தொடக்கக் கட்டத்திலும் தனியார் சொத்துடைமை மட்டுமே சாத்தியமான சொத்துடைமை வடிவமாக இருந்தது; தனியார் சொத்துடைமையை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்புமுறை மட்டுமே சாத்தியமான சமூக அமைப்புமுறையாக இருந்தது.
எல்லோருக்கும் போதுமான அளவுக்கு கிடைத்தது போக, சமூக மூலதனத்தை விரிவாக்கவும், உற்பத்தி சக்திகளைப் பெருக்கவும் பெருஞ்செல்வம் மீந்திடும் அளவுக்கு இதுநாள் வரையில் உற்பத்தி செய்ய முடிந்ததில்லை. அந்த அளவுக்கு உற்பத்தி செய்ய முடியாத காலம்வரை, சமுதாயத்தினுடைய உற்பத்தி சக்திகளின் பயன்பாட்டை நெறிப்படுத்தும் ஓர் ஆளும் வர்க்கமும், ஏழ்மையான ஓர் ஒடுக்கப்பட்ட வர்க்கமும் இருந்தே தீரும். இந்த வர்க்கங்கள் எவ்வாறு அமைகின்றன என்பது உற்பத்தியின் வளர்ச்சிக் கட்டத்தைப் பொறுத்ததாகும்.
விவசாயத்தைச் சார்ந்துநின்ற மத்திய காலப்பகுதி நமக்கு நிலப்பிரபுவையும் பண்ணை அடிமையையும் வழங்கியது. மத்திய காலகட்டத்தின் பிந்தைய பகுதி கைவினைக் குழும எஜமானனையும், கைவினைப் பயிற்சியாளனையும், நாள்கூலித் தொழிலாளியையும் நமக்குக் காட்டியது. பதினேழாம் நூற்றாண்டு பட்டறை அதிபர்களையும் பட்டறைத் தொழிலாளர்களையும் கொண்டிருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டோ பெரிய தொழிற்சாலை உடைமையாளர்களையும் பாட்டாளிகளையும் கொண்டுள்ளது.
இதுநாள்வரையில் உற்பத்தி சக்திகள், அனைவருக்கும் போதுமான அளவுக்கு உற்பத்தி செய்யும் நிலைக்கு ஒருபோதும் வளர்ச்சி அடையவில்லை என்பது கண்கூடு. தனியார் சொத்துடைமை, உற்பத்தி சக்திகள் மேலும் வளர்ச்சி பெறுவதற்கு ஒரு தளையாகவும் தடைக்கல்லாகவும் ஆகிவிட்டது.
ஆயினும் இப்போது, பெருவீதத் தொழில்துறையின் வளர்ச்சியானது, ஒரு புதிய காலகட்டத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. மூலதனமும் உற்பத்தி சக்திகளும் முன்னெப்போதும் கண்டிராத அளவுக்கு விரிவாக்கப்பட்டுள்ளன. அண்மைக் காலத்துக்குள் அவற்றை வரம்பிலா அளவுக்குப் பெருக்கிட உற்பத்தி சாதனங்கள் கைவசம் உள்ளன. அதுமட்டுமின்றி, உற்பத்தி சக்திகள் மிகச்சில முதலாளிகளின் கைகளில் குவிந்துள்ள அதே வேளையில் மாபெரும் திரளான மக்கள் மேலும் மேலும் பாட்டாளி வர்க்கத்துக்குள் தள்ளப்பட்டு வருகின்றனர். முதலாளிகளின் செல்வச் செழிப்பு அதிகரித்துவரும் அதே வேகத்தில் பாட்டாளி மக்களின் நிலைமை மென்மேலும் அவலம் மிகுந்ததாகவும், தாங்கவொண்ணாததாகவும் ஆகிவருகிறது. முடிவாக, எளிதில் விரிவாக்கத் தக்கதும் வலிமை மிக்கதுமான இந்த உற்பத்தி சக்திகள், தற்போதைக்குத் தனியார் சொத்துடைமையையும் முதலாளித்துவ வர்க்கத்தையும் மிஞ்சி வளர்ந்துள்ளன. அவை எந்த நேரத்திலும் சமூக அமைப்புமுறையையே குலைக்கும் கொடூரமான குழப்பங்களைக் கட்டவிழ்த்துவிட காத்துக் கொண்டுள்ளன. இந்த நிலைமைகளில் தனியார் சொத்துடைமையை ஒழிப்பது இப்போது சாத்தியமாகிவிட்டது மட்டுமின்றி முற்றிலும் அவசியமும் ஆகிவிட்டது.
(16) தனியார் சொத்துடைமையை சமாதான முறையில் ஒழிப்பது சாத்தியமா?
தனியார் சொத்துடைமையைச் சமாதான முறையில் ஒழிப்பது நடைபெறக்கூடும் எனில் அது விரும்பத்தக்கதே. இதைக் கம்யூனிஸ்டுகள் கட்டாயம் எதிர்க்க மாட்டார்கள். சதித்திட்டங்கள் எல்லாம் பயனற்றவை என்பது மட்டுமின்றிக் கேடு விளைவிப்பவை என்பதையும் கம்யூனிஸ்டுகள் நன்றாக அறிவார்கள். புரட்சிகள் திட்டமிட்டோ தன்னிச்சையாகவோ உருவாக்கப்படுவதில்லை என்பதையும், மாறாக அவை எங்கும் எப்போதும், தனிப்பட்ட கட்சிகள் மற்றும் மொத்த வர்க்கங்களின் விருப்பம் அல்லது கட்டளையைச் சாராத முற்றிலும் சுதந்திரமான புற நிகழ்வுகளின் இன்றியமையாத விளைவே என்பதையும் அவர்கள் மிக நன்றாகவே அறிவார்கள்.
ஆனால், அதே வேளையில், ஏறத்தாழ எல்லா நாகரிகமடைந்த நாடுகளிலும் பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சி பலவந்தமாக அடக்கப்படுகிறது என்பதையும், இந்த வகையில் கம்யூனிசத்தின் எதிராளிகள் தங்களின் முழுப் பலத்தோடு ஒரு புரட்சி உருவாவதற்கே பாடுபடுகிறார்கள் என்பதையும் கம்யூனிஸ்டுகள் காண்கிறார்கள். ஒடுக்கப்பட்ட பாட்டாளி வர்க்கம் இறுதியில் ஒரு புரட்சியை நோக்கித் தள்ளப்படுமானால், கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள், பாட்டாளிகளின் நலன்களைப் சொல்மூலம் பாதுகாத்து வருவதைப்போல் செயல்மூலமும் பாதுகாத்து நிற்போம்.
(17) தனியார் சொத்துடைமையை ஒரே அடியில் ஒழித்துக் கட்டுவது சாத்தியமா?
இல்லை. ஒரு பொதுவான கூட்டுச் சமுதாயத்தை உருவாக்கத் தேவையான அளவுக்கு இப்போது நிலவும் உற்பத்தி சக்திகளை ஒரேயடியாகப் பெருக்குவது எவ்வாறு சாத்தியமில்லையோ அதுபோலவே இதுவும் சாத்தியமில்லை.
பாட்டாளி வர்க்கப் புரட்சி, இன்று நிலவும் சமுதாயத்தைப் படிப்படியாக மாற்றியமைக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால், போதுமான அளவில் உற்பத்திச் சாதனங்கள் கைவசம் இருக்கும்போது மட்டுமே அதனால் தனியார் சொத்துடைமையை ஒழித்துக்கட்ட இயலும்.
(18) இந்தப் புரட்சியின் திசைவழி எதுவாக இருக்கும்?
எல்லாவற்றுக்கும் மேலாக, அது ஒரு ஜனநாயக அரசமைப்பை நிறுவும். இதன்மூலம் நேரடியாகவோ மறைமுகமாகவோ, பாட்டாளி வர்க்கத்தின் மேலாதிக்கத்தை நிறுவும். பாட்டாளி வர்க்கம் மக்களில் பெரும்பான்மையாக ஏற்கெனவே இருக்கின்ற இங்கிலாந்தில் நேரடியாகவே இதனை நிறைவேற்றும். பெரும்பான்மை மக்களிடையே பாட்டாளிகள் மட்டுமின்றி, சிறு விவசாயிகள் மற்றும் குட்டிமுதலாளித்துவ வர்க்கத்தினரும் அங்கம் வகிக்கும் ஜெர்மனியிலும் ஃபிரான்சிலும் மறைமுகமாக இதனை நிறைவேற்றும். அங்கெல்லாம் இந்த வர்க்கத்தினர் மெல்ல மெல்ல பாட்டாளி வர்க்கத்துக்குள் வந்து விழுகின்ற நிலையில் இருக்கின்றனர். தங்களது அரசியல் நலன்கள் அனைத்துக்கும் மென்மேலும் மிகுதியாக பாட்டாளி வர்க்கத்தையே சார்ந்து நிற்கின்றனர். எனவே விரைவில் இவர்கள் பாட்டாளி வர்க்கத்தின் கோரிக்கைகளுக்கு இணங்கி வருவார்கள். அனேகமாக இது இரண்டாவது போராட்டத்துக்கு வழிவகுக்கலாம். எனினும், அதன் இறுதி முடிவு பாட்டாளி வர்க்கத்தின் வெற்றியாக மட்டுமே இருக்க முடியும்.
ஜனநாயகம் என்பது, தனியார் சொத்துடைமைக்கு எதிராகக் குறிவைக்கப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், பாட்டாளி வர்க்கத்தின் வாழ்வாதரத்தை உறுதிப்படுத்துவதற்குமான ஒரு வழிமுறையாக, உடனடியாகப் பயன்படுத்தப்பட வேண்டும். இல்லையேல், ஜனநாயகம் பாட்டாளி வர்க்கத்துக்கு முற்றிலும் மதிப்பற்றதாகிவிடும். இப்போது நிலவும் உறவுகளின் தவிர்க்கவியலாத பின்விளைவாக வெளிப்படுகின்ற முதன்மையான நடவடிக்கைகள் பின்வருமாறு:
(1) படிப்படியாக அதிகரிக்கும் வருமான வரிவிதிப்பு, மரபுரிமைச் சொத்து மீது உயர் வரிகள், கிளைவழிவந்தோர் (சகோதரர், சகோதர சகோதரிகளின் புதல்வர்கள் போன்றோர்) மரபுரிமை பெறுவதை ஒழித்தல், கட்டாயக் கடன்கள் போன்ற நடவடிக்கைகளின் மூலம் தனியார் சொத்துடைமையைக் கட்டுப்படுத்தல்.
(2) ஓரளவு அரசுத் தொழில்துறையினால் தோற்றுவிக்கும் போட்டி மூலமும், ஓரளவு நேரடியாக சேமிப்புப் பத்திரங்கள் வடிவில் இழப்பீடு வழங்கியும், நில உடைமையாளர்கள், தொழிலதிபர்கள், ரயில்வே மற்றும் கப்பல் கம்பெனி அதிபர்கள் ஆகியோரைப் படிப்படியாகச் சொத்துடைமையிலிருந்து விடுவித்தல்.
(3) நாட்டைவிட்டு வெளியேறியோர், பெரும்பான்மை மக்களுக்கு எதிரான கலகக்காரர்கள் ஆகியோரின் சொத்துகளைப் பறிமுதல் செய்தல்.
(4) மக்களுக்குச் சொந்தமான நிலங்களிலும், தொழிற்சாலைகளிலும், பணிமனைகளிலும் பாட்டாளிகளை வேலைக்கு அமர்த்தி உழைப்பை ஒழுங்கமைத்தல். இதன்மூலம் தொழிலாளர்களுக்கு இடையேயான போட்டிக்கு முடிவுகட்டுதல். ஒருசில தொழிற்சாலை உடைமையாளர்கள் மீதம் இருப்பின், அரசு கொடுக்கும் அதே அளவு உயர்ந்த கூலியைத் தருவதற்கு அவர்களை ஒப்புக் கொள்ளச் செய்தல்.
(5) தனியார் சொத்துடைமை முற்றிலுமாக ஒழிக்கப்படும்வரை சமுதாயத்தின் உறுப்பினர்கள் அனைவரும் உழைக்க வேண்டும் என்னும் சமப்பொறுப்புக்கு உள்ளாக்குதல். தொழில்துறைப் பாதுகாப்புப் படைகளைக் குறிப்பாக விவசாயத்துக்காக நிறுவுதல்.
(6) அரசு மூலதனத்தைக் கொண்ட ஒரு தேசிய வங்கி மூலம், பணம் மற்றும் கடன் அமைப்புகளை அரசின் கைகளில் மையப்படுத்தல். அனைத்துத் தனியார் வங்கிகள், வங்கி அதிபர்களைக் கட்டுப்படுத்தல்.
(7) தேசியத் தொழிற்சாலைகள், பணிமனைகள், ரயில்பாதைகள், கப்பல் போக்குவரத்து ஆகியவற்றை அதிகரித்தல்; தரிசு நிலங்களைப் பண்படுத்திச் சாகுபடி செய்தல், ஏற்கெனவே சாகுபடி செய்யும் நிலங்களை மேம்படுத்தல் – இவையனைத்தையும், தேசத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டு வரும் மூலதனம் மற்றும் உழைப்புச் சக்தி ஆகியவற்றின் வளர்ச்சிக்கேற்ற விகிதத்தில் செய்தல்.
(8) தாயின் பராமரிப்பில் இருந்து விடுபடக்கூடிய வயதுவந்த எல்லாக் குழந்தைகளுக்கும் தேசியக் கல்வி நிறுவனங்களில், தேசத்தின் செலவில் கல்வி வழங்குதல். கல்வியைப் பொருள் உற்பத்தியோடு இணைத்தல்.
(9) தொழில்துறையிலும் விவசாயத்திலும் ஈடுபட்டுள்ள குடிமக்களின் குழுக்களுக்கு, அரசின் பொது நிலங்களில் கூட்டு வசிப்பிடங்களாகப் மிகப்பெரும் குடியிருப்புகளைக் கட்டுதல். நாட்டுப்புற நகரப்புற நிலைமைகளின் சாதகமான கூறுகளை அவர்களின் வாழ்க்கை முறையில் ஒன்றிணைத்தல். அதே வேளையில் அவையிரண்டின் ஒருசார்புத் தன்மை மற்றும் பாதகமான கூறுகளைத் தவிர்த்தல்.
(10) நகர்ப்புற மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள சுகாதாரமற்ற, தரமற்ற வசிப்பிடங்களை இடித்துத் தகர்த்தல்.
(11) முறையான திருமண வாழ்வில் பிறந்த குழந்தைகளுக்கும், அவ்வாறின்றிப் பிறந்த குழந்தைகளுக்கும் சமமான மரபுவழிச் சொத்துரிமை வழங்குதல்.
(12) அனைத்துப் போக்குவரத்து சாதனங்களையும் தேசத்தின் உடைமையாக மையப்படுத்தல்.
இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் உடனடியாகச் செயல்படுத்த முடியாது என்பது உண்மையே. ஆனால் ஒருசெயல் எப்போதும் இன்னொரு செயலுக்கு இட்டுச் செல்லும். தனியார் சொத்துடைமை மீது முதல் தீவிரத் தாக்குதல் தொடுக்கப்பட்டவுடன் பாட்டாளி வர்க்கம் மேலும் முன்னே செல்ல உந்தப்படுவதை உணரும். சகல மூலதனத்தையும், விவசாயத் தொழில் முழுவதையும், அனைத்துப் போக்குவரத்துச் சாதனங்களையும், வணிகப் பரிவர்த்தனை முழுவதையும் அரசின் கைகளில் மேலும் மேலும் மையப்படுத்த முனைப்புக் காட்டும். மேற்கூறப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் இந்த முடிவினை நோக்கியே நெறிப்படுத்தப்படும். இத்தகைய நடவடிக்கைகள் செயல்படுத்த இயன்றவையாகவும், ஏதுவானவையாகவும் ஆகிவிடும். பாட்டாளி வர்க்கம் தமது உழைப்பின்மூலம் நாட்டின் உற்பத்தி சக்திகளைப் பன்மடங்காகப் பெருக்கும் அதே அளவுக்குத் துல்லியமாக, அவற்றின் மையப்படுத்தும் ஆற்றலை வெளிக்காட்டும் திறன்கொண்டதாகவும் இருக்கும்.
இறுதியாக, அனைத்து மூலதனத்தையும், அனைத்து உற்பத்தியையும், அனைத்துப் பரிவர்த்தனையையும் ஒன்றாகத் தேசத்தின் கைகளில் ஒருமுகப்படுத்தும்போது, தனியார் சொத்துடைமை தானாகவே மறைந்து போய்விடும். பணம் தேவையற்றதாகி விடும். சமுதாயம் தனது மிச்சம் மீதியிருக்கும் பழைய பொருளாதாரப் பண்புகளை உதறித் தள்ளும் திறன் பெற்றிருக்கும். உற்பத்தி அந்த அளவுக்கு அதகரித்திருக்கும். மனிதர்கள் அந்த அளவுக்கு மாற்றம் அடைந்திருப்பார்கள்.
(19) இந்தப் புரட்சி ஒருநாட்டில் மட்டும் நடைபெறுவது சாத்தியமா?
இல்லை. உலகச் சந்தையை உருவாக்கியதன் மூலம், பெருவீதத் தொழில்துறை ஏற்கெனவே புவியின் மக்களினம் அனைத்தையும், குறிப்பாக நாகரிகமடைந்த மக்களினம் அனைத்தையும் ஒன்றோடொன்றை, மற்றவர்க்கு என்ன நேர்ந்தாலும் அதன் பாதிப்பிலிருந்து எவரும் ஒதுங்கியிருக்க முடியாது என்ற அளவுக்கு நெருக்கமாகப் பிணைத்திருக்கிறது.
மேலும், பெருவீதத் தொழில்துறை நாகரிகமடைந்த நாடுகளின் சமூக மேம்பாட்டை பெருமளவுக்கு ஒருங்கிணைத்துள்ளது. எந்த அளவுக்கு எனில், இந்த நாடுகள் அனைத்திலும், முதலாளித்துவ வர்க்கமும் பாட்டாளி வர்க்கமும் தீர்மானகரமான வர்க்கங்களாகி விட்டன, அவற்றுக்கு இடையிலான போராட்டமே இன்றைய காலகட்டத்தின் மாபெரும் போராட்டமாகி விட்டது. எனவே, கம்யூனிசப் புரட்சி வெறுமனே ஒரு தேசிய நிகழ்வாக மட்டும் இருக்காது, அது நாகரிகமடைந்த நாடுகள் அனைத்திலும் ஏக காலத்தில் நிகழும். அதாவது குறைந்த பட்சம் இங்கிலாந்து அமெரிக்கா, பிரான்ஸ் ஜெர்மனி ஆகிய நாடுகளில் ஏக காலத்தில் நிகழும்.
இந்த நாடுகள் ஒவ்வொன்றிலும், மிகவும் வளர்ச்சியடைந்த தொழில்துறை, மிகப்பெரும் செல்வவளம், மிகவும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய உற்பத்தி சக்திகள் ஆகியவை இருப்பதைப் பொறுத்து, அதற்கேற்ப அந்தந்த நாடுகளில் மிகுந்த அல்லது குறைந்த வேகத்தில் இப்புரட்சி வளர்ச்சி பெறும். எனவே, ஜெர்மனியில் இது மிக மெதுவாக நடக்கும்; அதிகப்படியான தடைகளைச் சந்திக்கும். இங்கிலாந்தில் இது மிக வேகமாக, மிகக் குறைந்த இடர்ப்பாடுகளுடன் நிறைவேறும். அது உலகின் பிற நாடுகள்மீது சக்திமிக்க தாக்கத்தை ஏற்படுத்தும். அவற்றின் வளர்ச்சி வேகத்தை மிகுதியாய் முடுக்கிவிடுவதுடன், இதுகாறும் அந்நாடுகள் பின்பற்றிவந்த வளர்ச்சிப் போக்கின் திசையை முற்றிலுமாய் மாற்றியமைக்கும்.
இது ஓர் உலகளாவிய புரட்சியாகும். அதன்படியே, அது உலகளாவிய வரம்பெல்லையையே கொண்டிருக்கும்.
(20) தனியார் சொத்துடைமை முடிவாக மறைந்துபோவதால் ஏற்படும் பின்விளைவுகள் எவை?
அனைத்து உற்பத்தி சக்திகளையும், வணிக சாதனங்களையும், உற்பத்திப் பொருட்களின் பரிவர்த்தனை மற்றும் வினியோகத்தையும்கூட, தனியார் முதலாளிகளின் கைகளிலிருந்து சமுதாயமே எடுத்துக் கொள்ளும். இருக்கின்ற வள ஆதாரங்கள், சமுதாயம் முழுவதன் தேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு திட்டத்தின்படி, சமுதாயம் அவற்றை மேலாண்மை செய்யும். இந்த வகையில், எல்லாவற்றுக்கும் அதிமுக்கியமாய், தற்போது பெருவீதத் தொழில்துறையையோடு தொடர்புடையதாய் இருக்கும் கேடான விளைவுகள் அனைத்தும் ஒழிக்கப்பட்டுவிடும்.
இனிமேல் வணிக நெருக்கடிகள் இல்லாமல் போகும். விரிவாக்கப்பட்ட உற்பத்தி, இப்போதைய சமூக அமைப்புமுறையில் மிதமிஞ்சியதாய் ஆகி, துன்பங்கெளுக்கெல்லாம் முதன்மையான காரணமாய் விளங்குகிறது. அதுவே பின்னால் பற்றாக்குறையாய் ஆகி, மேலும் விரிவாக்க வேண்டிய தேவைக்கு உள்ளாகிறது. [புதிய சமூக அமைப்புமுறையில்] மிதமிஞ்சிய உற்பத்தி, துன்பங்களை உருவாக்குவதற்குப் பதிலாக, சமுதாயத்தின் அடிப்படைத் தேவைப்பாடுகளுக்கும் அப்பால், மக்கள் அனைவரின் வாழ்க்கைத் தேவைகளையும் நிறைவேற்றுவதை உறுதி செய்யும். புதிய தேவைகளை உருவாக்கும். அதே வேளையில் அவற்றை நிறைவேற்றுவதற்கான சாதனங்களையும் உருவாக்கும். புதிய முன்னேற்றத்துக்கான நிபந்தனையாகவும் தூண்டுகோலாகவும் ஆகிப்போகும். முன்னேற்றமானது கடந்த காலத்தில் எப்போதும் செய்ததுபோல, சமூக அமைப்புமுறை முழுவதயும் குழப்பத்தில் ஆழ்த்திவிடாது. பெருவீதத் தொழில்துறை, தனியார் சொத்துடைமையின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு, மாபெரும் விரிவாக்கத்துக்கு உள்ளாகும். எந்த அளவுக்கு எனில், நம் காலத்தின் பெருவீதத் தொழில்துறையுடன் ஒப்பிடுகையில் பட்டறைத் தொழில் அற்பமாகத் தோன்றியதைப்போல், இப்போது நாம் காணும் பெருவீதத் தொழில்துறை, ஒப்பீட்டளவில் அற்பமாகத் தோன்றும் அளவுக்கு விரிவடையும். தொழில்துறையின் இந்த வளர்ச்சி, மக்கள் ஒவ்வொருவரின் தேவைகளையும் நிறைவுசெய்யப் போதுமான அளவுக்கு எராளமான உற்பத்திப் பொருட்கள் சமுதாயத்துக்குக் கிடைக்குமாறு செய்யும்.
விவசாயத் துறைக்கும் இந்த உண்மை பொருந்தும். விவசாயமும் தனியார் சொத்துடைமையின் தாக்கத்துக்கு ஆளாகிப் பாதிப்புக்கு உள்ளானது. தனியாருக்குச் சொந்தமான நிலங்கள் சிறுசிறு துண்டுகளாகப் பிரிக்கப்பட்டதால் பின்னடைவைச் சந்தித்தது. புதிய சமூக அமைப்பில் தற்போதைய முன்னேற்றங்களும் விஞ்ஞானச் செயல்முறைகளும் நடைமுறைப்படுத்தப்படும். அதன் விளைவாக [விவசாய வளர்ச்சியில்] ஏற்படும் முன்னோக்கிய பாய்ச்சலினால் சமுதாயத்துக்குத் தேவைப்படும் அனைத்துப் பொருட்களும் [குறைவின்றிக் கிடைக்க] உறுதி செய்யப்படும்.
இவ்வாறாக, [புதிய சமூக அமைப்பில் உற்பத்தி செய்யப்படும்] அபரிதமான பண்டங்களினால் சமுதாயத்தின் உறுப்பினர்கள் அனைவரின் தேவைகளையும் நிறைவு செய்ய முடியும்.
பரஸ்பரம் பகைமை பாராட்டும் பல்வேறு வர்க்கங்களாகச் சமுதாயம் பிளவுறுவது இதனால் தேவையற்றதாகிவிடும். மேலும், புதிய சமூக அமைப்பில் இது தேவையற்றது மட்டுமல்ல, ஏற்கவொண்ணாததாகவும் ஆகிவிடும். உழைப்புப் பிரிவினையிலிருந்தே வர்க்கங்கள் தோன்றின. இன்றைய நாள்வரை அறியப்பட்டு வந்த இந்த உழைப்புப் பிரிவினை புதிய சமூக அமைப்பில் முற்றாக மறைந்துவிடும். நாம் விளக்கிக் கூறிய அளவுக்குத் தொழில்துறை மற்றும் விவசாயத்தின் உற்பத்தியை அதிகரிக்க தற்போதுள்ள எந்திரவியல், வேதியியல் செயல்முறைகள் போதுமானதாக இல்லை. எனவே அத்தகைய செயல்முறைகளைப் பயன்படுத்தும் மனிதர்களின் திறப்பாடுகள் அதற்கேற்றவாறு வளர்ச்சி காண வேண்டும்.
கடந்த [18-வது] நூற்றாண்டின் விவசாயிகளும் பட்டறைத் தொழிலாளர்களும் பெருவீதத் தொழில்துறைக்குள் ஈர்க்கப்பட்டபோது தமது ஒட்டுமொத்த வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டு முற்றிலும் வேறுபட்ட மக்களாய் மாறிப் போயினர். அதுபோலவே, உற்பத்தி மீதான ஒட்டுமொத்தச் சமுதாயத்தின் கூட்டு நிர்வாகம், அதன் விளைவாக ஏற்படும் புதிய வளர்ச்சி ஆகிய இரண்டுக்கும் முற்றிலும் வேறு வகைப்பட்ட புதிய மக்கள் சக்தி தேவைப்படுகின்றது.
மக்கள், உற்பத்தியின் தனியொரு பிரிவுக்கென ஒதுக்கப்பட்டு, அதிலேயே பிணைக்கப்பட்டு, அதனால் சுரண்டப்பட்டு, இன்று இருப்பதைப் போல இனிமேலும் இருக்க மாட்டார்கள். அவர்கள் இனிமேலும் மற்ற எல்லோரின் செலவில் தங்கள் ஆற்றல்களுள் ஒன்றை மட்டுமே வளர்த்துக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் இனிமேலும் ஒட்டுமொத்த உற்பத்தித் துறையின் ஒரேயொரு பிரிவை அல்லது ஒரேயொரு பிரிவின் ஒரு கிளையை மட்டுமே தெரிந்து வைத்திருக்க மாட்டார்கள். தொழில்துறையானது இன்றைய நிலையில்கூட அத்தகைய மக்களை மிகமிகக் குறைந்த பயனுள்ளவர்களாகவே கருதுகிறது.
ஒட்டுமொத்த சமுதாயத்தால் நிர்வகிக்கப்படும், மேலும், ஒரு திட்டத்தின்படி இயக்கப்படும் தொழில்துறையானது, சகல துறைகளிலும் தேர்ச்சிபெற்ற, தமது ஆற்றல்களைச் சமமான முறையில் வளர்த்துக் கொண்ட, உற்பத்தி அமைப்புமுறையை அதன் முழுப் பரிமாணத்தோடு நோக்கும் திறன்வாய்ந்த மனிதர்களை எதிர்நோக்குகிறது.
ஒருமனிதனை விவசாயியாகவும், இன்னொருவனை காலணி தைப்பவனாகவும், மூன்றாமவனை ஆலைத் தொழிலாளியாகவும், நான்காமவனை பங்குச் சந்தை முகவராகவும் ஆக்கிடும் இந்த உழைப்புப் பிரிவினையின் வடிவம், எந்திரத் தொழிலால் ஏற்கெனவே தகர்க்கப்பட்டுள்ளது. இனி அது முழுவதுமாய் மறைந்து போகும். கல்வியானது, இளைஞர்கள் ஒட்டுமொத்த உற்பத்தி அமைப்புமுறையை வெகுவிரைவில் கற்றுக் கொள்வதைச் சாத்தியமாக்கும். சமுதாயத்தின் தேவைகளை அல்லது தனது சொந்த நாட்டங்களை நிறைவேற்றும் பொருட்டு, உற்பத்தியின் ஒரு பிரிவிலிருந்து இன்னொரு பிரிவுக்கு அவர்கள் மாறிச் செல்வதையும் சாத்தியமாக்கும். ஆக, இன்றைய உழைப்புப் பிரிவினை ஒவ்வொரு தனிநபர்மீதும் சுமத்தியுள்ள ஒருசார்புப் பண்பிலிருந்து இளைஞர்களை விடுவிக்கும். கம்யூனிச சமுதாயம் இந்த வகையில், அதன் உறுப்பினர்கள், பரந்த அளவில் வளர்ச்சிபெற்ற தமது ஆற்றல்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதைச் சாத்தியமாக்கும். ஆனால், இது நிகழும்போது, வர்க்கங்கள் நிச்சயமாக மறைந்து போகும். கம்யூனிச அடித்தளத்தின்மீது அமைக்கப்படுகின்ற சமுதாயம் ஒருபுறம் வர்க்கங்கள் நிலவுவதோடு ஒத்துப் போகாது என்பதும், மறுபுறம் அத்தகைய ஒரு சமுதாயத்தைக் கட்டமைக்கும் செயலே வர்க்க வேறுபாடுகளை ஒழித்துக்கட்டும் சாதனங்களை வழங்குகிறது என்பதும் இதன்மூலம் பெறப்படுகிறது.
இந்நிகழ்வினைத் தொடரும் பின்விளைவு, நகரத்துக்கும் நாட்டுப்புறத்துக்கும் இடையிலான வேறுபாடு மறைந்துபோக விதிக்கப்பட்டுள்ளதாகும். விவசாயத்தையும் தொழில்துறையையும் இரண்டு வெவ்வேறு வர்க்கங்களைக் கொண்டு மேலாண்மை செய்வதைக் காட்டிலும் ஒரே மக்களைக் கொண்டு மேலாண்மை செய்வது, முற்றிலும் பொருளாயதக் காரணங்களுக்காக மட்டுமே என்றாலுங்கூட, கம்யூனிசக் கூட்டுறவின் ஓர் அவசிய நிபந்தனையும் ஆகும். ஒருபுறம் பெரும் நகரங்களில் தொழில்துறை சார்ந்த மக்கள் நெருக்கமாய்க் குவிந்து கிடக்க, மறுபுறம் விவசாயம் சார்ந்த மக்கள் நாடு முழுதும் சிதறிக் கிடப்பது, விவசாயம், தொழில்துறை ஆகிய இரண்டின் வளர்ச்சி குன்றிய கட்டத்தோடு தொடர்புடைய ஒரு நிலைமையாகும். அடுத்த கட்ட வளர்ச்சிக்கு இது ஒரு முட்டுக்கட்டையாகும் என்பதையும் ஏற்கெனவே உணர முடிந்துள்ளது.
உற்பத்தி சக்திகளை திட்டமிட்ட முறையில் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கத்துக்காக சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் இடையே பொது ஒத்துழைப்பு உருவாக்குதல்; எல்லோருடைய தேவைகளையும் நிறைவேற்றி வைக்கும் நிலையை எட்டும் அளவுக்கு உற்பத்தியை விரிவுபடுத்தல்; பிறருடைய தேவைகளைப் புறக்கணித்துச் சிலரது தேவைகளை மட்டும் நிறைவு செய்யும் நிலைக்கு முடிவு கட்டுதல்; வர்க்கங்களையும் அவற்றின் முரண்பாடுகளையும் முற்றாக ஒழித்துக் கட்டுதல்; இன்றைய உழைப்புப் பிரிவினையை ஒழித்துக்கட்டுவதன் மூலமும், தொழில்துறைக் கல்வி மூலமும், பல்வேறுபட்ட செயல்பாடுகளில் ஈடுபடுத்துவதன் மூலமும், எல்லோராலும் படைத்தளிக்கப்படும் மனமகிழ் நிகழ்வுகளில் அனைவரும் பங்கெடுப்பதன் மூலமும், நகரத்தையும் நாட்டுப்புறத்தையும் ஒருங்கிணைப்பதன் மூலமும், சமுதாய உறுப்பினர்கள் அனைவரின் ஆற்றல்களையும் சர்வாம்ச ரீதியில் மேம்படுத்துதல்; – இவையே தனியார் சொத்துடைமை ஒழிக்கப்படுவதால் ஏற்படும் முதன்மையான விளைவுகளாகும்.
(21) கம்யூனிச சமுதாயம் குடும்பத்தின் மீது எத்தகைய செல்வாக்குச் செலுத்தும்?
பாலின உறவு என்பது அதில் ஈடுபட்டுள்ள நபர்கள் மட்டுமே சம்பந்தப்பட்ட ஒன்றாகும்; சமுதாயம் அதில் தலையிட எவ்வித அவசியமும் இல்லை. எனவே [கம்யூனிச சமுதாயம்] பாலினங்களுக்கு இடையிலான உறவுகளை முற்றிலும் தனிப்பட்ட விவகாரமாக மாற்றியமைக்கும். இதனைச் செய்ய முடிவதற்குக் காரணம் அது தனியார் சொத்துடைமையை ஒழித்துக் கட்டுகிறது. மேலும், குழந்தைகளுக்குச் சமுதாய அடிப்படையில் கல்வி கற்பிக்கிறது. இவ்வாறாக, பாரம்பரிய திருமண முறையின் இரண்டு அடித்தளங்களை – தனியார் சொத்துடைமையில் வேர்கொண்டுள்ள சார்புத் தன்மையை – மனைவி கணவனைச் சார்ந்திருப்பதையும், குழந்தைகள் பெற்றோரைச் சார்ந்திருப்பதையும் தகர்த்தெறிகிறது.
”பெண்கள் பொதுவாக்கப்படுவதற்கு” எதிராக, உயர்ந்த ஒழுக்கநெறி பசப்பும் அற்பவாதிகள் எழுப்புகின்ற கூக்குரலுக்கு பதில் இதோ. பெண்களைப் பொதுவாக்கும் நிலைமை முற்றிலும் முதலாளித்துவ சமுதாயத்துக்கு உரியதாகும். இன்றைக்கு அது விபச்சாரம் என்னும் வடிவில் முழுமையாக வெளிப்படுகிறது. ஆனால், விபச்சாரம் தனியார் சொத்துடைமையை அடித்தளமாகக் கொண்டது. எனவே, தனியார் சொத்துடைமையோடு சேர்ந்து விபச்சாரமும் உதிர்ந்து போகும். ஆக, கம்யூனிச சமுதாயம் பெண்களைப் பொதுவாக்கும் நடைமுறைக்கு மாறாக, உண்மையில் அம்முறைக்கு முடிவு கட்டுகிறது.
(22) தற்போது நிலவும் தேசிய இனங்களைப் பொறுத்தவரைக் கம்யூனிசத்தின் அணுகுமுறை என்னவாக இருக்கும்?
பல்வேறு நில மற்றும் வர்க்கப் பாகுபாடுகள் அவற்றின் ஆணி வேரான தனியார் சொத்துடைமை ஒழிக்கப்படும்போது மறைந்தே தீர வேண்டும். அதுபோலவே, கூட்டுச் சமுதாயக் கோட்பாட்டின்படி தங்களை இணைத்துக் கொண்ட மக்களின் தேசிய இனங்கள், இந்தக் கூட்டிணைப்பின் விளைவாகத் தமக்குள் ஒன்றோடொன்று கலந்து வாழவும், அதன் மூலமாகத் தம்மைத் தாமே கரைத்துக் கொள்ளவும் நிர்ப்பந்திக்கப்படும்.[3]
(23) தற்போது நிலவும் மதங்களைப் பொறுத்தவரை அதன் அணுகுமுறை என்னவாக இருக்கும்?
இதுவரை நிலவி வந்துள்ள மதங்கள் அனைத்தும், தனிப்பட்ட ஒரு மனித இனத்தின் அல்லது மனித இனக் குழுக்களின் வரலாற்று ரீதியான வளர்ச்சிக் கட்டங்களின் வெளிப்பாடாகவே இருந்துள்ளன. ஆனால் கம்யூனிசம் என்பது தற்போது நிலவுகின்ற மதங்கள் அனைத்தையும் தேவையற்றவை ஆக்கி அவற்றின் மறைவுக்கு வழிவகுக்கின்ற, வரலாற்று ரீதியான வளர்ச்சிக் கட்டம் ஆகும்.[4]
(24) கம்யூனிஸ்டுகள் சோஷலிஸ்டுகளிடமிருந்து எந்த வகையில் வேறுபடுகின்றனர்?
சோஷலிஸ்டுகள் எனச் சொல்லப்படுவோரை மூன்று வகையினமாகப் பிரிக்கலாம்.
[பிற்போக்குச் சோஷலிஸ்டுகள்:]
முதல் வகையினம் நிலப்பிரபுத்துவ மற்றும் தந்தைவழி சமுதாயத்தின் ஆதரவாளர்களைக் கொண்டது. இந்தவகைச் சமுதாயமோ, பெருவீதத் தொழில்துறை, உலக வாணிகம் ஆகியவற்றாலும் மற்றும் இவற்றால் தோற்றுவிக்கப்பட்ட முதலாளித்துவ சமுதாயத்தாலும் அழிக்கப்பட்டுவிட்டது. இன்னும் நாள்தோறும் அழிக்கப்பட்டு வருகிறது. இன்றைய சமுதாயத்தின் தீமைகளைக் கண்ணுறும் இந்த முதல் வகையினம், நிலப்பிரபுத்துவ மற்றும் தந்தைவழிச் சமுதாயம் இந்தத் தீமைகளின்றி இருந்தபடியால், அத்தகைய சமுதாயத்தை மீண்டும் நிலைநாட்ட வேண்டும் என்னும் முடிவுக்கு வருகிறது. அவர்களது பரிந்துரைகள் அனைத்தும் ஏதோ ஒருவகையில் இந்த முடிவை நோக்கியே முன்வைக்கப்படுகின்றன.
பிற்போக்கு சோஷலிஸ்டுகளான இந்த வகையினர், என்னதான் பாட்டாளி வர்க்கத்தின் துன்பங்களுக்காக ஆதரவு வேடம் போட்டாலும், நீலிக் கண்ணீர் வடித்தாலும், கீழ்க்காணும் காரணங்களுக்காக அவர்களைக் கம்யூனிஸ்டுகள் வன்மையாக எதிர்க்கின்றனர்:
(1) இந்த வகையினம் முற்றிலும் சாத்தியமற்ற சிலவற்றுக்காக முயல்கின்றது.
(2) பிரபுக்குலத்தார், கைவினைக் குழும எஜமானர்கள், சிறு உற்பத்தியாளர்கள் மற்றும் எதேச்சாதிகார அல்லது நிலப்பிரபுத்துவ முடியசர்களின் அடிவருடிகள், அதிகாரிகள், படைவீரர்கள் மற்றும் பாதிரியார்கள் ஆகியோரின் ஆட்சியை மீண்டும் நிலைநாட்ட முயன்று வருகின்றது. அந்தச் சமுதாயத்தில் நிச்சயமாக இன்றைய சமுதாயத்தின் தீமைகள் இருக்கவில்லை. ஆனால், குறைந்தபட்சம் இதே அளவுக்கான வேறுபல தீமைகளைக் கொண்டிருந்தது. ஒடுக்கப்பட்ட தொழிலாளர்கள் ஒரு கம்யூனிசப் புரட்சியின் மூலம் விடுதலை பெறுவதற்கான வாய்ப்பையும்கூட அச்சமுதாயம் வழங்கப் போவதில்லை.
(3) பாட்டாளி வர்க்கத்தினர் புரட்சிகரமாகவும் அல்லது கம்யூனிஸ்டாகவும் மாறியதுமே, உடனடியாக இந்தப் பிற்போக்கு சோஷலிஸ்டுகள் பாட்டாளிகளுக்கு எதிராக, முதலாளித்துவ வர்க்கத்துடன் கைகோத்துக் கொண்டு, தங்களின் உண்மையான சொரூபத்தைக் காட்டுகிறார்கள்.
[முதலாளித்துவ சோஷலிஸ்டுகள்:]
இரண்டாவது வகையினம், இன்றைய [முதலாளித்துவ] சமுதாயத்தின் ஆதரவாளர்களைக் கொண்டதாகும். இவர்கள், தவிர்க்க முடியாமல் அதிகரித்துவரும் இந்தச் சமுதாயத்தின் தீமைகளைக் கண்டு அதன் எதிர்காலம் குறித்த அச்சத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்தச் சமுதாயத்தின் உட்பொதிந்த ஒரு பகுதியாக விளங்கும் தீமைகளிலிருந்து தப்பித்துக் கொள்ள விரும்பும் அதே வேளையில் இந்தச் சமுதாய அமைப்பை அப்படியே தக்கவைத்துக் கொள்ள விரும்புகிறார்கள்.
இந்த நோக்கத்துடன் அவர்களில் சிலர் வெறும் நலவாழ்வு நடவடிக்கைகளை முன் வைக்கின்றனர். வேறு சிலர் சமுதாயத்தை மறுசீரமைத்தல் என்கிற சாக்கில் ஆரவாரமான சீர்திருத்த அமைப்புகளுடன் களத்தில் நிற்கின்றனர். உண்மையில் இச்சீர்திருத்த அமைப்புகள், இப்போது நிலவுகின்ற [முதலாளித்துவ] சமுதாய அமைப்பின் அடித்தளங்களை, அதன்வழியே இன்றைய வாழ்க்கைமுறையை அப்படியே பாதுகாத்து வைப்பதை நோக்கமாகக் கொண்டவை ஆகும்.
கம்யூனிஸ்டுகள் இந்த முதலாளித்துவ சோஷலிஸ்டுகளை எதிர்த்து இடைவிடாது தொடர்ந்து போராட வேண்டும். காரணம் அவர்கள் கம்யூனிஸ்டுகளின் எதிரிகளுக்காக வேலை செய்கிறார்கள். கம்யூனிஸ்டுகள் தூக்கியெறிய முனையும் சமுதாயத்தைத் தூக்கி நிறுத்துகிறார்கள்.
[ஜனநாயக சோஷலிஸ்டுகள்:]
இறுதியாக, மூன்றாவது வகையினம், ஜனநாயக சோஷலிஸ்டுகளைக் கொண்டதாகும். இவர்கள் கேள்வி 18-இல் விவரித்தபடி, கம்யூனிஸ்டுகள் எடுத்துரைக்கின்ற அதே நடவடிக்கைகளில் சிலவற்றை ஆதரிக்கின்றனர். கம்யூனிசத்துக்கு மாறிச் செல்லுவதன் பகுதியாக அல்ல. எனினும், அத்தகைய நடவடிக்கைகள் இன்றைய சமுதாயத்தின் துன்பங்களையும் தீமைகளையும் ஒழிக்கப் போதுமானவை என்று அவர்கள் நம்புகின்றனர்.
இந்த ஜனநாயக சோஷலிஸ்டுகள் ஒன்று, தமது வர்க்கத்தின் விடுதலைக்கான நிபந்தனைகள் குறித்து இன்னும் போதுமான தெளிவு பெறாத பாட்டாளிகளாக இருக்கின்றனர். அல்லது, குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் பிரதிநிதிகளாய் உள்ளனர். இந்த வர்க்கத்துக்கு, ஜனநாயகத்தை வென்றெடுப்பதற்கும், அதன்மூலம் சோஷலிஸ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் முன்னதாகப் பாட்டாளி வர்க்கத்தோடு பல்வேறு நலன்கள் பொதுவாக இருக்கக் காணலாம்.
ஜனநாயக சோஷலிஸ்டுகள் ஆளும் முதலாளித்துவ வர்க்கத்தின் சேவையில் இறங்கிக் கம்யூனிஸ்டுகளைத் தாக்காத வரையில், போராட்டத் தருணங்களில், இந்த சோஷலிஸ்டுகளுடன் கம்யூனிஸ்டுகள் ஓர் உடன்பாடு காண வேண்டியிருக்கும் என்பதும், பொதுவாக, முடிந்த அளவுக்கு அவர்களுடன் ஒரு பொதுக் கொள்கையை எட்ட வேண்டியிருக்கும் என்பதும் இதிலிருந்து பெறப்படுகிறது.
போராட்ட நடவடிக்கையில் இந்த வடிவிலான ஒத்துழைப்பு, அவர்களுடனான கருத்துவேறுபாடுகளை விவாதிப்பதை விலக்கிவிடவில்லை என்பது தெளிவு.
(25) நம் காலத்திய இதர அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை கம்யூனிஸ்டுகளின் அணுகுமுறை என்ன?
இந்த அணுகுமுறை நாட்டுக்கு நாடு வேறுபடும்.
முதலாளித்துவ வர்க்கம் ஆட்சிபுரியும் இங்கிலாந்து, ஃபிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய நாடுகளில் கம்யூனிஸ்டுகள் பல்வேறு ஜனநாயகக் கட்சிகளுடன் இன்னும்கூடப் பொதுவான நலனைக் கொண்டுள்ளனர். அவர்கள் சொந்தம் கொண்டாடும் சோசலிஷ நடவடிக்கைகள் எந்த அளவுக்கு அதிக நெருக்கமாக கம்யூனிஸ்டுகளின் நோக்கங்களை எட்டுவதாக இருக்கின்றனவோ – அதாவது, எந்த அளவுக்கு அதிகத் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் அவர்கள் பாட்டாளி வர்க்கத்தின் நலன்களை ஆதரித்து நிற்கின்றனரோ அந்த அளவுக்கு அதிகமாக அவர்கள் பாட்டாளி வர்க்கத்தின் ஆதரவைச் சார்ந்திருக்கின்றனர். எடுத்துக்காட்டாக, இங்கிலாந்தில் தொழிலாளர் வர்க்கச் சாசனவாதிகள்[5] ஜனநாயகக் குட்டி முதலாளித்துவ வர்க்கத்தினர் அல்லது தீவிரக் கொள்கையினர் (Radicals) என்று சொல்லப்படுவோரைக் காட்டிலும் வரம்பிலா அளவுக்கு கம்யூனிஸ்டுகளுடன் நெருக்கமாக இருக்கிறார்கள்.
ஜனநாயக அரசமைப்புச் சட்டம் ஏற்கெனவே நடைமுறைப்படுத்தப் பட்டுள்ள அமெரிக்காவில், இந்த அரசமைப்புச் சட்டத்தை முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிராகத் திருப்பி, அதனைப் பாட்டாளி வர்க்கத்தின் நலன்களுக்காகப் பயன்படுத்தும் கட்சியுடன், அதாவது தேசிய விவசாயச் சீர்திருத்தவாதிகளுடன்[6], கம்யூனிஸ்டுகள் இணைந்து பணியாற்ற வேண்டும்.
சுவிட்சர்லாந்தில், மிகுந்த கலப்படக் கட்சியாக இருந்த போதிலும், தீவிரக் கொள்கையினர் (The Radicals) மட்டுமே கம்யூனிஸ்டுகள் ஒத்துழைக்கக் கூடிய ஒரே குழுவாகும். இந்தத் தீவிரக் கொள்கையினருள் வாட் (Vaudois) மற்றும் ஜெனீவா (Genevese) நகரைச் சார்ந்தவர்களே மிகவும் முற்போக்கானவர்கள் ஆகும்.
இறுதியாக, ஜெர்மனியில் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் எதேச்சாதிகார முடியாட்சிக்கும் இடையிலான போராட்டமே இன்றைக்கு தீர்மானகரமான போராட்டம் ஆகும். முதலாளித்துவ வர்க்கம் ஆட்சிப் பொறுப்பில் இல்லாத வரையில், கம்யூனிஸ்டுகள் தங்களுக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையேயான தீர்மானகரமான போராட்டத்தில் இறங்க முடியாது. எனவே, முதவாளித்துவ வர்க்கத்தை வெகுவிரைவில் வீழ்த்தும் பொருட்டு, எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் முதலாளித்துவ வர்க்கம் ஆட்சியில் அமர அவர்களுக்கு உதவுவது கம்யூனிஸ்டுகளின் நலன்களுக்கு உகந்ததாகும். ஆகவே, அரசாங்கங்களுக்கு எதிராக, கம்யூனிஸ்டுகள் தீவிர மிதவாதக் கட்சியைத் (radical liberal party) தொடர்ந்து ஆதரிக்க வேண்டும். அதேவேளை, முதலாளித்துவ வர்க்கத்தின் சுய ஏமாற்றுகளிலிருந்து தப்பித்துக் கொள்ளவும், முதலாளித்துவ வர்க்கத்தின் வெற்றி பாட்டாளி வர்க்கத்துக்குச் சாதகமான பலன்களைத் தரும் என்னும் கவர்ச்சியூட்டும் உறுதிமொழிகளை நம்பி ஏமாறாமல் இருக்கவும் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். முதலாளித்துவ வர்க்கத்தின் வெற்றியிலிருந்து கம்யூனிஸ்டுகள் தருவித்துக் கொள்ளக்கூடிய சாதகமான கூறுகள் கீழே காண்பவற்றை மட்டுமே உள்ளடக்கியிருக்கும்:
(1) [கம்யூனிஸ்டுகளுக்குக் கிடைக்கும்] பல்வேறு சலுகைகள், பாட்டாளி வர்க்கத்தை ஒரு கச்சிதமான, போர்க்குணம் கொண்ட, ஒழுங்கமைக்கப்பட்ட வர்க்கமாக ஒன்றிணைக்கக் கூடிய வாய்ப்பினை நல்கும்.
(2) எதேச்சாதிகார முடியரசுகள் வீழுகின்ற அதே நாளிலேயே முதலாளித்துவ வர்க்கத்துக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கும் இடையிலான போராட்டம் தொடங்கிவிடும் என்பது நிச்சயம். அந்த நாள் முதற்கொண்டு, கம்யூனிஸ்டுகளின் கொள்கையானது, முதலாளித்துவ வர்க்கம் ஏற்கெனவே ஆட்சியிலிருக்கும் நாடுகளில் தற்போது பின்பற்றிவரும் அதே கொள்கையாகவே இருக்கும்.
***** ***** *****

அடிக்குறிப்புகள்:
[1] மார்க்ஸ், ஏங்கெல்ஸ் பின்னாளில் எழுதிய நூல்களில், “உழைப்பை விற்று”, “உழைப்பின் மதிப்பு”, “உழைப்பின் விலை” என்னும் சொல்தொடர்களுக்குப் பதிலாக, மிகவும் துல்லியமாக, “உழைப்புச் சக்தியை விற்று”, உழைப்புச் சக்தியின் மதிப்பு”, “உழைப்புச் சக்தியின் விலை” என்னும் சொல்தொடர்களைப் பயன்படுத்தியுள்ளனர்.
[2] ஏங்கெல்ஸ் தன் கையெழுத்துப் பிரதியில் இங்கே அரைப் பக்கத்தை வெற்றிடமாய் விட்டிருந்தார். இதற்கு முந்தைய ஜூன் வரைவுரை (Draft of a Communist Confession of Faith) இதே கேள்விக்கான பதிலைக் கொண்டுள்ளது. அதில் கேள்வி எண்-12.
[3] இக்கேள்விக்கான பதிலாக “மாற்றமில்லை” என்று மட்டுமே ஏங்கெல்ஸ் குறிப்பிட்டுள்ளார். ஜூன் வரைவுரையில் இக்கேள்விக்குத் (கேள்வி எண்-21) தரப்பட்டுள்ள பதிலில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதையே ஏங்கெல்ஸ் உணர்த்தியுள்ளார்.
[4] இங்கேயும் ஏங்கெல்ஸ் “மாற்றமில்லை” என்றே குறிப்பிட்டுள்ளார். ஜூன் வரைவுரையில் கேள்வி எண்-23-க்குத் தரப்பட்டுள்ள பதிலை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே ஏங்கெல்ஸ் கருத்து.
[5] இங்கிலாந்தில் 1830களில் தொடங்கி 1850களின் மத்தியில் வரை நடைபெற்ற தொழிலாளர்களின் அரசியல் இயக்கத்தைக் குறிக்கிறது. “மக்களின் சாசனம்” (People’s Charter) நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே அவர்களின் முழக்கமாகும். அனைத்துத் தொழிலாளர்களுக்கும் ஓட்டுரிமை என்பது அதன் முக்கியமான கோரிக்கை. ”அரசியல் ரீதியாக திரட்டப்பட்ட உலகின் முதலாவது பாட்டாளி வர்க்கப் புரட்சிகர இயக்கம்” என சாசனவாதிகளின் இயக்கம் பற்றி லெனின் எழுதியுள்ளார்.
[6] இது அனேகமாக, நியூயார்க் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு, 1840களில் ஜார்ஜ் ஹெச்.ஈவன்ஸ் அவர்களால் உருவாக்கப்பட்ட ”தேசிய சீர்திருத்தச் சங்கம்” (National Reform Association) என்னும் அமைப்பைக் குறிக்கிறது.

லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும் (ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்) தமிழாக்கம்: மு.சிவலிங்கம்

பின்னிணைப்பு:
ஃபாயர்பாக் பற்றிய ஆய்வுரைகள்

(கார்ல் மார்க்ஸ்)
1
ஃபாயர்பாக்கின் பொருள்முதல்வாதம் உட்பட இதுவரை இருந்துவந்திருக்கும் எல்லாப் பொருள்முதல்வாதத்தின் பிரதானமான குறைபாடு இதுதான்: பொருள் (Gegentand), எதார்த்தம், புலனுணர்வு என்பது புறப்பொருளின் (Objekt) வடிவம் அல்லது ஆழ்சிந்தனையின் (Anschauung) வடிவமாக மட்டுமே கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. மனிதப் புலனுணர்வுச் செயல்பாடு அல்லது நடைமுறை என்று கொள்ளப்படவில்லை. இது அகநிலையானது இல்லை. எனவே பொருள்முதல்வாதத்துக்கு எதிராக, வேறுபட்டதாகப் பொருள்முதல்வாதத்தின் செயலாக்கமுள்ள பகுதியைக் கருத்துமுதல்வாதம் வளர்க்க நேரிட்டது, ஆனால் அருவமாக (abstractly) மட்டுமே. ஏனெனில், உண்மையில் கருத்துமுதல்வாதம் எதார்த்தமான புலனுணர்வுள்ள செயல்பாட்டினை உள்ளபடியே அறியாது. சிந்தனைப் புறப்பொருள்களிலிருந்து (thought objects) உண்மையிலேயே வேறுபடுத்தப்பட்ட புலனுணர்வுள்ள புறப்பொருட்களை (sensuous objects) ஃபாயர்பாக் விரும்புகிறார். ஆனால் அவர் மனிதச் செயல்பாட்டையே புறநிலைச் செயல்பாடாக (obective activity) கருத்தில் கொள்ளவில்லை. எனவே, கிறிஸ்துவ மதத்தின் சாரம் (Essence of Christianity) என்னும் நூலில், கோட்பாட்டு மனப்போக்கை (theoritical attitude) மட்டுமே மெய்யான மனித மனப்போக்காகக் (human attitude) கருதுகிறார். நடைமுறை (practice) என்பது அதன் அசிங்கமான–யூதத் தோற்ற வடிவத்தில் மட்டுமே கருத்தில் கொள்ளப்பட்டு நிலைநிறுத்தப்படுகிறது. எனவே, “புரட்சிகரமான” செயல்பாடு, “நடைமுறை–முக்கியத்துவச்” செயல்பாடு என்பனவற்றின் முக்கியத்துவத்தை அவர் உள்வாங்கிக் கொள்ளவில்லை.
2
புறநிலை உண்மை (objective truth) என்பது மனித சிந்தனையின் பண்புக்கூறா என்னும் பிரச்சினை, கோட்பாடு சார்ந்த பிரச்சினையல்ல (question of theory), அது ஒரு ,நடைமுறைப் பிரச்சினை (practical question) ஆகும். நடைமுறையில் மனிதன் தன்னுடைய சிந்தனையின் உண்மையை – அதாவது, அதன் எதார்த்தத்தையும் ஆற்றலையும், அதன் இப்பக்கத்தன்மையையும் (this-sidedness) – நிரூபிக்க வேண்டும். நடைமுறையிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட சிந்தனையின் எதார்த்தத் தன்மை அல்லது எதார்த்தமற்ற தன்மை பற்றிய விவாதம் முற்றிலும் ஓர் ஏட்டறிவுவாதப் பிரச்சினை (scholastic question) ஆகும்.
3
சூழ்நிலைமைகள், வளர்ப்பு ஆகியவற்றால் உருவாக்கப்படுபவர்கள் மனிதர்கள். எனவே, [பல்வேறு வகையாக] மாறுபடும் மனிதர்கள் வேறுபட்ட சூழ்நிலைமைகளாலும் மாறுபட்ட வளர்ப்பு முறையாலும் உருவாக்கப்பட்டவர்களாவர் என்னும் பொருள்முதல்வாதப் போதனை, மனிதர்கள்தாம் சூழ்நிலைமைகளை மாற்றுகிறார்கள் என்பதையும், கற்பிக்கிறவனுக்கே கற்க வேண்டிய தேவை இருக்கிறது என்பதையும் மறக்கிறது. எனவே, இப்போதனை சமுதாயத்தை இரண்டு பகுதிகளாகப் பிரிப்பதில் தவிர்க்க முடியாதவாறு வந்து சேர்கிறது. அவ்விரண்டு பகுதிகளில் ஒன்று சமுதாயத்துக்கு மேம்பட்டதாக உள்ளது. (எடுத்துக்காட்டாக, ராபர்ட் ஓவன் நூலில்).சூழ்நிலைமைகளின் மாற்றமும் மனிதச் செயல்பாடும் சேர்ந்தே நிகழ்வதை (coincidence), நடைமுறையைப் புரட்சிகரமயமாக்கல் என்பதாக மட்டுமே கருதிக் கொள்ள முடியும், பகுத்தறிவு ரீதியாகப் புரிந்து கொள்ள முடியும்.
4
உலகத்தை மத வழிப்பட்ட கற்பனை உலகம், எதார்த்தமான உலகம் என இரண்டுபடுத்தலை (duplicate) மத ரீதியான சுய–அந்நியமாக்கம் (self-alienation) என்னும் உண்மையிலிருந்து ஃபாயர்பாக் தொடங்குகிறார். அவருடைய பணி, மத வழிப்பட்ட உலகத்தை அதன் மதச்சார்பற்ற அடிப்படைக்குள் கரைத்து விடுவதிலே அடங்கியுள்ளது. இப்பணியை முடித்தபின், பிரதானமான விஷயம் இனிமேல்தான் செய்யப்பட வேண்டியுள்ளது என்னும் உண்மையை அவர் பார்க்கத் தவறுகிறார். மதச்சார்பற்ற அடித்தளம் தன்னிடமிருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டு, ஒரு சுதந்திரமான மண்டலமாக மேகங்களிடையே தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது என்னும் உண்மையை, இந்த மதச்சார்பற்ற அடிப்படையின் சுய–பிளவையும் சுய–முரண்பாட்டுத் தன்மையையும் வைத்து மட்டுமே உண்மையில் விளக்க வேண்டும். ஆகவே, பின்னதை முதலில் அதன் முரண்பாட்டில் புரிந்து கொள்ள வேண்டும். அதன்பின் அந்த முரண்பாட்டை அகற்றுவதன் மூலமாக நடைமுறையில் அதைப் புரட்சிமயமாக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, பூவுலகைச் சேர்ந்த குடும்பமே புனிதக் குடும்பத்தின் இரகசியம் எனக் கண்டறிந்தவுடன், முன்னதைக் கோட்பாட்டு ரீதியாக விமர்சிக்க வேண்டும், நடைமுறையில் புரட்சிமயமாக்க வேண்டும்.
5
ஃபாயர்பாக் அருவமான சிந்தனையுடன் (abstract thinking) திருப்தியடையாமல் புலனுணர்வுள்ள ஆழ்சிந்தனைக்கு (sensuous contemplation) வேண்டுகோள் விடுக்கிறார். ஆனால் புலனுணர்வை நடைமுறை ரீதியான (practical), மனிதப்–புலனுணர்வுச் செயல்பாடாக (human-sensuous activity) அவர் கருதவில்லை.
6
ஃபாயர்பாக் மதச் சாராம்சத்தை மனித சாராம்சமாக முடிவு செய்கிறார். ஆனால் மனித சாராம்சம் என்பது ஒவ்வொரு தனிப்பட்ட நபரிலும் உள்ளார்ந்து இருக்கின்ற அருவமான விஷயம் அல்ல. அதன் எதார்த்த நிலையில் அது சமுதாய உறவுகளின் கூட்டுத் தொகுப்பே ஆகும். இந்த உண்மையான சாராம்சத்தைப் பற்றிய விமர்சனத்துக்குள் புகாத ஃபாயர்பாக் அதன் விளைவாக: (1) மத உணர்ச்சியை (religious sentiment) வரலாற்று நிகழ்வுப்போக்கிலிருந்து பிரித்தெடுக்கவும், அதனைத் தன்னிலையான ஒன்றாக நிலைப்படுத்தவும், ஓர் அருவமான – தனிமைப்படுத்தப்பட்ட (isolated) – மனிதத் தனிநபரை முன்அனுமானித்துக் கொள்ளவும் நிர்ப்பந்திக்கப்படுகிறார். (2) ஆகவே, அவரைப் பொறுத்தவரை மனித சாராம்சத்தை ஓர் “இனம்” (“genus”), பல தனிநபர்களை வெறுமனே இயற்கை ரீதியாக ஒன்றுபடுத்துகிற ஓர் அகநிலையான, ஊமையான பொதுநிலை என்று மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.
7
அதன் தொடர்ச்சியாக, “மத உணர்ச்சி” (“religious sentiment”) என்பதே ஒரு சமூக உற்பத்திப் பொருள் (social product) என்பதையும், அவர் பகுத்தாயும் தனிநபர் (abstract individual) எதார்த்தத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாய வடிவத்தைச் சேர்ந்தவர் என்பதையும் ஃபாயர்பாக் பார்க்கவில்லை.
8
சமுதாய வாழ்க்கை என்பது சாராம்சமாக நடைமுறை ரீதியானது. கோட்பாட்டினைத் தவறாக மாயாவாதத்துக்கு (mysticism) இட்டுச்செல்லும் மர்மங்கள் (mysteries) அனைத்தும், தம்முடைய பகுத்தறிவு பூர்வமான தீர்வினை, மனித நடைமுறையிலும், இந்த நடைமுறை பற்றிய புரிதலிலும் கண்டு கொள்கின்றன.
9
ஆழ்சிந்தனைப் பொருள்முதல்வாதம் (contemplative materialism), அதாவது, புலனுணர்வை நடைமுறைச் செயல்பாடாகப் புரிந்து கொள்ளாத பொருள்முதல்வாதம் எட்டிய மிக உயர்ந்த கருத்துநிலை, “குடிமைச் சமுதாயத்தில்” (civil society) உள்ள தனிப்பட்ட நபர்களின் ஆழ்சிந்தனையே (contemplation of single individuals) ஆகும்.
10
பழைய பொருள்முதல்வாதத்தின் கருத்துநிலை “குடிமைச்” சமுதாயம் (“civil” society) ஆகும்; புதிய பொருள்முதல்வாதத்தின் கருத்துநிலை மனிதச் சமுதாயம் (human society) அல்லது சமுதாய மயமாக்கப்பட்ட மனிதகுலம் (socialised humanity) ஆகும்.
11
தத்துவவாதிகள் உலகத்தைப் பல்வேறு வழிகளில் வியாக்கியானப்படுத்தி (interpreted) மட்டுமே உள்ளனர்; ஆனாலும், விஷயம் என்னவோ அதை மாற்றி (change)அமைப்பதாகும்.
(1845 வசந்த காலத்தில் மார்க்ஸ் எழுதியது)

லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும் (ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்) தமிழாக்கம்: மு.சிவலிங்கம்

அத்தியாயம்-4
[மார்க்ஸியத்தின் அடிப்படைகள் குறித்த விளக்கம்]
ஸ்ட்ராவுஸ் (Strauss), பௌவர் (Bauer), ஸ்டிர்னர் (Stirner), ஃபாயர்பாக் (Feuerbauch) ஆகியோர் தத்துவத் துறையைக் கைவிட்டு விடவில்லை என்ற வகையிலே ஹெகலியத் தத்துவத்தின் வழிவந்தவர்கள் எனலாம். ஸ்ட்ராவுஸ் அவருடைய ஏசுவின் வாழ்க்கை (Life of Jesus), வறட்டுவாதம் (Dogmatics) ஆகிய நூல்களுக்குப் பிறகு தத்துவத் துறையிலும் கிறிஸ்துவத் திருச்சபை பற்றிய வரலாற்றுத் துறையிலும் ரெனான் பாணியைப் பின்பற்றி இலக்கிய நூல்களை மட்டுமே படைத்தார். பௌவர் கிறிஸ்துவ மதத்தின் தோற்றம் பற்றிய வரலாற்றுத் துறையில் மட்டும் ஏதோ கொஞ்சம் உருப்படியாகச் சாதித்துள்ளார். எனினும், அவர் இங்கே செய்தது என்னவோ முக்கியமானதாகவே இருந்தது. பக்கூனின் (Bakunin) ஸ்டிர்னரை புரூதோனுடன் (Proudhon) கலந்துவிட்டு அக்கலவையை “அராஜகவாதம்” (“anarchism”) என்று முத்திரை குத்திய பிறகுங்கூட ஸ்டிர்னர் ஒரு வினோத மனிதராகவே இருந்துவிட்டார். ஃபாயர்பாக் ஒருவர்தான் தத்துவவாதி என்ற வகையிலே குறிப்பிடத் தக்கவராய் இருந்தார். தனிச்சிறப்பான விஞ்ஞானங்கள் அனைத்துக்கும் மேலாக உயர்ந்தோங்கியதாகவும், அனைத்து விஞ்ஞானங்களையும் இணைத்து, விஞ்ஞானங்களுக்கெல்லாம் விஞ்ஞானமாய் விளங்கப் போவதாகவும் கருதப்பட்ட தத்துவம், அவருக்குக் கடக்க முடியாத தடைச்சுவராகவும் மீற முடியாத புனித விஷயமாகவும் இருந்தது. அதுமட்டுமல்ல, தத்துவவாதி என்ற வகையில்கூட அவர் பாதி வழியிலேயே நின்று விட்டார். கீழே பொருள்முதல்வாதியாகவும் மேலே கருத்துமுதல்வாதியாகவும் இருந்தார். விமர்சனம் மூலமாக ஹெகலை வெற்றி கொள்ளும் தகுதியற்றவராக இருந்தார். ஹெகலிய அமைப்புமுறையின் பல்துறை அறிவு வளத்தோடு ஒப்பிடுகையில், அன்பின் வழிப்பட்ட வெளிப்பகட்டான மதத்துக்கும், அற்பமான, மலட்டுத்தன அறநெறிக்கும் அப்பால், தம்மளவில் உருப்படியாக எதையும் சாதிக்காத நிலையிலும், ஃபாயர்பாக் ஹெகலைப் பயனற்றவர் என்று சொல்லி வெறுமனே ஒதுக்கித் தள்ளினார்.
என்றபோதிலும், ஹெகலியக் கருத்துப்போக்கின் சிதைவிலிருந்து, அங்கே இன்னுமொரு போக்கு வளர்ச்சி பெற்றது. அந்தவொரு போக்கு மட்டுமே உண்மையான பலனை நல்கியுள்ளது. இந்தப் போக்கு முக்கியமாக மார்க்ஸின்* பெயரோடு இணைந்திருக்கிறது.

*ஏங்கெல்ஸ் எழுதிய குறிப்பு: இங்கே சொந்த முறையில் ஒரு விளக்கம் அளிக்க என்னை அனுமதிக்க வேண்டும். அண்மைக் காலமாக, இந்தக் கோட்பாட்டில் என்னுடைய பங்கைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசப்பட்டு வருகிறது. எனவே இந்த விஷயத்தை முடிவுக்குக் கொண்டுவர நான் இங்கே சில விவரங்களைச் சொல்லாமலிருக்க முடியாது. மார்க்சுடன் எனக்கிருந்த நாற்பது ஆண்டுகால ஒத்துழைப்பின் போதும், அதற்கு முன்னரும், இந்தக் கோட்பாட்டுக்கான அடித்தளத்தை உருவாக்குவதிலும், மேலும் குறிப்பாக, அக்கோட்பாட்டை விரித்துரைப்பதிலும் சற்றே சுதந்திரமான பங்கு எனக்கிருந்தது என்பதை நான் மறுக்க முடியாது. ஆனால் அதன் முtதன்மையான அடிப்படைக் கொள்கைகளில், சிறப்பாகப் பொருளாதாரம் மற்றும் வரலாற்றுத் துறைகளில் மிகப் பெரும்பகுதியும், மேலும் அனைத்துக்கும் மேலாக, அவற்றின் முடிவான, துல்லியமான வரையறுப்பும் மார்க்சின் பங்களிப்பாகும். ஒரு சில தனிச்சிறப்பான துறைகளில் என்னுடைய பணியைத் தவிர்த்து, என்னுடைய பங்களிப்பினைத் தாராளமாக மார்க்ஸ் என் உதவியின்றியே செய்திருக்க முடியும். ஆனால் மார்க்ஸ் செய்து முடித்ததை நான் ஒருபோதும் சாதித்திருக்க முடியாது. எங்களுள் மற்ற எல்லோரைக் காட்டிலும் மார்க்ஸ் உயாந்து நின்றார், தொலைநோக்குடன் பார்த்தார், பரந்த விரைவான பார்வையைக் கொண்டிருந்தார். மார்க்ஸ் ஒரு மேதையாக விளங்கினார். மற்றவர்களாகிய நாங்கள், அதிகமாகச் சொல்லிக் கொள்வதென்றால், திறமைசாலிகளாக இருந்தோம். அவர்மட்டும் இல்லையென்றால், இந்தக் கோட்பாடு இன்று உள்ளதுபோல் இந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்காது. எனவே, இக்கோட்பாடு அவருடைய பெயரைத் தாங்கி நிற்பது பொருத்தமே.

இங்குப் பொருள்முதல்வாதக் கருத்துநிலைக்குத் திரும்பி வருவதன் விளைவாக ஹெகலியத் தத்துவத்திலிருந்து பிரிந்து செல்ல நேர்கிறது. அதாவது, எதார்த்தமான உலகத்தை – இயற்கை, வரலாறு இரண்டையும் – முன்னரே மனதில் உருவாக்கிக் கொண்ட கருத்துமுதல்வாத கட்டுக்கதைகள் எதுவுமில்லாமல் அணுகுகின்ற ஒவ்வொரு வருக்கும் அது எப்படிக் காட்சி தருகிறதோ, அப்படியே புரிந்து கொள்வதென இக்கருத்துப் பிரிவினர் முடிவெடுத்தனர் என்பது இதன் பொருளாகும். கற்பனாவாத விளக்கங்கள் இல்லாமல், தாமாகவே உருவான மெய்விவரங்களோடு பொருத்திப் பார்க்க முடியாத கருத்துமுதல்வாதக் கட்டுக்கதை ஒவ்வொன்றையும் பலியிடுவதென்று ஈவிரக்கமின்றித் தீர்மானிக்கப்பட்டது. மேலும், பொருள்முதல்வாதம் என்பதற்கு இதைக்காட்டிலும் கூடுதலான அர்த்தம் ஏதுமில்லை. ஆனால், இங்கே பொருள்முதல்வாத உலகக் கண்ணோட்டம் முதல்முறையாக உண்மையிலேயே அக்கறையோடு கவனிக்கப்பட்டது. தொடர்புடைய அறிவுத் துறைகள் அனைத்திலும் – குறைந்தபட்சம் அதன் அடிப்படைக் கூறுகளிலாவது – முரணின்றி எடுத்துச் சொல்லப்பட்டது.
ஹெகல் வெறுமனே ஒதுக்கி வைக்கப்படவில்லை. மாறாக, மேலே விளக்கப்பட்ட அவருடைய தத்துவத்தின் புரட்சிகரமான பகுதியே அதாவது இயக்கவியல் வழிமுறையே தொடக்கமாகக் கொள்ளப்பட்டது. ஆனால் இந்த வழிமுறை அதன் ஹெகலிய வடிவத்தில் பயன்படுத்த முடியாததாய் இருந்தது. ஹெகலின் கருத்துப்படி, இயக்கவியல் என்பது கருத்துருவின் சுயவளர்ச்சியே (self-development of the concept) ஆகும். [ஹெகலின் கருத்துப்படி] தனிமுதலான கருத்துரு (absolute concept) ஊழிக் காலந்தொட்டு நிலவி வருவது மட்டுமல்ல – எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை – இன்று நிலவுகின்ற மொத்த உலகத்தின் மெய்யான உயிர்த்துடிப்புள்ள ஆன்மாவாகவும் இருக்கிறது. [ஹெகலின்] தர்க்கவியல் (Logic) நூலில் மிக விரிவாக விளக்கப்படுகின்ற தொடக்கநிலைக் கட்டங்கள் அனைத்தின் வழியாகவும் அது தன்னை நோக்கித் தனக்குள்ளேயே வளர்ச்சி அடைகிறது. அக்கட்டங்கள் அனைத்தும் அதில் உள்ளடங்கியிருக்கின்றன. பிறகு அது இயற்கையாக மாறுவதன் மூலம் தன்னை “அந்நியமாக்கிக் கொள்கிறது” (alienates). அங்கே தன்னுடைய சுய உணர்வு இல்லாமலே, இயற்கையின் கட்டாயம் என்ற போர்வையில் மறைந்து கொண்டு, அது ஒரு புதிய வளர்ச்சிக்கு உள்ளாகிறது. இறுதியில் மறுபடியும் மனிதனுக்குள் சுய உணர்வாக வந்து சேர்கிறது. தனிமுதலான கருத்து, அதன் செழுமையற்ற வடிவத்திலிருந்து முடிவில் ஹெகலின் தத்துவத்தில் முழுமையாக அதன் மூல வடிவத்துக்கு மீண்டும் வந்து சேரும் வரையில், இந்த சுய உணர்வு, வரலாற்றில் மறுபடியும் தலை தூக்குகிறது. ஆகவே, ஹெகலின் கருத்துப்படி, இயற்கையிலும் வரலாற்றிலும் காணப்படுகின்ற இயக்கவியல் வளர்ச்சி, அதாவது, கீழ்நிலையிலிருந்து மேல்நிலைக்கு நடைபெறுகின்ற முற்போக்கு இயக்கத்தின் காரண வகைப்பட்ட இடைத்தொடர்பு, கோணல் மாணலான இயக்கங்கள் அனைத்திலும், தற்காலிகமான பின்னடைவுகளிலும், தன்னைத் தானே நிலைநிறுத்திக் கொள்கிறது. அது, ஊழிக் காலத்திலிருந்து தொடர்ந்து வருகின்ற கருத்துருவினுடைய சுய-இயக்கத்தின் ஒரு நகல் மட்டுமே. அது எங்கே போகிறதென்று யாரும் அறிந்ததில்லை. ஆனால் எவ்வாறாயினும் சரி, எந்தவொரு சிந்திக்க வல்ல மனித மூளையையும் சாராமல் சுதந்திரமாக இயங்குகிறது. இந்தச் சித்தாந்த நெறிபிறழ்வை ஒழித்தாக வேண்டியிருந்தது. எதார்த்தமான பொருள்களைத் தனிமுதலான கருத்துருவின் (absolute concept) ஏதோவொரு கட்டத்தின் பிரதிபிம்பங்களாகக் கருதுவதற்குப் பதிலாக, எங்கள் மூளையில் இருந்த கருத்துருக்களை எதார்த்தமான பொருள்களின் பிரதிபிம்பங்களாக, மீண்டும் ஒருமுறை பொருள்முதல்வாத அடிப்படையில் புரிந்து கொண்டோம். இவ்வாறாக, இயக்கவியல் என்பது, வெளிப்புற உலகம், மனித சிந்தனை ஆகிய இரண்டின் இயக்கம் பற்றிய பொதுவான விதிகளின் விஞ்ஞானமாகத் தன்னை எளிதாக்கிக் கொண்டது. இயக்க விதிகளின் இந்த இரண்டு தொகுதிகளும் சாராம்சத்தில் ஒத்த தன்மை கொண்டவை. ஆனால், எந்த அளவுக்கு மனித மனம் அவற்றை உணர்வு பூர்வமாகச் செயல்படுத்த முடியுமோ அந்த அளவுக்குத் தமது வெளிப்பாட்டில் வேறுபடுகின்றன. இயற்கையிலும் இன்று வரையுள்ள மனித வரலாற்றின் மிகப் பெரும்பகுதியிலும், புறநிலைத் தேவை என்ற வடிவத்திலே, தற்செயலானதாகத் தோற்றமளிக்கும் முடிவில்லாத தொடர்வரிசையான நிகழ்வுகளின் நடுவே, இந்த விதிகள் உணர்வுகளைச் சாராமலேயே தம்மை நிலைநிறுத்திக் கொள்கின்றன. இதன்மூலம், கருத்துருக்களின் இயக்கவியலுங்கூட, எதார்த்த உலகின் இயக்கவியல் வழிப்பட்ட இயக்கத்தின் வெறும் உணர்வுபூர்வமான பிரதிபலிப்பு ஆயிற்று. இவ்வாறாக, ஹெகலின் இயக்கவியல் புரட்டிப் போடப்பட்டது. அல்லது சரியாகச் சொல்வதெனில், தலையை ஊன்றி நின்று கொண்டிருந்ததைத் திருப்பிப் போட்டுக் காலால் நிற்கும்படி செய்யப்பட்டது. பல ஆண்டுகளாக எங்களின் மிகச் சிறந்த உழைப்புக் கருவியாகவும், எங்களின் மிகக் கூர்மையான ஆயுதமாகவும் இந்தப் பொருள்முதல்வாத இயக்கவியல் இருந்து வருகின்றது. குறிப்பிடத் தக்க செய்தி என்னவெனில், இதனை நாங்கள் மட்டுமே கண்டுபிடிக்கவில்லை. எங்களைச் சாராமலும், ஹெகலையும்கூடச் சாராமலும், சுயேச்சையான முறையில், ஜோசஃப் டித்ஸ்கென்* (Joseph Dietzgen) என்ற ஒரு ஜெர்மன் தொழிலாளியும் கண்டுபிடித்துள்ளார். (பார்க்க: மனித மூளைச் செயல்களின் சாரம், உடலுழைப்பாளரால் சொல்லப்படுவது*. ஹாம்புர்க், மாஸ்னர்).

[*டித்ஸ்கென் எழுதிய மனித மூளைச் செயல்களின் சாரம், உடலுழைப்பாளரால் சொல்லப்படுவது. சுத்தமான நடைமுறைப் பகுத்தறிவு பற்றிய புதிய விமர்சனம் என்னும் நூலை ஏங்கெல்ஸ் இங்கு குறிப்பிடுகிறார்.]

இந்த முறையில், ஹெகலியத் தத்துவத்தின் புரட்சிகரக் கூறு ஒருவாறாக மீண்டும் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அதே வேளையில் அதன் முரணில்லாத செயலாக்கத்தைத் தடுத்து நிறுத்தியதற்கு ஹெகல் பயன்படுத்திய கருத்துமுதல்வாத அலங்காரத்திலிருந்து விடுவிக்கப்பட்டது. மாபெரும் அடிப்படைச் சிந்தனையாவது: முன்னரே உருவாக்கி வைக்கப்பட்ட பொருள்களின் (ready-made things) சிக்கலான ஒரு தொகுதியாக உலகத்தைப் புரிந்து கொள்ளக் கூடாது. நிகழ்வுப்போக்குகளின் (processes) சிக்கலான ஒரு தொகுதியாகப் புரிந்துகொள்ள வேண்டும். இத்தொகுதியில் வெளித்தோற்றத்தில் நிலையானவையாகத் தோன்றும் பொருள்களும், நம் மூளைகளிலுள்ள அவற்றின் மனப் பிரதிபலிப்புகளும், நம்முடைய கருத்துருக்களும் தோன்றியும் மறைந்தும் வரும்படியான ஓர் இடையறாத மாற்றத்துக்கு உள்ளாகின்றன. இந்த மாற்றத்தில், தற்செயலானதாகத் தோற்றமளிக்கும் அனைத்தையும் மற்றும் தற்காலிகமான பின்னடைவுகள் அனைத்தையும் மீறி, முடிவில் ஒரு முற்போக்கான வளர்ச்சி தன்னை நிலைப்படுத்திக் கொள்கிறது. இந்த மாபெரும் அடிப்படைச் சிந்தனை, சிறப்பாக ஹெகலின் காலத்திலிருந்து சாதாரண உணர்வில் முற்ற முழுக்க ஊடுருவிக் கலந்திருப்பதால், பொதுமையான வடிவத்தில், இப்பொழுது அது பெரும்பாலும் மறுக்கப்படுவதில்லை. ஆனால் இந்த அடிப்படையான சிந்தனையைச் சொல்லளவில் ஏற்றுக் கொள்வதும், எதார்த்தத்தில் அதை ஒவ்வொரு ஆய்வுத் துறைக்கும் விரிவான அளவில் பயன்படுத்துவதும் இரண்டு வெவ்வேறான விஷயங்களாகும். எனினும் எப்பொழுதும் இந்தக் கருத்துநிலையிலிருந்து ஆய்வு தொடங்குமெனில், முடிவான தீர்வுகளையும் நிரந்தர உண்மைகளையும் கண்டறிய வேண்டும் என்கிற கோரிக்கை அடியோடு மறைந்து போகிறது. இதுவரை பெறப்பட்ட அறிவு முழுவதுக்கும் நிச்சயமான ஒரு வரம்பெல்லை உண்டு [கற்றது கைமண் அளவு, கல்லாதது உலக அளவு] என்பதையும், எத்தகைய சூழ்நிலைமைகளில் அவ்வறிவு பெறப்பட்டதோ அச்சூழ்நிலைமைகளின் தாக்கத்துக்கு அது உட்பட்டது என்னும் உண்மையையும் நாம் எப்போதும் உணர்ந்திருக்கிறோம். மறுபுறத்தில், உண்மைக்கும் பொய்க்கும், நன்மைக்கும் தீமைக்கும், முழுஒற்றுமைக்கும் வேறுபாட்டுக்கும், அவசியமானதுக்கும் தற்செயலானதுக்கும் இடையே உள்ள எதிராக்கங்கள் (antitheses) நம் மீது ஆதிக்கம் செலுத்த இனியும் நாம் அனுமதிப்பதில்லை. இன்னும் பரவலாக இருந்துவரும் பழைய இயக்கமறுப்பியலுக்கு இத்தகைய எதிர்நிலைகள் சவாலாக இருந்து வருகின்றன. இந்த எதிர்நிலைகள் சார்புநிலையான சரித்தன்மையை (validity) மட்டுமே கொண்டுள்ளன என்பதை நாம் அறிவோம். உண்மை என்று இன்று அங்கீகரிக்கப்பட்டுள்ள ஒன்று, அதன் உள்ளார்ந்த பொய் அம்சத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அப்பொய் அம்சம் பின்னர் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. அதைப்போல, இன்று பொய் என்று கருதப்படுகின்ற ஒன்று, அதன் உண்மையான அம்சத்தையும் கொண்டிருக்கிறது. அதன் காரணமாகவே அதை முன்னர் உண்மையானதென்று கருத முடிந்தது. அவசியமானது என்று அழுத்தமுறச் சொல்லப்படும் ஒன்று, முற்றிலும் தற்செயலானவற்றால் ஆனது என்பதையும், தற்செயல் என்று சொல்லப்படும் ஒன்று, அவசியமானது தன்னைப் பின்புறம் மறைத்துக் கொண்டுள்ள வடிவமே என்பதையும் நாம் அறிவோம். இன்னும் இதுபோல.
”இயக்கமறுப்பியல்” (metaphysical) என்று ஹெகல் அழைக்கின்ற, ஆய்வு மற்றும் சிந்தனை பற்றிய பழைய வழிமுறை, பொருள்களைக் கொடுக்கப்பட்டவாறே மாறாதவையாகவும், நிலையானவையாகவும் கருதி ஆய்வு செய்வதையே விரும்பியது. இந்த வழிமுறையின் மிச்ச மீதங்கள் இன்னமும் மக்கள் மனங்களில் வலுவுடன் குடி கொண்டுள்ளன. இவ்வழிமுறை செல்வாக்குப் பெற்றிருந்த காலத்தில் மிகப்பெரும் வரலாற்று நியாயத்தைக் கொண்டிருந்தது. நிகழ்வுப்போக்குகளைப் பரிசீலிப்பது சாத்தியமாவதற்கு முன்பாக, முதலில் பொருள்களைப் பரிசீலிப்பது அவசியமாக இருந்தது. ஒரு குறிப்பிட்ட பொருள் அடைந்து கொண்டிருக்கும் மாற்றங்களை ஒருவர் கவனிக்க முடிவதற்கு முன்பாக, அது எத்தகைய பொருள் என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டி இருந்தது. மேலும், இயற்கை விஞ்ஞானத்தைப் பொறுத்தவரை இந்த வகையைச் சேர்ந்ததே. பொருள்களை முற்றுப்பெற்ற பொருள்களாக ஏற்றுக் கொண்ட பழைய இயக்க மறுப்பியலானது, இறந்துபோன பொருள்களையும், வாழுகின்ற பொருள்களையும் முற்றுப்பெற்ற பொருள்களாகக் கருதி ஆய்வு மேற்கொண்ட ஓர் இயற்கை விஞ்ஞானத்திலிருந்து தோன்றியதாகும். ஆனால், தீர்மானகரமான அடியை முன்னோக்கி எடுத்துவைப்பது சாத்தியமாகும் அளவுக்கு இந்த ஆய்வு முன்னேற்றம் கண்டபோது, அதாவது இயற்கைக்குள்ளேயே இந்தப் பொருள்கள் அடையும் மாற்றங்களை முறைப்படி ஆய்வு செய்யப் புகுவது சாத்தியமானபோது, தத்துவவியல் துறையிலும்கூட பழைய இயக்க மறுப்பியலுக்குச் சாவு மணி அடிக்கப்பட்டது. மேலும், உண்மையாகப் பார்த்தால், கடந்த நூற்றாண்டின் இறுதி வரைக்கும் இயற்கை விஞ்ஞானம் என்பது பெருமளவுக்கு ஒரு திரட்டித் தொகுக்கும் விஞ்ஞானமாக, முற்றுப்பெற்ற பொருள்களைப் பற்றிய விஞ்ஞானமாக இருந்தது. நம் நூற்றாண்டிலோ அது சாராம்சத்தில் ஒரு முறைப்படுத்தும் விஞ்ஞானமாக, நிகழ்வுப்போக்குகளின் விஞ்ஞானமாக,, பொருள்களின் தோற்றம், வளர்ச்சி பற்றிய விஞ்ஞானமக, இயற்கையின் நிகழ்வுப்போக்குகள் அனைத்தையும் ஒரே மாபெரும் முழுமையாகப் பிணைத்து வைக்கின்ற பரஸ்பரத் தொடர்பு பற்றிய விஞ்ஞானமாக இருக்கிறது. தாவர, விலங்கு உயிரினங்களில் ஏற்படும் நிகழ்வுப் போக்குகளை ஆராய்கின்ற உடலியல், தனித்தனி உயிரினங்கள் மூலக்கரு நிலையிலிருந்து முதிர்ச்சிநிலை வரை அடைகின்ற வளர்ச்சியை ஆய்ந்தறியும் கருவியல், பூமியின் மேற்பரப்பு படிப்படியாக உருப்பெற்றதை ஆராய்கின்ற புவியியல் – இவை அனைத்தும் நம் நூற்றாண்டில் பிறந்தவை ஆகும்.
ஆனால், எல்லாவற்றுக்கும் மேலாக இயற்கையினுடைய நிகழ்வுப்போக்குகளின் பரஸ்பரத் தொடர்பு பற்றிய நம்முடைய அறிவு எட்டுக்கால் பாய்ச்சலில் விரைந்து முன்னேறுவதற்கு மூன்று மாபெரும் கண்டுபிடிப்புகள் உதவியுள்ளன: முதலாவது, உயிரணு (cell) பற்றிய கண்டுபிடிப்பு. பல்கிப் பெருகுவதன் மூலமும், வேறுபடுவதன் மூலமும், மொத்தத் தாவர, விலங்கினங்களின் உடல் வளர்ச்சியடைவதற்கான அடிப்படை அலகு உயிரணு எனக் கண்டறியப்பட்டது. அதனால், எல்லா உயர்நிலை உயிரினங்களின் முன்னேற்றமும் வளர்ச்சியும் ஒரே பொதுவான விதிக்கு ஏற்ப நடந்தேறுகிறது என்பது அங்கீகரிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, உயிரினங்கள் தமது வகைப்பிரிவை மாற்றிக் கொள்ள முடிவதற்கும், அதன்மூலம் தனித்தனியான வளர்ச்சியைக் காட்டிலும் மேலான வளர்ச்சி பெறுவதற்குமான வழி உயிரணுவின் மாற்றம் அடைவதற்கான திறனில் அடங்கியுள்ளது எனச் சுட்டிக்காட்டப்பட்டது. இரண்டாவது, ஆற்றலின் உருமாற்றம். இது நமக்கு நிரூபித்துக் காட்டியுள்ளதாவது: உயிர்சாரா இயற்கையில் (inorganic nature) முதல்நிலையில் செயல்படுகின்ற, சக்திகள் என்று சொல்லப்படுபவை – எந்திர சக்தியும் ஒடுக்கநிலை ஆற்றல் (potential energy) என்று சொல்லப்படும் அதன் நிரப்புக்கூறும்,, வெப்பம், கதிரியக்கம் (ஒளி அல்லது கதிரியக்க வெப்பம்), மின்சக்தி, காந்த சக்தி, இரசாயன ஆற்றல் – அனைத்தும் முழுதளாவிய இயக்கத்தினுடைய வெளிப்பாட்டின் வெவ்வேறு வடிவங்களே. ஆற்றலின் வடிவங்கள் வரையறுக்கப்பட்ட அளவு விகிதங்களில் ஒன்று மற்றொன்றாக மாறிச் செல்கின்றன. அதனால் குறிப்பிட்ட அளவிலான ஆற்றலின் ஒரு வடிவம் மறைகின்ற இடத்தில், குறிப்பிட்ட அதே அளவிலான ஆற்றலின் மற்றொரு வடிவம் தோன்றுகிறது. இவ்வாறாக, இயற்கையின் மொத்த இயக்கமுமே ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவத்துக்கு உருமாற்றம் அடைகின்ற இடைவிடாத நிகழ்வுப்போக்காகச் சுருங்கி விடுகிறது. கடைசியாக, தொடர்புபடுத்திய வடிவத்தில் டார்வின் (Darwin) முதலில் உருவாக்கிய நிரூபணம். அதன்படி, இன்று நம்மைச் சூழ்ந்திருக்கும் இயற்கையினுடைய, மனிதன் உள்ளிட்ட உயிரினங்களின் தொகுதியானது, ஆதியில் ஓரணு கொண்ட மிகச்சில நுண்ணுயிரிகளிலிருந்து ஏற்பட்ட பரிணாம வளர்ச்சியின் ஒரு நீண்ட நிகழ்வுப்போக்கின் விளைவாகும். இந்த ஓரணு நுண்ணுயிரிகளும், இரசாயன முறைகளின் மூலம் தோற்றம் கொண்ட புரோட்டோபிளாசம் அல்லது அல்புமினிலிருந்து உருவானவை ஆகும்.
இந்த மூன்று மாபெரும் கண்டுபிடிப்புகளினாலும் இயற்கை விஞ்ஞானத்தில் ஏற்பட்ட இதர மகத்தான முன்னேற்றங்களினாலும், இயற்கையிலுள்ள நிகழ்வுப்போக்குகளுக்கு இடையே நிலவும் பரஸ்பரத் தொடர்பினைக் குறிப்பிட்ட துறைகளில் மட்டுமல்ல, குறிப்பிட்ட இந்தத் துறைகளின் பரஸ்பரத் தொடர்பினையும் முழுமையாக நிரூபித்துக் காட்ட முடிகிற கட்டத்துக்கு நாம் இன்றைக்கு வந்துவிட்டோம். எனவே, பரிசோதனை வழிப்பட்ட இயற்கை விஞ்ஞானமே வழங்கியிருக்கும் உண்மைகளைக் கொண்டு இயற்கையில் நிலவும் பரஸ்பரத் தொடர்பு பற்றிய ஒரு முழுமையான பார்வையை ஓரளவுக்கு முறையான வடிவத்தில் நாம் முன்வைக்க முடிகிறது. இந்த முழுமையான பார்வையை வழங்குவது இயற்கைத் தத்துவவியல் என்று சொல்லப்படுவதன் பணியாக முன்பு இருந்தது. எதார்த்தமான, ஆனால் இதுவரையில் அறிந்திராத பரஸ்பரத் தொடர்புகளுக்குப் பதிலாக, இலட்சிய பூர்வமான, கற்பனையானவற்றை வைப்பதன் மூலமாகவும், விட்டுப்போன விவரங்களுக்குப் பதிலாக மனத்தின் கற்பனை விவரங்களை இட்டு நிரப்பி, உண்மையான இடைவெளிகளை வெறுமனே கற்பனையில் இணைத்து வைப்பதன் மூலமாகவும் மட்டுமே இயற்கைத் தத்துவவியல் இந்தப் பணியை நிறைவேற்ற முடிந்தது. இந்தச் செயல்முறையின்போது அது பல மேதைமையான கருத்துகளுக்கு வித்திட்டது. பிற்காலத்தில் ஏற்பட்ட பல கண்டுபிடிப்புகளை முன்னறிந்து கூறியது. ஆனால், கணிசமான அளவுக்கு முட்டாள்தனத்தையும் அது உருவாக்கியது. சொல்லப் போனால் அது வேறுவிதமாக இருந்திருக்கவும் முடியாது. இன்றைக்கு, நம் காலத்துக்குப் போதுமான “இயற்கையின் அமைப்புமுறை” ஒன்றைக் கண்டடையும் பொருட்டு, இயற்கை வழிப்பட்ட விஞ்ஞான ஆய்வின் விளைவுகளை இயக்கவியல் அடிப்படையில், அதாவது அவ்விளைவுகளுக்கு இடையேயான பரஸ்பரத் தொடர்பின் அர்த்தத்தில் மட்டுமே புரிந்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது. இந்த பரஸ்பரத் தொடர்பின் இயக்கவியல் தன்மை, இயக்கமறுப்பியல் முறையிலே பயிற்றுவிக்கப்பட்ட இயற்கை விஞ்ஞானிகளுடைய மனங்களின் உள்ளேகூட, அவர்களுடைய சித்தத்தையும் மீறி தன்னை வலுவுடன் புகுத்திக் கொண்டு வருகிறது. இத்தகைய தருணத்தில் இன்றைக்கு இயற்கைத் தத்துவவியல் முடிவாக கழித்துக் கட்டப்பட்டுவிட்டது. அதற்குப் புத்துயிர் கொடுக்கச் செய்யப்படுகின்ற ஒவ்வொரு முயற்சியும் தேவையற்றது மட்டுமல்லாமல் ஓரடி பின்னோக்கியதாகவும் இருக்கும்.
ஆனால் இயற்கைக்கு உண்மையாக இருப்பது – வளர்ச்சியின் வரலாற்று ரீதியான நிகழ்வுப்போக்காகவும் இங்கே ஒப்புக் கொள்ளப்பட்டதானது – அதுபோலவே, சமுதாயத்தின் வரலாற்றில் அதன் அனைத்துப் பிரிவுகளுக்கும், மானுட (மற்றும் தெய்வீக) விஷயங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ள அனைத்து விஞ்ஞானங்களின் ஒட்டுமொத்தத்துக்கும் உண்மையானதாகும். இங்கேயும்கூட வரலாறு, சட்டம், மதம் மற்றும் பிறவற்றின் தத்துவம், நிகழ்வுகளில் நிரூபித்துக் காட்டப்பட வேண்டிய எதார்த்தமான பரஸ்பரத் தொடர்புக்குப் பதிலாகத் தத்துவவாதியின் மனதில் இட்டுக் கட்டப்பட்ட ஒரு பரஸ்பரத் தொடர்பினைக் கொண்டதாக இருந்தது. வரலாற்றை ஒரு முழுமையாகவும் அதன் தனித்தனிப் பகுதிகளிலும் புரிந்து கொள்வது என்பது, கருத்துக்களை – இயல்பாகவே அந்தந்தத் தத்துவவாதிக்குப் பிரியமான கருத்துக்களை – படிப்படியாக நடைமுறை ஆக்குவது எனக் கருதிக் கொண்டது. இக்கருத்தின்படி, வரலாறு என்பது, முன்னரே வரையறுக்கப்பட்ட ஓர் இலட்சியக் குறிக்கோளை நோக்கி – எடுத்துக்காட்டாக, ஹெகலைப் பொறுத்தவரை அவருடைய தனிமுதலான கருத்தின் நடைமுறையாக்கத்தை (realisation of absolute idea) நோக்கி – தன்னையறியாமல் ஆனால் அவசியத்தின் பொருட்டு இயங்குகிறது. மேலும், இந்தத் தனிமுதலான கருத்தை நோக்கிச் செல்கின்ற மாற்றப்பட முடியாத போக்கே வரலாற்று நிகழ்வுகளில் உள்ளார்ந்த பரஸ்பரத் தொடர்பாக அமைந்திருந்தது. இவ்வாறாக, எதார்த்தமான, இதுவரை அறியப்படாத பரஸ்பரத் தொடர்பின் இடத்தில், உணர்வற்ற அல்லது படிப்படியாக உணர்வு பெற்று வருகிற, ஒரு புதிய மர்மமான பரம்பொருள் வைக்கப்பட்டது. ஆகவே இயற்கைத் துறையில் செய்தது போலவே, இங்கும் எதார்த்தமான பரஸ்பரத் தொடர்புகளைக் கண்டறிவதன் மூலமாக இத்தகைய இட்டுக்கட்டப்பட்ட, செயற்கையான பரஸ்பரத் தொடர்புகளை ஒழித்துக்கட்டுவது அவசியமாயிற்று. முடிவாகப் பார்க்கும்போது, இந்தப் பணியானது, மனித சமுதாயத்தின் வரலாற்றில் ஆட்சி புரியும் விதிகளாகத் தம்மை நிலைப்படுத்திக் கொள்ளும் பொதுவான இயக்க விதிகளைக் கண்டுபிடிப்பது என்றாகிறது.
எனினும், ஒரு விஷயத்தில் சமுதாய வளர்ச்சி பற்றிய வரலாறு, இயற்கையின் வரலாற்றிலிருந்து முக்கியமாக வேறுபட்டிருப்பதைக் காட்டிக் கொள்கிறது. இயற்கை மீதான மனிதனின் எதிர்வினையை நாம் புறக்கணிக்கின்ற அளவுக்கு, ஒன்றின் மீது ஒன்று செயல்புரியும் குருட்டுப் போக்கான, தன்னுணர்வற்ற சக்திகள் மட்டுமே இயற்கையில் உள்ளன. அவற்றின் பரஸ்பர வினையிலிருந்து பொதுவிதி செயல்பாட்டுக்கு வருகிறது. மேற்பரப்பில் காணப்படுகின்ற தற்செயல் எனத் தோற்றமளிக்கிற எண்ணற்ற நிகழ்வுகளிலும் சரி, இந்தத் தற்செயல் நிகழ்வுகளில் உள்ளார்ந்திருக்கும் ஒழுங்குமுறைமையை உறுதிப்படுத்துகின்ற முடிவான விளைவுகளிலும் சரி, நிகழ்வது அனைத்திலும் எதுவுமே உணர்வு பூர்வமாக விரும்பப்பட்ட ஒரு குறிக்கோளாக நிகழ்வதில்லை. இதற்கு மாறாக, சமுதாயத்தின் வரலாற்றில் செயல்படுவோர் அனைவரும் தன்னுணர்வு கைவரப்பெற்ற, ஆழ்ந்த சிந்தனை அல்லது மனவெழுச்சியுடன் திட்டடவட்டமான குறிக்கோள்களை நோக்கிச் செயலாற்றுகிற மனிதர்களாவர். உணர்வு பூர்வமான ஒரு நோக்கம் இல்லாமல், திட்டமிட்ட ஒரு குறிக்கோள் இல்லாமல் சமுதாயத்தில் எதுவும் நிகழ்வதில்லை. ஆனால், இந்த வேறுபாடு, வரலாற்று ஆய்வுக்கு, குறிப்பாகத் தனித்தனி சகாப்தங்கள் மற்றும் நிகழ்வுகள் பற்றிய வரலாற்று ஆய்வுக்கு, எவ்வளவுதான் முக்கியமாக இருந்த போதிலும், வரலாற்றின் உள்ளார்ந்த பொது விதிகளே வரலாற்றுப் போக்கின் மீது ஆட்சி செலுத்துகின்றன என்னும் உண்மையை மாற்ற இயலாது. இங்கேயுங்கூட, மொத்தத்தில் பார்க்கும்போது, தனிநபர்கள் அனைவரின் உணர்வுபூர்வமாய் விரும்பப்பட்ட குறிக்கோள்களையும் மீறி, நிகழ்வுகளின் மேற்பரப்பில் தற்செயலே ஆட்சி புரிவதாகத் தோன்றுகிறது. தீர்மானிக்கப்பட்ட நிகழ்வுகள் நடைபெறுகின்றன, ஆனால் அபூர்வமாகத்தான். பெரும்பான்மையான நிகழ்வுகளில், விரும்பப்பட்ட எண்ணற்ற குறிக்கோள்கள் ஒன்றையொன்று குறுக்கிட்டு மோதிக்கொள்கின்றன. அல்லது இந்தக் குறிக்கோள்கள் தொடக்கத்திலிருந்தே நிறைவேற்றச் சாத்தியமற்றவையாகவோ அல்லது அவற்றை அடைவதற்கான சாதனங்கள் போதாமலோ இருக்கின்றன. இவ்வாறாக, வரலாற்றுத் துறையில் எண்ணற்ற தனித்தனி விருப்பங்களின், தனித்தனி செயல்களின் மோதல்கள், உணர்வற்ற இயற்கையில் மேலோங்கி நிற்கும் நிலவரங்களுக்கு முற்றிலும் ஒப்பான, அதேபோன்ற நிலையை உண்டாக்கி விடுகின்றன. செயல்களின் குறிக்கோள்கள் திட்டமிடப்பட்டவை. ஆனால் இச்செயல்களிலிருந்து நடைமுறையில் பின்தொடரும் விளைவுகள் திட்டமிடப்பட்டவை அல்ல. அல்லது அவை திட்டமிடப்பட்ட குறிக்கோளுடன் பொருந்துவதாகத் தோன்றுகிற வேளையிலும், திட்டமிடப்பட்டதற்கு முற்றிலும் வேறான பின்விளைவுகளையே முடிவாக அவை கொண்டுள்ளன. ஆக, மொத்தத்தில், தற்செயலானது வரலாற்று நிகழ்ச்சிகளையும் அதேபோல ஆட்சி புரிவதாகத் தோன்றுகிறது. ஆனால் எங்கே மேற்பரப்பில் தற்செயல் ஆட்சி புரிகிறதோ, அங்கே உண்மையில் அந்த நிகழ்வின் மீது அதன் உள்ளார்ந்த, மறைவான விதிகள் எப்போதும் ஆட்சி செலுத்துகின்றன. இவ்விதிகளைக் கண்டுபிடிப்பது ஒன்றே இப்போதைய தேவை.
மனிதர்கள் தம் சொந்த வரலாற்றைத் தாமே படைக்கின்றனர். முடிவு எதுவாக இருப்பினும், ஒவ்வொரு மனிதனும் தான் உணர்வுபூர்வமாக விரும்பும் தன் சொந்தக் குறிக்கோளையே பின்பற்றுகின்றான். வெவ்வேறான திசைகளில் செயல்படுகின்ற இந்தப் பல விருப்பங்களின் கூட்டு விளைவும், அவ்விருப்பங்கள் புற உலகின் மீது ஏற்படுத்தும் பன்முகப் பாதிப்புகளின் கூட்டு விளைவுமே வரலாறாக உருவாகிறது. ஆக, அது பல தனிநபர்கள் விரும்புவது என்ன என்கிற பிரச்சினையாகவும் ஆகிறது. மனவெழுச்சி அல்லது ஆழ்ந்த சிந்தனை, விருப்பத்தை நிர்ணயிக்கிறது. ஆனால் மனவெழுச்சியையோ, ஆழ்ந்த சிந்தனையையோ உடனடியாக நிர்ணயிக்கும் நெம்புகோல்கள் மிகவும் வேறுபட்ட வகைகளைச் சேர்ந்தவை. அவற்றில் ஒருபகுதி புறநிலைப் பொருள்களாக இருக்கக் கூடும், ஒருபகுதி இலட்சிய நோக்கங்களாக இருக்கலாம். பேரவா, “உண்மை மற்றும் நீதியின் பாலுள்ள ஆர்வம்”, தனிப்பட்ட வெறுப்பு அல்லது வெறுமனே தனிநபர்களின் எல்லாவிதமான ஆசைகளாகக்கூட இருக்கலாம். ஆனால், ஒருபுறத்தில், வரலாற்றில் செயலாற்றும் பல தனித்தனியான விருப்பங்கள், பெரும்பாலும் திட்டமிடப்பட்டதற்கு முற்றிலும் வேறான – அடிக்கடி முற்றிலும் எதிரான – விளைவுகளை உண்டாக்குவதை நாம் பார்த்திருக்கிறோம். எனவே, மொத்த விளைவோடு தொடர்புபடுத்திப் பார்க்கும்போது, அவற்றின் நோக்கங்கள் அதைப்போலவே இரண்டாம் பட்ச முக்கியத்துவத்தை மட்டுமே பெற்றிருப்பதையும் காணலாம். மறுபுறத்தில், அடுத்த கேள்வி எழுகிறது. தம் முறைக்கு இந்த நோக்கங்களின் பின் நிற்கும் இயக்கு சக்திகள் யாவை? செயலாற்றுவோரின் மூளைகளில் இத்தகைய நோக்கங்களாகத் தம்மை உருமாற்றிக் கொள்ளும் வரலாற்றுக் காரணங்கள் யாவை?
பழைய பொருள்முதல்வாதம் எப்போதும் இக்கேள்வியைத் தன்னிடம் கேட்டுக் கொள்ளவே இல்லை. எனவே, வரலாறு பற்றிய அதன் கருத்தோட்டம் – அப்படி ஒன்று அதற்கு இருக்கும் பட்சத்தில் – சாராம்சத்தில் நடைமுறைப் பயன் கருதியது. அது எல்லாவற்றையும் செயல்பாட்டின் நோக்கங்களுக்கேற்ப மதிப்பிடுகிறது. வரலாற்றில் செயலாற்றும் மனிதர்களைப் பண்பாளர், பண்பற்றவர் எனப் பிரிக்கிறது. அதன்பின், ஒரு விதிமுறையாகவே, பண்பாளர் வஞ்சிக்கப்படுவதையும் பண்பற்றவர் வெற்றி பெறுவதையும் காண்கிறது. எனவே, வரலாற்றைக் கற்பதிலிருந்து மிகவும் அறிவுத் தெளிவூட்டும் எதையும் பெறப்போவதில்லை என பழைய பொருள்முதல்வாதம் புரிந்து கொள்கிறது. ஆனால் நாமோ, வரலாற்றுத் துறையில் பழைய பொருள்முதல்வாதம் தனக்கே உண்மையாக இல்லை என்று புரிந்து கொள்கிறோம். காரணம், இலட்சிய வகைப்பட்ட உந்து சக்திகளின் பின்னே இருப்பது என்ன, இந்த உந்து சக்திகளுக்கு உந்து சக்திகளாக இருப்பவை எவை என்று ஆய்ந்தறிவதற்குப் பதிலாக, வரலாற்றுத் துறையில் செயல்படும் இலட்சிய வகைப்பட்ட உந்து சக்திகளையே முடிவான காரணங்களாகப் பழைய பொருள்வாதம் எடுத்துக் கொள்கிறது. இலட்சிய வழிப்பட்ட உந்து சக்திகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்னும் விவரத்தில் முரண்பாடு எதுவும் இல்லை. இச்சக்திகளின் பின்னே உள்ள இயக்கு காரணங்களைக் கண்டறியும் அளவுக்கு, மேலும் பின்னோக்கி எடுத்துச் செல்லப்படாத ஆய்வில்தான் முரண்பாடு இருக்கிறது. மறுபுறத்தில், வரலாற்றியல் தத்துவம், குறிப்பாக, ஹெகல் பிரதிநிதித்துவப்படுத்தும் வரலாற்றியல் தத்துவம், வரலாற்றில் செயலாற்றும் மனிதர்களின் நோக்கங்கள் –வெளித்தோற்றத்தில் தெரிகின்றவையும் உண்மையிலே செயல்பட்டு வருகின்றவையும் – எந்த வகையிலும் வரலாற்று நிகழ்வுகளின் முடிவான காரணங்கள் அல்ல என்றும், இந்த நோக்கங்களுக்குப் பின்னால் வேறு இயக்கு சக்திகள் உள்ளன, அவற்றைக் கண்டுபிடித்தாக வேண்டும் என்றும் அறிந்து சொல்கிறது. ஆனால் அது இச்சக்திகளை வரலாற்றுக்குள்ளேயே தேடுவதில்லை. சொல்லப் போனால் அவற்றை வெளியிலிருந்து இறக்குமதி செய்கிறது, தத்துவவியல் சித்தாந்தத்திலிருந்து வரலாற்றினுள் இறக்குமதி செய்கிறது. எடுத்துக்காட்டாக, ஹெகல் பண்டைய கிரேக்க வரலாற்றை, அதற்கே உரிய உள்ளமைந்த பரஸ்பரத் தொடர்புகளின் மூலம் விளக்குவதற்குப் பதிலாக, அது, “அழகான தனித்தன்மையின் வடிவங்களின்” செயலாக்கத்துக்கும், தன்னளவிலான “கலைப் படைப்பின்” நடைமுறையாக்கத்துக்கும் மேலாக வேறொன்றுமல்ல என்று வெறுமே சாதிக்கிறார். இதுதொடர்பாக, பண்டைய கிரேக்கர்களைப் பற்றி நேர்த்தியாகவும் ஆழமாகவும் நிறையவே பேசுகிறார். ஆனால் அவையெல்லாம், வெறும் அலங்காரப் பேச்சாக விளங்கும் இத்தகைய ஒரு விளக்கத்தை நாம் ஏற்றுக்கொள்ள மறுப்பதிலிருந்து இன்று நம்மைத் தடுக்க முடியாது.
ஆகவே, வரலாற்றில் செயலாற்றும் மனிதர்களுடைய நோக்கங்களின் பின்னே – தன்னுணர்வுடன் அல்லது தன்னுணர்வின்றி, உண்மையில் மிக அடிக்கடி தன்னுணர்வின்றி – இருக்கும் உந்து ஆற்றல்களையும், வரலாற்றின் உண்மையான தீர்மானகர உந்து சக்திகளாக இருப்பவற்றையும் ஆய்வு செய்வதுதான் இப்போதைய பிரச்சினையாக இருக்கும்போது, எவ்வளவு உயர்ந்தவர்களாக இருந்தாலும், தனிநபர்களின் நோக்கங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்பது பிரச்சினையாக இருக்கவில்லை. மாபெரும் மக்கள் திரள்கள், மொத்த மக்களினங்கள், ஒவ்வொரு இனத்திலுமுள்ள மக்களின் மொத்த வர்க்கங்கள் ஆகியவற்றை இயங்கச் செய்யும் நோக்கங்களைப் பற்றிய, அதுவும்கூட, சுடர்விட்டு எரிந்து விரைவிலே அணைந்து போகும் வைக்கோல் தீபோன்ற நொடிநேர இயக்கம் போலன்றி, ஒரு மகத்தான வரலாற்று மாற்றத்தில் முடிகிற, என்றும் நிலைத்திருக்கக்கூடிய ஒரு செயல்பாட்டுக்கான நோக்கங்களைப் பற்றிய பிரச்சினையாகத்தான் இது உள்ளது. இங்கே செயலாற்றும் மக்கள் திரளின் மனத்திலும், மகத்தான மனிதர்கள் என்று சொல்லப்படுகின்ற அவர்களுடைய தலைவர்களின் மனத்திலும் தெளிவாகவோ, தெளிவின்றியோ, நேரடியாகவோ அல்லது ஒரு சித்தாந்த, வடிவத்தில்கூட உணர்வுபூர்வமான நோக்கங்களாகப் பிரதிபலிக்கப்பட்டிருக்கும் இயக்கு காரணங்களைக் கண்டறிகின்ற பாதை ஒன்றுதான், வரலாறு முழுவதிலும், அதன் குறிப்பிட்ட காலகட்டங்களிலும், குறிப்பிட்ட நாடுகளிலும் ஆட்சி செலுத்தும் விதிகளைக் கண்டுபிடிக்க உதவி செய்யும். மனிதர்களை இயக்கத்தில் வைத்திருக்கும் ஒவ்வொன்றும் அவர்களுடைய மனங்களினூடே சென்று தீர வேண்டும். ஆனால் அது மனத்தில் என்ன வடிவம் எடுத்துக் கொள்ளும் என்பது, சூழ்நிலைமைகளையே பெருமளவு பொருத்திருக்கும். ரைன் மாநிலத்தில் 1848-ஆம் ஆண்டு வரையிலும்கூட தொழிலாளிகள் செய்ததைப்போல் இனிமேலும் வெறுமே எந்திரங்களை உடைத்துப் போடாவிட்டாலும், அவர்கள் எவ்வகையிலும் முதலாளித்துவ எந்திரத் தொழிலுடன் சமரசப்பட்டுப் போகவில்லை.
ஆனால், இதற்கு முந்தைய காலகட்டங்கள் அனைத்திலும் வரலாற்றின் இந்த உந்து காரணங்களை ஆய்வு செய்வது, அவற்றுக்கும் அவற்றின் விளைவுகளுக்கும் இடையேயுள்ள சிக்கலான, மறைவான பரஸ்பரத் தொடர்புகளின் காரணத்தால், அனேகமாகச் சாத்தியமற்றிருந்தது. அவ்வாறிருக்கும்போது, நம்முடைய இன்றைய காலகட்டம் புதிரை விடுவிக்க முடிகிற அளவுக்கு இந்தப் பரஸ்பரத் தொடர்புகளை எளிதாக்கி விட்டிருக்கிறது. பெரிய அளவிலான தொழிலகங்கள் நிலைநாட்டபட்ட காலத்திலிருந்து, அதாவது, குறைந்தபட்சம் 1815-இல் ஐரோப்பாவில் அமைதி ஏற்பட்ட காலத்திலிருந்து, இங்கிலாந்தின் மொத்த அரசியல் போறாட்டமும் நிலம் படைத்த பிரபு வர்க்கம் (landed aristocracy), முதலாளி வர்க்கம் (நடுத்தர வர்க்கம்) என்னும் இரண்டு வர்க்கங்களின் மேலாட்சிக்கான கோரிக்கைகளை அச்சாணியாகக் கொண்டிருந்தது என்பது இங்கிலாந்து நாட்டிலுள்ள எந்த மனிதருக்கும் எப்போதுமே இரகசியமாக இருந்திருக்கவில்லை. ஃபிரான்சில் பவர்பான் (Bourbon) அரச வம்சத்தினர் மீண்டும் ஆட்சிக்கு வந்தது இதே உண்மையைப் புலப்படச் செய்தது. மத்திய காலத்திலிருந்து ஃபிரெஞ்சு வரலாறு முழுவதையும் புரிந்து கொள்ள அதுவே திறவுகோல் என்று தியேரி (Thierry) முதல் கிஸோ (Guizot), மின்யே (Mignet), தியேர் (Thiers) வரையிலான முடியரசு மீட்சிக் காலத்தைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியர்கள் அதைப்பற்றி எங்கும் பேசுகிறார்கள். 1830 முதல் இவ்விரு நாடுகளிலும் தொழிலாளி வர்க்கத்தை, பட்டாளி வர்க்கத்தை மூன்றாவது போட்டியாளனாக அங்கீகரித்துள்ளனர். நவீன கால வரலாற்றின், குறைந்தபட்சம், மிகவும் முன்னேறிய இவ்விரு நாடுகளின் உந்து சக்தியை, இம்மூன்று மாபெரும் வர்க்கங்களின் போராட்டத்திலும் அவர்களுடைய நலன்களின் மோதலிலும் காணலாம். அவ்வாறு பார்க்காமலிருப்பதற்கு ஒருவர் வேண்டுமென்றே கண்ணை மூடிக் கொண்டிருக்க வேண்டும். அந்த அளவுக்கு நிலைமைகள் எளிதாகியுள்ளன.
ஆனால் இந்த வர்க்கங்கள் எப்படித் தோன்றின? முன்னாளில் நிலப்பிரபுத்துவ முறையில் அமைந்த மாபெரும் நிலச் சொத்துடைமையின் தோற்றத்துக்கு – குறைந்த பட்சம் முதல் நிகழ்வில் – அரசியல் காரணங்கள், பலவந்தமாகக் கைவசப்படுத்திக் கொள்ளல் ஆகியவற்றின் மீது பழிபோடுவது முதல் பார்வையில் இப்போதும் சாத்தியமே என்றாலும், முதலாளி வர்க்கம், பட்டாளி வர்க்கம் ஆகியவற்றைப் பொறுத்தவரை இத்தகைய காரணங்களைக் கற்பிக்க முடியாது. இங்கே இவ்விரண்டு மாபெரும் வர்க்கங்களின் தோற்றமும் வளர்ச்சியும், தெளிவாகவும், வெளிப்படையாகவும், முற்றிலும் பொருளாதார வகைப்பட்ட காரணங்களிலே உள்ளதைக் காணலாம். முதலாளி வர்க்கத்துக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கும் இடையேயுள்ள போராட்டத்திலும், அதைவிடக் குறையாத அளவில் நிலவுடைமை வர்க்கத்துக்கும் முதலாளி வர்க்கத்துக்கும் இடையேயுள்ள போராட்டத்திலும், முதலாவதாகவும் முதன்மையானதாகவும் இருப்பது பொருளாதார நலன்களைப் பற்றிய பிரச்சனையே என்பதும், அந்தப் பொருளாதார நலன்களை மேலும் பெருக்கிக் கொள்ள வெறும் சாதனமாகச் சேவை புரிவதே அரசியல் அதிகாரத்தின் நோக்கமாகக் கொள்ளப்பட்டது என்பதும் தெளிவாகத் தெரிந்தது. முதலாளி வர்க்கம், பாட்டாளி வர்க்கம் ஆகிய இரண்டும் பொருளாதார நிலைமைகளில், இன்னும் சரியாகச் சொன்னால் உற்பத்தி முறையில், மாற்றம் ஏற்பட்டதன் பின்விளைவாகவே உதித்தன. முதலில் கைவினைஞர்களின் கைத்தொழிலிருந்து பட்டறை உற்பத்திக்கும், அதன்பிறகு பட்டறை உற்பத்தியிலிருந்து நீராவி மற்றும் எந்திர ஆற்றலைக் கொண்டு நடக்கிற பெரிய அளவிலான தொழில்துறைக்கும், உற்பத்தி முறையில் ஏற்பட்ட மாற்றமே இவ்விரு வர்க்கங்களின் வளர்ச்சிக்குக் காரணமாயிற்று. முதலாளி வர்க்கம் இயக்கி விட்ட புதிய உற்பத்தி சக்திகளும் – முதல்நிலையில் உழைப்புப் பிரிவினையும், ஒரே எளிய வேலைக் கூறை செய்துவரும் பல தொழிலாளிகளை ஒரு பொதுவான பட்டறைத் தொழிலில் இணைப்பதும் – இந்த உற்பத்திச் சக்திகளின் மூலம் வளர்க்கப்பட்ட பரிவர்த்தனையின் நிலைமைகளும் தேவைப்பாடுகளும், வரலாற்றினால் வழங்கப்பட்டு, சட்டத்தால் புனிதப்படுத்தப்பட்ட, நடப்பிலிருந்த உற்பத்தி முறையோடு ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் பொருந்தாதனவாய் ஆகிவிட்டன. அதாவது, அவை கைவினைஞர் சங்கத்தின் சிறப்புரிமைகளோடும், நிலப்பிரத்துவ சமூக அமைப்புமுறையின் எண்ணற்ற பிற தனிப்பட்ட மற்றும் உள்ளூர் சிறப்புரிமைகளோடும் (சமூகத்தில் உரிமையற்ற பிரிவினருக்கு இவை அனைத்தும் கைவிலங்குகளாகவே இருந்தன) பொருந்தாதனவாய் ஆகிவிட்டன. முதலாளி வர்க்கம் பிரதிநிதித்துவப்படுத்தும் உற்பத்தி சக்திகள், நிலப்பிரபுக்களும் கைவினைஞர் சங்க எஜமானர்களும் பிரதிநிதித்துவப்படுத்தும் உற்பத்தி முறையை எதிர்த்துக் கலகம் செய்தன. அதன் விளைவு தெரிந்ததே: நிலப்பிரபுத்துவக் கைவிலங்குகள் இங்கிலாந்தில் படிப்படியாகவும் ஃபிரான்சில் ஒரே அடியிலும் உடைத்தெறியப்பட்டன. ஜெர்மனியில் இந்தச் செயலாக்கம் இன்னும் முடிவு பெறவில்லை. ஆனாலும், பட்டறைத் தொழில்முறை அதனுடைய வளர்ச்சியின் ஒரு திட்டவட்டமான கட்டத்தில் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையோடு மோதிக் கொண்டதைப் போலவே, இப்போது பெரிய அளவிலான தொழில்துறை, நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறைக்குப் பதிலாக நிறுவப்பட்டுள்ள முதலாளித்துவ உற்பத்தி முறையோடு ஏற்கெனவே மோதிக் கொண்டிருக்கிறது. இந்த உற்பத்தி முறையாலும் முதலாளித்துவ உற்பத்தி முறையின் குறுகிய வரம்புகளாலும் கட்டிப் போடப்பட்டுள்ள இந்தப் பெரிய அளவிலான தொழில்துறை, ஒருபுறத்தில் மாபெரும் மக்கள் திரளை எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாகப் பட்டாளி வர்க்கமயமாக்கலையும்,, மறுபுறத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு மிக அதிகமான விற்றுத் தீர்க்க முடியாத பொருள்களையும் உற்பத்தி செய்கிறது. மிகை உற்பத்தியும் திரளான மக்களின் வறுமையும் ஒன்றுக்கொன்று காரணமாக அமைகின்றன. இந்த அபத்தமான முரண்பாடுதான் பெரும் தொழில்துறையின் விளைவு. உற்பத்தி முறையில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவதன் மூலமாக, உற்பத்தி சக்திகளை விடுதலை செய்ய வேண்டியது அவசியம் என இம்முரண்பாடு அறைகூவி அழைக்கிறது.
அனைத்து அரசியல் போராட்டங்களும் வர்க்க போராட்டங்களாகும்; ஒவ்வொரு வர்க்கப் போராட்டமும் ஓர் அரசியல் போராட்டமாகவே இருக்கின்றது; எனவே விடுதலைக்காக நடக்கும் எல்லா வர்க்கப் போராட்டங்களும், அவசியமாகவே அவை அரசியல் வடிவம் பெற்றிருந்த போதிலும், பொருளாதார விடுதலை என்னும் பிரச்சினை நோக்கியே முடிவாகத் திரும்புகின்றன – என்பதெல்லாம் குறைந்தபட்சம் நவீன கால வரலாற்றில் நிரூபிக்கப்பட்டுள்ளன. எனவே குறைந்தபட்சம் இக்கால வரலாற்றிலாவது, அரசு அதாவது அரசியல் அதிகாரம் கீழடங்கிய அம்சமாகவும், குடிமைச் சமுதாயம் அதாவது பொருளாதார உறவுகளின் ஆட்சி தீர்மானகரமான அம்சமாகவும் உள்ளது. ஹெகலுங்கூட மரியாதை செலுத்திய மரபு வழிப்பட்ட கருத்தோட்டம் (traditional conception) அரசைத் தீர்மானகரமான அம்சமாகவும், குடிமைச் சமூதாயத்தை அரசால் தீர்மானிக்கப்படும் அம்சமாகவும் கண்டது. வெளித்தோற்றங்களும் இத்துடன் பொருந்துகின்றன. ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனுடைய செயல்பாடுகளின் உந்து சக்திகள் அனைத்தும், அவனைச் செயலில் இறங்கச் செய்வதற்கு, அவன் மூளையினூடே சென்று தீர வேண்டும்; சென்று, அவனுடைய விருப்பத்தின் நோக்கங்களாகத் தம்மை உருமாற்றிக் கொள்ள வேண்டும். அதுபோலவே, குடிமைச் சமூதாயத்தின் தேவைகள் அனைத்தும் – எந்த வர்க்கம் ஆளும் வர்க்கமாக இருக்க நேர்ந்தாலும் – சட்டங்களின் வடிவத்தில் பொதுவான அங்கீகாரம் பெறுவதற்கு அரசின் விருப்பத்தினூடே சென்று தீர வேண்டும். தன்னளவில் வெளிப்படையாகப் புலப்படும் இதுதான் விவகாரத்தின் முறையான அம்சம் ஆகும். எனினும், தனிநபரின் மற்றும் அரசின் வெறும் சம்பிரதாயமான இவ்விருப்பத்தின் உள்ளடக்கம் என்ன, இவ்வுள்ளடக்கம் எங்கிருந்து பெறப்படுகிறது? இதுமட்டும் ஏன் விரும்பப்பட்டது? ஏன் வேறெதுவும் இல்லை? என்னும் கேள்வி எழுகிறது. இதை நாம் ஆய்ந்து பார்த்தால், நவீன கால வரலாற்றில் குடிமைச் சமூதாயத்தின் மாறிவரும் தேவைகளும், ஏதோவொரு வர்க்கத்தின் மேலாதிக்கமும், கடைசியாக உற்பத்திச் சக்திகள் மற்றும் பரிவர்த்தனை உறவுகளின் வளர்ச்சியுமே மொத்தத்தில் அரசின் விருப்பத்தைத் தீர்மானிக்கின்றன என்பதைக் கண்டுபிடிக்கிறோம்.
ஆனால் பிரம்மாண்டமான உற்பத்தி மற்றும் தகவல் தொடர்புச் சாதனங்களைக் கொண்ட நமது நவீன சகாப்தத்திலுங்கூட, அரசானது ஒரு சுதந்திரமான வளர்ச்சியைக் கொண்ட, ஒரு சுதந்திரமான செயற்களமாக இல்லாமல், அதன் இருப்பும் வளர்ச்சியும் முடிவில் சமுதாய வாழ்க்கையின் பொருளாதார நிலைமைகளைச் கொண்டே விளக்கப்பட வேண்டியுள்ளது எனில், முந்தைய காலங்கள் அனைத்திற்கும் இது மேலும் உண்மையாக இருந்தாக வேண்டும். காரணம், முந்தைய காலங்களில் மனிதனின் பொருளாயத வாழ்க்கைக்கான உற்பத்தி இத்தகைய ஏராளமான துணைச் சாதனங்களோடு நடைபெறவில்லை; ஆகவே, அக்காலங்களில் இப்படிப்பட்ட உற்பத்தியின் அவசியம் மனிதர்கள் மீது மேலும் பெரிதான ஆதிக்கம் செலுத்தி வந்திருக்க வேண்டும். பெரும் தொழில்துறை மற்றும் இரயில்வேக்களின் சகாப்தமான இன்றைய காலகட்டத்திலும்கூட, ஆக மொத்தத்தில் அரசு என்பது உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் வர்க்கத்தினுடைய பொருளாதாரத் தேவைகளின் அழுத்தமான பிரதிபலிப்பு மட்டுமே. அப்படி இருக்கையில், அன்றைய சகாப்தத்தில் இது மேலும் உண்மையாக இருந்திருக்க வேண்டும். காரணம், அன்றைக்கு மனிதர்களின் ஒவ்வொரு தலைமுறையும், பொருளாயதத் தேவைகளை நிறைவு செய்து கொள்ள, அதன் மொத்த வாழ்நாளில் மிகப்பெரும் பகுதியைச் செலவழிக்கக் கட்டாயப்படுத்தப்பட்டது. எனவே, அன்றைய தலைமுறை இன்று நாம் இருப்பதைவிட மேலும் அதிகமாக அந்தத் தேவைகளைச் சார்ந்திருந்தது. வரலாற்றின் முந்தைய காலகட்டங்களை பற்றிய பரிசீலனை – இக்கோணத்திலிருந்து மிகுந்த அக்கறையோடு மேற்கொள்ளப்பட்ட உடனேயே – இந்த உண்மையை நூறு மடங்கு அதிகமாகவே உறுதிப்படுத்துகிறது. ஆனால் இதை நாம் இங்கே ஆராய முடியாது என்பது உண்மையே.
பொருளாதார உறவுகள் அரசையும் பொதுச் சட்டத்தையும் தீர்மானிக்கின்றன என்றால், அதேபோல் தனிநபர் சட்டத்தையும் அவையே தீர்மானிக்கின்றன. உண்மையிலேயே சாராம்சத்தில் இச்சட்டம் தனிநபர்களுக்கு இடையே நிலவி வருகின்ற, அந்தந்தச் சூழ்நிலைமைகளில் இயல்பாகக் காணப்படும் பொருளாதார உறவுகளை மட்டுமே அனுமதிக்கிறது. ஆனால் இதனுடைய நடைமுறை வடிவம் கணிசமாக வேறுபட முடியும். இங்கிலாந்தில் நடந்ததுபோல், மொத்த தேசிய வளர்ச்சிக்கு இசைவான வகையில், பழைய நிலப்பிரபுத்துவச் சட்டங்களின் வடிவங்களை மாற்றாமல் அவற்றுக்கு முதலாளித்துவ உள்ளடக்கம் தந்து, பிரதானமாக அவற்றைத் தக்கவைத்துக் கொள்வது சாத்தியமே. உண்மையில், நிலப்பிரத்துவப் பெயருக்குள் ஒரு முதலாளித்துவ அர்த்தத்தை நேரடியாகப் படித்துக் கொள்வதாகும். மேற்கு ஐரோப்பாக் கண்டத்திலும் இதுபோலவே நடந்தது. அங்கு நிலவிய ரோமானியச் சட்டத்தை அடித்தளமாக எடுத்துக் கொள்ள முடியும். பண்டம் உற்பத்தி செய்யும் ஒரு சமுதாயத்தின் முதன்முதலான உலகச் சட்டமாகும் அது. சாதாரணப் பண்ட உடைமையாளர்களின் (வாங்குபவர்களும் விற்பனையாளர்களும், கடன் வாங்கியவர்களும் கொடுத்தவர்களும், ஒப்பந்தங்களும், கடமைப் பொறுப்புகளும், இன்னும் இதுபோன்ற பிறவும் உள்ளடங்கிய) இன்றியமையாத அனைத்துச் சட்ட உறவுகளையும் பற்றிய நேர்நிகரற்ற, நேர்த்தியுள்ள, விரிவான விளக்கத்தைக் கொண்டது. அப்படியானால், இன்னமும் குட்டி–முதலாளித்துவ (petty-bourgeois), அரைநிலப்பிரபுத்துவத் தன்மை (semi-feudal) கொண்டதாக இருக்கும் சமுதாயத்தின் நன்மைக்காக, வெறுமே சட்ட நடைமுறை (பொதுச் சட்டம்) மூலமாக, அதை அப்படிப்பட்ட ஒரு சமுதாயத்தின் தரத்துக்குத் தாழ்த்த முடியும். அல்லது அறிவொளி மிக்கவர்கள் என்று சொல்லப்படுகின்ற, நீதிநெறி பேசும் சட்ட வல்லுநர்களின் உதவியைக் கொண்டு, அப்படிப்பட்ட சமுதாயத் தரத்துக்குப் பொருந்தும் வகையில், அதைத் தனிச்சிறப்பான ஒரு சட்டத் தொகுதியாய் உருவாக்கிவிட முடியும். இந்தச் சூழ்நிலைமைகளில், சட்டக் கருத்துநிலையிலிருந்துங்கூட அது ஒரு மோசமான சட்டத் தொகுதியாகவே இருக்கும் (எடுத்துக்காட்டாக, பிரஷ்யாவின் நிலச்சட்டம்). எனினும், ஒரு மகத்தான முதலாளித்துவப் புரட்சிக்குப் பின், ஃபிரெஞ்சு குடிமைச் சட்டம் (French Code Civil) போன்ற முதலாளித்துவப் சமுதாயத்தின் அத்தகையதொரு மூலச்சிறப்பான சட்டத் தொகுப்பையுங்கூட, இதே ரோமானிய சட்டத்தின் அடிப்படையில் வகுப்பது சாத்தியமே. எனவே, முதலாளித்துவச் சட்ட விதிகள் சமுதாயத்தின் பொருளாதார வாழ்க்கை நிலைமைகளை வெறுமனே சட்டத்தின் வடிவத்தில் வெளியிடுகின்றன எனில், சூழ்நிலைமைகளுக்கு ஏற்றவாறு நன்றாகவோ, மோசமாகவோ அவற்றை வெளியிட முடியும்.
மனிதன் மேலிருக்கும் முதன்முதலான சித்தாந்த சக்தியாக அரசு தன்னை நம்மிடம் காட்டிக் கொள்கிறது. வெளிநாட்டு, உள்நாட்டுத் தாக்குதல்களிலிருந்து தன்னுடைய பொதுவான நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஓர் உறுப்பைச் சமுதாயம் தனக்கெனப் படைத்துக் கொள்கிறது. இந்த உறுப்பு அரசு அதிகாரம் ஆகும். இந்த உறுப்பு தோன்றிய மாத்திரத்தில், அது சமுதாயத்துக்கு எதிரே தன்னைச் சுதந்திரமானதாக ஆக்கிக் கொள்கிறது. உண்மையில், எவ்வளவு அதிகமாக அது ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் உறுப்பாக ஆகிறதோ, எவ்வளவு அதிகமாக அந்த வர்க்கத்தின் மேலாதிக்கத்தை அது நேரடியாய்ச் செயல்படுத்துகிறதோ, அவ்வளவு அதிகமாக அரசு தன்னைச் சுதந்திரமானதாய் ஆக்கிக் கொள்கிறது. ஆளும் வர்க்கத்துக்கு எதிராக ஒடுக்கப்பட்ட வர்க்கம் நடத்தும் மோதல், அவசியமாகவே ஓர் அரசியல் மோதலாக, எல்லாவற்றுக்கும் முதலாய், இவ்வர்க்கத்தின் அரசியல் ஆதிக்கத்துக்கு எதிரான மோதலாக ஆகிறது. இந்த அரசியல் போராட்டத்துக்கும் அதன் பொருளாதார அடிப்படைக்கும் இடையே உள்ள பரஸ்பரத் தொடர்பு பற்றிய உணர்வு மங்கி விடுகிறது, இது முற்றாக மறைந்துவிடவும் முடியும். இப்போராட்டத்தில் பங்கெடுக்கிறவர்களின் விஷயத்தில் முழுதாக இப்படி நடப்பதில்லை என்ற போதிலும், வரலாற்று ஆசிரியர்களின் விஷயத்தில் அனேகமாக அப்படித்தான் எப்போதும் நடக்கிறது. ரோமானியக் குடியரசுக்குள் நடந்த போராட்டங்கள் பற்றிய பண்டைக்கால வரலாற்று ஆசிரியர்களில் அப்பியன் (Appian) ஒருவர் மட்டுமே அந்தப் போராட்டங்களுக்குரிய இறுதியான காரணம் நிலவுடைமை என்று தெளிவாகவும் துல்லியமாகவும் நமக்குக் கூறுகிறார்.
சமுதாயத்தின் எதிரே அரசு ஒரு சுதந்திரமான சக்தியாக ஆனதும் அது உடனே ஒரு புதிய சித்தாந்தத்தை உருவாக்குகிறது. உண்மையிலேயே, முழுநேர அரசியல்வாதிகள், பொதுச் சட்டக் கொள்கைவாதிகள், தனிநபர் சட்ட வல்லுநர்கள் ஆகியோரிடையேதான் பொருளாதார உண்மைகளோடு உள்ள தொடர்புகள் முற்றாகத் தப்பி விடுகின்றன. ஒவ்வொரு குறிப்பிட்ட வழக்கிலும் சட்ட அங்கீகாரம் பெறும் பொருட்டு, பொருளாதார உண்மைகள் சட்டவியல் நோக்கங்கள் என்னும் வடிவத்தை எடுத்துத் தீர வேண்டியுள்ளது; அப்படிச் செய்கையில், ஏற்கெனவே செயல்பாட்டிலுள்ள சட்ட அமைப்புமுறை முழுவதிலும் கவனத்தைச் செலுத்த வேண்டியுள்ளது. எனவே, அதன் பின்விளைவாக சட்டவியல் வடிவமே எல்லாமாகவும் பொருளாதார உள்ளடக்கம் ஒன்றுமில்லாமலும் ஆக்கப்பட்டு விடுகிறது. பொதுச் சட்டம், தனிநபர் சட்டம் ஆகிய இரண்டும் சுதந்திரமான துறைகளாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன. ஒவ்வொன்றும் அதற்கே உரிய வரலாற்று ரீதியான வளர்ச்சியைக் கொண்டுள்ளது. ஒவ்வொன்றும், எல்லா உள்முரண்பாடுகளையும் உறுதியாக ஒழிப்பதன் மூலம் முறைப்படியான முன்வைப்புக்குத் தகுதி வாய்ந்ததாகவும், அத்தகைய முன்வைப்பு தேவைப்படுவதாகவும் உள்ளது.
இன்னும் மேலான சித்தாந்தங்கள், அதாவது, பொருள் மற்றும் பொருளாதார அடிப்படையிலிருந்து மேலும் தொலைவாக நீக்கி வைக்கப்பட்டுள்ள சித்தாந்தங்கள், தத்துவம், மதம் என்னும் வடிவங்களை எடுத்துக் கொள்கின்றன. இங்கே கருத்துருக்களுக்கும், இருத்தலுக்கான அவற்றின் பொருளாயத நிலைமைகளுக்கும் இடையேயான பரஸ்பரத் தொடர்பு, இடைநிலைத் தொடுப்புகள் (intermediate links) மூலமாக மேலும் மேலும் சிக்கலாகி விடுகிறது; மேலும் மேலும் தெளிவற்றதாகி விடுகிறது. ஆனால் அந்தப் பரஸ்பரத் தொடர்பு இருக்கத்தான் செய்கிறது. பதினைந்தாம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து தொடங்கி மறுமலர்ச்சிக் காலகட்டம் (Renaissance Period) முழுவதுமே நகரங்களால், எனவே நகரத்தார்களால் ஏற்பட்ட இன்றியமையாத விளைவு ஆகும். அதனைத் தொடர்ந்து புதிய–விழிப்புப் பெற்ற தத்துவமும் இந்த வளர்ச்சியின் விளைவாகவே தோன்றியது. சாராம்சத்தில், இத்தத்துவத்தின் உள்ளடக்கம், சிறிய, நடுத்தர நகரத்தார்கள் பெரும் முதலாளிகளாக மாறிய வளர்ச்சிக்குப் பொருத்தமான கருத்துகளின் தத்துவார்த்த வெளியீடாகவே இருந்தது. பெரும்பாலும் அரசியல் பொருளாதாரவாதிகளாக மட்டுமின்றி, தத்துவவாதிகளாகவும் திகழ்ந்த, கடந்த நூற்றாண்டின் ஆங்கிலேயர் மற்றும் ஃபிரெஞ்சுக்காரர்களிடையே இது தெளிவாகப் புலப்படுகிறது. ஹெகலியக் கருத்துப் பிரிவினரைப் பொறுத்தவரையில் இதனை நாம் ஏற்கெனவே நிரூபித்து விட்டோம்.
இப்போது நாம் அதோடு சேர்த்து, மதத்தைப் பற்றிச் சுருக்கமாக மட்டுமே கவனிப்போம். காரணம், மதம் பொருளாயத வாழ்க்கையிலிருந்து மேலும் விலகி நிற்கிறது, அதற்கு மிகவும் அந்நியமானதாகவும் தோன்றுகிறது. மிகப் புராதன காலத்தில், மனிதர்கள் தங்களுடைய சொந்த இயல்பு பற்றியும், அவர்களைச் சுற்றியிருந்த புறநிலை இயற்கை பற்றியும் கொண்டிருந்த தவறான, பழைய கருத்துருக்களிலிருந்து மதம் தோன்றியது. என்றபோதிலும், ஒவ்வொரு சித்தாந்தமும் தோன்றிய பிறகு அப்போது நிலவும் கருத்தோட்டங்களை ஒட்டி வளர்கிறது. அந்தக் கருத்தோட்டங்களை மேலும் வளர்க்கிறது, அப்படிச் செய்யாவிடில் அது ஒரு சித்தாந்தமாக இருக்க முடியாது. அதாவது, சுதந்திரமாய் வளர்ச்சியடைகின்ற, தமக்கே உரிய விதிகளுக்கு மட்டுமே கட்டுப்பட்ட, சுதந்திரமான சிந்தனைகளுடன் எந்தத் தொடர்பும் கொண்டதாக இருக்காது. எந்த மனிதர்களின் மூளைகளுக்குள்ளே இந்தச் சிந்தனை நிகழ்வுப்போக்கு நடந்து கொண்டிருக்கிறதோ, அந்த மனிதர்களின் பொருளாதய வாழ்க்கை நிலைமைகளே அந்நிகழ்வுப் போக்கின் ஓட்டத்தை இறுதியில் தீர்மானிக்கின்றன என்பது, தவிர்க்க இயலாதவாறு இந்த மனிதர்களுக்குத் தெரியாமலே இருந்து விடுகிறது. அப்படி இல்லாவிட்டால், அனைத்து சித்தாந்தங்களும் ஒரு முடிவுக்கு வந்துவிடும். எனவே, குல உறவுள்ள மக்களினங்களின் ஒவ்வொரு குழுவுக்கும் பிரதானமாகப் பொதுவாக இருக்கும் அசலான மத நம்பிக்கைகள், அந்தக் குழு பிரிந்த பிறகு, ஒவ்வொரு மக்களினத்துக்கும் அதற்கே உரிய விசேஷ முறையில், அதற்கு வாய்க்கக்கூடிய வாழ்க்கை நிலைமைகளுக்கு ஏற்ப வளர்கின்றன. அனேக மக்களினக் குழுக்களின், குறிப்பாக ஆரியர்களின் (இந்தோ–ஐரோப்பியர்கள் என்று சொல்லப்படுபவர்கள்) விஷயத்தில் ஒப்புநோக்குப் புராணவியல் (comparative–mythology) இந்த நிகழ்வுப்போக்கை விளக்கமாகக் காட்டியுள்ளது. ஒவ்வொரு மக்களினத்துக்குள்ளும் இவ்வாறு உருவாக்கப்பட்ட கடவுள்கள் தேசியக் கடவுள்களாக இருந்தனர். அவற்றின் ஆளுகை, அவை காத்தருள வேண்டியிருக்கும் தேசிய நிலப்பரப்புக்கு அப்பால் பரவவில்லை. அதன் எல்லைகளுக்கு அப்பால் வேறு கடவுள்கள் வில்லங்கமின்றி அதிகாரம் செலுத்தி வந்தன. தேசம் இருந்த வரையில் மட்டுமே கற்பனையில் அக்கடவுள்கள் தொடர்ந்து இருந்துவர முடிந்தது. தேசத்தின் வீழ்ச்சியுடன் அவையும் வீழ்ந்தன. ரோமானிய உலகப் பேரரசின் – அதன் தோற்றம் பற்றி இங்கே நாம் பரிசீலிக்கத் தேவையில்லை – பொருளாதார நிலைமைகள், பழைய தேசிய இனங்களின் வீழ்ச்சியை ஏற்படுத்தின. பழைய தேசியக் கடவுள்கள் நசிந்தன. ரோம் நகரத்தின் குறுகிய கூடங்களுக்கு மட்டுமே பொருந்தியதாக அலங்கரிக்கப்பட்ட ரோமானியர்களின் கடவுள்கள்கூட நசிந்து போயின. சிறிதே மதிக்கத்தக்க எல்லா வெளிநாட்டுக் கடவுள்களுக்கும் ரோம் நகரில் அங்கீகாரம் வழங்கவும், உள்ளூர் கடவுள்களுக்குப் பக்கத்திலேயே அவற்றுக்குப் பூஜா பீடங்கள் ஏற்படுத்தவும் எடுத்துக்கொண்ட முயற்சிகளிலே, உலக மதம் ஒன்றின் மூலமாக உலகப் பேரரசை முழுமையாக்க வேண்டியதன் தேவை தெளிவாக வெளிப்படுத்தப்பட்டது. ஆனால் ஒரு புதிய உலக மதத்தைப் பேரரசின் ஆணை மூலமாக இந்தப் பாணியிலே உண்டாக்கிவிட முடியாது. பொதுமைப்படுத்தப்பட்ட, கீழ்த்திசையின் – குறிப்பாக யூதர்களின் – இறையியலும், கொச்சைப்படுத்தப்பட்ட, கிரேக்க – குறிப்பாக ஸ்டோயிக் (Stoic) – தத்துவமும் கலந்த ஒரு கலவையிலிருந்து புதிய உலக மதமாகிய கிறிஸ்துவ மதம் ஏற்கெனவே ஓசையின்றித் தோன்றியிருந்தது. ஆதியில் கிறிஸ்துவ மதம் எவ்வாறு தோற்றமளித்தது என்பதை முதலில் சிரமப்பட்டுக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. காரணம், நமக்கு வாழையடி வாழையாக வந்துள்ள அதன் அதிகாரபூர்வமான வடிவம், வெறுமே, எந்த வடிவத்தில் அது அரசாங்க மதமாக ஆனதோ அந்த வடிவம் ஆகும்; அரசாங்க மதம் ஆக்கும் நோக்கத்துக்காக நிஸேயா பேரவையால்* (Council of Nicaea) தகவமைக்கப்பட்ட வடிவம் ஆகும்.

[*நிஸேயா பேரவை: ரோமப் பேரரசின் கிறிஸ்துவத் தலைமைப் பாதிரிகளின் அனைத்துலகப் பேரவை ஆகும். முதலாவது கான்ஸ்டான்டின் பேரரசரால் ஆசியா மைனரில் உள்ள நிஸேயா நகரில் 325-இல் கூட்டப்பட்டது. கிறிஸ்தவர்கள் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டிய கோட்பாடுகளை வகுத்துத் தந்தது. அவற்றைப் பின்பற்றாதவர்கள் அரசுத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டுத் தண்டிக்கப்பட்டனர்.]

ஏற்கெனவே, 250 ஆண்டுகளுக்குப் பிறகு அது அரசாங்க மதமாக ஆகிவிட்ட உண்மை, அக்காலத்திய நிலைமைகளுக்குப் பொருத்தமான மதமாக அது இருந்தது என்பதை எடுத்துக் காட்டுவதற்குப் போதுமானது. மத்திய காலத்தில் நிலப்பிரபுத்துவ முறை வளர்ச்சி பெற்ற அதே அளவில், அந்த அமைப்புமுறைக்கு ஈடான மத வடிவமாக, அதற்குப் பொருத்தமான நிலப்பிரபுத்துவ படிநிலை அமைப்புடன் கிறிஸ்துவ மதம் வளர்ச்சி பெற்றது. மேலும், நகரத்தார்கள் செழிக்கத் தொடங்கியபோது, நிலப்பிரபுத்துவக் கத்தோலிக்கத்துக்கு எதிராகப் புரோட்டஸ்டென்ட் முரண்வாதம் வளர்ந்தது. தெற்கு ஃபிரான்சில் அல்பிவாசிகள்* (Albigenses) இடையே, அங்கிருந்த நகரங்கள் தமது மலர்ச்சியின் உச்ச நிலையை எட்டியிருந்த காலத்தில் முதலில் இது தோன்றியது.

[ *அல்பிவாசிகள்: 12, 13–ஆம் நூற்றாண்டுகளில், தெற்கு ஃபிரான்ஸ், வடக்கு இத்தாலி நகரங்களில், வணிகர்கள், கைவினைஞர்கள் ஆகியோரிடையே விரிவாகப் பரவியிருந்த ஒரு மதப்பிரிவு. தெற்கு ஃபிரான்ஸிலுள்ள அல்பி நகரம் அதன் மையமாக இருந்தது. அல்பிவாசிகள் ஆடம்பரமான கத்தோலிக்கச் சடங்குகளையும், திருச்சபையின் படிநிலை அமைப்பையும் எதிர்த்தனர். நிலப்பிரபுத்துவ முறைக்கு எதிரான கண்டனத்தை மத வடிவத்தில் வெளியிட்டனர். 1209–இல் போப் மூன்றாம் இன்னொசன்ட் அல்பி வாசிகளுக்கு எதிராக சிலுவைப்போர் நடத்தினார். இருபது ஆண்டுகாலம் நடந்த இந்தப் போரினாலும் கடுமையான அடக்குமுறையாலும் அல்பிவாசிகள் இயக்கம் நசுக்கப்பட்டது.]

மத்திய காலம், தத்துவம், அரசியல், சட்டவியல் ஆகிய பிற சித்தாந்த வடிவங்கள் அனைத்தையும் இறையியலுடன் ஒட்ட வைத்தது. அவற்றை இறையியலின் உட்பிரிவுகளாக ஆக்கி விட்டது. இதன்மூலம், ஒவ்வொரு சமுதாய மற்றும் அரசியல் இயக்கத்தையும் இறையியல் வடிவம் எடுத்துக் கொள்ள நிர்ப்பந்தித்தது. மக்கள் திரளின் உணர்வுப் பசிக்கு மதத் தீனி மட்டுமே ஊட்டப்பட்டது. மற்றவை அனைத்தும் புறக்கணிக்கப்பட்டன. எனவே, ஒரு துடிப்பான இயக்கத்தை உருவாக்கும் பொருட்டு, அவர்கள் தங்களின் சொந்த நலன்களையே மத வேடத்தில் மறைத்து, முன்வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும், அங்கீகரிக்கப்பட்ட சமுதாயப் படிநிலை எதையும் சேராத, பின்னால் தோன்றிய பாட்டாளி வர்க்கத்தின் முன்னோடிகளான, நகர்ப்புறத்துச் சொத்தில்லாத தொழிலாளிகள், தினக்கூலிகள் மற்றும் எல்லா விதமான வேலையாட்களைக் கொண்ட ஒரு தொங்கு சதையைத் தொடக்கத்திலிருந்தே நகரத்தார்கள் தோற்றுவித்ததைப் போலவே, மத முரண்வாதம் விரைவில் நகரத்தார்–மிதவாத முரண்வாதமாகவும், தொழிலாளர்–புரட்சிகர முரண்வாதமாகவும் பிரிந்துவிட்டது. புரட்சிகர முரண்வாதம் நகரத்தார் முரண்வாதிகளின் வெறுப்புக்குரிய ஒன்றாக இருந்தது.
எழுச்சி பெற்றுவரும் நகரத்தார்களை எப்படித் தோற்கடிக்க முடியாமல் இருந்ததோ, அவ்வாறே புரோட்டஸ்டென்ட் முரண்வாதமும் ஒழிக்க முடியாததாய் இருந்தது. இந்த நகரத்தார்கள் போதுமான அளவு பலம் பெற்றபோது, நிலப்பிரபுத்துவப் பெருங்குடிக்கு எதிரான அவர்களது போராட்டம், அதுவரையில் பெரும்பாலும் உள்ளூர் அளவில் இருந்தது, தேசிய அளவிலான பரிமாணம் பெறத் தொடங்கியது. மாபெரும் முதல் நடவடிக்கை ஜெர்மனியில் நிகழ்ந்தது – மதச்சீர்திருத்தம் (Reformation) என்ற பெயரில். நகரத்தார்கள், கலகப்போக்குக் கொண்ட மீதியுள்ள சமூகப் பிரிவினரை – நகரங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், கீழ்நிலையிலுள்ள பிரபு வம்சத்தினர், நிலத்தில் வேலை செய்யும் விவசாயிகள் ஆகியோரைத் தங்கள் பதாகையின்கீழ் ஒன்றுபடுத்த முடிகிற அளவுக்கு ஆற்றலோ, போதுமான வளர்ச்சியோ பெற்றிருக்கவில்லை. தொடக்கத்தில் பிரபு வம்சத்தினர் தோற்கடிக்கப்பட்டனர். விவசாயிகள் கிளர்ந்து எழுந்தனர். அதுவே புரட்சிகரப் போராட்டம் முழுமைக்கும் உச்சமாக விளங்கியது. ஆனால் நகரங்கள் அவர்களை நட்டாற்றில் கைவிட்டன. இவ்வாறாக, நிலப்பிரபுத்துவ இளவரசர்களின் படைகளுக்குப் புரட்சி அடிபணிந்தது. அவர்களே புரட்சியின் முழுப்பலனையும் அறுவடை செய்தனர். அதனைத் தொடர்ந்து, மூன்று நூற்றாண்டு காலத்துக்கு, வரலாற்றில் சுதந்திரமான, துடிப்பான பாத்திரம் வகிக்கும் நாடுகளின் அணிகளிலிருந்து ஜெர்மனி மறைந்து விடுகிறது. ஆனால், ஜெர்மானிய லூதரைப் (Luther) போன்று ஃபிரெஞ்சுக்கார கால்வின் (Calvin) தோன்றினார். உண்மையான ஃபிரெஞ்சு மதிநுட்பத்துடன் மதச் சீர்திருத்த வாதத்தின் முதலாளித்துவத் தன்மையை முன்னணியில் நிறுத்தினார், திருச்சபையைக் குடியரசுத் தன்மை கொண்டதாக்கினார், ஜனநாயகப்படுத்தினார். ஜெர்மனியில் லூதரிய மதச்சீர்திருத்தம் சிதைவுற்று நாட்டைப் படுநாசப்படுத்திய காலத்தில், கால்வினிய மதச்சீர்திருத்தம் ஜெனீவாவிலும் ஹாலந்திலும் ஸ்காட்லாந்திலும் குடியரசுவாதிகளுக்கு ஒரு பதாகையாகப் பயன்பட்டது. ஸ்பெயினிடமிருந்தும், ஜெர்மன் பேரரசிடமிருந்தும் ஹாலந்தை விடுவித்தது. இங்கிலாந்தில் நடந்துவந்த முதலாளி வர்க்கப் புரட்சி நாடகத்தின் இரண்டாவது அரங்கேற்றத்துக்கு வேண்டிய சித்தாந்த ஆடைகளை வழங்கியது. இங்கே கால்வினியம் (Calvinism) அக்காலத்திய முதலாளி வர்க்க நலன்களுக்குரிய உண்மையான மத முகமூடியாகத் தன்னை நியாயப்படுத்திக் கொண்டது. இதன் காரணமாக, பிரபு வம்சத்தின் ஒரு பகுதிக்கும் முதலாளி வர்க்கத்துக்கும் இடையே ஏற்பட்ட ஒரு சமரசத்தில் 1689–இல் புரட்சி முடிவுக்கு வந்தபோது, கால்வினியம் முழு அங்கீகாரத்தைப் பெறவில்லை. ஆங்கில அரசின் திருச்சபை மீண்டும் நிறுவப்பட்டது. ஆனால் அரசனைத் தனது போப்பாகக் கொண்டிருந்த முந்தைய கத்தோலிக்கிய வடிவத்தில் அல்ல. மாறாக, அது பலமாகக் கால்வினிய மயமாக்கப்பட்டிருந்தது. பழைய அரசுத் திருச்சபை மகிழ்ச்சிகரமான கத்தோலிக்க ஞாயிற்றுக்கிழமையைக் கொண்டாடி வந்தது. சுவையற்ற கால்வினிய ஞாயிற்றுக்கிழமைக்கு எதிராகப் போராடி வந்தது. புதிய, முதலாளித்துவ மயமாக்கப்பட்ட திருச்சபை பின்னதை அறிமுகப்படுத்தியது. அது இன்றுவரைக்கும் இங்கிலாந்தை அணி செய்கிறது.
ஃபிரான்சில் 1685–இல் கால்வினியச் சிறுபான்மையினர் நசுக்கப்பட்டனர். அவர்கள் ஒன்று கத்தோலிக்க மயமாக்கப்பட்டனர் அல்லது நாட்டிலிருந்து விரட்டப்பட்டனர். ஆனால் அதனால் ஏற்பட்ட நன்மை என்ன? அக்காலப் பகுதியில் ஏற்கெனவே பியெர் பெயில் (Pierre Bayle) என்னும் சுதந்திரச் சிந்தனையாளர் உச்ச நிலையில் செயலாற்றி வந்தார். 1694–இல் வால்டேர் (Valtaire) பிறந்தார். பதினான்காவது லூயி மன்னனின் (Louis XIV) பலவந்த நடவடிக்கைகள், பிரெஞ்சு முதலாளி வர்க்கம் தன்னுடைய புரட்சியை, மதத் தன்மையற்ற, முற்றிலும் அரசியல் வடிவத்தில் எளிதாக நடத்தி முடிப்பதற்கே உதவின. புரட்சியின் இந்த வடிவம்தான் வளர்ச்சி பெற்ற முதலாளி வர்க்கத்துக்குப் பொருத்தமானதாக இருந்தது. புரோட்டஸ்டென்டுகளுக்குப் பதிலாகச் சுதந்திரச் சிந்தனையாளர்கள் தேசியச் சட்டமன்றங்களில் இடம் பெற்றனர். இவ்வாறாகக் கிறிஸ்துவ மதம் அதன் இறுதிக் கட்டத்தில் நுழைந்தது. எதிர்காலத்தில் எந்த முற்போக்கு வர்க்கத்துக்கும் அதன் அபிலாசைகளுக்கு ஏற்ற சித்தாந்த வேடம் பூண்டு சேவை புரியக் கிறிஸ்துவ மதம் திறனற்றுப் போனது. மேலும் மேலும் ஆளும் வர்க்கங்களின் தனிப்பட்ட உடைமையாகி விட்டது. ஆளும் வர்க்கங்கள், கீழ்நிலை வர்க்கங்களைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்காகக் கிறிஸ்துவ மதத்தை வெறுமே ஓர் அரசாங்கச் சாதனமாகப் பயன்படுத்தின. மேலும், வெவ்வேறு வர்க்கங்களுள் ஒவ்வொன்றும் தனக்கே உரிய பொருத்தமான மதத்தைப் பயன்படுத்துகிறது: நிலம் படைத்த பிரபு வம்சத்துக்கு – கத்தோலிக்க ஏசுயியவாதம் அல்லது மரபுவழிப் புரோட்டஸ்டென்டு வாதம். மிதவாத, தீவிரவாத முதலாளி வர்க்கத்துக்கு – பகுத்தறிவுவாதம். இந்தக் கனவான்கள் தத்தமக்கு உரிய மதங்களில் நம்பிக்கை கொண்டுள்ளார்களா இல்லையா என்பது ஒரு பொருட்டல்ல.
எனவே, நாம் காண்பதாவது: அனைத்துச் சித்தாந்தத் துறைகளிலும் மரபு ஒரு மாபெரும் பழைமைவாத சக்தியாக இருப்பதைப் போல, மதம் உருவாக்கப்பட்டவுடன், எப்போதும் மரபு வழிபட்ட கருத்துகளையே கொண்டுள்ளது. ஆனால் இந்தக் கருத்துகளில் நாளடைவில் ஏற்படுகின்ற மாற்றங்கள் வர்க்க உறவுகளிலிருந்து உருவாகின்றன. அதாவது, இம்மாற்றங்களைச் செயல்படுத்துகின்ற மக்களின் பொருளாதார உறவுகளிலிருந்து தோன்றுகின்றன. இங்கே இது போதும்.
மேலே கண்ட நூல்பகுதியில், வரலாற்றைப் பற்றிய மார்க்ஸின் கருத்தோட்டத்தை, அதிகபட்சமாக ஒரு சில எடுத்துக்காட்டுகளோடு சேர்த்து, ஒரு பொதுவான சுருக்கவுரையாகக் கொடுப்பதே நமது பிரச்சினையாக இருந்திருக்க முடியும். இதற்கு வரலாற்றிடமிருந்தே நிரூபணத்தைத் தருவிக்க வேண்டும். இது தொடர்பாகப் பிற நூல்களில் போதுமான அளவுக்கு விளக்கப்பட்டுள்ளது என்று கூறிக் கொள்ள என்னை அனுமதிப்பீராக. எனினும், இயற்கை பற்றிய இயக்கவியல் கருத்தோட்டம் இயற்கை பற்றிய தத்துவங்கள் அனைத்தையும் ஒருங்கே தேவையற்றதாகவும் சாத்தியமற்றதாகவும் ஆக்குவதுபோல், வரலாறு பற்றிய மார்க்ஸியக் கருத்தோட்டம், வரலாற்றுத் துறையில் தத்துவத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கிறது. எந்தத் துறையிலும் அதிலுள்ள பரஸ்பரத் தொடர்புகளை மூளைக்குள் கற்பனையில் கண்டறிவதல்ல, அவற்றை உண்மை விவரங்களிலே கண்டுபிடிப்பதே இனிமேற்பட்ட பிரச்சினை ஆகும். இயற்கையிலிருந்தும் வரலாற்றிலிருந்தும் வெளியேற்றப்பட்டுள்ள தத்துவத்துக்குக் கலப்பற்ற சிந்தனைத் துறை மட்டுமே, அதுவும் அது விட்டுவைக்கப்பட்டுள்ள அளவுக்கு மட்டுமே எஞ்சுகிறது. சிந்தனையினுடைய நிகழ்வுப்போக்கின் விதிகள் பற்றிய கோட்பாடு, தர்க்கவியல் மற்றும் இயக்கவியல் ஆகியவை மட்டுமே அதற்கு மிஞ்சுகின்றன.
***** ***** *****
1848 புரட்சியுடன் “படிப்பாளி” ஜெர்மனி கோட்பாட்டுக்கு விடைகொடுத்துவிட்டு நடைமுறைத் துறையை நோக்கிச் சென்றுவிட்டது. உடலுழைப்பை அடிப்படையாகக் கொண்ட சிறு உற்பத்தியையும் பட்டறைத் தொழிலையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, உண்மையிலேயே பெரிய அளவிலான தொழில்துறை அவ்விடத்துக்கு வந்தது. ஜெர்மனி மீண்டும் உலகச் சந்தையில் தோன்றியது. புதிய சிறிய ஜெர்மன் பேரரசு [பிரஷ்யாவின் ஆதிக்கத்தில் 1871 ஜனவரியில் உருவான, ஆஸ்திரியா நீங்கலான ஜெர்மன் பேரரசை இச்சொல் குறிக்கிறது] குறைந்தபட்சம், பல சிறிய அரசுகள், நிலப்பிரபுத்துவத்தின் மிச்சங்கள், அதிகார வர்க்க நிர்வாகம் ஆகியவற்றைக் கொண்ட அமைப்பின் மூலமாக வளர்ச்சியைத் தடுத்துக் கொண்டிருந்த கேடுகளில் மிக மோசமானவற்றை ஒழித்துவிட்டது. ஆனால், ஊக வணிகச் சிந்தனை, பங்குச் சந்தைகளில் தனது கோயிலைக் கட்டிக் கொள்ளும் பொருட்டு, எந்த அளவுக்குத் தத்துவவாதியின் ஆராய்ச்சியைக் கைவிட்டதோ அதே அளவுக்கு படிப்பாளி ஜெர்மனி, கோட்பாடுகளின்பால் தான் காட்டிவந்த ஈடுபாட்டை இழந்தது. இந்த ஈடுபாடுதான் ஜெர்மனி அரசியல் ரீதியாக மிகக் கேவலமாக அவமானத்துக்கு ஆளாகிக் கிடந்த காலங்களில் அதன் புகழைப் பரப்பிக் கொண்டிருந்தது. ஆராய்ச்சியால் பெறப்பட்ட முடிவு நடைமுறையில் பயன்படுத்தத் தக்கதா இல்லையா, அது போலீஸ் அதிகாரிகளுக்கு ஆத்திரமூட்டக் கூடுமா இல்லையா என்பதைப்பற்றிக் கவலைப்படாத கலப்பற்ற விஞ்ஞான ஆய்வுக்கான ஈடுபாடு அது. அதிகாரபூர்வ ஜெர்மானிய இயற்கை விஞ்ஞானம், குறிப்பாகச் சில தனிச்சிறப்பு வாய்ந்த ஆய்வுத் துறைகளில் முன்னணித் தரவரிசையில் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருந்தது என்பது உண்மையே. ஆனால், [விஞ்ஞான ஆய்விலிருந்து பெறப்பட்ட] தனித்தனி உண்மைகளை ஒன்றுக்கொன்று முழுமையாகத் தொடர்புபடுத்தல் மற்றும் அவற்றைப் பொதுமைப்படுத்தி விதிகள் ஆக்குதல் போன்ற ஆய்வுத் துறைகளில் தீர்மானகரமான முன்னேற்றங்கள் இப்பொழுது இங்கிலாந்தில்தான் மிக அதிகமாக ஈட்டப்பட்டு வருகின்றன, முன்புபோல் ஜெர்மனியில் அல்ல என்று விஞ்ஞானம் (Science) என்னும் அமெரிக்க ஆய்விதழ்கூட சரியாகவே குறிப்பிட்டுள்ளது. தத்துவம் உட்பட வரலாற்று விஞ்ஞானத் துறைகளில் கோட்பாட்டின்பால் இருந்த பழைய, பயமற்ற பேரார்வம் பாரம்பரியத் தத்துவத்தோடு சேர்ந்து இப்போது முற்றாக மறைந்து போய்விட்டது. அபத்தமான கதம்பவாதமும், பணிவாய்ப்பு, வருமானம் ஆகியவற்றுக்கான கவலை மிக்க அக்கறையும், அதற்காக மிகக் கொச்சையான வேலை–வேட்டையில் இறங்குவதும் அதன் இடத்தைப் பிடித்துள்ளன.. இவ்விஞ்ஞானங்களின் அதிகாரபூர்வமான பிரதிநிதிகள் முதலாளி வர்க்கம் மற்றும் இப்போது நிலவிவரும் அரசு ஆகிய இரண்டின் ஒளிவுமறைவற்ற சித்தாந்தவாதிகளாக ஆகியுள்ளனர், அதுவும், முதலாளி வர்க்கமும் அரசும் பகிரங்கமாகத் தொழிலாளி வர்க்கத்தை எதிர்த்து நிற்கும் காலத்தில்.
கோட்பாட்டின்பாலுள்ள ஜெர்மானிய நாட்டம் தொழிலாளி வர்க்கத்திடையே மட்டுமே பாதிப்பின்றி இருந்து வருகிறது. இவர்களிடையே இதை ஒழித்துக் கட்ட முடியாது. இவர்கள் பதவி வேட்டையிலும், இலாபம் ஈட்டுவதிலும், மேலிடத்தின் அருள்மிக்க ஆதரவைப் பெறுவதிலும் அக்கறை ஏதும் இல்லாதவர்கள். மாறாக, விஞ்ஞானம் எவ்வளவு அதிகமாகக் கொடூரத்துடனும் அக்கறையின்றியும் செயல்படத் தொடங்குகிறதோ, அவ்வளவு அதிகமாகத் தொழிலாளர்களின் நலன்களுக்கும் அபிலாசைகளுக்கும் இசைவாக இருக்கிறது. [ஜெர்மனியில் காணப்படும்] புதிய எண்ணப்போக்கு, சமுதாயத்தின் மொத்த வரலாற்றையும் புரிந்து கொள்வதற்கான திறவுகோல், உழைப்பின் வளர்ச்சி பற்றிய வரலாற்றிலே உள்ளது என்பதைக் கண்டு கொள்கிறது. புதிய போக்கு, தொடக்கத்திலிருந்தே தொழிலாளி வர்க்கத்துக்கு முக்கியத்துவம் தந்து, தன்னுடைய கவனத்தை அதன் பக்கமே திருப்பியது. அதிகாரபூர்வமான விஞ்ஞானத்திடம் கேட்க முடியாத, எதிர்பார்க்க முடியாத ஆதரவைத் தொழிலாளி வர்க்கம் இந்தப் புதிய எண்ணப்போக்கிடம் கண்டது. ஜெர்மன் தொழிலாளி வர்க்க இயக்கம் பாரம்பரிய ஜெர்மன் தத்துவத்தின் வாரிசு ஆகும்.
(அத்தியாயம்-4 முற்றும்) http://marxism.sivalingam.in/marxengelsbooks/feuerbachbookchap-4.htm