05 மார்ச், 2012

அவளைக் கொல்ல பத்து வழிகள்-மதியழகன் சுப்பையா 5

ஐந்து




விரைவாக கார் ஓட்டும் பந்தையத்தில் ஜெயிப்பதற்கு, திறமையாக கார் ஒட்டும் தகுதி மட்டும் இருந்தால் போதாது கோளாறு செய்யாத காரும் அவசியம். அதேப்போல் கொலைத்திட்டத்திற்கும் சரியான கொலைக் கருவியை தேர்வது மிக அவசியமாகிறது.





துப்பாக்கி மிகச் சிறப்பான கருவியாக இருக்குமெனப் பட்டது. யாரிடம் போய் துப்பாகி வாங்கிக் கொள்வது. பீட்டர், ஆமாம் அவன் தான் சரியான ஆள். கோவான்ஸ் காரன். எவர்ஸைன் நகர் பகுதியில் அவன் பெயரைக் கேட்டால் பீதி. பீட்டரைப் பிடித்து துப்பாக்கி வேண்டுமென்றேன். விலைக்கு வேண்டாம் வாடகைக்கு கிடைத்தால் போதுமென்றேன். விஷயம் கேட்டான். ஒன்றுமில்லை பயன் படுத்திப் பார்க்கத்தான் என்று சமாளித்தேன்.



அவன் பெரிதாய் கேள்விகள் கேட்கவில்லை. மறுநாள் தருவதாக சொல்லி விட்டு மொபைலில் பேசியபடி பேண்டிலிருந்து பிதுங்கி வெளியே தெரியும் புட்டத்தைக் காட்டிக் கொண்டு போய் விட்டான். அவன் ஏன் எதற்கு என்று கேட்காதது வியப்பாக இருந்தது.



அவளைச் சந்திக்க அழைப்பு விடுதாயிற்று. எந்த தடையுமில்லாமல் வருவதாக வாக்களித்தாள். ஏன் வரமாட்டாள். வந்துதான் ஆக வேண்டும். அவள் அழைத்த போதெல்லாம் நான் ஓடியிருக்கிறேனே.



துப்பாக்கியை ஒரு துணியில் பொதிந்து கொடுத்தான். ‘ புல்லட்ஸ்’ என்று கேட்டேன். லோட் செய்திருப்பதாக சொன்னான். ஆகா, எவ்வளவு அற்புதமான நண்பன் கிளம்பினேன். ‘ ஜாக்கிரதை/ எஞ்ஜாய்’ இந்த இரண்டு வார்த்தைகளையும் சிறிய இடைவெளியில் சொல்லி விட்டு மொபைலில் பேசியபடி பிதுங்கிய புட்டத்துடன் போய் விட்டான்.



துப்பாக்கி பயன் படுத்த சரியான இடம் போரிவலி நேஷனல் பார்க். அடர்த்தியான காட்டுப் பகுதி. பல கொலை செய்திகளை பத்திரிக்கைகளில் வாசித்திருக்கிறேன். மும்பையில் பரந்த பசுமைப் பகுதி இது. எங்கும் குளுமையும், பறவைகளின் கீறிச்சிடும் சத்தங்களும் மட்டுமே இருந்தன.



சில முத்தங்களையும் தழுவல்களையும் பரிமாறிக் கொண்ட பின் அவளை நான் ஷுட் செய்யப் போவதாச் சொன்னேன். ‘ அப்படின்னா.. பண்ணு’ என்று மூன்றடி விலகி நின்று இடுக்கில் கைகளை ஊன்றி போஸ் கொடுத்தாள். குறி தப்பி விடக் கூடாது என்று அருகில் நின்றபடியே துப்பாக்கியை எடுத்து அவளை நோக்கிப் பிடித்தேன்.



‘’ ஹேய், என்ன இது? மொபைல் போன்ல ஷுட் பண்ணுவன்னு பார்த்த துப்பாக்கிய எடுக்கிற?’ என்றாள். இடுப்பிலிருந்து கைகளை அகலமாகப் பரப்பி சாவதற்கு சவுகரியமாக நின்றாள். ‘ஹா..ஹா’ வென வில்லன் சிரிப்பு சிரித்து விட்டு ‘டிஸ்கியாவ்’ என்று சுட்டேன். ‘’ஆ..ஆ..ஆ’’ என்று கத்தி கொண்டு வயிற்றை இரண்டு கைகளாலும் பொத்திக் கொண்டு கத்தினாள்.



’சக்ஸஸ்’ என்று வெற்றிக் களிப்பு கொண்டேன். ஆனால் மார்பை நோக்கி வைத்த குறி வயிற்றில் பாய்ந்தது கொஞ்சம் அவமானமாக இருந்தது. ‘ ஒரு தோட்டாத்தான் இருந்துச்சா?’ என்று கேட்டபடி மீண்டும் கைகளை அகட்டி நின்றாள். ‘ டிஸ்கியாவ்... டிஸ்கியாவ்’’ பெரிய சத்தம் மட்டுமே வந்து கொண்டிருந்தது. தோட்டாக்கள் வெடித்தன. ஆனால் பாயவில்லை. சதையைக் கிழித்துக் கொண்டு அவளைக் கொல்ல வில்லை. தோட்ட வெடித்த சத்தம் கேட்கு வெகு தூரத்தில் கூட ஒரு பறவைகள் படபடவென பறந்தோடுவதை உணர முடிந்தது.



’குடு நான் சுடுறேன்’ என்று வாங்கி வானத்தை நோக்கி சுட்டாள். பின் என்னை நோக்கி. நானும் செத்துப் போவது போல் நடித்தேன். நிஜமாகவே செத்துப் போய் விடலாம் போல் இருந்தது. பீட்டர் சொதப்பி விட்டான். அவள் சாகாதது கடுப்பாக இருந்தது. அவள் துப்பாக்கியை அப்படி இப்படி பிடித்து போஸ் கொடுத்துக் கொண்டிருந்தாள். சினிமா வில்லன்களைப் போல் அபிநயித்துக் கொண்டிருந்தாள்.



அன்று மாலையே பீட்டரை சந்தித்தேன். கடுமையான கோபத்துடன் ‘இதில் இருந்த தோட்டாக்கள் போலியானதா?’ என்று கேட்ட கேள்விக்கு. ஆமாம். ரொம்ப கஷ்டப் பட்டு அதனை வாங்கி வந்தாகச் சொன்னான். எஞ்ஜாய் பண்ணினாயா என்று கேட்டான். துப்பாக்கியை வாங்கி இன்னொருவனிடம் கொடுத்து பத்திரப் படுத்த சொல்லி விட்டு மொபைலில் பேசியபடி பிதுங்கிய புட்டம் காட்டிச் சென்றும் விட்டான்.



போலி குண்டுகளை ஏன் கொடுத்திருப்பான் என்று விளங்கவில்லை. அவளைக் கொலை செய்யக் கிடைத்த நல்ல சந்தர்ப்பம் நழுவிப் போனது குறித்து வருத்தமாக இருந்தது. தொலைபேசியில் ‘மிஸ் யூ’ என்ற குறுஞ்செய்திக்கு.. ‘ ஐ ரியலி மிஸ்ட்’ என்று ரிப்ளை எழுதினேன்.



கருத்துகள் இல்லை: