17 ஜூலை, 2011

இவ்வாறாக- விக்ரமாதித்யன்

இவ்வாறாக

அன்றைக்குப் போலவே
இன்றைக்கும்
ஆதரவாயிருக்கும் அம்மாவை
ஐயோ பாவம்
தாய்ப்பாசமென்று விட்டுவிடலாம் nambi29
ஆயிரத்தோரு சண்டைகளுக்கு
அப்புறமும்
அப்பா காட்டும் அக்கறையை
அன்புக்கு நேர்வதெல்லாம்
துன்பம்தானென்று விட்டுவிடலாம்
மார்பில்
முகம்புதைத்து
மனைவி கேட்கும் கேள்விகளுக்கு
மறுமொழியாக
மெளனத்தை விட்டுவிடலாம்
காலைக்கட்டி மயக்கும்
குழந்தைகளை
கடவுளின் அற்புதங்களை நம்பி
சும்மா
விட்டுவிடலாம்
முதுகுக்குப் பின்
புறம்பேசித் திரிகிற
நண்பர்களின் குணத்தை
மன்னித்து
மறந்துவிட்டு விடலாம்
வேண்டியவர்களின் யோசனைகள்
வேண்டாதவர்களின் கேவலப்படுத்தல்கள்
இரண்டுமே
விதியின் முன்புக்கு
வீணென்று
விட்டுவிடலாம்
எனில்
எல்லாவற்றுக்கும் மேலாக
இயல்பிலேயே உறுத்திக்கொண்டிருக்கும்
என் மனசாட்சிக்கு
என்ன பதில் சொல்ல
***

குற்றாலக்கவிதை

போனவருஷம் சாரலுக்கு
குற்றாலம் போய்
கைப்பேனா மறந்து
கால்செருப்பு தொலைந்து
வரும் வழியில் கண்டெடுத்த
கல்வெள்ளிக் கொலுசொன்று
கற்பனையில் வரைந்த
பொற்பாதச் சித்திரத்தை
கலைக்க முடியவில்லையே இன்னும்
***
ஆதி - கவிதைத் தொகுப்பு
**

முக்கோணத்தின் மூன்று முனைகள்

பேசிக்கொள்ள
ஆசைப்படுகின்றன
கண்களில்
கசிகிறது உப்புநீர்
மனசில் கனக்கிறது
மாயச்சுமை
வார்த்தைகள்
நாவின் நுனியிலேயே தங்கிவிடுகின்றன
உதடுகள்
ஒழுங்கற்று நெரிபடுகின்றன
ஒன்றையொன்று
நின்று நினைத்துப்பார்க்க
என்றேனும் ஒருநாள்
எல்லாமும் சொல்லிவிட
முடிவெடுத்திருக்கின்றன முக்கோணத்தின்
மூன்று முனைகள்
***
கிரகயுத்தம் கவிதைத்தொகுப்பிலிருந்து
flow1

கருத்துகள் இல்லை: