
எழுதியவர்.....ஜோஸ்ஷான்
காலச் சக்கரம் சுழல்கிறது, யுகங்கள் வந்து செல்கின்றன, நினைவுகள் வரலாறாகின்றன.. வரலாறு தொன்மமாக மாறுகிறது, தொன்மம் பழங்கதைகளாகிறது. பழங்கதைகள் மறைந்து புதிய யுகம் துவங்குகிறது. மூன்றாம் யுகம் என சிலரால் அழைக்கப்பட்ட ஒரு யுகத்தில், வரவிருக்கும் ஒரு யுகத்தில், ஏற்கனவே கடந்து சென்ற ஒரு யுகத்தில் பாண்டிச்சேரியின் பொந்து ஒன்றின் மீதாக ஒரு காற்று எழுந்தது. அந்த காற்று ஆரம்பம் அல்ல. காலச்சக்கரத்தின் சுழற்சிகளிற்கு ஆரம்பம் என்பதோ முடிவென்பதோ கிடையாது. ஆனால் அது ஒரு ஆரம்பமே…..
பாண்டிச்சேரியில் ஒரு பொந்து இருக்கிறது. அதில் என் நண்பர் ஒருவர் வசித்து வருகிறார். பொந்து என்றவுடன் முயல், கிளி, ஹாபிட்டுகள், ஆந்தைகள் வாழும் பொந்தாக அந்தப் பொந்தை கற்பனை செய்து கொள்ளாதீர்கள். என் நண்பர் வாழ்ந்து வரும் பொந்தில் பயங்கரமான வசதிகள் உண்டு. ஹோம் சினிமா, காபரே, காசினோ, காக்டெயில் பார், குளியல் அறை… காவல் துறையில் முறையீடு செய்யாத பணிப்பெண்கள், ஒரு அரிய நூலகம் என அப்பொந்தில் சொகுசிற்கு குறைவில்லை. அங்குள்ள பஞ்சணையின் மென்மை அறியா உலகப் பைங்கிளிகளும் உண்டோ என்பது மூன்றாம் யுகத்தின் முதுமொழி.
மழை தெரியும் ஜன்னலின் அருகில் சரா கண்டத்து விந்தை மிருகமொன்றின் தந்தத்தால் உருவாக்கப்பட்ட சாய்வு நாற்காலியில் அமர்ந்து அவர் கற்பனை உலகினுள் வாழ்ந்திருப்பார். அருகில் உள்ள சிறிய மேசையில் நிலாக்கல்லில் உருவாக்கப்பட்டு வண்ணக் கற்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்ட ஒரு கிண்ணத்தில் வாசனைச் சரக்குகள் கலக்கப்பட்ட இதமான சூடு கொண்ட திராட்சை மது அவர் இதழ்களின் ஸ்பரிசத்தை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும். இவ்வாறான அவரின் இனிய வாழ்க்கையில் ஒரு இடையூறு சிதறிய ஒரு எரிமலைக்குழம்புத் துளியாக அவர் மேல் வந்து இறங்கியது.
அரிய நூல்களை, ஓய்வுநாள் சந்தைகளில் தேடிப் பார்த்து வாங்குவதில் அவர் ப்ரியம் கொண்டவர். நூல்களின் பின்னட்டைகளின் இருக்கும் பெண் நாவலாசிரியைகளின் நிழற்படங்கள் அழகாக இருக்கும் பட்சத்தில் அந்நூல்கள் அருமையானவை என்பதை தீர்க்கதரிசனமாக கூறும் திறமை அனுபவத்தால் அவரிடம் கைகூடியிருந்தது. இவ்வாறாக அவர் சேகரித்த அரிய நூல்கள் பொந்து நூலகத்தின் இடப்பரப்பை முழுமையாக பிடித்துக்கொண்டு, பொந்தின் பொதுவெளியில் தன் ஆக்கிரமிப்பை நிகழ்த்த ஆரம்பித்த வேளையில்தான் பொந்தில் நீ அல்லது புத்தகங்கள் எனும் ஒரு எல்லையை அவர் அன்பு அன்னை கொண்டு வந்தார். பின்னட்டை நாவலாசிரியைகளை பிரிய வேண்டிய வேதனை அவரை புதிய விதையொன்றின் நுண்ணிய வேர்களாக துளைபோட ஆரம்பித்த கணமது. பின்னட்டையில் நிழற்படங்கள் இல்லாத அரிய நூல்களை அவர் தானம், விற்பனை, தகனம் செய்ய ஆரம்பித்தார். சந்தைகளிலும், ஆதி நூலகங்களிலும் தேடித் தேடி அவர் சேகரித்து வைத்திருந்த நூல்களை பிரிவதென்பது காதலியைப் பிரிவதை விட வலியை தருவதாகவே அவர் உணர்ந்தார். இந்த சந்தர்ப்பத்தில்தான் அவரது சேகரிப்பில் இருந்த The Wheel of Time எனும் பெருந்தொடர் நாவலின் மீது அவர் கவனம் வீழ்ந்தது.
பங்குனியில் கிளைகளில் சிட்டுக்கள் அமர்வது அரிதான ஒன்றாக மாற ஆரம்பித்திருந்தது. நான் ஒளிந்திருக்கும் கிளைகளை சிட்டுக்கள் ஏனோ தவிர்க்கின்றன எனும் ஒரு உணர்வு இலைகளின் நாடிகளில் ஊர்ந்து செல்லும் எறும்பின் பாதத்தின் குறுகுறுப்பாய் என்னுள் ஊர்ந்தது. இதனால் என் வாசிப்பில் ஒரு வெறுமை உருவாகி இருந்தது. தொடர்சியாக நீளும் ஒரு வரியில் விழும் வெட்டுப்போல. என்ன வாசிக்கலாம் என்பதை என்னால் தீர்மானிக்க முடியாத ஒரு நிலை. அப்போது நண்பர் கூறினார், காலச்சக்கரத்தை படியுங்களேன் என்று. இன்றுவரை அதன் சுழற்சியில் இருந்து என்னால் மீண்டு வர இயலவில்லை…..
ஒளிக்கும், இருளிற்குமான போராட்டம் என்பது மிகைபுனைவுகளின் ஒரு முக்கிய கூறாக இருந்து வருகிறது. ஒளி என்பதை நன்மை என்பதாகவும் இருள் என்பதை தீமையாகவும் ஒருவர் உருவம் செய்து கொள்ளக்கூடும். அதுவே சரியாகவும் இருக்கக்கூடும். இப்போராட்டம் பல்வேறு வடிவங்களில் வெவ்வேறு கதைகளாக வடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஒளியின் ஆசிபெற்று போராடுபவர்கள், இருளின் ஆக்கிரமிப்பில் போராடுபவர்கள், இவை இரண்டிற்குமிடையில் சிக்கி கொண்டவர்கள், இருள், ஒளி, நன்மை, தீமை என்பதன் கருத்தாக்கத்தால் பாதிக்கப்படாதவர்கள் என பாத்திரங்கள் பல வகைகளாக உருவாக்கப்படுகிறார்கள். எம் ரசனைக்கேற்ப பாத்திரங்களை எம்மால் ரசிக்கவோ அல்லது அப்பாத்திரத்தை சிறப்பான ஒன்றாகவோ நாம் கருதிக்கொள்ள முடிகிறது. இங்கு ஒளியும் இருளும் ஒருவரின் ரசனைக்கும் தேர்விற்கும் தடையாக வருவதில்லை. ஒளியைப் போலவே இருளிலும் உயிர் இருக்கிறது. அதுவும் ஒரு வாழ்க்கைதான். ஆனால் பெரும்பாலான போராட்டங்கள் ஒளியின் பார்வையிலேயே விவரிக்கப்படுகின்றன. ஒரு வாசகனின் ரசனை அவனை ஒளியின் பிரகாசமான வீதிகளிலோ அல்லது இருளின் ரகசிய நிலவறைகளினுள்ளோ அவன் காத்திருந்த சுவையைக் காட்டிடக்கூடும்.
பனிக்காலம் முடிவடையாமல் நீண்டு சென்று முன்வசந்தத்தை உறைய வைத்துக் கொண்டிருக்கும் காலம். தங்கள் பண்ணையில் தயாரிக்கப்பட்ட ஆப்பிள் மதுவை எமொண்ட்ஸ் ஃபீல்டில் கொண்டாடப்படவிருக்கும் முன்வசந்த வருகை விழாவிற்காக ராண்டும் அவன் தந்தையும் குதிரைகளில் எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள். ஆளரவமற்ற மலைப்பாதையில் வீசும் குளிர்காற்றானது அவர்கள் இருவரும் அணிந்திருக்கும் மேலங்கிகளினுள் தம் உறைந்த கரங்களை செலுத்தி அவற்றைக் களைந்துவிட முயன்று கொண்டிருக்கிறது. ராண்டின் உள்ளுணர்வில் தான் கண்கானிக்கப்படும் உணர்வானது அந்தக் குளிரையும் தாண்டிய நுண்ணிய வருடலாக உணரப்படுகிறது. தான் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கும் ராண்ட், நள்ளிரவை அங்கியாக அணிந்து கரும்புரவி ஒன்றன் மீது அமர்ந்திருக்கும் ஒரு உருவத்தைக் காண்கிறான். தன் தந்தைக்கும் அவ்வுருவத்தை அவன் காட்ட முயற்சிக்கும்போது அந்த உருவம் காணாமல் போய்விடுகிறது. அந்த உருவமானது அவன் கண்களிற்கு மட்டுமே புலனாகக்கூடிய ஒன்றாகவே வாசகனிற்கு அறிமுகமாகிறது. ஆனால் காலச்சக்கரத்தின் ஆரம்பம் இதுவல்ல ஏனெனில் அதற்கு ஆரம்பமோ முடிவுகளோ கிடையாது…..
தர்க்கமோ, வாதமோ இப்பெருந்தொடரை அனுபவிக்க உதவப்போவதில்லை. ஏனெனில் சறுக்கல்கள் கொண்ட தொடர்தான் இது. மாறாக ஆசிரியர் தன் வரிகளில் வடிக்கும் உலகத்தை அதில் வாழும் மனிதர்களை, விந்தையான ஜீவன்களை எம்மால் கற்பனையில் உயிர்கொடுக்க முடிந்தால் இத்தொடரின் சுவை சிறப்பான ஒன்றாக இருக்கும்.
வேகக்கதைப் பிரியர்களிற்கானதல்ல இக்கதை. இக்கதையின் வேகம் வாசகனின் கற்பனையின் வேகவீச்சாலேயே தீர்மானிக்கப் படக்கூடிய ஒன்றாக அமைந்து விடுகிறது. அந்த உலகின் அழகும் கவர்ச்சியும் அதில் பொதிந்திருக்கும் இருளும் சாகசங்களும் அவனால் உருவாக்கப்படுவதே. ராபார்ட் ஜோர்டானின் வரிகள் அவன் கற்பனையில் அந்த உலகை சிருஷ்டிப்பதை இலகுவாக்கின்றன. அவன் தன் மனத்திரையில் தீட்டும் கற்பனைக் காட்சிகளின் எழிலை ஜோர்டானின் வரிகள் மெருகூட்டி தருகின்றன. வசியம் நிரம்பிய புதை மணலில் சிக்குபவனை போல ஒரு மாய உலகிற்குள் வாசகன் அனுவனுவாகச் சிக்குகிறான். அம்மாயவுலகத்தின் அறிமுகத்தில் சற்றே மூச்சுத் திணறும் அவன் பின் முழுமையாக அதை உள்வாங்க ஆரம்பிக்கிறான். அம்மாயவுலகத்தில் அவனும் ஒரு பிரஜையாகிப் போகிறான்.
ஜோர்டான் சிருஷ்டித்திருக்கும் அம்மாயவுலகம் மூன்று திசைகளில் கடலை எல்லையாகக் கொண்ட ஒரு பெரும் நிலப்பரப்பாக விரிகிறது. அவ்வுலகில் கடவுள் என்ற சொல்லை ஜோர்டான் உபயோகப்படுத்துவதில்லை. தெய்வங்களோ, தெய்வ வழிபாடுகளோ, ஆலயங்களோ அப்பெரு நிலத்தின் அடையாளங்களாக காணக்கிடைப்பதில்லை. ஆனால் சாத்தான் அவ்வுலகில் இருக்கிறான். உலகை படைத்தவர் எவரோ அவரே காலச் சக்கரத்தையும் இயக்குபவர் என ஒருவரை குறிப்பிடுகிறார் ஜோர்டான். அவரை சிருஷ்டிகர்த்தா என அவ்வுலகம் குறிப்பிடுகிறது.
சிருஷ்டிகர்த்தாவினால் அவன் சீடர்களுடன் சிறைவைக்கப்படுகிறான் இருளன். அவன் சிறையின் கதவுகள் பல பாதுகாப்பு முத்திரைகளால் முத்திரையிடப்பட்டு மூடப்பட்டிருக்கின்றன. அவன் கரங்கள் உலகை தீண்டாது யுகங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஆனால் யுகங்களின் கடப்புடன் இருளனின் சிறையின் முத்திரைகள் தம் வலிமையை இழக்க ஆரம்பிக்கின்றன. இருளனின் கரங்கள் வலிமை இழந்த முத்திரைகளை தாண்டி உலகினை தொட்டுப் பார்க்க தொடங்குகின்றன. காலச்சக்கரத்தை உடைத்து யுகத்தினை நிறுத்தி இருள் யுகத்தினை தனதாக்கும் தருணம் நெருங்கிவிட்டதை உணர ஆரம்பிக்கும் இருளன், தன் சீடர்களையும், அழிவை விரும்பும் இருளுயிரிகளையும், கொடூர பிறப்புக்களையும் தன் கனவின் ஆரம்ப கோலங்களை வரைபவர்களாக உலகில் உலாவரக் கட்டளையிடுகிறான். தன் திட்டத்திற்கு தடையாக இருக்கக்கூடிய மூன்று இளைஞர்களை தன் பக்கம் இழுத்துக் கொள்வதே அவன் நோக்கம். இருளன் எவ்வாறு அந்த மூன்று இளைஞர்களையும் தன் பக்கம் இழுக்க விரும்புகிறானோ அதேபோல் அந்த இளைஞர்களை ஒளியின் பாதையில் இட்டுச் செல்ல போராட தயாராகிறார்கள் ஒளியின் போராளிகள். ஒளியின் ஆசி பெற்ற போராளிகளிற்கும், இருளனின் ஏவலர்களிற்குமிடையிலான இப்போராட்டம் ஆரம்பிக்கும் இடம்தான் எமொண்ட்ஸ் ஃபீல்ட் கிராமம்.
காலச்சக்கரத்தின் மிக முக்கிய அம்சங்களில் ஒன்று முழுமுதற்சக்தி. சிருஷ்டியின் இயங்கு சக்தியாக இது கொள்ளப்படுகிறது. இந்த முழுமுதற் சக்தியானது எப்போதுமே இருவகையாக பிரிந்திருக்கிறது. ஆண்களால் கையாளப்படும் ஒரு பங்கு, பெண்களால் கையாளப்படும் ஒரு பங்கு என்பதாக அது பிரிக்கப்படுகிறது. ஆண்களினால் கையாளப்படும் சக்தியின் பங்கானது சைடின் எனவும், பெண்களால் கையாளப்படும் சக்தியின் பங்கானது சைடார் எனவும் பெயர்கொள்ளப்படும். பாதாளத்தில் புதையும் முன்பு இருளன் ஆண்கள் கையாளும் சக்தியில் தீமையை கலந்து விடுகிறான்.
ஆண்கள், பெண்கள் சிலரில் மட்டுமே இச்சக்தியை பயன்படுத்தி அதன் ஆற்றலை உபயோகப்படுத்தும் இயல்பு காணக்கிடைக்கும். ஆண்களால் கையாளப்படும் சக்தியின் பகுதியில் இருளனின் கறை படிந்திருப்பதால் அதன் தொடர்சியான உபயோகமானது ஒருவனை மனப்பிறழ்வு கொள்ளச் செய்து, விபரீதமான செயல்களிற்கு அது வழி வகுக்கும். லுஸ் தெரெனினால் நடாத்தப்பட்ட உலக சிதைப்புக்கு இதுவே காரணமாக கொள்ளப்படுகிறது. ராண்ட் அவனின் புதிய பிறப்பாக இருக்கும் பட்சத்தில் அவனை இருள் வழி இழுத்து தன் பக்கத்தை உறுதிப்படுத்த இருளன் முயல்கிறான் அதேபோலவே ராண்டிற்கு மனப்பிறழ்வு ஏற்படாத வகையில் அவன் முழுமுதற்சக்தியை உபயோகிக்க அவனை வழிநடத்தி இருளனை எதிர்த்துப் போராட வருபவர்கள் தான் ஏஸ் செடாய்க்கள். அதற்காக எவ்வித வழிமுறைகளையும் உபயோகிக்க தயங்காதவர்கள் அவர்கள். ஏஸ் செடாய்க்கள் முழுமுதற் சக்தியின் பெண்பங்கு சக்தியை உபயோகப்படுத்தி நீர் நிலம் நெருப்பு காற்று ஜீவஆவி என்பவற்றை தமக்கு சாதகமாக வளைத்து பயன்படுத்தும் திறமை படைத்தவர்கள். இவர்களின் பகடையாட்டத்தில் சிக்கிய ராண்ட் என்னவாகிறான், அவன் பால்யகால சிநேகிதங்கள் என்னவாகிறார்கள் என்பதை ஒரு வாசகன் மனக்கண்களில் உணரும் அளவிற்கு ஜார்டானின் வரிகள் அமைகின்றன.
ஒரு நாட்டு மக்களின் பண்பாடுகள் குறித்து, அவர்கள் வாழ்வியல் குறித்து விபரமான தகவல்களை தருவதன் மூலம் அம்மக்களை மிக ஆழமாக வாசகன் மனதில் பதித்து விடுகிறார் ஜார்டான். ஒருதேசத்தின் நிலவியல் மீதான அவரின் வரிகள் அம்மண்ணின் சுவாசத்தை படிப்பவர்கள் மேல் படர வைக்கும் தன்மையைக் கொண்டிருக்கின்றன. திருமணமான பெண்கள் பொட்டு வைத்துக் கொள்ளும் பண்பாடு மல்கிய்ர் எனும் பிரதேசத்தில் இருந்ததாக கதையில் ஒரு பகுதி இருக்கிறது. கருணா நாச்சிமான் எனும் ஏய்ஸ் செடாய் ஒரு பாத்திரமாக இடம் பெறுவார். பிலைத் எல்லை நாடொன்றின் மன்னனின் சகோதரி இவர். இவ்வாறாக பலவின மக்கள் மீதான கலாச்சார பண்பாட்டு வாழ்வியல் முறை ஒப்பீடுகளை நிகழ் உலகத்துடன் வாசகர்கள் நிகழ்த்தி மகிழலாம்.
அய்ல் தேசத்தில் ஒரு ஆண் பல பெண்களை மணந்து கொள்வது சாதாரணமான ஒன்று, நிர்வாணம் என்பது அய்ல்களிற்கு சங்கடம் தராதது. அய்ல் இனத்தவர் நிர்வாணத்தையும் உடையாகவே கருதுகிறார்கள். சீய்யெனார் தேசத்தில் குளியல் தொட்டியில் ஆண்களும் பெண்களும் சேர்ந்தே நீராடலாம், நிர்வாணமாக. இவ்வகையான உயரிய பண்பாடுகள் படைத்த பல தேசங்கள் எம்முலகில் இல்லாமல் போய்விட்டதே என நல்ல மனம் கொண்ட வாசகர்களை விம்மச்செய்துவிடுகிறார் கதாசிரியர் ஜோர்டான்.
கதையின் முக்கிய நாயகனாக ராண்ட் காட்டப்பட்டாலும், அவன் விதியிழையுடன் பின்னிப் பிணைந்த தோழர்களான பெரின் மற்றும் மாத் அவனைவிட சில பாகங்களில் வாசகர்களை கவர்ந்து விடுவார்கள். பெரின், ஓநாய்களுடன் உரையாடும் சக்தி கொண்டவன். அவன் உரையாடல்கள் எண்ணப் பரிமாற்றம் மூலமே நிகழும். மனிதத் தன்மை அதிகம் கொண்ட ஒருவனாகவே பெரின் சித்தரிக்கப்படுகிறான். அவனில் உள்ளிருக்கும் மிருகத்தை அவன் கட்டுப்படுத்த முயன்று கொண்டே இருப்பான். அவன் காதலி பின் மனைவியாக வரும் பைய்லுடனான அவன் ஊடல்கள் ரசிக்கப்படக்கூடியவை. அவன் முரட்டு ஆகிருதிக்கு எதிரானதாக அவன் உள்ளம் அமைந்திருக்கும்.
மொத்தத்தில் இன்று நான் மூன்றாம் யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்றுகூட சொல்லலாம். ஜார்டானின் வர்ணனைகள் என்னை அந்த உலகில் ஒரு பிரஜையாக்கி விட்டன. அவரின் வர்ணனைகள் நீண்டவை. இது அவரின் பலம் அதேபோல் சில சமயங்களில் பலவீனம். ஆனால் அவரின் எழுத்தை சுவைத்தவர்கள் அச்சுவையை வேறெங்கும் காண்பது என்பது சிரமமான ஒன்று. மொழியை அழகாக்கி, ருசியூட்டி அதில் வாசகனை கரைத்துவிடும் மந்திரவாதம் ஜோர்டானின் எழுத்துக்களில் இருக்கிறது. அவரின் இழப்பு மாயபுனைவுகளின் பேரிழப்பு. இக்கதைதொடரில் இதுவரை வெளியாகிய பகுதிகளை படித்து முடித்துவிட்டுத்தான் வேறு படைப்புக்களை படிப்பது என்பது என் தீர்மானம். அத்தீர்மானத்திலிருந்து நான் நழுவிச் செல்லாதவாறு கதை என்னைக் கட்டிப்போட்டிருக்கிறது. இக்கதை தொடரின் பதினொரு பகுதிகளை எழுதி முடித்தபோது ஜார்டான் இயற்கை எய்தி விட்டார். முழுமுதற்சக்தியில் அவர் ஆன்மா சாந்தியடையட்டும். அன்னார் விட்டுச் சென்ற குறிப்புக்களுடன் இத்தொடரை தற்போது எழுதி வருபவர் பிராண்டான் சாண்டர்சன் எனும் மிகைபுனைவு எழுத்தாளர் ஆவார். மொத்தம் 14 பாகங்கள் கொண்ட இத்தொடரின் சுழற்சி அதன் பின்பாக நின்று விடுமா என என்னைக் கேட்டால் இப்பதிவின் முதல் பராவை பதிலாக நான் உங்களிற்கு வழங்குவேன். ஜார்டானின் வரிகளை தழுவியவை அவை. காலச்சக்கரம் வாசிப்பில் ஒரு புதிய அனுபவத்தின் சுவையை எனக்கு அளித்து வருகிறது. இது என் அனுபவம். வாசகர்களின் சுவைகளும் அனுபவங்களும் வேறுபடக்கூடியவையே. The Wheel weaves as the Wheel wills
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக