05 ஜூன், 2011

முதல் உலகப் போர்

முதல் உலகப்போர் என்பது உலகம் தழுவிய அளவில் இடம்பெற்ற ஒரு போர். எனினும் இது பெரும்பாலும் ஐரோப்பாவிலேயே நடைபெற்றது. இப் போரில் நேச நாடுகள் என்று அழைக்கப்பட்ட பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் மைய நாடுகள் என்று அழைக்கப்பட்ட ஆஸ்திரியா, ஹங்கேரி, ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளும் எதிர்ப் பக்கங்களில் நின்று போரிட்டன. இதன் அளவும், செறிவும் முன்னெப்பொழுதும் இல்லாத அளவு பெரிதாக இருந்தது. பெருமளவினர் சண்டையில் ஈடுபட்டிருந்ததோடு பெரும் தொகையில் இழப்புகளும் ஏற்பட்டன. 60 மில்லியன் ஐரோப்பியர்களை உள்ளடக்கிய சுமார் 70 மில்லியன் போர்வீரர்கள் சண்டையில் ஈடுபட்டிருந்தனர். புதிய தொழில்நுட்பங்களின் வழிவந்த இயந்திரத் துப்பாக்கிகள், உயர்தரமான கனரகப் பீரங்கிகள், மேம்பட்ட போக்குவரத்து, நச்சு வளிமம், வான்வழிப் போர்முறை, நீர்மூழ்கிகள் என்பன போரின் தாக்கத்தைப் பெரிதும் அதிகப்படுத்தின. போரில் 40 மில்லியன் பேருக்குக் காயங்களும் உயிரிழப்புக்களும் ஏற்பட்டன. இதில் குடிமக்களும், போராளிகளுமாகச் சுமார் 20 மில்லியன் பேர் இறந்தனர். போரினால் ஏற்பட்ட, முற்றுகைகள், புரட்சிகள், இன ஒழிப்பு, நோய்த் தொற்றுக்கள் என்பன மக்களுடைய துன்பங்களை மேலும் அதிகப்படுத்தின. இப் போர் 1914ம் ஆண்டு முதல் 1918ம் ஆண்டு வரை நடைபெற்றது.
இப் போரினால், 20 ஆம் நூற்றாண்டின் எஞ்சிய காலம் முழுதும், அரசியலிலும், பண்ணுறவாண்மை தொடர்பிலும் பெரும் விளைவுகள் ஏற்பட்டன. போரின் விளைவு காரணமாக, ஆஸ்திரோ-ஹங்கேரியப் பேரரசு, ரஷ்யப் பேரரசு, ஓட்டோமான் போரரசு என்பன சிதைவுற்றுத் துண்டுகள் ஆகின. செருமானியப் பேரரசு வீழ்த்தப்பட்டது. அது பெருமளவிலான நிலப்பகுதிகளை இழந்தது. இவ் விளைவுகள் காரணமாக ஐரோப்பாவிலும், மையக் கிழக்கிலும் நாடுகளின் எல்லைகள் மாற்றம் அடைந்தன. பழைய முடியாட்சிகளின் இடத்தில் பல பொதுவுடமை அரசுகளும், குடியரசுகளும் உருவாயின. மீண்டும் இவ்வாறான போர் ஏற்படாமல் தடுக்கும் நோக்கத்துடன், உலக வரலாற்றில் முதல் முறையாகப் பன்னாட்டு அமைப்பான நாடுகளின் சங்கம் (League of Nations) ஒன்று உருவானது. போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களும், புதிதாக உருவான நாடுகளின் உறுதியற்ற தன்மைகளும், 20 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஒரு உலகப் போர் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களாக அமைந்தன.
1871 ஆம் ஆண்டில் ஜேர்மனி ஒருங்கிணைக்கப்பட்டதும், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பாவின் வல்லரசுகளிடையே இக்காட்டான அதிகாரச் சமநிலை நிலவியதும் இப் போர் உருவாவதற்கான அடிப்படைக் காரணங்களுள் அடங்கும். இவற்றுடன், 19 ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியிடம் நிலப்பகுதிகளை இழந்ததில் பிரான்சுக்கு ஏற்பட்ட எதிர்ப்பு உணர்வு; ஜேர்மனிக்கும், பிரித்தானியாவுக்கும் இடையே பொருளியல், படைத்துறை, குடியேற்றங்கள் தொடர்பான போட்டிகள்; பால்கன் பகுதிகளில் ஆஸ்திரோ-ஹங்கேரிய ஆட்சி தொடர்ச்சியான உறுதியற்ற நிலையில் இருந்தமை என்பனவும் இப் போருக்கான மேலதிக காரணங்களாகும்.

ஆஸ்திரியா நாட்டுப் பட்டத்து இளவரசரான பிரான்சிஸ் பெர்டினாத்தும், அவருடைய மனைவியும் காரில் சென்ற போது (1914 ஜுன் 28) சுட்டுக் கொல்லப்பட்டது போர் தொடங்குவதற்கான உடனடிக் காரணம் ஆயிற்று. சுட்டவன், காவ்ரீலோ பிரின்சிப்,செர்பியா நாட்டைச்சேர்ந்தவன். இதன் காரணமாகப் பழிவாங்கும் நோக்குடன், செர்பிய இராச்சியத்தின் மீது ஆஸ்திரியா படையெடுத்தது. இதனைத் தொடர்ந்து பல கூட்டணிகள் உருவாயின. பல ஐரோப்பிய நாடுகள் பேரரசு எல்லைகள் உலகின் பல பகுதிகளிலும் இருந்ததால் விரைவிலேயே போர் உலகம் முழுவதற்கும் விரிவடைந்தது. சில கிழமைகளுக்கு உள்ளாகவே பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் போரில் இறங்கிவிட்டன. போர் முக்கியமாக நேச நாடுகள், மைய நாடுகள் எனப்பட்ட இரண்டு கூட்டணிகளுக்கு இடையே நடை பெற்றது. நேச நாடுகளின் பக்கத்தில் தொடக்கத்தில் பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம், ரஷ்யா என்பனவும் அவற்றோடு சேர்ந்த பேரரசுகளும் இருந்தன. பின்னர் பல நாடுகள் இக் கூட்டணியில் இணைந்தன. குறிப்பாக, ஆகஸ்ட் 1914ல் ஜப்பானும், ஏப்ரல் 1915 இல் இத்தாலியும், ஏப்ரல் 1917ல் ஐக்கிய அமெரிக்காவும் இணைந்தன. ஐரோப்பாவின் மையப் பகுதியில் இருந்ததால் மைய நாடுகள் என அழைக்கப்பட்ட கூட்டணியில், ஜெர்மனியும், ஆஸ்திரியாவும் அவற்றோடு சேர்ந்த பேரரசுகளும் இருந்தன. ஓட்டோமான் பேரரசு 1914 அக்டோபரில் இக் கூட்டணியில் இணைந்தது. ஓராண்டு கழித்து பல்கேரியாவும் இதில் இணைந்தது. போர் விமானங்களும், போர்க் கப்பல்களும், நீர்மூழ்கிக் கப்பல்களும் முதன் முதலாக இந்தப் போரில் தான் பயன்படுத்தப்பட்டன. போர் முடிந்தபோது, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், ஸ்கண்டினேவிய நாடுகள் மொனாக்கோ என்பன மட்டுமே ஐரோப்பாவில் நடுநிலையில் இருந்தன. எனினும் இவற்றுட் சில நாடுகள் போர்புரிந்த நாடுகளுக்குப் பொருளுதவிகள் செய்திருக்கக்கூடும்.
போர் பெரும்பாலும் ஐரோப்பாக் கண்டத்தைச் சுற்றியுள்ள பல முனைகளில் இடம்பெற்றது. மேற்கு முனை எவருக்கும் சொந்தமில்லாத பகுதிகளால் பிரிக்கப்பட்ட, பதுங்கு குழிகளும் அரண்களும் நிறைந்த பகுதியாக இருந்தது[2]. இவ்வரண்கள் 475 மைல்கள் தூரத்துக்கு (600 கிலோ மீட்டருக்கு மேல்) அமைந்திருந்தன[2]. இது பதுங்கு குழிப் போர் என அழைக்கப்படலாயிற்று. கிழக்குப் போர் முனை பரந்த வெளிகளைக் கொண்டிருந்ததாலும், தொடர்வண்டிப் பாதை வலையமைப்பு அதிகம் இல்லாதிருந்ததாலும் மேற்கு முனையைப்போல் யாருக்கும் வெற்றியில்லாத நிலை காணப்படவில்லை. எனினும் போர் தீவிரமாகவே நடைபெற்றது. பால்கன் முனை, மையக் கிழக்கு முனை, இத்தாலிய முனை ஆகிய முனைகளிலும் கடும் சண்டை நடைபெற்றது. அத்துடன், கடலிலும், வானிலும் சண்டைகள் இடம்பெற்றன.

கருத்துகள் இல்லை: