05 மார்ச், 2012

அவளைக் கொல்ல பத்து வழிகள்-மதியழகன் சுப்பையா 3

மூன்று




பள்ளித் தோழன் ராஜன், கராஜ் வைத்திருக்கிறான். அவனிடம் வரும் வண்டிகளை எடுத்துக் கொண்டு நாங்கள் பல சாகசங்களைக் கற்று வைத்திருந்தோம். பழுதுபார்க்க வந்திருக்கும் வண்டிகளை எங்கள் ஆசை தீர ஓட்டி விளையாடி விட்டுத்தான் உரிமையாளரிடம் கொடுப்பது வழக்கம்.





ராஜனிடம் நல்ல வண்டி ஒன்றைக் கேட்டேன். சந்தையில் புதிதாக வந்த வண்டியொன்று கிரிசிங் பணிக்கு வந்திருப்பதாக சொல்லி காட்டினான். நான் எடுத்துப் போகக் கேட்டேன். உரிமையாளரை எப்படியாவது அவன் சமாளித்து விடுவான். ஆனால் அவன் யாரையோ வெளியில் கூட்டிப் போவதாய் செய்திருந்த திட்டம் நடக்காது. வேறு பிரச்சனை இல்லை. வெள்ளிக் கிழமை இரவு எடுத்துக் கொண்டு போன வாகனத்தை என் அடுத்த திட்டதிற்கு தயார் படுத்தினேன். சனிக் கிழமை மாலை அவளை அழைத்துப்போய், சொர்க்கலோகம் அனுப்பி வைக்க திட்டம். அவள்தான் சொர்க்கத்திற்குப் போக வேண்டி வாரம் தவறாமல் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறாளே.



மூன்று முறை ஐ லவ் யூக்கள் சொல்லி அவள் அழகை வர்ணித்த பின்னர் அன்று மாலை மரண பயணத்திற்கு சரி சொன்னாள். கார் என்றதும் அலுவலகத்துக்கே மட்டம் போட்டு விடுவதாய் துள்ளினாள். வேண்டாம் மாலை வந்தால் போதுமென சமாதானப் படுத்தினேன்.



நீண்டதொரு ரப்பர் குழாய் வாங்கி வாகனம் வெளியேற்றும் கார்பனை வண்டிக்குள் விட்டு அவளை கார்பன் மோனாக்சைடு மூலம் கொல்லத் திட்டம் போட்டேன். காந்திவிலி சார்கோப்பைத் தாண்டி அடர்ந்திருக்கும் புதர் பகுதிக்கு காரைச் செலுத்தினேன். சில கேக் துண்டுகளும் சாக்கலேட் கட்டிகளும் கடிக்கக் கொடுத்தேன். குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தி சுற்றுமுற்றும் நோட்டமிட்டேன். பார்வை எட்டும் தூரம் வரை ஆளில்லை. கார் இல்லை. கருப்பு கண்ணாடி ஏற்றிய காருக்குள் என்னை கட்டிக்கொண்டாள். வண்டியை ஆப் செய்யாமல் இருந்தேன். பெட்ரோல் டங்கி நிரம்ப மரணம் சூடாகிக் கொண்டிருந்தது.



காரிலிருந்து இறங்கி ரப்பர் பைப்பை கார்பன் குழாயுடன் சைலன்சர் குழாயை இணைத்தேன். தண்ணீர் வாங்கச் செல்வதாக சொல்லிக் கிளம்பினேன். காரின் அத்தனை கதவுகளின் ஒயர்களையும் அறுத்து விட்டிருந்தபடியால் உள்ளிருந்து திறக்க இயலாதபடி செய்து விட்டேன். இன்னும் ஐந்தாறு நிமிடங்களில் அவள் மூச்சுத் திணறி செத்து விடுவாள் என்று மனதுக்குள் ஒரு வில்லத்தனமான சிரிப்பு சிரித்துக் கொண்டேன்.



புகை கார் முழுவதும் பரவ காருக்கு ஆக்சிலேட்டர் இயங்கிக் கொண்டிருந்தது. புகை காருக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் நிரம்பிக் கொண்டிருக்கும் என்று முழுமையாய் நம்பினேன். ரப்பர் பைப்பை இணைத்தப் பின் புகை வருவது குறித்து எனக்குத் தெரியவில்லை. கண்ணாடி வழி காருக்குள் பார்க்கவும் முடியாது. ஆனால் என் திட்டம் புகையாய் பொசுங்கிப் போயிருக்கலாம் என்பது மட்டும் உணர முடிந்தது.



நான் காரிலிருந்து இறங்கிய மாத்திரத்தில் அவள் வீணாக இயங்கிக் கொண்டிருக்கும் காரை ஆஃப் செய்ய காரின் கீயை உருவி காரை நிறுத்தியிருக்கிறாள். காரின் கீ உருவப் பட்டு இஞ்ஜின் ஆஃப் ஆனதால் காருக்குள் புகை நிரம்பியிருக்கவில்லை.



என் திட்டம் புஷ்வானமாகி விட்டது என்பது உறுதியாகிப் போனாது. காரின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனேன். கண்களில் பயத்தை நிரப்பிக் கொண்டு என்னைக் கட்டிக் கொண்டாள். காருக்குள் கார்பன் வாசனை தூக்கலாக இருந்தது.



காரை அப்படியே விட்டுப் போனதாலும் காருக்குள் புகை கசிந்த காரணத்தாலும் அவள் செய்வதரியாது காரின் சாவியை எடுத்ததாக பயத்துடன் சொல்லிக் கொண்டிருந்தாள். இனிமேல் எப்பொழுதும் இப்படி தனியாக விட்டுப் போக வேண்டாமென இருக்கமாக கட்டிக் கொண்டு சொன்னாள்.



கார் கண்ணாடிகளை இறக்கி விட்டேன். உள்ளே மாலை நேர மெல்லிய காற்று நிரம்பிக் கொண்டிருந்தது. அவளும் நானும் ஆழமாக சுவாசித்துக் கொண்டோம்.



கருத்துகள் இல்லை: