05 மார்ச், 2012

அவளைக் கொல்ல பத்து வழிகள்-மதியழகன் சுப்பையா 2

இரண்டு




மும்பையில் தற்சமயம் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன. காலியிடங்கள், சாக்கடைகள், பழையக் கட்டிடங்கள், குடிசை வீடுகள் என எல்லாப் பகுதிகளும் அடுக்கு மாடிக் கட்டிடங்களாய் மாறிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான கட்டிடங்களை கட்டி முடிப்பதற்குள் பல உயிர் பலிகள் ஆகி விடுவது சகஜமாகிப் போனது. அது கட்டிடப் பணியின் போது ஏற்படும் விபத்துக்களால் மட்டுமல்ல, நில அனுமதி, அபகரிப்பு என பல ஆரம்பகட்ட பணிகளின் போது இந்த சாவுகள் சகஜமாகி விட்டன.





எனது வீட்டிற்கு எதிர்த்தார்போல் பிரபல பில்டர், பிள்ளைகள் விளையாட இருந்த மைதானத்தை வளைத்துப் போட்டு கட்டிட வேலையை ஆரம்பித்து விட்டிருந்தான். கடந்த ஆறு மாத காலமாக எப்பொழுதும் மண்ணும் சிமெண்டும் காற்றில் கலந்து சுவாசக் காற்றோடு கொஞ்சம் மண்ணையும் சிமெண்டையும் நாங்கள் சுவாசித்துக் கொண்டிருந்தோம்.



தினமும் குளித்தபின் மூக்கை துடைத்தால் ஒரு கண் மை டப்பாவை நிரப்பும் அளவுக்கும் மண் - சிமெண்ட் கலவையை மூக்கிலிருந்து துடைத்து எடுக்க முடியும். எனது அடுத்த திட்டம் இங்குதான். உயர்ந்த கட்டிடங்களுக்காக எழுப்பப் பட்டிருக்கும் எதாவதொரு தூண்களுக்குள் ஒன்றில் அவளை மயக்கமடையச் செய்து தள்ளி விட்டு சிமெண்ட் போட்டு விடுவது என்று.



திட்டத்தின் படி என் வீட்டார் இல்லாத ஒரு பொழுதில் அவளை வீட்டுக்கு அழைத்தேன். என் அழைப்பைத்தான் அவள் தட்டுவதில்லையே. வாழ்க்கை காலத்தால் ஆனது என்பதால் கிடைக்கும் பெரும்பாலான வாய்ப்புகளை அவள் தவற விடுவதில்லை. அவளிடம் பிடித்த குணம் இதுதான். அதே சமயம் பிடிக்காத குணமும் இதுவே. அவளுக்கு கிடைக்கும் அத்தனை அழைப்புகளையும் அவள் எப்படியாவது சமாளித்து அட்டண்ட் செய்து விடுவது எனக்கு கடும் துன்பத்தைக் கொடுத்தது.



அன்றும் வழக்கம் போல் அழகு தேவதையாக வந்திருந்தாள். அலுவகலத்திலேயே மெல்லிய அலங்காரமும் உதடுகள் மின்னச் சாயமும் மெல்லிய வாசனையுடனும் வந்தாள். கதவைத் திறந்ததும் வீட்டில் யாருமில்லாததை புரிந்து கொண்ட அவள் என் மேல் படர்ந்தாள். அப்படியே சில நிமிடங்கள் பேசாமல் இருந்தோம்.



எனக்கும் மனம் மாறி விடும் போல் இருந்தது. ஆனால் நான் எனது கற்பனையை கிண்டி விட்டேன். இதற்கு முன் நடந்ததைப் பற்றியெல்லாம் அசை போட்டேன். இதோ மூளையின் ஏதோ ஒரு பகுதியில் முடங்கிக் கொண்டிருந்த கொலை வெறி அவிழ்ந்து கொண்டது. ஆயத்தமாகி விட்டேன்.



இனிப்பு பண்டங்கள் என்றால் அவளுக்கும் என்னைப் போல் அலாதி பிரியம். மயக்க மருந்து கலந்து வைத்திருந்த கேரட் அல்வாவை கொடுத்தேன். பெண்களுக்கு அல்வா என்றால் என்ன ப்ரியமோ தெரியவில்லை. கோழி விழுங்குவதைப் போல் விழுங்கினாள். எனக்கும் ஊட்ட முயன்றவளைத் தடுத்து தப்பித்தேன்.



வீட்டிற்கு எதிரே நடக்கும் கட்டுமானப் பணியிடத்தை நோட்டமிட்டேன். வேலை முடித்து ஆட்கள் கிளம்பி விட்டிருந்தார்கள். நடமாட்டமும் குறைந்திருந்தது. அவள் முழுவதும் மயங்கிப் போகுமுன் கட்டித்தின் முதல் தளத்துக்கு கூட்டிப் போக முடிவு செய்தேன். அவளும் இசைந்தாள்.



என் வீட்டுக்கு வருவது அவளுக்கு பெரும் பிரச்சனை. அவள் அண்ணன்களும் மாமாக்களும் இங்கு உலவுவதுண்டு. ஆனால் ஒரு முறை எங்கள் காம்பவுண்டுக்குள் நுழைந்து விட்டால் நிம்மதியாகி விடுவாள். யாருக்கும் தெரியாமல் கடந்த ஐந்து ஆண்டுகளாக அவள் என்னை வீட்டில் வைத்து சந்தித்துக் கொண்டிருப்பது வியப்பானதுதான். எனக்கு இதுவும் பிரச்சனையே. என் காதலுக்கு சாட்சியே இல்லாமல் இருந்தது. ஆனால் இன்று அதுவே சாதகமாகவும் ஆகிப் போனது.



இப்பொழுது உடம்பிலிருந்த பய அதிர்வுகள் அடங்கிப் போயிருந்தன. இருள் படர்ந்த கட்டிடத்தின் முதல் தளத்துக்கு அவளை அழைத்துப் போனேன். எதையெதையோ காட்டிக் கொண்டிருந்த என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு முழுமையான மயக்கம் வரக் காத்திருந்தேன்.



ஒரு மாதிரி வயிற்றில் பிசைவது போல் உணர்வதாகச் சொன்னால். முகம் முழுவதும் வியர்த்து விட்டிருந்தது. திடிரென வாந்தி எடுத்தாள். அவள் கால்கள் தடுமாறின அவளாகவே கீழே இறங்கிக் கொண்டிருந்தாள். நான் அவளை எப்படியாவது முதல் தளத்தில் மரச் சட்டங்கள் அடித்து தயார் நிலையில் இருக்கும் பெரிய தூணுக்குள் தள்ளிவிட கடுமையாய் போராடினேன். நான் அவளைக் கட்டிப் பிடிக்க முயல்வதாகவும், தூணில் சாய்த்துக் கொண்டு சல்லாபம்செய்ய இருப்பதாகவும் அவள் நினைத்திருக்கலாம். மயக்க மருந்து அவளுக்கு இன்னும் தெம்பை கொடுத்ததோ என்னவோ. வேண்டாம்.. போகலாமென கட்டிடத்தின் வாசல் வரை வந்து மயங்கிப் போனாள்.



எதிரே இருந்த இரண்டு பெண்கள் ஓடி வந்து அவளுக்கு உதவினார்கள். என் வீட்டிற்குள் தூக்கிப் போயாயிற்று. அருகிலிருந்த டாக்டர் ஷர்மா வந்து விட்டார். வாந்தி தான் நல்ல மருந்தாக செயல் பட்டிருக்கிறது, பயப்பட ஒன்றுமில்லை புட் பாய்சன் என்று ஊசியும் மருந்து கொடுத்து விட்டு அரை மணி நேரத்தில் சரியாகி விடுமென்றார். இருநூறு ரூபாயுடன் என்னைப் பார்த்து கண்ணை சிமிட்டி விட்டு போய்விட்டார்.



ஒரு மணி நேரத்தில் எழுந்தும் விட்டாள். அவள் தோழியை அழைத்து அவளுடன் வீட்டிற்கு கிளம்பினாள். ஆழமான ஒரு முத்தம் கொடுத்தாள். அரை மயக்கத்தில் வீட்டுக்கு கிளம்பினாள்.



கட்டிடத்தின் அந்த நிரப்பப் படாத தூணையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.



கருத்துகள் இல்லை: