05 மார்ச், 2012

அவளைக் கொல்ல பத்து வழிகள்-மதியழகன் சுப்பையா 7

ஏழு




இந்த முறை பாம்பை ஏவி விட்டு கொலை செய்வது என்று முடிவு செய்தேன். பாம்பை ஏவி விடுதல் என்பது சரியான வாக்கியமாக இருக்காது பாம்பை பயன் படுத்தி என்று சொல்லலாம். இப்படி சொல்வது கூட மிகச் சரியாக இருக்காது. ஏனென்றால் பாம்பு போன்ற ஜீவன்களை நாம் பயன்படுத்தி விட முடியுமா என்ன?





பாம்பு என்றால் எனக்கும் பெரும் பயம் தான். ஆனால் என்ன செய்ய என் கொலைத் திட்டங்கள் எல்லாம் மண்ணைக் கவ்விக் கொண்டிருக்கும் பட்சத்தில் வேறு வழியில்லாமல் இந்த வழியைத் தேர்ந்தெடுத்துள்ளேன். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பசுமைகளைத் தேடி மக்கள் அலைந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் இவ்வாறான ஜந்துகளை எங்கே பிடிப்பது.



மீராரோடு பகுதியில் பாம்புகளை வைத்து வித்தை காட்டும் ஒருவனை நண்பன் ஒருவன் மூலம் தேடிப் பிடித்தேன். அவன் காட்டிய பாம்பின் அளவுகளைக் கண்டதும் அவற்றை எப்படி கொண்டு வந்து அவள் மீது ஏவி விட்டுக் கொல்வது என்று தெரியவில்லை.



எதாவது சிறிய அளவிலான பூச்சி கிடைத்தால் நன்றாக இருக்கும். ஆனால் அது கொடிய விஷமுள்ளதாக இருத்தல் வேண்டும். அளவில் சிறியதான ஆனால் விஷமிகு பூச்சிகள் கிடைத்தால் நன்று என்றிருந்தேன்.



நீண்ட இடைவேளைக்குப் பின் அப்படியொரு பூச்சி கிடைத்தது. இது கொலை செய்யுமா என்று தெரியவில்லை. அதை சோதித்துப் பார்க்கவும் முடியாது. இணையத்தில் அது பற்றி வாசிக்கலாம் ஆனால் அதன் பெயர் தெரியாது. அதைக் கொடுத்த அந்த நண்பன் சொன்ன பெயரை வைத்து தேடிப் பார்த்தால் தகவல் இல்லை. அதன் அடையாளங்களைச் சொன்ன போது அதன் ஆங்கிலப் பெயரைச் சொன்னான் பூச்சிகள் மீது பிரியமான ஒரு நண்பன். அவன் சொன்ன ஆங்கிலப் பெயரை வைத்து அகராதியில் தேடிய போது ‘ அது ஒரு வகை விஷமிக்க பூச்சி’ என்று சொல்லப் பட்டிருந்தது. அதன் பெயர் குறிப்பிடப் படவில்லை.



அதற்கு உணவாக என்னக் கொடுப்பது என்று தெரியவில்லை. மேய்வதற்கு விடவும் பயம். அது கடித்து நான் போய்ச் சேர்ந்து விட்டால், என்னவாவது. அதன் ஜீவன் முடிந்து போகும் முன் அதை பயன் படுத்தி இன்னொரு ஜீவனை கொல்ல வேண்டும். பத்திரமாக எடுத்துக் கொண்டு போனேன்.



இந்தமுறை பார்க்கில் சந்திப்பு. திட்டமிட்டபடி எல்லாமும் நடந்து கொண்டிருந்தது. டப்பாவிலிருந்த அந்த விஷ ஜந்துவை எடுத்து அவள் ஆடைக்குள் விட தயாரானேன். நான் நெளிவதைக் கண்ட அவள் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருந்தால். வேகமாகத் திரும்பியவளின் தோள் பட்டு அந்த ஜந்து கீழே தவறி விழுந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் காணாமலும் போய் விட்டது.



எனது கொலைத்திட்டம் தோல்வியானது குறித்து கவலையில்லை ஆனால் காணமல் போன அந்த ஜந்து பூங்காவில் மயக்க நிலையில் காதல் செய்து கொண்டிருக்கும் யாரையாவது கடித்து விடக் கூடாது என்று வேண்டிக் கொண்டேன்.



‘ஓஹோ’ இப்ப புரியுது என்று எதையோ கண்டு பிடித்தவளைப் போல் என் இதழ்களின் வழி உயிரை உறிஞ்சிக் கொண்டிருந்தாள். நான் விட்ட ஆழமான மூச்சுக்காற்றால் பூச்சித் திட்டம் பொசுங்கிப் போச்சு.



கருத்துகள் இல்லை: