17 ஜூலை, 2011

வான்கா- ஆண்டன் பாவ்லொவிச் செகாவ்

Anton Pavlovich Chekhov,
ஒன்பது வயது சிறுவன் வான்கா ழூக்கவ் வேலை பயிலுவதற்காக மூன்று மாதங்களுக்கு முன்பு புதைமிதி தயாரிப்பாளர் அல்யாஹினிடம் விடப்பட்டவன். கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முந்திய இரவு அவன் தூங்கவில்லை. எசமானும் எசமானியும் முதுநிலை வேலைப் பயிற்சியாளர்களும் கோவிலுக்குப் புறப்பட்டுச் செல்லும் வரை காத்திருந்தான்;பிறகு அலமாரியிருந்து மசிப்புட்டியையும் துருபிடித்த முனை கொண்ட பேனாக் கட்டையையும் எடுத்து வந்து, கசஙிப் போன காகிதத்தைப் பிரித்து வைத்துக் கொண்டு எழுத்த் தயாராகிவிட்டான். முதலாவது எழுத்தை வரைanton_pavlovich_chekhovயு முன் நெஞ்சு  படபடக்க இரண்டொரு தரம் வாயிற் கதவையும் ச்ன்னலையும் பார்த்துக்கொண்டான். புதைமிதி அச்சுக்கட்டை அடுக்குத் தட்டுகளுக்கு நடுவிலிருந்த சாமிப் படத்தை உற்று நோக்கியவாறு விக்கிச் செறுமிப் பெருமூச்சு விட்டுக் கொண்டான். காகிதம் பெஞ்சின்மேல் இருந்த்து, வான்கா பெஞ்சின் பக்கத்தில் தரையில் ம்ண்டியிட்டு அமர்ந்திருந்தான்.
     “அன்புக்குரிய தாத்தா கன்ஸ்தன்தீன் மக்காரிச்!” என்று எழுதினான். ”உனக்கு நான் கடிதம் எழுதுகிறேன்.கிறிஸ்மஸ் வாழ்த்துககள் அனுப்பிகிறேன்,ஆண்டவன் உனக்கு அருள் புரிய வேண்டுகிறேன்.எனக்கு அப்பாவும் இல்லை,அம்மாவும் இல்லை;உன்னை தவிர யாருமே இல்லை எனக்கு.”
இருண்ட சன்னல் கண்ணாடியை நோக்கி வான்கா கண்களை உயர்த்தினான். மெழுகுவத்தியின் பிம்பம் சன்னல் கண்ணாடியில் ஆடித் துடித்தது. அவனுடைய மனக் கண்முன் தாத்தா கன்ஸ்தன்தீன் மக்காரிச்தெளிவாய்த் தோற்றமளித்தார். ழிவரியோவ் என்றொரு நிலப்பிரபுவின் பண்ணையில் அவர் இரவு நேரக் காவற்காரராய் வேலை பார்த்து வந்தார். மெலிந்து சிறியவரான கிழவர் அவர், வயது சுமார் அறுபத்தைந்து இருக்கும். ஆனால் குறிப்பிடத்தக்க துடிப்பும் விறுவிறுப்பும் வாய்ந்தவர், சிரித்த முகமும் குடிபோதை கொண்டு மங்கிய கண்களுமுடையவர். பகற்பொழுதில் பின்கட்டு சமையலறையினுள் தூங்குவார், அல்லது சமையற்காரிகளோடு வேடிக்கையாய் பேசிக்கொண்டு உட்கார்ந்திருப்பார். இரவில் பெரிய ஆட்டுத்தோல் கோட்டு அணிந்து சடசடப்பியை ஆட்டி ஒலித்தவாறு பண்ணையைச் சுற்றி நடப்பார். அவருக்குப் பின்னால் கிழட்டு கஷ்கான்காவும் விலாங்கு என்ற இன்னொரு நாயும் தலையைத் தொங்க போட்டுக்கொண்டு செல்லும்.அதன் கரிய நிறத்துக்காகவும் நீளமான நீர்நாயை ஒத்த உடலுக்காகவும் அதற்கு விலாங்கு என்று பெயர். இந்த விலாங்கு பணிவு மிக்கதாய்  அருமையாய் வாலைக் குழைத்துக்கொண்டு வரும்; தெரிந்தவர்களாயினும் தெரியாதவர்களாயினும் எல்லோரையும் அன்பு ஒழுகும் அதே பார்வை கொண்டுதான் உற்று நோக்கும்.ஆயினும் யாராலும் அதை நம்ப முடியாது.அதன் அடக்கமும் பணிவும் வெளிவேஷமே தவிர மெய்யானவையல்ல; அதன் கள்ளத்தனத்தையும் குரோதத்தையும் மூடிமறைக்கவே பயண்பட்டன இவை.திருட்டுத்தனமாய் அணுகி வந்து காலைக் கடிப்பதிலும் , யார் கண்ணிலும் படாமல் குளிர்க் கிடங்கினுள் நுழைவதிலும், விவசாயிகளுடைய கோழிக்குஞ்சுகளைக் கவர்ந்து கொண்டு ஓடுவதிலும் அது தேர்ந்த திறமைசாலி. அதன் பின்னங்கால்களில் எத்தனையோ தரம் வெட்டு காயம் பட்டிருக்கும், இருமுறை அதைக் கட்டி அந்தரத்தில் தொங்க விட்டார்கள், வாரம் தவராமல் நையப் புடைத்து உயிர் போகும் நிலையில் விட்டுச் சென்றார்கள். ஆனால் அது யாவற்றையும் சமாளித்துக் கொண்டு உயிர் வாழ்ந்து வந்தது.
தாத்தா இந்நேரங்களில் அனேகமாய் வெளி வாயில் அருகே நின்று கண்களைச் சுளித்துக்கோண்டு,கோயில் சன்னல்களிலிருந்து சென்னிறத்தில் பளிச்சிடும் ஒளியைப் பார்ப்பார்;ஒட்டுக்கம்பளப் பொதிமிதிகளைக் கால்களில் மாட்டிக்கொண்டு தத்துப்புத்தென நடந்து வேலையாட்களோற்டு கும்மாள மடிப்பார். அவருடைய சடசடப்பி இடுப்பு வாரில் தொங்கும். குளிராயிருக்கிறது என்று சொல்லிக் கைகளை விரித்துத் தன்னைத்தானே கட்டிப்பிடித்துக் கொள்வார். அல்லது யாராவது சமையல் காரியையோ பணிப்பெண்ணையோ கிள்ளிவிட்டு கிளுகிளுத்துக் கிழட்டுச் சிரிப்பு சிரித்துக் கொள்வார்.
   “ஒரு சிமிட்டா எடுத்துக்கொள்” என்று அந்தப் பெண்களிடம் தனது பொடி டப்பாவைக் காட்டுவார்.
ஒரு சிமிட்டா எடுத்து மூக்கினுள் இழுத்து உடனே தும்முவார்கள் அந்தப் பெண்கள். தாத்தாவுக்கு ஆனந்தம் தாங்க முடியாது, வயிறு குலுங்கச் சிரிப்பார்.
    “உறைந்து போன மூக்குக்கு நல்லது! என்று கூவுவார்.”
நாய்களுக்குங்கூட மூக்குப்பொடி கொடுப்பார். கஷ்தான்கா தும்மிவிட்டுத் தலையை ஆட்டி ஆட்சேபித்தவாரு விலகிச் செல்லும். ஆனால் பணிவடக்கம் மிகுந்த விலாங்கு தும்முவது சரியல்ல என்று வாலைக் குழைத்துக் கொண்டு நிற்கும். வானிலை அற்புதமாயிருந்தது.காற்று அசங்காது அமைதியாய்,பளிங்கு போல் தெளிவாய், மாசு மறுவற்றியிருந்தது. கரிய இரவென்றாலும் கிராமத்தின் வெண்ணிறக் கூரைகளும், புகைபோக்கிகளிலிருந்து எழும் புகையும், உறைபனிக் கவசமிட்டு வெள்ளிபோல் பளபளத்த மரங்களும், வெண்பனிப் பெருக்குகளும் தெட்டத் தெளிவாய்க் கண்ணுக்குத் தெரிந்தன. ஒய்யாரமாய்க் கண் சிமிட்டும் விண்மீன்கள் வானத்தில் வாரியிறைக்கப் பட்டிருந்தன. பால்வெளி மண்டலம் விழா நாளுக்காகக் கழுவிச் சுத்தம் செய்யப்பட்டு வெண்பனியால் தேய்த்து மெருகிடப்பட்டது போல் கண்ணைப் பறிக்கும்படி எடுப்பாய் தெரிந்தது…..
வான்கா பெருமூச்சு விட்டவாறு பேனாவால் மசியைத்தொட்டு, மேலும் எழுதிச் சென்றான்:
     ”நேற்று என்னை அடித்து நொறுக்கிவிட்டார்கள். முடியைப் பிடித்து எசமான் என்னை வெளி முற்றத்துக்கு இழுத்துச்சென்று கடிவாள வாரால் நையப்புடைத்தார். காரணம் என்னவென்றால் அவர்களுடைய குழந்தையை ஆட்டிக் கொண்டிருக்கையில் தவறிப் போய் நான் தூங்கிவிட்டேன். சென்ற வாரத்தில் ஒரு நாள் எசமானி என்னைக் கெண்டை மீனைச் சுத்தம் செய்யச் சொன்னாள். நான் வால் பக்கத்தில் இருந்து ஆரம்பித்தேன். உடனே எசமானி அந்த மீனைப் பிடுங்கி அதன் தலையை என் முகத்திலே வைத்து தேய்த்தாள். ஏனைய வேலைப் பயிற்சியாளர்கள் என்னைக் கேலி செய்கிறார்கள், மது விடுதிக்குப் போய் வோத்கா வாங்கி வரச் சொல்கிறார்கள், எசமானுடைய வெள்ளரிக் காய்களை திருடி வரும்படிக் கூறுகிறார்கள்.எசமான் கைக்குக் கிடைப்பதை எடுத்து என்னை அடித்து கொல்லுகிறார். சாப்பிட இங்கே எனக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. காலையில் ரொட்டி தருகிறார்கள். மத்தியானத்துக் கஞ்சியும் இரவில் மீண்டும் ரொட்டியும் கொடுக்கிறார்கள். தேநீரோ, முட்டைக்கோஸ் சூப்போ எதுவும் எனக்குக் கிடப்பதில்லை, யாவற்றையும் அவர்களே தீர்த்துக் கட்டிவிடுகிறார்கள். என்னை நடையிலே படுக்கச் சொல்கிறார்கள், அவர்களுடைய குழந்தை கத்தும் போது நான் தூங்கக்கூடாது, அதை ஆட்டிக் கொண்டிருக்க வேண்டும். எனது அருமைத் தாத்தா, உனக்கு புண்ணியம் உண்டு, என்னை இங்கிருந்து அழைத்துச் சென்றுவிடு, கிராமத்துக்கு கூட்டிச் சென்றுவிடு, என்னால் இனி பொறுக்க முடியாது. தாத்தா உன்னை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்,எந்நாளும் மறக்காமல் உனக்காக பிரார்த்தனை செய்வேன், என்னை இங்கிருந்து அழைத்துச் சென்றுவிடு,இல்லையேல் நான் செத்துதான் போவேன்…..”
வான்காவின் உதடுகள் துடித்தன, கரிபிடித்த முட்டிக்கையால் கண்களைத் துடைத்துக் கொண்டு செறுமினான்.
     ”உனக்கு மூக்குப் பொடி இடித்து தருவேன்” என்று தொடர்ந்து எழுதினான்.
“உனக்காக ஆண்டவனை வேண்டிக் கொள்வேன். நான் எதாவது குறும்பு செய்தால் நீ எவ்வளவு வேண்டுமானாலும் என்னை உதைக்கலாம். எனக்கு அங்கே இருக்காதென நீ நினைத்தால், நான் காரியக்காரரிடம்  போய் என் மீது இரங்கக் கொள்ளும்படிக் கேட்பேன், புதைமிதிகளுக்குப் பாலிஷ் போடும் வேலையை எனக்குத் தரும்படி வேண்டுவேன்.அல்லது ஃபெத்யாவுக்குப் பதில் நான் ஆடு மேய்க்கப்போவேன். எனது அன்புக்குரிய தாத்தாவே, என்னால் சகிக்கமுடியவில்லை, எனக்கு உயிர் போகிறது. இங்கிருந்து ஓடிவிடலாம், நடந்தே கிராமத்துக்கு வந்துவிடலாம் என்று நினைத்தேன்.ஆனால் எனக்கு புதைமிதிகள் இல்லை, கொடுங்குளிர் தாங்கவே முடியாதே என்று பயந்து கொண்டு சும்மாயிருந்தேன். நான் பெரியவனானதும் உன்னைக் கருத்துடன் கவனித்துக் கொள்வேன். யாரும் உன்னைத் துன்புறுத்த விடமாட்டேன். நீ இறந்த பின் உன்னுடைய ஆத்மாவுக்காக பிரார்த்தனை செய்வேன், என் அம்மாவுக்காகப் பிரார்த்திக்கிறேனே அதே போல செய்வேன் உனக்காகவும்.
     ”மாஸ்கோ மிகப் பெரிய ஊர், கனவான்களது வீடுகளுக்குக் கணக்கே இல்லை, குதிரைகளும் ஏராளம்.ஆனால் ஆடுகள் இல்லை, நாய்கள் கொஞ்சங்கூட மூர்க்கமின்றி சாதுவாய் இருக்கின்றன. கிறிஸ்மஸ் பண்டிகையின் போது பையன்கள் நட்சத்திரம் எடுத்துச் செல்வதில்லை. கோயிலில் நம்மை பாட விடமாட்டேன்கிறார்கள். தூண்டில் முட்கள் அப்படியே தூண்டில் நூல்களும் கோல்களும் அடங்கலாய்க் கடையில் விற்கப்படுவதை முன்பு ஒரு தரம் பார்த்தேன் நான். எந்த மீன் வேண்டுமானாலும் பிடிப்பதற்க்கு ஏற்றவையாய் விதம் விதமாய் நன்றாய் இருந்தன, ஒரு பூடு எடையுள்ள பெரிய தோப்பா மீனைத் தாங்கக்கூடிய ஒன்று கூட இருந்தது. ப்ண்ணை வீட்டில் எசமான் வைத்திருக்கிறாரே அந்த மாதிரி துப்பாக்கியும் இன்னும் பலவிதமான துப்பாக்கிகளும் கடைகளில் விற்கிறார்கள், நான் பார்த்தேன்.ஒவ்வொன்றும் நூறு ரூபிகளுக்கு குறையாது. கசாப்புக் கடைகளில் காட்டுக் கோழிகளும் உள்ளான்களும் முயல்களும் இருக்கின்றன, ஆனால் கடையில் இருப்பவர்கள் இவை எங்கே சுடப்பட்டவை என்று சொல்ல மாட்டேன்கிறார்கள்.
     ”அருமைத் தாத்தா, பண்ணை வீட்டில் கிறிஸ்மஸ் மரம் வைக்கையில் எனக்கு ஒரு தங்கக் காய் எடுத்துப் பச்சைப் பெட்டியில் பத்திரமாய் வை. திருமதி ஓல்கா இக்னத்யென்னாவிடம் கேட்டு வாங்கு,வான்காவுக்கு என்று சொல்லு.”
நெடுமூச்சு விட்டு மீண்டும் சன்னல் கண்ணாடியை உற்றுப் பார்த்தான் வான்கா. பண்ணை விட்டு கணவான்களுக்கு கிறிஸ்மஸ் மரம் கொண்டு வருவதற்காக பேரனையும் அழைத்துக்கொண்டு தாத்தா புறப்பட்டுச் சென்றது அவனுக்கு நினைவுக்கு வந்தது. ஆகா அப்போதெல்லாம் காலம் எவ்வளவு இன்பகரமாய் இருந்தது! தாத்தா கெக்கலித்துக் கொள்வார், உறைபனி மூடிய தோப்பும் கெக்கலிக்கும், இதைப் பார்த்துவான்காவும் கெக்கலித்துக் கொள்வான். பிர் மரத்தை வெட்டத் தொடங்குமுன் தாத்தா புகைக் குழாயைப் பற்ற வைத்துப் புகைபிடிப்பார், ஒரு சிமிட்டா பொடி எடுத்து மூக்கில் வைத்து நெடுநேரம் உறிஞ்சுவார், குளிரில் நடுங்கும் வான்காவை பார்த்துச் சிரிப்பார்….உறைபனிக் கவசம் பூண்ட பிர் மரங்கள் தம்மில் சாவுக்காகக் குறிக்கப்பட்டிருப்பது யாராய் இருக்குமோ என்று ஆடாமல் அசையாமல் காத்திருந்தன. அப்பொழுது திடுமென ஒரு முயல் வெண்பனிப் பெருக்கைத் தாவி அம்பு போல் பாய்ந்து ஓடிற்று….தாத்தா இருப்பு கொள்ளாமல் துடிதுடித்துக் கத்துவார்:
     ”நிறுத்து அதை! நிறுத்து அதை!... நிறுத்து! ஓ! குட்டை வாலுச் சைத்தான்!”
மரத்தைத் தாத்தா பண்ணைவீட்டுக்கு இழுத்து வருவார், அவர்கள் அதைச் சிங்காரிக்கத் தொடங்குவார்கள்….திருமதி ஓல்கா இக்னத்தியெவ்னுதான் வான்காவுக்கு மிக்கப் பிடித்தவர், யாவரையும் விட முன்னிலையில் நின்று ஓடியாடி வேலைகள் செய்வார். வான்காவின் தாயாகிய பெலகெயா உயிரோடு இருந்த காலத்தில், பண்ணை வீட்டில் அவள் வேலை புரிந்து வந்தபோது ஓல்கா இக்னத்தியெவ்னா வான்காவுக்கு மிட்டாய் தருவது வழக்கம். அவனுக்கு அவர் எழுதவும் படிக்கவும் நூறு வரை எண்ணவும் சொல்லிக் கொடுத்து மகிழ்வார், நடனமாடுவதற்க்குக்கூட கற்றுத் தந்தார். ஆனால் பெலகேயா இற்ந்த பிறகு,அனாதையாகி விட்ட வான்கா பின்கட்டுச் சமையலறைக்கு, அவனுடைய தத்தாவிடம் அனுப்பப்பட்டுவிட்டான். அங்கிருந்து மாஸ்கோவுக்கு புதைமிதி தயாரிப்பாளர் அல்யாஹினிடம் கொண்டு வந்து விடப்பட்டான்…..
     ”தாத்தா, உடனே புறப்பட்டு வா, என்னை இங்கிருந்து அழைத்துச் சென்றுவிடு” என்று மேலும் எழுதினான் வான்கா. “ ஏசுநாதர் அருள் புரிவார், என்னை அழைத்துச் சென்றுவிடு, உன்னை நான் மன்றாடி கேட்டுக் கொள்கிறேன். அனாதைச் சிறுவன் நான், துன்புறுகிறேன், எனக்கு கருணை காட்ட வேண்டும்.எந்நேரமும் என்னை அடிக்கிறார்கள், எந்நேரமும் நான் பசியாய் இருக்கிறேன். துன்பம் தாங்க மாட்டாமல் எந்நேரமும் இங்கு நான் அழுது கொண்டிருக்கிறேன். புதைமிதி அச்சுக் கட்டையால் எசமான் என் மண்டையில் அடித்தார்.அப்படியே கிழே விழுந்த நான் மீண்டும் எழுந்திருக்கப் போவதில்லை என்றே நினைத்தேன். இங்கு எனது நிலை நாயினும் கேடானதாய் இருக்கிறது….அல்யோனாவுக்கும் ஒற்றைக் கண் எகோருக்கும் கோச் வண்டிக்காரனுக்கும் என் அன்பைத் தெரிவிக்கிறேன். என்னுடைய கன்சர்ட்டினா இசைத் துருத்தியை யாரிடமும் கொடுத்து விடாதே. உன்னுடைய பேரன் இவான் ழூக்கவ். அருமைத் தாத்தா, வா என்னிடம்.”
காகிதத்தை நான்காய் மடித்தான், ஒரு கப்பேக்கு கொடுத்து அதற்கு முந்திய தினம் அவன் வாங்கி வைத்திருந்த உறையினுள் அதைப் போட்டு மூடினான்…பிறகு சற்று சிந்தனை செய்து விட்டு, பேனாவால் மசியைத் தொட்டு எழுதினான்: “தாத்தா- தலையைச் சொறிந்து கொண்டு மீண்டும் சிந்திட்டுவிட்டு எழுதினான்:
கன்ஸ்தந்தீன் மக்காடிச். கிராமம்.
யாரும் குறுக்கிட்டு தன்னை எழுத விடாமல் தடுக்கவில்லையென மனம் மகிழ்ந்தவனாய்க் குல்லாவை எடுத்துத் தலையில் போட்டுக் கொண்டான். கோட்டு போட்டுக் கொள்ளாமலே வெறுஞ் சட்டையோடு தெருவுக்கு ஓடினான்.
முந்திய நாளன்று அவன் விசாரித்த போது, கசாப்புக் கடையில் இருந்தவர்கள் கடிதங்களைத் தபாற் பெட்டிகளில் போட வேண்டும். இந்தப் பெட்டிகளிலிருந்து அவை மூன்று குதிரைகளையும் குடிமயக்கம் கொண்ட வண்டிக்காரர்களையும் கணகணத்து ஒலிக்கும் மணிகளுமுடைய கோச் வண்டிகள் மூலம் உலகெங்கும் அனுப்பப்படுகின்றன என்பதாய்ச் சொல்லியிருந்தார்கள். யாவற்றிலும் அருகாமையிலிருந்த தபாற் பெட்டியிடம் ஓடி மதிப்பிடற்கரிய தனது கடிதத்தை அதன் இடுக்கினுள் போட்டான்…..
இதன்பின் ஒரு மணி நேரத்துக்கெல்லாம் இனிய நம்பிக்கைகள் இதமாய்த் தட்டிக் கொடுத்து அவனைத் தூங்க வைத்தன….அவனுடைய கனவில் ஒரு கணப்படுப்பு தோன்றியது. கணப்படுப்புப் பரணில் காலைத் தொங்கப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்த அவனுடைய தாத்தா அந்தக் கடிதத்தைச் சமையல்காரிகளுக்குப் படித்துக் காட்டினார்….கணப்படுப்புக்கு முன்னால் விலாங்கு தனது வாலைக் குழைத்துக் கொண்டு மேலும் கீழுமாய் நடை போட்டது….
1886
flow1

கருத்துகள் இல்லை: