17 ஜூலை, 2011

ஆதாம், ஒரு பிற்பகல்- இதாலோ கால்வினோ

: Italo Calvino
ஆங்கில மொழிபெயர்ப்பு : ஆர்ச்சிகால்குஹான் பெகிரைட்
தமிழில்: சி.மோகன்

இதாலோ கால்வினோ (1923 - 1985)     
இருபதாம் நூற்றாண்டு இத்தாலியப் புனைவுலகில் மகத்தான கலைஞன். பத்திரிகையாளர், சிறுகதை-நாவல் படைப்பாளி. கட்டுரையாளர், கற்பனையும் அற்புதமும் இழையோடும் இவருடைய நவீன தேவதைக் கதைகள் 20 ஆம் நூற்றாண்டு உரைநடைக்குப் புதுமெருகூட்டின. யதார்த்த உலகின் வாசலிலிருந்து விரிந்து பரவும் வெட்டவெளி விந்தை உலகம் இவருடையது.
1923 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி கியூபா நாட்டில பிறந்தார். இளமையில் இத்தாலிக்குக் குடிபெயர்ந்தார். இரண்டாம் உலகப் போரின்போது இத்தாலியப் படையில்italo இணைந்தார். உலகப் போர் முடிந்ததும் கம்யூனிச இதழொன்றில் பணியாற்றியவாறே இலக்கியத்தில் பட்டப்படிப்பு முடித்தார். 1959-66 வரை இடதுசாரி இதழொன்றின் எடிட்டராக இருந்தார்.
இவருடைய ஆரம்ப காலப் படைப்புகள் இத்தாலியப் படையில் பணியாற்றிய அனுபவத்திலிருந்து பிறந்தவை. 50களில் விந்தைக் கதைகள், உருவகக் கதைகள் என தீர்மானமான கலை உத்வேகத்தோடு இவருடைய படைப்புலகம் வடிவம் பெற்று உலகின் கவனத்தை ஈர்த்தது.
1985 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி இத்தாலியில் காலமானார்.
'ஆதாம், ஒரு பிற்பகல்' இவருடைய ஆரம்ப காலச் சிறுகதைகளில் ஒன்று. எனினும் பின்னாளில் இவர் உருவாக்கிய புனைவுலகின் அழகிய சாயல்கள் இக்கதையில் அமைந்திருக்கின்றன.


புதிய தோட்டக்காரரின் மகனுக்கு நீண்ட தலைமுடி. ஏதோ ஒன்றைத் தலையில் சுற்றி, நீள முடியை ஒரு சிறு வளையத்தின் மூலம் சீராகக் கட்டியிருந்தான். ஒரு கையால் விளிம்பு வரை நிறைந்திருந்த தண்ணீர் வாளியைச் சுமந்தபடி, மறு கையைப் பக்கவாட்டில் நீட்டிச்சமன் செய்தவாறு தோட்டப் பாதையில் அவன் நடந்து கொண்டிருந்தான். ஒவ்வொரு செடியின் அடிப்பாக மண்ணும் மிருதுவான கருப்புச் சாயலாகக் கரையும் வரை, மிக மெதுவாகவும், கவனமாகவும், ஏதா காஃபியையும் பாலையும் ஊற்றுவதுபோல, செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றினான். போதுமான ஈரப்பதமானதும் நீர் வாளியைத் தூக்கிக் கொண்டு அடுத்த செடிக்குச் சென்றான். அடுப்படி ஜன்னலிலிருந்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்த மரியா - நுன்ஸியாதா, தோட்டப் பராமரிப்பு என்பது எவ்வளவு அருமையான, நிம்மதியான வேலை என்று நினைத்துக் கொண்டாள். அவன் அரைக்கால் டவுசர் அணிந்திருந்போதிலும், அவனுடைய நீண்ட தலைமுடி பெண்ணின் தோற்றத்தை அவனுக்குத் தந்திருந்த போதிலும் அவன் வளர்ந்த ஒரு இளைஞன் என்பதை அவளால் அறிய முடிந்தது. அவள் பாத்திரங்கள் கழுவுவதை நிறுத்திவிட்டு, ஜன்னலில் தட்டினாள்.
''ஏ, பையா!'' அவள் அழைத்தாள்.
தோட்டக்காரரின் பையன் தலையை நிமர்த்தி, மரியா-நுன்ஸியாதாவைப் பார்த்து, புன்னகை செய்தான். அவள் பதிலுக்கு அவனைப் பார்த்து சிரித்தாள். இவ்வளவு நீள முடியோடு ஒரு பையனையோ, அவன் தலையிலிருந்ததைப் போன்றதொரு வளையத்தையோ அவள் இதுநாள் வரை பார்த்திராததும் சிரிப்புக்குக் காரணம். தோட்டக்காரரின் பையன் அவளை அழைக்கும் வகையில் ஒரு கையால் சைகை செய்தான். அவனுடைய வேடிக்கையான செய்கையைப் பார்த்து மரியா-நுன்ஸியாதா விடாமல் சிரித்ததோடு, பாத்திரங்கள் கழுவ வேண்டி இருக்கிறது என்று பதிலுக்குச் சைகை செய்தாள். ஆனால் அந்தப் பையன் மறுபடியும் சைகை மூலம் அழைத்ததோடு, மறு கையால் பன்னிறப் பூச்செடித் தொட்டியைச் சுட்டிக் காட்டினான். அவன் ஏன் அந்தப் பூச்செடித் தொட்டிகளைச் சுட்டிக் காட்டுகிறான்? மரியா-நுன்ஸியாதா ஜன்னலைத் திறந்து தலையை வெளியே நீட்டினாள்.
''அங்கே என்ன இருக்கிறது?'' என்று கேட்டபடி அவள் மீண்டும் சிரித்தாள்.
''அருமையான ஒன்றை நீ பார்க்க வேண்டாமா?''
''என்ன அது?''
''அருமையான ஒன்று. வந்து பார். சீக்கிரம்.''
''என்னதென்று சொல்.''
''நான் அதை உனக்குத் தருவேன். மிக அருமையான அதை நான் உனக்குத் தருகிறேன்.''
''நான் பாத்திரங்கள் கழுவ வேண்டும். வீட்டுக்கார அம்மா என்னைத் தேட ஆரம்பித்துவிடுவார்.''
'உனக்கு வேண்டுமா, வேண்டாமா? உடனே வா.''
''ஒரு செகண்ட் பொறு'' என்ற மரியா-நுன்ஸியாதா ஜன்னலை மூடினாள்.
அடுப்படிக் கதவு வழியாக அவள் வெளியே வந்தபோது, தோட்டக்காரரின் பையன் செடிக்குத் தண்ணீர் ஊற்றியபடி அங்கேயே இருந்தான்.
''ஹலோ'' என்றாள் மரியா-நுன்ஸியாதா.
அவள் அணிந்திருந்த குதி உயர்ந்த ஷூக்கள் காரணமாக இயல்பை விடவும் உயரமாகத் தெரிந்தாள். வேலையின் போது அவற்றை அணிந்திருப்பது பரிதாபம்தான் என்றாலும் அவற்றை அணிவதில் அவளுக்கு மிகுந்த விருப்பம். கரும் குழிவுகளால் அவளுடைய சிறிய முகம் நிரம்பியிருந்தபோதிலும், அதையும் மீறி குழந்தையினுடையதைப் போல இருந்தது. அவளுடைய உடல் மேலாடையின் மடிப்புகளுக்குள் உருண்டு திரண்டு இருந்த போதிலும், கால்கள் குச்சியாகவும் குழந்தையினுடையதைப் போன்றும் இருந்தன. மற்றவர்களின் பேச்சுக்காக அல்லது அவளுக்குள்ளேயே நிகழும் பேச்சுக்காக என்று அவள் எப்போதும் சிரித்துக் கொண்டிருந்தாள்.
''ஹலோ'' என்றான் தோட்டக்காரரின் பையன். அவனுடைய முகம், கழுத்து, மார்பு எல்லாம் கருப்பழுப்பு நிறத்தில் இருந்தன. அவன் இப்போதுபோல் எப்போதுமே அரை நிர்வாணத்தில் இருப்பதால் அப்படி ஆகியிருக்கலாம்.
''உன் பெயர் என்ன?'' மரியா-நுன்ஸியாதா கேட்டாள்.
''லீபெர்சோ'' என்றான் தோட்டக்காரரின் பையன்.
மரியா-நுன்ஸியாதா சிரித்தபடியே, ''லீபெர்சோ... லீபெர்சோ.. என்ன வேடிக்¨காயன பெயர் லீபெர்சோ'' என்றாள்.
''எஸ்பெராந்தோவில் புழங்கும் பெயர் இது. இதற்கு எஸ்பெராந்தோவில் 'விடுதலை' என்று அர்த்தம்'' என்றான்.
''எஸ்பெராந்தோ'' என்றாள் மரியா. ''நீ எஸ்பெராந்தோவைச் சேர்ந்தவனா?''
''எஸ்பெராந்தோ என்பது மொழி'' லீபெர்சோ விளக்கினான். ''என் அப்பா எஸ்பெராந்தோ பேசுவார்.''
''நான் காலாபிரியான்'' என்று சத்தமாகச் சொன்னாள் மரியா-நுன்ஸியாதா.
''உன் பெய்ர என்ன?''
''மரியா-நுன்ஸியாதா'' என்று சொல்லியபடி சிரித்தாள்.
''நீ ஏன் எதற்கெடுத்தாலும் சிரிக்கிறாய்?''
''நீ எதற்கு கூப்பிட்டாய் எஸ்பெராந்தோ?''
''எஸ்பொரந்தோ இல்லை. லீபெர்சோ.''
''ஏன்?''
''உனக்கு ஏன் மரியா-நுன்ஸியாதா என்று பெயர்?''
''அது மடோனாவின் பெயர். அதனால் அப்படி வைத்திருக்கிறார்கள். என் சகோதரனுக்கு செயின்ட் ஜோசப்பின் பெயர்.''
''சென் சோசப்?''
மரியா-நுன்ஸியாதா குலுங்கி சிரித்தாள். ''சென் சோசப்! சென் சோசப் இல்லை, செயின்ட் ஜோசப், லீபெர்சோ.''
''என் சகோதரன் பெயர் ஜெர்மினால், என் சகோதரி பெயர் ஒம்னியா.''
''அருமையான ஒன்று என்று ஏதோ சொன்னாயே, அதை எனக்குக் காண்பி'' என்றாள் மரியா-நுன்ஸியாதா.
''சரி, வா!'' என்றான் லீபெர்சோ. தண்ணீர் வாளியைக் கீழே வைத்துவிட்டு அவள் கையைப் பிடித்துக் கொண்டான்.
மரியா-நுன்ஸியாதா தயங்கினாள்.''முதலில் அது என்னவென்று சொல்.''
''காண்பிக்கிறேன். ஆனால் அதைக் கவனமாகப் பராமரிக்க நீ எனக்கு உறுதி அளிக்க வேண்டும்.''
''நீ அதை எனக்குத் தருவாயா?''
''ஆம், நான் அதை உனக்குத் தருவேன்.'' தோட்டச்சுவரின் மூலைக்கு அவளை அழைத்துச் சென்றான். அங்கு தொட்டிகளில் பன்னிறப் பூச்செடிகள் அவர்கள் உயரத்துக்கு வளர்ந்திருந்தன.
''அங்கே இருக்கிறது.''
''என்ன அது?''
''பொறு.''
அவனுடைய தோள் வழியாக மரியா-நுன்ஸியாதா கூர்ந்து பார்த்தாள். லீபெர்சோ குனிந்து ஒரு தொட்டியை நகர்த்திவிட்டு, மற்றொன்றை எடுத்துச் சுவரின்மேல் வைத்துவிட்டுத் தரையைச் சுட்டிக் காட்டினான்.
''அங்கே'' என்றான் அவன்.
''என்ன அது?'' என்றாள் மரியா-நுன்ஸியாதா. அவளுக்கு எதுவும் தெரியவில்லை. அந்த மூலை ஈர இலைகளாலும் மண் குவியலாலும் நிறைந்து நிழல் அப்பியிருந்தது.
''அதோ பார், அது நகர்கிறது'' என்றான் பையன். நகரும் கல் அல்லது இலை போன்ற ஏதோ ஒன்று கண்களோடும் கால்களோடும் இருப்பதை அவள் பார்த்தாள். அது ஒரு தேரை.
''மாம்மாமியா!''
மரியா-நுன்ஸியாதா பூச்செடிகளுக்கிடையே, குதி உயர்ந்த ஷுக்களோடு, தாவிச் சென்றாள். லீபெர்சோ தேரை அருகே குத்துக்காலிட்டு அமர்ந்து, பழுப்பு முகத்தின் மத்தியில் வெண்பற்கள் தெரியச் சிரித்தான்.
''பயந்து விட்டாயா? இது வெறும் தேரை. இதற்கேன் பயப்படுகிறாய்?''
''தேரை!'' மூச்சு வாங்கியபடி சொன்னாள் மரியா-நுன்ஸியாதா.
''ஆம் தேரைதான். இங்கேவா'' என்றான் லீபெர்சோ.
நடுங்கும் விரலால் அதைச் சுட்டிக்காட்டி, ''அதைக் கொல்'' என்றாள்.
அதைப் பாதுகாக்கும் வகையில் அவன் தன் கைகளைக் குவித்தான். ''நான் அப்படிச் செய்யமாட்டேன். இது மிக அருமையான ஒன்று.''
''அருமையான தேரை?''
''எல்லா தேரைகளுமே அருமையானவை. அவை புழுக்களைத் தின்கின்றன.''
''ஓ!'' என்றாள் மரியா-நுன்ஸியாதா. ஆனால் பக்கத்தில் வரவில்லை. மேலாடையின் முனையைச் சவைத்தபடி ஓரக்கண்ணால் அதைக் கவனிக்க முயற்சித்தாள்.
''எவ்வளவு அழகாக இருக்கிறது பார்'' என்ற லீபெர்சோ அதன்மீது ஒரு கையை வைத்தான்.
மரியா-நுன்ஸியாதா அருகில் வந்தாள். இப்போது அவளிடம் சிரிப்பு இல்லை. வாய் திறந்தபடி அதைப் பார்த்தாள். ''வேண்டாம்! வேண்டாம்! அதைத் தொடாதே!''
தேரையின் சாம்பல் பச்சை முதுகில் ஒட்டியிருந்த சேற்றுச்க் கரணகைளை லீபெர்சோ ஒரு விரலால் தட்டினான்.
''உனக்கென்ன பைத்தியமா? அவற்றைத் தொடும்போது கையில் அரிப்பு ஏற்பட்டு, கை வீங்கிவிடும் என்று உனக்குத் தெரியாதா?''
அவனுடைய பெரிய பழுப்புக் கைகளை அவளிடம் காட்டினான். உள்ளங்கைகளில் மஞ்சள் சகதி படர்ந்திருந்தது.
''எனக்கு அரிக்காது'' என்றான். ''எவ்வளவு அழகாக இருக்கிறது பார்.''
இப்போது அவன் தேரையின் பிடரியைப் பிடித்து, ஒரு பூனையைப் போல அதை எடுத்துத் தன் உள்ளங்கையில் வைத்தான். மரியா-நுன்ஸியாதா இன்னமும் தன் மேலாடையின் முனையைச் சவைத்தபடி அருகில் வந்து அவனுக்குப் பக்கத்தில் குத்துக்காலிட்டு அமர்ந்தாள்.
''மாம்மாமியா!'' அவள் அலறினாள்.
பன்னிறப் பூச்செடிகளுக்குப் பின்னால் கால்களை மடக்கி அவர்கள் அமர்ந்திருந்தார்கள். மரியா-நுன்ஸியாதாவினுடைய இளஞ்சிவப்பு ரோசாநிற முழங்கால் முட்டுகள், லீபெர்சோவின் பழுப்பான, காய்த்துப்போன முட்டுகள்மீது உரசிக் கொண்டிருந்தன. தேரை, அவன் கையிலிருந்து குதித்துச் செல்ல முயற்சிக்கும் ஒவ்வொரு முறையும் லீபெர்சோ தன் இன்னொரு கையால் அதை அமுக்கிக்கொண்டிருந்தான்.
''நீ தடவிப் பார், மரியா-நுன்ஸியாதா'' என்றான்.
அவள் தன் மேலாடைக்குள் கைகளை மறைத்துக் கொண்டாள். ''முடியாது'' என்று தீர்மானமாகச் சொன்னாள்.
''என்ன'' என்றான் அவன். ''உனக்கு வேண்டாமா?''
மரியா-நுன்ஸியாதா கண்களைத் தாழ்த்தி தேரையைப் பார்த்தாள்.
''வேண்டாம்'' என்றாள் அவள்.
''ஆனால் இது உன்னுடையது. நான் உனக்குத் தருகிறேன்'' என்றான் லீபெர்சோ.
மரியா-நுன்ஸியாதாவின் கண்கள் கலங்கின. ஒரு அன்பளிப்பை நிராகரிக்க நேர்வது சோகமானது. அவளுக்கு எவரும் ஒருபோதும் அன்பளிப்புகள் தந்ததில்லை. ஆனால், உண்மையில் தேரை அவளுக்கு வெறுப்பூட்டியது.
''நீ விரும்பினால் இதை வீட்டுக்குக் கொண்டு போகலாம். இது உன்னோடு தோழமையாக இருக்கும்.''
''வேண்டாம்'' என்றாள் அவள்.
லீபெர்சோ தேரையை மீண்டும் தரையில் விட்டான். அது வேகமாகக் குதித்தோடி இலைகளுக்குள் பதுங்கிக்கொண்டது.
''வருகிறேன், லீபெர்சோ.''
''ஒரு நிமிஷம் பொறு.''
''நான் போய் பாத்திரங்களை எல்லாம் கழுவி வைக்க வேண்டும். நான் தோட்டத்திற்கு வருவது வீட்டுக்கார அம்மாவுக்குப் பிடிக்காது.''
''பொறு. நான் உனக்கு ஏதாவது தர விரும்புகிறேன். உண்மையிலேயே அருமையான ஏதாவது ஒன்று. என்னோடு வா.''
சரளைக்கல் பாதையில் அவனைப் பின்தொடர்ந்தாள். நீண்ட தலைமுடியோடு, தேரைகளைக் கைகளில் பிடித்துத் திரியும் இந்த லீபெர்சோ எவ்வளவு வேடிக்கையானவன்.
''உனக்கு என்ன வயது லீபெர்சோ?''
''பதினைந்து. உனக்கு?''
''பதினாலு.''
''இப்போதா, இல்லை அடுத்த பிறந்தநாளின் போதா?''
''அடுத்த பிறந்தநாளின் போது. விண்ணேற்பு நாள்.''
''அது இன்னும் வரவில்லையா?''
''விண்ணேற்பு நாள் என்று வரும் என்பது உனக்குத் தெரியாதா?'' அவள் சிரிக்கத் தொடங்கினாள்.
''தெரியாது.''
''விண்ணேற்பு நாளன்று ஊர்வலம் செல்லுமே. அந்த ஊர்வலத்துக்கு நீ போனதில்லையா?''
''நானா? இல்லை.''
''எங்கள் ஊரில் ஊர்வலம் அற்புதமாக இருக்கும். இங்கு இருப்பது போல் இல்லை. அங்குள்ள பெரிய வயல்வெளி முழுவதும் எலுமிச்சை நிறைந்திருக்கும். எலுமிச்சை தவிர வேறெதுவும் கிடையாது. காலையிலிருந்து இரவு வரை எல்லோரும் எலுமிச்சை பறிப்பார்கள். எனக்கு 14 சகோதரர்களும் சகோதரிகளும் இருந்தார்கள். எல்லோருமே எலுமிச்சை பறிப்பார்கள். குழந்தைகளாக இருக்கும்போதே ஐந்து பேர் இறந்து விட்டனர். அதன்பிறகு, என் அம்மாவுக்கு நரம்பிசுவு நோய் வந்துவிட்டது. அங்கிள் கார்மெலோவிடம் போவதற்காக ஒரு வாரம் ரயிலில் பயணம் செய்தோம். அங்கிருந்த ஒரு காரேஜில் நாங்கள் எட்டு பேரும் தூங்கினோம். அது சரி, நீ ஏன் இவ்வளவு நீளமுடி வைத்திருக்கிறாய்?''
அவர்கள் நின்றார்கள்.
'ஏனென்றால் அது அப்படி வளர்கிறது. உனக்குக்கூடத்தான் முடி நீளமாக இருக்கிறது.''
''நான் ஒரு பெண். நீ முடியை நீளமாக வைத்திருக்கும்போது பெண்போலத் தெரிகிறாய்.''
''நான் பெண்போல இல்லை. முடியை வைத்து ஆணா, பெண்ணா என்று சொல்ல முடியாது.''
''முடியை வைத்து இல்லையா?''
''இல்லை. முடியை வைத்து இல்லை.''
''ஏன் முடியை வைத்து இல்லை?''
''நான் உனக்கு அருமையான ஏதாவதொன்றைத் தருவதை நீ விரும்புகிறாயா?''
''ஆம்.''
ஆகாயத்தை நோக்கிக் கம்பீரமாக மொட்டுகள் அரும்பியிருந்த அல்லி மலர்க்கூட்டத்திடையே லீபெர்சோ நடக்க ஆரம்பித்தான். ஒவ்வொன்றாகப் பார்த்தபடியும், இரண்டு விரல்களை அங்குமிங்குமாக அலையவிட்டபடியும், பிறகு தன் உள்ளங்கையில் எதையோ மறைத்தபடியும் லீபெர்சோ இருந்தான். மலர்க்கூட்டத்தினருகே மரியா-நுன்ஸியாதா செல்லவில்லை. மெளனப் புன்னகையோடு அவனைக் கவனித்துக கொண்டிருந்தாள். இப்போது அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்? லீபெர்சோ எல்லா அல்லிச் செடிகள் மீதும் இப்போது தன் பார்வையைப் படர விட்டான். ஒரு கையால் மறு கையைப் பொத்தியபடி அவளருகே அவன் வந்தான்.
''உன் கைகளைத் திற'' என்றான்.மரியா-நுன்ஸியாதா தன் கைகளைக் கிண்ணம்போல் குவித்தபோதிலும், அவனுடைய கைகளுக்குக் கீழாகக் கொண்டுபோகப் பயந்தாள்.
''உன் கைகளுக்குள் என்ன வைத்திருக்கிறாய்?''
''மிக அருமையானவை.''
''முதலில் காண்பி.''
லீபெர்சோ அவள் பார்க்கும் வகையில் கைகளைத் திறந்தான். அவன் உள்ளங்கை முழுவதும் பல வண்ணச் சில்வண்டுகள் நிறைந்திருந்தன. சிவப்பு, கருப்பு, ஊதா என இருந்தாலும் பச்சை நிறமானவை வெகு அழகாக இருந்தன. அவை மென்னிரைச்சலோடு ஒன்றோடடொன்று முட்டி மோதி உரசிக்கொண்டு, சிறிய கறுப்புக் கால்களைக் காற்றில் அலையவிட்டபடி இருந்தன.
மரியா-நுன்ஸியாதா தன் மேலாடைக்குள் கைகளை மறைத்துக் கொண்டாள்.
''இப்படி நீட்டு'' என்றான் லீபெர்சோ. ''உனக்குப் பிடிக்கவில்லையா?''
''ஆமாம்'' என்று நிச்சயமில்லாமல் சொன்னாள் மரியா-நுன்ஸியாதா.
''நீ அவற்றை இறுகப் பொத்திக் கொண்டிருக்கும்போது அவை சிலிர்க்க வைக்கும். நீ அதை உணர விரும்பவில்லையா?''
மரியா-நுன்ஸியாதா மருட்சியோடு தன் கைகளை நீட்டினாள். லீபெர்சோ, எல்லா நிறங்களிலுமான சில்வண்டுகளை அவள் கைகளுக்குள் அலை அலையாகக் கொட்டினான்.
''பயப்பாடாதே, அவை உன்னைக் கடிக்காது.''
''மாம்மாமியா!'' அவை கடிக்கக்கூடும் என்று அவளுக்குத் தோன்றியிருக்கவில்லை. அவள் கைகளைத் திறந்துவிட்டாள். சில்வண்டுகள் சிறகு விரித்தன. அழகிய வண்ணங்கள் மறைந்தன. கருப்புப் பூச்சிக்கூட்டம் பறந்து சென்று தங்கியதைத் தவிர வேறெதையும் பார்க்க முடியவில்லை.
''என்ன பரிதாபம். நான் உனக்கு ஒரு அன்பளிப்பு தர முயற்சிக்கிறேன். ஆனால் நீ அதை விரும்பவில்லை.''
''நான் போய் பாத்திரங்களைக் கழுவியாக வேண்டும். நான் அங்கு இல்லையென்றால் வீட்டுக்கார அம்மா என்னைத் தேடி இங்கு வந்துவிடுவார்.''
''உனக்கு அன்பளிப்பு வேண்டாமா?''
''இப்போது நீ எனக்கு என்ன தரப் போகிறாய்?''
''வந்து பார்.''
அவளுடைய கைகளை மீண்டும் பிடித்துக் கொண்டு மலர்க்கூட்டத்தினிடையே அவன் நடக்க ஆரம்பித்தான்.
''நான் அடுப்படிக்கு உடனடியாகப் போயாக வேண்டும், லீபெர்சோ. ஒரு கோழியை வேறு உரிக்க வேண்டும்.''
''ஃபூ''
''என்ன ஃபூ''
''இந்த பறவை, விலங்குகளின் மாமிசத்தை நாங்கள் சாப்பிடுவதில்லை.''
''ஏன், எப்போதுமே நீ இறைநோன்பில் இருப்பாயா?''
''என்ன சொல்கிறாய்?''
''சரி, வேறென்னதான் நீ சாப்பிடுவாய்?''
''ஓ, எல்லாமேதான். முள்ளங்கி, கீரை, தக்காளி. நாங்கள் மாமிசம் சாப்பிடுவதை என்னுடைய அப்பா விரும்புவதில்லை. அதுபோல, காபி, சீனி சாப்பிடுவதையும்.''
''உன்னுடைய சீனி 'ரேஷனை' என்னதான் செய்கிறாய்?''
''கறுப்புச் சந்தையில் விற்றுவிடுவேன்.''
கண்கவர் சிவப்புப் பூக்கள் நிரம்பியிருந்த படர் கொடிகள் இருந்த இடத்தை அவர்கள் வந்தடைந்திருந்தனர்.
''என்ன அழகான பூக்கள்'' என்றாள் மரியா-நுன்ஸியாதா. ''நீ எப்போதாவது இவற்றைப் பறிப்பாயா?''
''எதற்கு?''
''மடோனாவுக்குக் கொண்டு செல்ல. பூக்கள் மடோனாவுக்குரியவை.''
''மீசெம்பிரியாந்திமம்.''
''என்ன அது?''
''இந்தக் கொடிக்கு லத்தீனில் மிசெம்பிரியாந்திமம் என்று பெயர். எல்லாப் பூக்களுக்குமே லத்தீனில் பெயர் உண்டு.''
''பூசைகூட லத்தீனில் உண்டு.''
''எனக்கு அதுபற்றித் தெரியாது.''
லீபெர்சோ இப்போது சுவரின் வளைவுப் பகுதியின் பிளவுக்கூடாக மிக உன்னிப்பாகப் பார்த்தான்.
''அதோ அங்கே இருக்கிறது'' என்றாள்.
''என்ன அது?''
கரும்புள்ளிகளுடன் பச்சை நிறப் பல்லி ஒன்று சூரிய ஒளியில் காய்ந்து கொண்டிருந்தது.
''நான் அதைப் பிடிக்கப் போகிறேன்''
''வேண்டாம்''
ஆனால் அவன், இரு கைகளும் திறந்திருக்க, மிக மெதுவாகப் பல்லிக்கு வெகு அருகில் சென்றான். ஒரு குதி; அவ்வளவுதான். அவன் அதைப் பிடித்துவிட்டான். வெண்பற்கள் தெரிய சந்தோஷமாகச் சிரித்தான். ''இங்கே பார், தப்பிக்கப் பார்க்கிறது!'' அவனுடைய மூடிய விரல்களினூடாக வழுக்கிக் கொண்டு, மிரண்டுபோ தலை முதலில் வெளிவந்தது. அதன் பிறகு வால். மரியா-நுன்ஸியாதாவும் சிரித்தாள். ஆனால் பல்லியைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் பின்னால் துள்ளிச் சென்று தன் பாவாடையை இறுகப் பற்றி முழங்கால் வரை இழுத்துவிட்டுக் கொண்டாள்.
''ஆக, நான் உனக்கு எதுவுமே தருவதை நீ உண்மையிலேயே விரும்பவில்லை'' என்ற லீபெர்சோ, மிகுந்த வருத்தத்தோடும் வெகுகவனமாகவும் பல்லியைத் திரும்பவும் சுவற்றின் மீது விட்டான். அநத் நொடியில் அது மறைந்தது. மரியா-நுன்ஸியாதா கண்களைத் தாழ்த்தியபடி இருந்தாள்.
''என்னோடு வா'' என்றபடி லீபெர்சோ மறுபடியும் அவள் கையைப் பற்றிக்கொண்டான்.
''ஞாயிற்றுக்கிழமைகளில் நடனமாடச் செல்லும்போது என் உதடுகளுக்குப் பூசிக்கொள்ள சிவப்புச் சாயம் வேண்டுமென்று எனக்கு ஆசை. அதன்பிறகு, ஆசிர்வாதம் பெறும்போது, என் தலையில் அணிந்துகொள்ள கறுப்புத்துணி வேண்டுமென்றும் ஆசை.''
''ஞாயிற்றுக்கிழமைகளில் நான் என் சகோதரனோடு காட்டுக்குச் செல்வேன். இரண்டு சாக்கு நிறைய 'பைன்' கூம்புகளை அடைப்போம். பிறகு மாலையில் என் அப்பா குரோபோட்கினிலிருந்த சத்தமாக வாசிப்பார். என் அப்பாவுக்குத் தலைமுடி தோள்வரை இருக்கும். தாடி மார்பைத் தொடும். கோடைகாலத்திலும் குளிர்காலத்திலும்கூட அரைக்¡கல் டவுசர்தான் அணிவார். கிளர்ச்சியாளர் கூட்டமைப்பின் சன்னல்களுக்கு நான் கோட்டோவியங்கள் வரைவேன். விளிம்பு கொண்ட நீளத்தொப்பி அணிந்த உருவங்கள் தொழிலதிபர்கள். விளிம்பில்லாத் தொப்பி அணிந்த உருவங்கள் படைத்தலைவர்கள், வட்டத் தொப்பியிலிருப்பவர்கள் மத குருக்கள். பிறகு, உருவங்களுக்கு நீர்வண்ணம் பூசுவேன்.''
வட்டமான ஆம்பல் இலைகள் படர்ந்திருந்த ஒரு குட்டைக்கு அவர்கள் வந்திருந்தார்கள்.
''அமைதியாக இரு'' என்று கட்டளையிட்டான் லீபெர்சோ.
தண்ணீருக்கடியில் ஒரு தவளை, தன்னுடைய பச்சைத் தோள்களாலும் கால்களாலும், வெகு அழகாக நீச்சடித்துக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிகிறது. அது திடீரென மேலே வந்து, ஒரு ஆம்பல் இலையை நோக்கி தாவி அதன் மத்தியில் உட்கார்ந்து கொண்டது.
''அங்கே'' என்று கத்திய லீபெர்சோ அதைப் பிடிப்பதற்காக ஒரு கையை நீட்டினான். ஆனால் மரியா-நுன்ஸியாதா ''ஓ' என்று கத்தியதை அடுத்து தவளை மீண்டும் தண்ணீருக்குள் குதித்து விட்டது. லீபெர்சோ, தண்ணீருக்கு மேலாகத் தன் மூக்கு தொடுமளவு குனிந்து, மீண்டும் அதைத் தேட ஆரம்பித்தான்.
''அதோ, அங்கே இருக்கிறது.''
ஒரு கையை உள்ளுக்குள் நுழைத்து, மூடிய உள்ளங்கையில் அதை வெளியில் எடுத்தான்.''
''இரண்டு சேர்ந்திருக்கிறது'' எனக் கத்தினான். ''பார், ஒன்றின் மேல் ஒன்றாக இரண்டு.''
''ஏன் அப்படி?'' மரியா-நுன்ஸியாதா கேட்டாள்.
''ஆணும் பெண்ணும் ஒட்டிக் கொண்டுதான் இருக்கும்'' என்றான் லீபெர்சோ. ''அவை என்ன செய்கின்றன, பார்.'' மரியா-நுன்ஸியாதாவின் கைகளில் தவளைகளை வைக்க அவன் முயறசித்தான். மரியா-நுன்ஸியாதாவுக்கு தன்னுடைய பயம், அவை தவளைகள் என்பதாலா, இல்லை அவை ஆணும் பெண்ணுமாகச் சேர்ந்திருப்பதாலா என்று தெரியவில்லை.
'' அவற்றை விட்டுவிடு'' என்றாள் அவள். ''நீ அவற்றைத் தொடக்கூடாது.''
''ஆணும் பெண்ணும்'' என்று மறுபடியும் சொன்னான் லீபெர்சோ. ''அவை தலைப்பிரட்டையை உருவாக்குகின்றன.'' சூரியனை மேகம் மறைத்தது. மரியா-நுன்ஸியாதா திடீரென பதட்டமடையத் தொடங்கினாள்.
''நேரமாகிவிட்டது. நிச்சயம் வீட்டுக்கார அமமா என்னைத் தேட ஆரம்பித்திருப்பார்.''
ஆனால் அவள் போகவில்லை. மாறாக சூரியன் மீண்டும் வெளிவராத வெளிச்சத்தினூடே அவர்கள் சுற்றித் திரிந்தார்கள். பிறகு, அவன் ஒரு பாம்பைக் கண்டான்; மூங்கில் புதருக்குப் பின்னால் இருந்த சின்னஞ்சிறிய குட்டிப் பாம்பு அது. அதைத் தன் மேற்கையில் சுற்றிவிட்டுக்கொண்டு, அதன் தலையைத் தடவிக் கொடுத்தான்.
''ஒரு சமயம் நான் பாம்புகளைப் பழக்கினேன். ஒரு டசன் பாம்புகள் என்வசம் இருந்தன. அதில் ஒன்று, நீளமான, மஞ்சள் நிறத் தண்ணீர் பாம்பு. ஆனால் அது தோலை உரித்துப் போட்டுவிட்டு தப்பிவிட்டது. இது வாய் திறக்கும் போது இதன் நாக்கு பிளவுபட்டிருப்பதைப் பார். தடவி கொடு. கடிக்காது.''
ஆனால் மரியா-நுன்ஸியாதா பாம்புகளைப் பார்த்தும் பயந்தாள். பிறகு அவர்கள் பாறைக் குளத்துக்குச் சென்றார்கள். முதலில் நீர் ஊற்றுகளைக் காண்பித்தான். நீர் பீற்றுகளை எல்லாம் திறந்துவிட்டான். அது அவளுக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது. பிறகு தங்க மீனை அவளுக்குக் காண்பித்தான். அது ஒன்றையான, முதிய தங்க மீன். அதன் செதிள்கள் ஏற்கெனவே வெளிவர ஆரம்பித்துவிட்டன. கடைசியாக, மரியா-நுன்ஸியாதாவுக்குத் தங்க மீனைப் பிடித்துப் போய்விட்டது. லிபெர்சோ அதைப் பிடிப்பதற்காகத் தண்ணீருக்குள் கைககைள அலைய விட்டான். அதைப் பிடிப்பத வெகு சிரமமாக இருந்தது. அதை அவன் பிடித்துவிட்டால் மரியா.நுன்ஸியாதா அதை ஒரு கோப்பையில் போட்டு அடுப்படியில் வைத்துக் கொள்ள முடியும். ஒரு வழியாக அதை அவன் பிடித்துவிட்ட போதிலும், தண்ணீருக்கு வெளியே எடுத்தால் அதறக்கு மூச்சு திணறக் கூடுமென்று வெளியில் எடுக்கவில்லை.
''உன் கைகளை உள்ளே விட்டு, அதைத் தடவிப் பார்'' என்றான் லீபெர்சோ. அது மூச்சு விடுவதை நீ உணர முடியும் அதன் துடுப்புகள் காகிதம் போல் இருக்கின்றன. செதிள்கள் லேசாகக் குத்துகின்றன.''
ஆனால் மரியா-நுன்ஸியாதா மீனையும் தடவிப் பார்க்க விரும்பவில்லை.
குழல் வடிவ ஊதா நிறப் பூப்படுக்கையில் பூமி மிருதுவாக இருந்தது. லீபெர்சோ விரல்களால் மண்ணைத் தோண்டி, நீளமான, மிருதுவான சில புழுக்களை எடுத்தான்.
மரியா-நுன்ஸியாதா கிறீச்சிட்டபடி ஓடிப் போனாள்.
''உன்னுடைய கையை இங்கே வை'' என்று பழைய பீச் மரத்தின் அடிப்பாகத்தைச் சுட்டிக்காட்டி லீபெர்சோ சொன்னான். எதற்கென்று புரியாமல் மரியா-நுன்ஸியாதா அதில் கை வைத்தாள். உடனே அலறியபடி ஓடிப்போய் குளத்தில் கையை முக்கினாள். காரணம் என்னவென்றால் அவள் கை முழுவதும் எறும்புகள் அப்பியிருந்தன. அந்த பீச் மரத்தில் சின்னஞ்சிறிய கறுப்பு 'அர்ஜென்டினிய' எறும்புகள் கூட்டம் கூட்டமாக இருந்தன.
''இங்கே பார்'' என்ற லீபெர்சோ அடிமரத்தில் தன் கையை வைத்தான். அவனுடைய கையின் மீது எறும்புகள் ஊறத் தொடங்கின. ஆனால் அவன் அதைத் தட்டிவிடவில்லை.
''ஏன்?'' என்றாள் மரியா-நுன்ஸியாதா. ''ஏன் இப்படி எறும்புகளை உன் மீது ஏறவிடுகிறாய்?''
இப்போது அன் கை கறுப்பாகியிருந்தது. அவனுடைய மணிக்கட்டு வரை அவை ஊர்ந்துகொண்டிருந்தன.
''உன்னுடைய கையை எடு'' என மரியா-நுன்ஸியாதா முனங்கினாள். ''உன்னுடைய உடம்பு முழுக்க ஏறிவிடும்.''
அவனுடைய வெறும் கையில் எறும்புகள் ஊர்ந்து ஏற்கனவே முழங்கை வரை ஏறிவிட்டன.
இப்போது அவனுடைய கை முழுவதும் நகரும் கரும் புள்ளிகளய் எறும்புகள் மூடியிருந்தன. அவனுடைய அக்களுக்குள் அவை சென்றபோதும் அவன் தட்டிவிடவில்லை.
''வந்துவிடு, லீபெர்சோ. தண்ணீருக்குள் உன் கையை விடு.''
லீபெர்சோ ! நீ என்ன விரும்பினாலும் செய்கிறேன். நீ எனக்குத் தந்த எல்லா அன்பளிப்புகளையும் பெற்றுக்கொள்கிறேன்.''
அவனுடைய கழுத்தைச் சுற்றி தன்னுடைய கைகளால் எறும்புகளைத் தட்டிவிடத் தொடங்கினாள்.
அவனுடைய பழுப்பு மற்றும் வெண் சிரிப்போடு லீபெர்சோ மரத்திலிருந்து கையை எடுத்துவிட்டு, அசட்டையாகக் கைகளைத் துடைக்க ஆரம்பித்தான். ஆனால் அவன் நெகிழ்ந்து போய்விட்டதென்னவோ உண்மை.
''நல்லது. நான் உனக்கு மிகப் பெரிய அன்பளிப்பு தர முடிவு செய்துவிட்டேன். என்னால் தர முடிந்த பெரிய அன்பளிப்பு.''
''என்ன அது?''
''முள்ளெலி''
''மாம்மாமியா!'' வீட்டுக்கார அம்மா. வீட்டுக்கார அம்மா என்னைக் கூப்பிடுகிறார்.
மரியா-நுன்ஸியாதா பாத்திரங்களை எல்லாம் கழுவி முடித்த சமயத்தில் சன்னலைக் கல்லால் தட்டும் சத்தம் கேட்டது. ஒரு பெரிய கூடையோடு லீபெர்சோ அதனடியில் நின்றிருந்தான்.
''மரியா-நுன்ஸியாதா உள்ளே வரட்டுமா. நான் உனக்கு ஆச்சரியம் தரப்போகிறேன்.''
''இல்லை. நீ இங்கே வரக்கூடாது. நீ என்ன வைத்திருக்கிறாய்.'' அச்சமயத்தில் வீட்டுக்கார அம்மா மணி அடித்தார். மரியா- நுன்ஸியாதா மறைந்து போனாள்.
அவள் அடுப்படிக்குத் திரும்பி வந்தபோது, லீபெர்சோ எங்கும் தென்படவில்லை. சன்னக்கு அடியிலும் இல்லை. அடுப்படியிலும் இல்லை. மரியா-நுன்ஸியாதா பாத்திரம் கழுவும் தொட்டிக்கருகில் சென்றாள். அங்கு ஆச்சரியம் காத்திருந்தது.
காய்வதற்காக அவள் வைத்துவிட்டுப் போயிருந்த ஒவ்வொரு தட்டிலும் ஒரு தவளை பதுங்கியிருந்தது. கைப்பிடி பாத்திரத்துக்குள் ஒரு பாம்பு சுருண்டிருந்தது. சூப் கோப்பை நிறைய பல்லிகள். எல்லாக் கண்ணாடி டம்ளரிகளிலும் சேற்றுடனான சிறு உயிரிகள் பல வண்ண ஒளிக் கீற்றுகளை உருவாக்கிக் கொண்டிருந்தன. அகன்ற, பெரிய பாத்திரத்தில் தண்ணீர் நிறைந்திருக்க, அதில் முதிய, ஒற்றைத் தங்க மீன் நீந்திக் கொண்டிருந்தது.
மரியா-நுன்ஸியாதா ஓரடி பின்வாங்கினாள். ஆனால் அவள் காலடிகளுக்கிடையே ஒரு மிகப் பெரிய தேரை இருப்பதைப் பார்த்தாள். அதற்குப் பின்னால் ஐந்து சிறிய தேரைகள். கருப்பு - வெள்ளை பாவோடுகள் பரவிய தரையின் குறுக்காக, லேசாகத் தத்தித் தத்தி அவளை நோக்கி அவை வந்தன.
*******
flow1

கருத்துகள் இல்லை: