05 மார்ச், 2012

அவளைக் கொல்ல பத்து வழிகள்-மதியழகன் சுப்பையா 4

நான்கு




கத்தியால் குத்திக் கொலை செய்தல் பாரம்பரிய கொலை யுக்திகளில் ஒன்றாகும். ஆனால் இது மிக எளிய முறை. மேலும் இது ஆபத்தானதும் கூட. அதாவது கொலை செய்பவருக்கு ஆபத்தானது. காரணம் கத்தி ஒரு தடையமாகி விடக் கூடும். கொல்லப் பட்டவர் குத்திக் கொல்லப் பட்டால் காவல் துறையினருக்கு கொலையாளியைக் கண்டு பிடிப்பதில் அத்தனை சிரமம் இருக்காது.



கத்தியால் ஒருவரின் உடல் பாகத்தைக் கிழித்து ரத்தமிழக்கச் செய்து கொல்வது கொடூரமானதும் கூட. அதுவும் வயிறு இதயம் போன்ற பகுதியில் குத்தினால் மரணம் சம்பவிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்ளாது. கத்தியை ஆழமாக குத்தி பின் திருகி இழுத்தால் உள்ளுருப்புகள் அறுந்து காப்பாற்ற முடியாது என்றும் படித்திருக்கிறேன். ஆனால் வேறு பாகங்களில் குத்தினால் கொல்லப் படுபவர் தப்பித்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. கழுத்தை அறுத்து விடலாம். மரணம் நிச்சயம் ஆனால் அதற்கு கொலை அனுபவம் அவசியம்.



இவள் என் காதலி. அவளது கழுத்தை எத்தனை முறை முகர்ந்திருப்பேன். இன்னும் அவளது கழுத்தின் பிரத்யேக வாசனை என் மூளையின் முடிச்சுகளில் சுருண்டு கிடக்கிறது. மார்பு பகுதி பற்றி என்ன சொல்ல. அது சொர்க்கத்தின் வாசல். வயிற்றுப் பகுதியில் ஒரு பூனையைப் போல் எத்தனை நாள் என் தலை வைத்து இதம் கண்டிருக்கிறேன்.



அவள் சருமம் பற்றி சொல்லச் சொல்லித் தீராது. இப்படியிருக்கையில் கத்தி போன்ற கூர்மையான ஆயுதத்தால் எப்படி கொல்ல முடியும். அதுவும் இதற்கு முன்னான முயற்சிகளில் நான் அவளைக் கொலை செய்யப் போவது அவளுக்குத் தெரியாது. நான் தோல்வி கண்டது குறித்து அவளுக்கு கிஞ்சித்தும் அறிவில்லை. ஆனால் இந்தத் திட்டத்தில் தவறினால் பின் அவள் சுதாரித்துக் கொள்ளக் கூடும். எனினும் முயற்சித்துப் பார்த்து விடுவது என்ற தீர்மானத்துக்கு வந்து விட்டேன்.



மும்பையின் புறநகர்ப் பகுதியில் வைத்து அவளைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ள காரணத்தால் அங்கிருந்து சுமார் இரண்டு மணி நேர பயணத் தொலைவிலுள்ள நவிமும்பைக்குச் சென்று அங்குள்ள ஹைபர் சிட்டி மாலிலிருந்து கூர்மையான கத்தி ஒன்றை வாங்கினேன். கத்தியில் கடுமையான கூர்மை இருந்த போதிலும் மீண்டும் அதனை சைக்கிளில் வந்த கத்தி தீட்டுபவனிடம் கொடுத்து இன்னும் கூர்மையாக்கி கொண்டேன். கத்தியின் கூர்மை பகுதி கொஞ்சம் இளைத்துப் போய் கடுமையான கூர்மை பெற்றிருந்தது. இதனை கத்தி என்று தமிழில் சொல்லிக் கொண்டாலும் இது பிளேடு வகையைச் சேர்ந்தது. அதாவது இதில் அதிகம் அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. சவரம் செய்யும் பிளேடுக்கு நிகரான கூர்மையைக் கொண்டது.



கத்தியில் கைரேகைப் படக் கூடாது என்பதற்காக அதன் பிடியில் பிளாஸ்டிக் காகிதம் சுத்தினேன். அதனை மறைவாக படுக்கையில் மறைத்து வைத்தேன். ஆமாம் இந்த முறையும் என் வீட்டார் இல்லாத ஒரு நல்ல வாய்ப்பு.



வழக்கம்போல் வந்தாள். நான் வழக்கத்திற்கு மாறாக அவளை தொட்டுப் பேசினேன். சற்றே வியந்தாள். அதிகமாகவே பிகு செய்தாள். அவளாகத் துவங்கியிருந்தால் இப்படி செய்திருக்க மாட்டாள். எல்லாப் பெண்களும் இப்படித்தானாம். நண்பர்கள் அனுபவம் பகிர்ந்திருக்கிறார்கள். ஒரு முத்தம் கொடுக்கக் கூட நிறைய பிரயத்தனப் பட வேண்டியதிருக்கிறது.



அப்படியிப்படி அவளை மூடுக்கு கொண்டு வந்து விட்டேன். இடுப்போடு அணைத்தபடி படுக்கைக்கு கொண்டு சென்றேன். உடம்பெல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தது. இன்னும் சில நொடிகளில் அவள் பிணமாகி விடக் கூடும். அவள் உடலை அப்புறப் படுத்துவது குறித்து பெரிதாய் யோசித்திருக்கவில்லை. ஆனால் அவளைக் கொன்று விடும்பட்சத்தில் இதற்கெல்லாம் வழி கிடைக்காமலா போய் விடும் என்று சமாதானமானேன்.



நாற்பத்தாறு கிலோ எடை முழுவதும் காதலாகி என்னைப் பார்த்தாள். அத்தனைக் காதலும் கண்களில் தேக்கி எனக்குக் காண்பித்தாள். அங்கே வெறும் காதல் மட்டுமே இருந்தது. இன்றையத் தழுவலில் அவள் கண்டிப்பாய் காம உணர்வை எட்டவில்லை. எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. என் உடலில் காதலுமில்லாமல் காமமுமில்லாமல் கொலைவெறியும் அச்செயலுக்கான தயக்கமும் தான் இருந்தது. அவள் உடலையும் உணர்வையும் நான் புரிந்து கொண்டது போல் என்னையும் அவள் புரிந்து கொண்டிருப்பாலோ என்ற ஐயம் வேறு.



அவளது மென்மையான தொடுகை உடல், மனம் இரண்டிருலும் மாற்றத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தது. முழுமையான மாற்றம் கண்டுவிடும் முன் அவள் கதையை முடித்து விட வேண்டும்.



அவள் மேல் படர்ந்த நிலையில் படுக்கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை வெளியில் எடுக்க முயன்றேன். கத்தியின் கூர்மையானப் பகுதி என் நான்கு விரல்களையும் பதம் பார்த்தது. மேலும் கத்தியில் கைபட்ட இடமெல்லாம் குருதி கொட்டிக் கொண்டிருந்தது. ‘ஆ’ வென்ற அலரலுடன் துள்ளினேன். கையிலிருந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது.



பதற்றத்துடன் படுக்கையிலிருந்து எழுந்தவள் சத்தமிட்டு அழுதாள். ’எப்படியாச்சு? எங்க கைய வச்ச?’ என்ற கேள்விகளைக் கேட்டுக் கொண்டே தன் இடுப்புக்குக் கீழேப் பார்த்தாள். பின் என் கைகளை அழுந்த பிடித்துக் கொண்டு முதலுதவிக்காக பொருட்களைத் தேடினாள். படுக்கைக்கு அடியிலிருந்து கவனமாக கத்தியை எடுத்தாள். ‘ இத யாரு இங்க வச்சது?’ ‘ அதையேன் நீ இந்த நேரத்தில எடுத்த?’ என்பது போன்ற விடை வேண்டா கேள்விகளைக் கேட்டபடி கத்தியை கவனமாக மேசையின் மேல் வைத்தாள். அவள் குரல் மெலிந்து போயிருந்தது. எனக்கு உண்டான காயத்திற்காய் அவள் அழுது கொண்டிருந்தாள்.



அருகிலிருந்த டாக்டர் ஷர்மாவிடம் கூட்டிப் போனாள். தையல் போடும் அளவுக்கு காயம் பெரியதாயும் ஆழமாயும் இல்லையென மருந்திட்டு கட்டுப் போட்டு அனுப்பி வைத்தார். காயம் பட்ட கையை குழந்தை போல் ஏந்திக் கொண்டு தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். கண்களிலிருந்து சூடான கண்ணீர்த் தாரை வழிந்து கொண்டிருந்தது.



என் உடலும் காதலால் பெருகி அவளை அனைத்துக் கொண்டது. தனது கூர்மை முழுமையாய் பயன் படுத்த படாத நிலையில் வெறித்துக் கொண்டிருந்தது மேசையின் மேல் கத்தி.



கருத்துகள் இல்லை: