05 மார்ச், 2012

அவளைக் கொல்ல பத்து வழிகள்-மதியழகன் சுப்பையா 10

பத்து




ஒரு கொலை செய்வது என்ன அவ்வளவு கஷ்டமான காரியமா? தினம் செய்தித் தாளில் வாசிப்பது எரிச்சலை உண்டு பண்ணியது. எப்படி இவ்வளவு சுலபமாக கொலைகளைச் செய்கிறார்கள் என்று வியப்புக்கு மேல் வியப்பாக இருந்தது. ஆனால் அவர்கள் மாட்டிக் கொள்ளும் கதை பயத்தையும் உண்டு பண்ணத் தவறவில்லை.





எனது திட்டங்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்து கொண்டிருப்பது எனக்கு மிகுந்த வருத்தமாகவும் அவமானமாகவும் இருந்த்து. ஒருவேளை திட்டங்கள் சரியில்லாமல் இருக்கலாம். அல்லது தடயங்கள் ஏதுமில்லாமல் நான் கொலை செய்ய திட்டமிடுவதால் இப்படி ஆகிறதோ என்னவோ. இல்லை அவளுக்கு ஆயுசு கெட்டியாக இருக்கலாம் இல்லையா? அப்படியெல்லாம் ஒன்றுமிருக்காது. இந்தக் கொலைத் திட்டம் நிறைவேறும் வரை கண்டிப்பாக நாத்திகனாக இருக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தேன்.



இந்த முறை நிச்சயம் கொலை நடக்கும். நான் வழக்கமாக போகும் மருத்துவர் ஊசிப் போடும் ஊசியோடு இணைந்த மருந்து குப்பியை ஆட்காட்டி விரலால் தட்டி விடுவார் பின் கொஞ்சம் மருந்தை பீய்ச்சி அடிப்பார். சிறு வயது முதல் மருத்துவரின் இந்த செயலைப் கவனித்து வருகிறேன். அதற்கான காரணம் கேட்ட போது. நரம்புக்குள் செலுத்தும் மருந்தில் காற்றுத் துளிகள் இருந்தால் அது மனிதனைக் கொன்று விடும் என்று விளக்கம் சொன்னார். எனக்கு வியப்பாக இந்தாலும் சந்தேகமாகவும் இருந்தது. ஆனாலும் இத்தனை ஆண்டுகள் அனுபவமிக்க ஒரு மருத்துவர் சொல்வது சரியாகத்தானே இருக்கும். அதுவுமில்லாமல் இது எளிய வழியும் கூட. சாட்சி, தடையம் இல்லாமல் கொலை செய்து விடலாம்.



இப்படியான அற்பக் காரணங்களால் மரணம் சம்பவிக்கும் வேறு செயல்கள் எவை என்று கேட்டேன். தலைக்குப் பின் புறம் கழுத்துப் பகுதி வழியாக மூளைக்கு போகும் நரம்புகளில் ஒன்றின் மீது கூர்மையான ஊசியால் குத்தி விட்டால் கூட மரணம் சம்பவிக்கும்.. ஆனால் ஊசி கண்டிப்பாக நரம்புகளில் ஒன்றில் தான் குத்தப் பட வேண்டும் என்றார் அழுத்தமாக.



என் தலைக்கு மேல் பல்ப் எரிந்தது. கண்டிப்பாக இந்த முறையில் அவளைக் கொலை செய்யலாம் என்று முடிவு செய்தேன். இது மிகவும் எளிமையான முறை மற்றும் தடயங்கள் குறித்து அக்கரைப் பட வேண்டியதில்லை.



மருத்துவரின் ஊசிப் போடும் முறைக்கு அவள் நோய்ப்பட வேண்டும். ஊசி போட்டுக் கொள்ளும் படி நோய் தீவிரமாக இருக்க வேண்டும். இதை ஏற்படுத்த முடியாது மேலும் இதில் மருத்துவரின் ஒத்துழைப்பும் தேவையாயிருக்கிறது. அதனால் இந்த வழி வேண்டாமென ஒதுக்கி விட்டேன். ஆனால் அவள் கழுத்து நரம்புகளில் ஒன்றில் ஊசியால் குத்திக் கொல்ல முடியுமே.



இதோ ஊசி தயார். அவளை சந்திக்க வேண்டும் கழுத்தில் ஊசி குத்தும் நிலையில் அவளை உட்கார வைத்துக் கொள்ள வேண்டும். ஆள் அரவமில்லாத இடமும் நேரமும் குறித்துக் கொண்டு ஆயத்தமானேன்.



ஆக்‌ஷா பீச். சரியான இடத்தேர்வு. ஆக்‌ஷா பீச்சில் மதிய நேரம் ஆள் நடமாட்டம் குறைவு. அதுவும் அந்த குன்றுப் பகுதியில் அடர்ந்தசெடிகளுக்கிடையில் யார் வரப் போகிறார்கள். காதலர்கள் அங்கே பல நிலைகளில் இருப்பதை பள்ளிப் பருவம் முதல் கண்டு வந்திருக்கிறேன்.



பீச்சுக்கு கூட்டிப் போவதாக சொன்னதும். அவள் கண்டிப்பாய் துள்ளியிருப்பாள். மிகுந்த உற்சாகத்துடன் பேசினாள். அவள் இப்படி பேசும்போதெல்லாம் வருத்தமாக இருக்கும். மனதை மாற்றிக் கொள்ளலாம் என்று கூட தோன்றும். ஆனால் இல்லை. இப்படி எவ்வளவோ முறை எப்படியெப்படியோ மனதை மாற்றிக் கொண்டாயிற்று.



மால்வானி சர்ச் பகுதியில் சந்திக்க திட்டம். பின் பைக்கில் ஆக்‌ஷா பீச் செல்ல முடிவு. இன்று புடவையில் வந்திருந்தாள். மெல்லிய அலங்காரம் தான் ஆனால் அப்படியொரு அழகு. பெண்களை மிக அழகாகக் காட்டும் ஆடைகளில் புடவைக்கு முதலிடம் கொடுக்கலாம். ரிக்‌ஷாவில் வந்து இறங்கியவளை பைக்கில் ஏற்றிக் கொண்டு பறந்தேன்.



ஆக்‌ஷா பீச்சை நெருங்கியதும் மெல்லிய காற்று இதமாக இருந்தது. பைக்கை ஓரமாக நிறுத்தி விட்டு அவளை செடிகளுக்குள் இழுத்துச் சென்றேன். அவளுக்கு அங்கே வேண்டாம் என்று இருந்தது. அலைகளைப் பார்த்தபடி பாறை மேல் உட்கார விருப்பம் தெரிவித்தாள். எனது திட்டம் என்னவாவது. கட்டாயப் படுத்தி கூட்டிச் சென்றேன். கண்டிப்பாய் உள்ளே போனால் கசமுசா செய்வான் என்று அவளும் ஆவலாய் வந்தாள்.



குறித்த இடம் காலியாகவே இருந்தது. ஆள் நடமாட்டமும் அவ்வளவாக இல்லை. குறிப்பாக நாங்கள் புதர் பகுதிக்குள் நுழைவதை ஒரு காக்கா குருவி கூட பார்த்திருக்காது என்பதில் உறுதியாக இருந்தேன்.



முதலில் நான் உட்கார்ந்து கொண்டேன். அவள் முதுகைக் காட்டி உட்காரச் சொன்னேன். வேண்டாமென மறுத்தவள், கட்டாயப் படுத்தியதும் உட்கார்ந்து கொண்டாள். அவள் கழுத்தின் கீழ் பகுதியிலும் முதுகின் மேல் பகுதியிலும் இதழ்களால் உழுதேன். அவள் சருமத்தின் வாசனை மூளையின் செயலற்ற பகுதிகளை சுறுசுறுப்பாக்கிக் கொண்டிருந்தது. விஷம் போல அவள் வாசம் என்னுள் ஏறிக் கொண்டிருந்தது.



என் பெயரை சொல்லி முனகியபடி என்மீது சாய்ந்தாள். சுதாரித்துக் கொண்ட நான் அவள் முதுகைப் பற்றி முன்னுக்குத் தள்ளினேன். ஊசியை மெல்ல எடுத்தேன். விரல்களில் குத்தி விடுமோ என்று பயந்தேன். ஆனால் அப்படி நடக்கவில்லை.



இன்று எல்லாமும் நலமாக நடந்து கொண்டிருக்கிறது. கொலை கண்டிப்பாய் நடந்தேறும் என்று மனதுள் மகிழ்ச்சி. முத்தங்களைப் பதித்துக் கொண்டே ஊசியை கழுத்தின் புடைத்த நரம்பொன்றின் மேல் வைத்து அழுத்தினேன். ‘’ ஸ்ஸ் அஆஆ’ என்று கைகளால் பின்னால் தடவப் பார்த்தாள். நான் ஊசியை விலக்கிக் கொண்டு அவ்விடத்தில் அழுந்த முத்தமிட்டேன்.



’எவ்வளவு மென்மையானவள் இவள். ஆனால் சருமம் ஏன் இப்படி தடித்துக் கிடக்கிறது. ஒருவேளை ஊசி முனையில் கூர்மை குறைவாக இருக்குமோ’ இப்படி பல கேள்விகள். அடுத்த முயற்சிக்கு ஆயத்தமாகி விட்டேன். இந்த முறை இன்னொரு நரம்பு. ஊசியால் அழுந்த குத்தினேன். மீண்டும் ‘ஸ்ஸ்ஸ அ ஆ ஆ’ என்று என்னை விலகி கைகளால் குத்து பட்ட இடத்தை தேய்த்தாள். நான் மீண்டும் அவளை பழைய நிலையில் இழுத்தி இருத்தினேன்.



‘ என்னமோ கடிக்குடா? ரொம்ப வலிக்கு’ என்று முகத்தில் வலி காட்டினாள். ஊசியை இதை விட வேகமா, ஆழமாக குத்த முடியாது என்றாகி விட்டது. மீண்டும் முத்தங்களை விதைக்கும் பணியில் மூழ்கினான். அவள் சொக்கிப் போய் என் மேல் கனமானாள். ஊசி குத்தப் பட்ட இடத்தில் கடுகு அளவில் ரத்தம் காய்ந்து இருந்தது.



தனது ஈரமான கைகளை சேலையை விலக்கி பாவாடையில் துடைத்துக் கொண்டாள். இளநீர் குடித்துவிட்டு பைக்கில் திரும்பினோம். புறப்பட்ட இடம் வந்து சேர்ந்தோம். ஏனோ இருவரும் எதுவும் பேசிக் கொள்ள வில்லை.



கருத்துகள் இல்லை: