05 மார்ச், 2012

அவளைக் கொல்ல பத்து வழிகள்-மதியழகன் சுப்பையா

அவளைக் கொல்ல பத்து வழிகள்


(கண்டிப்பாய் யாரும் பின்பற்றக் கூடாதவைகள்)



பூஜ்யம்



ஒரு குண்டூசிக்கு உயிரை ஊட்ட முடிவதில்லை, ஆனால் ஒரு எறும்பை கொன்று விட முடிகிறது. ஒரு பசுவை ஒரு ஆட்டை ஏன் ஒரு மனிதனைக் கூட கொன்று விட முடியும். பிற உயிர்களைக் கொல்லும் போதும் அவைகளைக் கொன்ற பின்னும் உண்டாகும் பதட்டத்தை, தவிப்பை விடவும் ஒரு மனிதனைக் கொல்லும் போது பதட்டமும் தவிப்பும் குற்றவுணர்வும் மிகுதியாகி விடுகிறது.



உயிர் என்றால் எல்லாம் உயிர் தானே. எறும்போ கொசுவோ அல்லது இவ்வகை பூச்சிகளோ பார்க்க உருவத்தில் சிறியதாக இருப்பினும் அதிலுள்ள உயிர் ஒன்றுதானே. உயிரை பரித்தப்பின் எந்தவொரு அறிவியலாலும் மரித்துப் போனவைகளை உயிர்ப்பிக்க முடியாது இல்லையா?. ஒரு உயிரியின் பாகங்களை செயலிழக்கச் செய்யலாம். செயற்கை பாகம் கொண்டு அதனை சீர் படுத்தியும் விடலாம், ஆனால் உயிருக்கு இந்த சீர்படுத்தும் சூத்திரங்கள் எந்த ஆய்விலும் கண்டு பிடிக்க முடியவில்லை என்றே நினைக்கிறேன்.



நானொரு கொலை செய்யத் திட்டமிட்டிருக்கிறேன். எறும்பை அல்ல கொசுவை அல்ல பூச்சியை அல்ல விலங்கை அல்ல. ஒரு மனுஷியை. நான் காதலித்த, என்னை காதலிப்பதாய் சொன்ன ஒரு தேவதையை. அவளை தேவதை என்று குறிப்பிட்டுள்ளதால் அவள் கொலை செய்ய முடியாதவளாகி விடப் போவதில்லை. தேவதைகளும் தேவைப் பட்டால் கொல்லப் படலாம். தேவதைகளை முழுமையாகக் கொல்ல முடியாது என்று நினைக்க வேண்டாம். தேவதை என்ற நாமகரணம் நான் சூட்டியதுதான். அவளிடம் தேவதைக்கான லட்சணங்கள் தென்பட்டதால் அப்படி அழைத்திருக்கிறேன். ஆனால் அவளைக் கொள்வதென முடிவாகி விட்டது. இனி யார் தடுப்பினும் முடிவில் மாற்றமில்லை. அவள் கொல்லப் படும் முறையை வேண்டுமானால் மாற்றிக் கொள்ளக் கூடும். கொடூரத்தை வேண்டுமானால் குறைத்துக் கொள்ள முடியும். கொலை செய்யும் எண்ணத்தை மாற்றிக் கொள்ள முடியாது.



நான் செய்திருக்கும் கொலைத் திட்டங்களில் எதாவது ஒன்றின் மூலம் அவளைக் கொன்று விட முடிவு செய்துள்ளேன். என்னுடன் உரையாடிய பல பொழுதுகளில் அவள் செத்துவிட்டதாகச் சொல்லி என்னைச் சாகடித்திருக்கிறாள். இனி அவளை நிஜமாகவே கொல்லப் போகிறேன். அவளுக்கு சாவின் முகத்தைக் காட்டி சாகடிக்கப் போகிறேன்.



நமக்கு விருப்பமானவர்களைக் கொல்ல நிறைய சிரமப் பட வேண்டியதிருக்கும் என்று நினைக்கிறேன். பலப்பல திட்டங்களை தீட்ட வேண்டிய நிலையும் வரலாம். காரணம் கொலைத் திட்டத்தை நிறைவேற்றுகையில் அன்பு மிகுதியால் நாமே கூட அவர்களைக் காப்பாற்றி விடக் கூடும். அதனால் ஒன்றல்ல இரண்டல்ல பல திட்டங்களும் முயற்சிகளும் செய்யதாக வேண்டும். திட்டங்களைத் தீட்டி விட்டேன். இனி செயல் படுத்த வேண்டியதுதான்.



பத்து திட்டங்கள் வைத்துள்ளேன். ஒன்றில் தப்பினால் மற்றொன்று. மற்றொன்றில் தப்பினால் பிரிதொன்று. எப்படியும் கொன்று விடுவேன். ஒரு திட்டத்தை ஒரு முறைக்கு மேல் பயன் படுத்த மாட்டேன். தோற்றுப் போன கொலைத் திட்டம் அவளுக்கு புரிந்து விடக் கூடும். எனவே தான் இத்தனை மாற்றுத் திட்டங்கள். பாரம்பரிய கொலைத் திட்டங்களைக் கொண்டுதான் கொல்லப் போகிறேன். நானும் பாரம்பரியமானவன் தானே. நவீன கொலைத்திட்டங்கள் குறித்து தெரியாது. நவீனம் குறித்து பெரிய புரிதலும் இல்லை.



அவளைக் கொல்லும் திட்டங்களை நாவல்களிலிருந்தும், திரைப்படங்களிலிருந்து, பத்திரிக்கை செய்திகளிலிருந்தும், நண்பர்களிடமிருந்தும் கேட்டு அதற்கான ஆயத்தங்களைச் செய்துள்ளேன். எனது திட்டங்களில் தோல்வியடைந்தால் நீங்கள் எனக்கு உதவலாம். கண்டிப்பாய் உங்கள் கணக்கில் பாவத்தின் சிறிதொரு பாகமும் சேராது. என்னை நடை பிணமாக்கி விட்ட அவளைக் கொல்வது, என் அறிவிற்கு சரியெனவே படுகிறது. என்னை தவறாக நினைப்பவர்கள், எனக்கு அறிவுரை சொல்ல துடிப்பவர்கள். கண்டிப்பாய் இதற்குமேல் வாசிக்க வேண்டாம்.



அவள் உயிரோடு இருந்தால் நான் தினமும் அவளைப் பேசிப் பேசியே கொன்று விடக் கூடும். தினம் என் வார்த்தைகளால் காயப் பட்டு அவள் தவனை முறையில் சாவதை விட என் கொலைத் திட்டங்களில் ஒன்றின் மூலம் செத்துப் போவது நல்லதெனப் படுகிறது. பல அவலங்களை கண்டு அனுபவித்த நான் இப்படிச் செய்வதை ஆகச் சரியென நினைக்கிறேன். எனக்கு யாரும் உதவ வேண்டாம். அதே நேரம் அவளை யாரும் காப்பாற்ற நினைக்க வேண்டாம். அவரவர் இஷ்ட தெய்வங்களை வேண்டிக் கொண்டு அவளைக் காப்பாற்ற பரிந்துரைக்க வேண்டாம். நான் கொலைக் கடவுளிடம் அனுமதியும் பெற்றாகி விட்டது.



அதிர்ந்து பேசுவதைக் கூட தவிர்க்கும் நான் கொலை செய்யப் போவது என்னைத் தெரிந்த சகலருக்கும் வியப்பாகவே இருக்கும். வியந்து விட்டுப் போகட்டும். என் கவலையை, கஷ்டத்தைப் பகிர்ந்து கொள்ள யார் வந்தார்கள். ஒருவருமில்லையே. இப்படியானவர்களைப் பற்றி எனக்கும் அக்கரையில்லை. இப்படி அற்பக் காரணங்களுக்கு கொலைதான் முடிவா? என்று மீண்டும் அறிவுரைக்கு தயாராக வேண்டாம். நான் கேட்கப் போவதில்லை.



நான் கொலை செய்யும் அளவுக்கு கொடூரமாக மாறியதற்கான காரணங்களை வேண்டுமானால் கண்டுபிடித்து புரிந்து கொள்ள முயலுங்கள். கண்டிப்பாய் சரியெனவேப் படும். நடக்கப் போகும் கொலையை முன்கூட்டியே அறிவித்து விட்டு கொல்லும் சாமர்த்திய சாலி என எனக்கு புகழாரம் வேண்டாம். நான் கொலை செய்யப் போகிறேன். நீங்கள் சாட்சியாக இருங்கள். அவ்வளவுதான்.



கருத்துகள் இல்லை: