12 அக்டோபர், 2012

கடவுள் - கலீல் ஜிப்ரான்

ஆதியில், முதல் வார்த்தையின் சுவடு என் உதடுகளை அடைந்தபோது, நான் புனிதமான மலையில் ஏறி கடவுளைப் பார்த்து சொன்னேன் ‘கடவுளே, நான் உங்களின் அடிமை. தங்களின் விருப்பமே என்னுடைய விதி, நான் உங்களிடம் இன்னும் அதிகப் பணிவுடன் இருப்பேன்’.

அவர் எதுவும் பேசாமல், ஒரு புயலைப் போல வேகமாக அங்கிருந்து மறைந்தார்.

ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் அந்த மலைக்குச் சென்று கடவுளிடம் பேசினேன். ‘என்னை உருவாக்கியவரே, நான் உங்கள் படைப்பு. ஒரு களிமண்ணிலிருந்து என்னைப் படைத்தீர்கள், நான் என்னுடைய எல்லாவற்றின் மூலமும் உங்களுக்குக் கடன்பட்டிருக்கிறேன்’’.

அவர் எதுவும் பேசாமல், ஓராயிரம் சிறகுகள் கொண்டு பறப்பதைப் போல, அங்கிருந்து சென்றார்.

இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் புனித மலையில் ஏறி அவரிடம் சொன்னேன். ‘கடவுளே, நான் உங்கள் குழந்தை. அன்பினாலும், கருணையினாலும் நீங்கள் எனக்கு உயிர் கொடுத்தீர்கள். அன்பினாலும், பிரார்த்தனையினாலும் உங்கள் ராஜாங்கத்தை அடைவேன்’.

அவர் எதுவும் பேசவில்லை, தூரத்து மலையைப் பனி சூழ்வதைப்போல மெல்ல என்னைவிட்டு நகர்ந்தார்.

ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் அந்த மலைக்குச் சென்று கடவுளிடம் சொன்னேன். ‘கடவுளே, என்னுடைய இலட்சியமே, நிறைவே! நானே உங்கள் இறந்தகாலம், நீங்களே என் எதிர்காலம். பூமிக்குள்ளிருக்கும் உங்கள் வேர் நான், வானத்திலிருக்கும் என்னுடைய மலர் நீங்கள். சூரியனுக்கு முன் நாம் இருவரும் சேர்ந்து வளர்வோம்’.

கடவுள் என்னை நோக்கிக் குனிந்து இனிமையான வார்த்தைகளை என் காதில் சொன்னார். சொல்லும்போதே நதியை அணைத்துத் தன்னுள்ளே ஓட விடும் கடலைப்போல, என்னை அணைத்துக் கொண்டார்.

நான், மலையிலிருந்து இறங்கி சமவெளிகளையும் பள்ளத்தாக்குகளையும்  அடைந்தபோது, கடவுளையும் அங்கு கண்டேன்.

- கலீல் ஜிப்ரானின் பைத்தியக்காரன் என்ற நூலிலிருந்து

கருத்துகள் இல்லை: